|
|||||
தலைமைப் பண்புகள் |
|||||
இன்று உலகமெலாம் வசித்துவரும் தமிழர்கள் தமிழ் கலாச்சாரத்தோடு அவர்கள் வாழும் நாடுகளின் கலாசாரத்தையும் சேர்ந்து பின்பற்றக்கூடிய நிலை என்பது எதார்த்தம். ஒவ்வொரு நாடும் அவர்களது வரலாற்றை, அந்த நாட்டின் மக்களுக்காக உழைத்த தலைவர்களின் சிறப்பை, தியாகிகளின் பண்புகளை, அவர்கள் இன்று சுவாசிக்கும் சுதந்திரக் காற்றை பெற்றுத்தர போராடிய வரலாற்று நாயகர்களை நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள். இந்நிலையில், உலகத் தலைவர்கள் பலரும் பின்பற்றும் தலைமைத் தத்துவங்களை பெற்ற, அகிம்சையை உலகிற்கு கற்றுத்தந்த நாடாக இந்தியா விளங்கியது. குறிப்பாக தமிழத்தை சார்ந்த நம் முன்னோர்கள் தியாகத்தின் திருவுருவாக வாழ்ந்து நமக்கு தலைமைப் பண்பை உணரவைத்து சென்றுள்ளார்கள். இவைகளை தேடிப் படித்து நம் அடுத்த தலைமுறைகளுக்கு உண்மையான தலைவர்களை, தலைமைப் பண்புகளை அடையாளம் காட்டுவது தமிழ் பெற்றோர் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்தக் கட்டுரை எழுதுவதற்கு காரணம், அடுத்த தலைமுறை தமிழ் தலைவர்கள், சான்றோர்கள் நம் ஒவ்வொருவரின் வீட்டிலும்தான் உள்ளார்கள். அவர்கள் எங்கோ வானத்தில் இருந்தோ, வேறு நாடுகளில் இருந்தோ, நம் தமிழ் சமூகத்தை, நம் மொழியை, மக்களை வழிநடத்த வரப்போவதில்லை. மேலும், இன்றைய நம் குழந்தைகள், நாம் காணும் தற்போதைய பல தற்குறித் தலைவர்களை பார்த்து குழம்பி விடாமலும், தவறான முன்னுதாரணங்களை பெற்றுவிடாமலும் பார்த்துக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். தமிழ் சமூகம், தமிழ் பேசும் அனைவரையும் உள்ளடக்கியது. அவர்கள் எந்த மதம், எந்த ஜாதி, எந்த ஊர், எந்த நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார்கள் என்பதை எல்லாம் தாண்டி, தமிழ் பேசுபவர்கள் அனைவரும் தமிழர்கள். தமிழ் மொழி, தமிழ் மக்களின் நலன், இன்றைய நம் சமுகத்தின் பிரச்சினைகள், தன்னலமற்ற பண்பு, நாளை நம் சமூகம் பயணிக்க வேண்டிய தொலைநோக்கு பாதை எது? என அனைத்தையும் அறிந்த சிலரே நம் சமூகத்திற்கு தலைவர்களாக தேவைப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை நாம் வீட்டில், வீதியில் அடையாளம் கண்டு, அவர்களை செதுக்கி, வளர்த்து உருவாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். இன்றைய நம் தமிழ் சமூகம் சிந்தைகளால் சிதறுண்டு கிடக்கிறது. இன்று தமிழர்களுக்குள் ஒற்றுமை உருவாக வேண்டியதும், அவர்கள் நல்ல தலைமையை அடையாளம் காணவேண்டியதும் அவசியமாகும். நம் முன்னே, நம் காலாச்சாரத்தில் எவ்வளவு நல்ல விஷயங்கள் உள்ளதோ அவ்வளவு புறம்தள்ள வேண்டியதும் உள்ளது. பெரியார், அண்ணா போன்ற தன்னலமற்ற தலைவர்கள் அடையாளம் கண்டு ஒதுக்கிய குப்பைகளைப் போல இன்னும் விடுபட்டுப் போன பல குப்பைகளும் நம் சமூகத்தில் தொடர்கிறது. இதை இன்றைய சுயநலம் கொண்ட தலைவர்கள் பலர் பயன்படுத்தி தன் பிழைப்பை ஓட்டிக்கொண்டுள்ளார்கள். எனவே எதிகால தலைவர்களை, சமூக சேவகர்களை, தியாகிகளை தன் வீட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் நல்ல விஷயங்களையும், சமுதாயத்திருக்கு ஒவ்வாத விஷயங்களையும் பகுத்தறிந்து நம் குழந்தைகளை வளர்த்தெடுக்கவேண்டும்.
ஒரு நல்ல தலைவன் எப்படி இருக்கவேண்டும்? ஒரு நல்ல தலைவன் என்பவன் எதோ வானத்தில் இருந்து வந்தவன் இல்லை என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும். அது, நீங்களாகவோ, நானாகவோ, நம் குழந்தைகளாகவோ கூட இருக்காலாம். டாக்டர் உதயமூர்த்தி “நீதான் தம்பி முதலமைச்சர்” என்ற நூளில் மிக அழகாக இதை விளக்கியுள்ளார். ஒரு மனிதன் அவன் வாழ்ந்த காலத்திலும், அவன் இறந்த பிறகும் அவன் இந்த சமுதாயத்தால் மறக்க முடியாத, தவிர்க்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தி, சமூக வளர்ச்சிக்கு தன்னலமற்று தன்னை ஈடுபடுத்திக் கொண்டவனாக இருக்கவேண்டும்.
நம் தமிழ் சமூகத்தில், உதாரணங்களாக தந்தை பெரியார், காமராசர், கக்கன், அண்ணா, ஜீவா என எத்துனையோ பேர் தான் வாழ்ந்த வாழ்க்கையே உதாரணங்களாக விட்டுவிட்டு சென்றுள்ளார்கள். ஆனால் இன்று அவர்களின் வாழ்வியல் நமக்கு வரலாறாக மட்டுமே இருக்கிறது. இந்த பண்புகளை உள்வாங்கி அவர்களிடம் கற்று வளர்ந்த இன்றைய தலைவர்கள் தன்னை அவர்களைவிட அல்லது அவர்கள் அளவிற்காவது பண்புடன், சுயனலமற்று விளங்குகிரார்களா? யோசிக்கவேண்டும். அங்கொன்று, இங்கொன்று என்று தோன்றும் நல்ல பண்புள்ள ஒரு சிலரைத்தவிர இன்று பெரும்பாலும் சுயநலம், தன் குடும்பம் தன் பிள்ளை, என்று வயிற்றுப்பிழைப்பிற்காக வாழும் பலரைத்தான் நாம் தலைவர்களாக கொண்டுள்ளோம்.
இதில் சூட்சுமம் என்னவென்றால், இன்று ஒரு தலைவர் வளர்ந்துவிட்டால், அதன் பிறகு அவர் மக்களால் கட்டுப்படுத்த முடியாத உயரத்திற்கு செல்லக் கூடிய ஆபத்து இந்த சமூகக் கட்டமைப்பில் இருக்கிறது.
எனவே ஒரு தன்னலமற்ற தமிழ் தலைவரை எப்படி அடையாளம் காண்பது?
இவ்வளவு கட்டுப்பாடுகளைக் கொண்டு ஒரு மனிதன் நல்லவனாக வாழமுடியுமா என்ற கேள்வி நம் குழந்தைளுக்குத் தோன்றும். இதைவிட ஒருபடி மேலே போய், தன் திருமணம்கூட, பொதுவாழ்விற்கு இடையுறாக இருக்கும் என்று அஞ்சி பிரமசாரியாகவே வாழ்ந்து வரலாற்றில் இடம் பிடித்த காமராசர் போன்றோரை, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை நம் குழந்தைகளுக்கு விளக்கவேண்டும்.
ஒருமுறை காமராசரை ஒரு கட்டிடத் திறப்பு விழாவிற்கு அழைத்திருந்தார்கள். காமராசரும் வந்துவிட்டார். அந்த கட்டிடத்தின் உரிமையாளர் காமரசரிடம் வந்து, ஐயா, என் கட்டிடத்தை பார்வையிட்ட ஆட்சியர், வேலை சரியாக முடியவில்லை என்று அனுமதி கொடுக்க மறுக்கிறார். முதலமைச்சர் திறப்புவிழாவிற்கு வருகிறார் என்று சொல்லியும் கேட்கவில்லை. அதுமட்டுமின்றி, நான் நினைத்தால் உங்கள் முதலமைச்சர் ஆகமுடியும், அவரால் ஒரு ஆட்சியர் ஆகமுடியுமா என்று திமிராகச் சொல்கிறார் என்று பற்றவைத்தார். இதைக் கேட்ட காமராசர், சிரிப்பை அடக்கமுடியாமல் கூறினாராம், அவர் சரியாகத்தானே சொல்லிருக்கிறார், அவர் படித்தவர், அவர் நினைத்தால் தேர்தலில் நின்று முதலமைச்சராக முடியும், என்னால் அவர் நிலையை அடைய முடியுமா? என்னை அந்த கலெக்டரிடம் அசிங்கப்படுத்திவிட்டாயே என்று கூறிவிட்டு, நான் இப்போது உன் கட்டிடத்தை திறந்து வைத்து விடுகிறேன். அவர் அனுமதி அளித்ததும் தியேட்டரை நடத்திக்கொள் என்று திறந்துவைத்துவிட்டு, நேராக ஆட்சியர் வீட்டிற்கு முதலமைச்சர் வண்டியை ஓட்டச்சொன்னாராம். நேராக ஆட்சியர் வீட்டிற்குப் போய் அந்த ஆட்சியருக்கு வணக்கம் சொல்லி நன்றாக பணி செய்கிறீர்கள். உங்களைப்போல் நேர்மையானவர்கள் தான் இந்த நாட்டிற்கு வேண்டும். உங்களைப்போல் நேர்மையானவர்கள் நிர்வாகம் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் எல்லாம் சிறை சென்று சுதந்திரத்திற்கு போராடினோம். என்று சொல்லிவிட்டு ஆட்சியரின் மனைவியை அழைத்து காபி கொடுக்கச்சொல்லி குடித்துவிட்டு, அவரிடம் சொன்னாராம், உங்கள் கணவரைப்போல் உங்கள் மகனையும் நேர்மையானவராக இந்த நாட்டிற்க்கு வளர்த்துக் கொடுங்கள் என்று. இப்படிப்பட்ட தலைமைப் பண்புகளைக் கொண்ட நல்லோர்களை கொண்டது நம் வரலாறு. ஆனால் இன்று திரு.சகாயம், திரு.உமாசங்கர் போன்ற நேர்மையான ஆட்சியர்கள் அடையும் நேர்மைக்கான பரிசுகளைப் பாருங்கள். எனவே, குழந்தைகளுக்கு காமராசர் போன்ற தலைவர்களின் வாழ்க்கையை சொல்லிக்கொடுக்கும்போதுதான் அவர்கள் மனதில் சரியான் விதைகள் விதிக்கப்படும். அந்த விதைகள் விருட்சம் அடையும்போது நல்ல தலைவர்கள் நம் சமூகத்திற்க்கு கிடைப்பார்கள். படித்த சில வாசகங்கள்:
ச.பார்த்தசாரதி |
|||||
by Swathi on 16 Jan 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|