குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை
(விளக்கம்: குற்றம் புரியாமல் இருப்பதையே நோக்கமாக கொள்ளவேண்டும். ஏனென்றால், குற்றம் பகையாக மாறும்)
திருவள்ளுவரின் இந்த இரண்டு அடி குறளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் தான் ‘குற்றம் கடிதல்’.
நாயகன் சாய் ராஜ்குமாரும்(மணிகண்டன்) நாயகி ராதிகா பிரசித்தாவும்(மெரிலின்) வீட்டார் சம்மதம் இல்லாமல் திருமணம் முடிக்கின்றனர். ராதிகா ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். எப்போதும் முகத்திலும், மனதிலும் ஒரு வகை பதட்டம் நிறைந்தவர். மணிகண்டன் ஒரு சாப்ட்ஃபேர் இன்ஜினியர் கலங்காத மனம், நிதானமாக செயல்படுபவர்.
திருமணமான மூன்றாவது நாளில் பள்ளிக்கு செல்கிறார் ஆசிரியை மெர்லின். தன் தோழியான பக்கத்து வகுப்பு ஆசிரியை வெளியே சென்றுவிடுவதால், அந்த வகுப்புக்கு பாடம் எடுக்க செல்கிறார்.
அந்த வகுப்பில் படிக்கும் மாணவன் செழியன் தன் சகமாணவிக்கு பிறந்த நாள் பரிசாக முத்தம் கொடுத்துவிடுகிறான். அதை கண்டிக்கும் மெர்லினிடம் உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் அதைதான் செய்திருப்பேன் என்கிறான். மாணவனின் பதிலால் கோபத்தில் அவனது கன்னத்தில் அறைந்துவிடுகிறார் ஆசிரியை. அறைந்ததும் மயக்கமாகி விழும் அந்த சிறுவனுக்கு, மூக்கில் இருந்து ரத்தம் வழிய, உடனே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அந்த மாணவன் என்ன ஆனார்? நாயகன், நாயகியின் நிலை என்ன ஆனது, பள்ளி நிர்வாகம் என்ன ஆனது, பெற்றோர்களின் நிலைமை? இதனால் சமூகத்தில் ஏற்பட்ட அதிர்வு ஆகியவைகளே படத்தின் மீதி கதை.
மெர்லினாக ஆசிரியையாக வாழ்ந்திருக்கிறார் ராதிகா பிரஷித்தா. இவர் இதற்கு முன்பாகவே நமக்கு பழக்கப்பட்ட முகமாகவே தெரிகிறார். பையனை அடித்துவிட்ட குற்ற உணர்ச்சியில் இவர் வாழ முடியாமல் தவிப்பதும் தற்கொலைக்கு முயற்சிப்பதும் உணர்வுபூர்வமான காவியம்.
மெர்லின் கணவராக மணிகண்டன்… தன் மனைவிக்கு பக்குவமாக ஆறுதல் சொல்வதும், எதற்காக ஓடி ஒளிய வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரச்சினையை எதிர்கொள்வதும் சபாஷ்.
படத்தில் அனைத்து கதாபாத்திரத்திற்கும் சிம்மசொப்பனமாக விளங்குவது பாவெல் நவதீகன் தான். செழியன் மாமாவாக கம்னியூசம் பேசி, முரட்டு அன்பு நிறைந்த இளைஞனாக செம்ம ஸ்கோர் செய்கிறார். தனது அறிமுக காட்சியிலே அசத்துகிறார். சாலையில் விபத்து நடந்தால் முதல் குரலே என்னுடையது எனத் தோன்றி ரசிகர்களை கவர்கிறார். இறுதியில் மெர்லினுக்கு மக்சீம் கார்க்கியின் தாய் புத்தகத்தை கொடுப்பது டச்சிங் பாயிண்ட்.
துறுதுறு மாணவனாக நடித்திருக்கும் மாஸ்டர் அஜய்(செழியன்), சபாஷ் போட வைக்கிறான். அவனுடைய அம்மாவாக நடித்திருப்பவரின் மெலிந்த தேகமும், வறுமையின் தோற்றமும் நம்மை உருக வைக்கிறது. தலைமையாசிரியரும், அவருடைய மனைவியாக வரும் ஆசிரியையும் எதார்த்தமான நடிப்பில் அசர வைத்திருக்கிறார்கள். மனிதாபிமானத்துக்கு எடுத்துக்காட்டாக இவர்களது கதாபாத்திரங்களை உருவாக்கியிருப்பது சிறப்பு.
இந்த மாதிரி ஒரு பிரச்சினையை மீடியாக்கள் எப்படி மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறது என்பதையும் இப்படத்தில் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
படத்திற்கு மற்றொரு பெரிய பலம், ஷங்கர் ரங்கராஜனின் பின்னணி இசையும், பாடல்களும்தான்.
மொத்தத்தில் குற்றம் கடிதல்.... யதார்த்தம்...
|