விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவவோரைப் பாதுகாக்கும் வகையில் புதிய மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்!அளித்துள்ளார்.
நாடு முழுவதும் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன. அதிக விபத்துக்கள் நடைபெறும் முதல் ஐந்து மாநிலங்களில் கர்நாடகா உள்ளது. விபத்தில் சிக்குபவர் களுக்கு உதவும் மனப்பான்மை மக்களிடம் குறைவாக உள்ளது.. உதவி செய்பவர்கள் பல்வேறு சட்டச் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால், கண்முன்னே விபத்து நடந்தாலும் ‘நமக்கு எதுவுக்கு வம்பு’ என்ற நினைப்பில் கடந்து செல்பவர்களே அதிகம். விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்பவர்களை பாதுகாக்கும் வகையிலான சட்டம் எதுவும் இதுவரையில் இல்லை.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின் பேரில், கடந்த 2015ல் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சில வழிமுறைகளை வகுத்துள்ளது. இதனிடையே, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி உள்ளிட்டவற்றை வழங்கி, அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவர்களை பாதுகாக்கும் சட்டத்தை கர்நாடக அரசு கொண்டு வந்துள்ளது.
‘கர்நாடகா சிறந்த சமாரிடன் மற்றும் மருத்துவ தொழில்முறை சட்டம் 2016’ என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“இந்த சட்டத்தின்படி சாலை விபத்துக்களில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி உள்ளிட்ட உதவிகளை செய்பவர்களை ஊக்கப்படுத்த நிதியுதவி அளிக்கப்படும். அவர்கள் நீதிமன்றம், காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு வரத் தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டு உடனடியாக வெளியேறலாம்” என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
|