LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

மொழிப் பயிற்சி – 28 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

 

நோயற்ற வாழ்வு வாழ்வதற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டன என்ற செய்தியை ஒரு பத்திரிகை நோயுற்ற வாழ்வு வாழ்வதற்கான என்று அச்சிட்டிருந்தது. ஓர் எழுத்து மாற்றம் எவ்வளவு பெரிய பொருள் மாற்றத்தைத் தருகிறது என உணர்வோமா? (அற்ற - இல்லாத; உற்ற- பெற்ற) எப்போதும் நோய் அற்றவராகவே இருப்போம்.
வெகுளிப் பெண்: கள்ளம், கபடம் அறியாத சூது, வாது தெரியாத (அப்பாவிப்) பெண்ணை வெகுளிப் பெண் என்று சொல்லி வருகிறோம். பெண்ணை மட்டுமன்று, "அவனா... சுத்த வெகுளிப்பய; ஒரு மண்ணுந் தெரியாது' என்று ஆண் பிள்ளையையும் சுட்டுவதுண்டு. ஆக வெகுளி என்றால், உலக நடப்பு அறியாத நல்லது கெட்டது தெரியாத தன்மை என்று கருதுகிறோம். உண்மையில், வெகுளி என்பதற்குச் சினம் (கோபம்) என்பதுதான் பொருள்.
"குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது'
ஆகக் "கோபக்காரியை' "அப்பாவி' ஆக்கிவிட்டோம். அப் பாவி என ஆக்காமல் விட்டோமே!
குண்டுமணி: காட்டுச் செடி ஒன்றின் விதையைக் குண்டுமணி என்கிறோம். பெருமளவு சிவப்பும், கொஞ்சம் கறுப்பும் உடையது அது. "ஒரு குண்டுமணி' தங்கம் கூட வீட்டில் இல்லை என்பார்கள்.
பொன் அளவையில் குண்டுமணியை எடை கணக்கிடப் பயன்படுத்தியதுண்டு. குண்டு மணி என்று உடல் மிகக் குண்டாக இருக்கும் ஒரு நடிகருக்குப் பெயருண்டு. முன் சொன்ன குண்டு மணி என்ற சொல் சரியானதா? இல்லை. அதன் பெயர் குன்றிமணி.
திருக்குறளில் பல இடங்களில் குன்றியெனும் சொல் குன்றி மணியைச் சுட்டுவதாக வந்துள்ளது. "புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து' என்பது ஒரு குறள். குன்றிமணியின் சிகப்பைப் போல் வெளித் தோற்றத்தில் செம்மையுடையவராகவும், அகத்தில் (மனத்தில்) குன்றி மணி மூக்கைப்போல் கரியர் (கறுப்பு எண்ணம் உடையவர்) ஆகவும் இருப்பவர் (போலித் துறவியர்) உலகில் உளர் என்பது இக்குறட் கருத்து.
"கேவரு' தெரியுமா உங்களுக்கு? அதுதான் கேவரகு. இச்சொல்லி இடைக்குறையுள்ளது. அஃதாவது கேழ்வரகு என்னும் சொல்லில் இடையில் உள்ள "ழ்' எனும் எழுத்துக் குறைந்துவிட்டது. சரியாகச் சொன்னால் கேழ்வரகு எனும் சிறு தானியம் இது. உடலுக்கு நல்ல ஊட்டம் தருவது.
என்ன தமிழோ இது?: "வெள்ள நிவாரணமாக ஒவ்வொருவர்க்கும் தலா ரூ.1000 வழங்கப்பட்டது' என்று செய்தி படித்தார்கள். தலா என்பதன் பொருள் தலைக்கு என்பதாம். இது தலையுடைய மனிதரைக் குறிக்கும். தலைக்கு ஆயிரம் ரூபா என்றாலும் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபா என்றாலும் பொருள் ஒன்றே.
ஒவ்வொருவர்க்கும் எனச் சொன்னால் தலா வேண்டாம். தலா போட்டால் ஒவ்வொருவர்க்கும் எனல் வேண்டாம்.
கல்வி கண் போன்றது; கல்விக் கண் கொடுத்த கடவுள்- இவ்விரண்டு தொடரும் பிழையற்றவை. ஆனால் ஒரு புத்தகத்தில் கல்விக் கண் போன்றது என்றும், ஒரு சிற்றிதழில் கல்வி கண் கொடுத்த கடவுள் என்றும் படிக்க நேர்ந்தபோது என்ன தமிழோ இது? என்று மனம் வருந்தினேன்.
கல்வியானது மனிதருக்குக் கண்ணைப் போன்றது என்பது முதல் தொடரில் பொருள். கல்வியாகிய கண்ணைக் கொடுத்த கடவுள் இரண்டாம் தொடரின் பொருள். கல்வியைக் கண்ணாக உருவகப்படுத்தும்போது கல்விக்கண் (வல்லொற்று) மிகுதல் சரியாம்.. உருவகம் என்றால் கல்வி வேறு கண் வேறு இல்லை. கல்வியே கண்ணாம் என்று கல்வியைக் கண்ணாக உருவகப்படுத்துதல்.
கல்வி கண் போன்றது எனும் போது கல்வியானது கண்ணைப் போன்றது எனக் கல்விக்குக் கண்ணை உவமை சொல்கிறோம். இயல்பாக இருக்க வேண்டிய இடத்தில் வல்லொற்றுப் போட்டால், கல்விக் கண் என்று உருவகமாகிவிடுகிறது. பின் போன்றது எனும் சொல்லுக்குப் பொருளில்லாமல் போகும்.
இஃதன்றி, மற்றொரு தொடரில், கல்வி கண் கொடுத்த என்றிருப்பது கல்வியும் கண்ணும் கொடுத்த என்று வேறு பொருள் உருவாக்கிடும். ஆதலின் கல்விக் கண் கொடுத்த என்று எழுதுதல் முறையாம். எங்கே எப்படி இந்த ஒற்றெழுத்துகளைப் போடுவது என அறிய நல்லறிஞர்களின் நூல்களைப் படிக்க வேண்டும்.
பிறமொழிக் கலப்பு: தமிழர் தம் எழுத்திலும் பேச்சிலும் இந்நாளில் மிகுதியாகக் கலந்துள்ள மொழி ஆங்கிலம்.
முதலில் தமிழில் கலந்த பிறமொழி, சமக்கிருதம் எனும் வடமொழியே. அளவிறந்த வடசொற்கள் தமிழில் கலந்த போது அதற்கு இலக்கணம் வரையறுத்தது தொல்காப்பியம். வடமொழிச் சொற்களைத் தமிழின் இயல்புக்கேற்ப ஒலித்திரிபு செய்து வடவெழுத்துகளை விலக்கித் தமிழாக்கிக் கொள்வதே அந்நெறி.

 

நோயற்ற வாழ்வு வாழ்வதற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டன என்ற செய்தியை ஒரு பத்திரிகை நோயுற்ற வாழ்வு வாழ்வதற்கான என்று அச்சிட்டிருந்தது. ஓர் எழுத்து மாற்றம் எவ்வளவு பெரிய பொருள் மாற்றத்தைத் தருகிறது என உணர்வோமா? (அற்ற - இல்லாத; உற்ற- பெற்ற) எப்போதும் நோய் அற்றவராகவே இருப்போம்.

 

வெகுளிப் பெண்: கள்ளம், கபடம் அறியாத சூது, வாது தெரியாத (அப்பாவிப்) பெண்ணை வெகுளிப் பெண் என்று சொல்லி வருகிறோம். பெண்ணை மட்டுமன்று, "அவனா... சுத்த வெகுளிப்பய; ஒரு மண்ணுந் தெரியாது' என்று ஆண் பிள்ளையையும் சுட்டுவதுண்டு. ஆக வெகுளி என்றால், உலக நடப்பு அறியாத நல்லது கெட்டது தெரியாத தன்மை என்று கருதுகிறோம். உண்மையில், வெகுளி என்பதற்குச் சினம் (கோபம்) என்பதுதான் பொருள்.

 

"குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

 

கணமேயும் காத்தல் அரிது'

 

ஆகக் "கோபக்காரியை' "அப்பாவி' ஆக்கிவிட்டோம். அப் பாவி என ஆக்காமல் விட்டோமே!

 

குண்டுமணி: காட்டுச் செடி ஒன்றின் விதையைக் குண்டுமணி என்கிறோம். பெருமளவு சிவப்பும், கொஞ்சம் கறுப்பும் உடையது அது. "ஒரு குண்டுமணி' தங்கம் கூட வீட்டில் இல்லை என்பார்கள்.

 

பொன் அளவையில் குண்டுமணியை எடை கணக்கிடப் பயன்படுத்தியதுண்டு. குண்டு மணி என்று உடல் மிகக் குண்டாக இருக்கும் ஒரு நடிகருக்குப் பெயருண்டு. முன் சொன்ன குண்டு மணி என்ற சொல் சரியானதா? இல்லை. அதன் பெயர் குன்றிமணி.

 

திருக்குறளில் பல இடங்களில் குன்றியெனும் சொல் குன்றி மணியைச் சுட்டுவதாக வந்துள்ளது. "புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து' என்பது ஒரு குறள். குன்றிமணியின் சிகப்பைப் போல் வெளித் தோற்றத்தில் செம்மையுடையவராகவும், அகத்தில் (மனத்தில்) குன்றி மணி மூக்கைப்போல் கரியர் (கறுப்பு எண்ணம் உடையவர்) ஆகவும் இருப்பவர் (போலித் துறவியர்) உலகில் உளர் என்பது இக்குறட் கருத்து.

 

"கேவரு' தெரியுமா உங்களுக்கு? அதுதான் கேவரகு. இச்சொல்லி இடைக்குறையுள்ளது. அஃதாவது கேழ்வரகு என்னும் சொல்லில் இடையில் உள்ள "ழ்' எனும் எழுத்துக் குறைந்துவிட்டது. சரியாகச் சொன்னால் கேழ்வரகு எனும் சிறு தானியம் இது. உடலுக்கு நல்ல ஊட்டம் தருவது.

 

என்ன தமிழோ இது?: "வெள்ள நிவாரணமாக ஒவ்வொருவர்க்கும் தலா ரூ.1000 வழங்கப்பட்டது' என்று செய்தி படித்தார்கள். தலா என்பதன் பொருள் தலைக்கு என்பதாம். இது தலையுடைய மனிதரைக் குறிக்கும். தலைக்கு ஆயிரம் ரூபா என்றாலும் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபா என்றாலும் பொருள் ஒன்றே.

 

ஒவ்வொருவர்க்கும் எனச் சொன்னால் தலா வேண்டாம். தலா போட்டால் ஒவ்வொருவர்க்கும் எனல் வேண்டாம்.

 

கல்வி கண் போன்றது; கல்விக் கண் கொடுத்த கடவுள்- இவ்விரண்டு தொடரும் பிழையற்றவை. ஆனால் ஒரு புத்தகத்தில் கல்விக் கண் போன்றது என்றும், ஒரு சிற்றிதழில் கல்வி கண் கொடுத்த கடவுள் என்றும் படிக்க நேர்ந்தபோது என்ன தமிழோ இது? என்று மனம் வருந்தினேன்.

 

கல்வியானது மனிதருக்குக் கண்ணைப் போன்றது என்பது முதல் தொடரில் பொருள். கல்வியாகிய கண்ணைக் கொடுத்த கடவுள் இரண்டாம் தொடரின் பொருள். கல்வியைக் கண்ணாக உருவகப்படுத்தும்போது கல்விக்கண் (வல்லொற்று) மிகுதல் சரியாம்.. உருவகம் என்றால் கல்வி வேறு கண் வேறு இல்லை. கல்வியே கண்ணாம் என்று கல்வியைக் கண்ணாக உருவகப்படுத்துதல்.

 

கல்வி கண் போன்றது எனும் போது கல்வியானது கண்ணைப் போன்றது எனக் கல்விக்குக் கண்ணை உவமை சொல்கிறோம். இயல்பாக இருக்க வேண்டிய இடத்தில் வல்லொற்றுப் போட்டால், கல்விக் கண் என்று உருவகமாகிவிடுகிறது. பின் போன்றது எனும் சொல்லுக்குப் பொருளில்லாமல் போகும்.

 

இஃதன்றி, மற்றொரு தொடரில், கல்வி கண் கொடுத்த என்றிருப்பது கல்வியும் கண்ணும் கொடுத்த என்று வேறு பொருள் உருவாக்கிடும். ஆதலின் கல்விக் கண் கொடுத்த என்று எழுதுதல் முறையாம். எங்கே எப்படி இந்த ஒற்றெழுத்துகளைப் போடுவது என அறிய நல்லறிஞர்களின் நூல்களைப் படிக்க வேண்டும்.

 

பிறமொழிக் கலப்பு: தமிழர் தம் எழுத்திலும் பேச்சிலும் இந்நாளில் மிகுதியாகக் கலந்துள்ள மொழி ஆங்கிலம்.

 

முதலில் தமிழில் கலந்த பிறமொழி, சமக்கிருதம் எனும் வடமொழியே. அளவிறந்த வடசொற்கள் தமிழில் கலந்த போது அதற்கு இலக்கணம் வரையறுத்தது தொல்காப்பியம். வடமொழிச் சொற்களைத் தமிழின் இயல்புக்கேற்ப ஒலித்திரிபு செய்து வடவெழுத்துகளை விலக்கித் தமிழாக்கிக் கொள்வதே அந்நெறி.

 

by Swathi   on 09 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.