சோலையூர் கிராமத்தில் ஊர் தலைவராக இருந்து வருகிறார் நம்ம நாட்டாமை விஜயகுமார்(விஸ்வநாத்).
நாட்டமையின் எந்த முடிவுக்கும் சோலையூர் கிராமமே கட்டுப்பட்டு வருகிறார்கள். அந்த ஊரில் உள்ள அணையின் உறுதி தன்மையை பரிசோதிக்க வருகிறார், பொன்வண்ணன்.
இந்த ஊரின் எம்.பியான ஜெகபதி பாபு சோலையூரில் உள்ள அணையை இடித்து விட்டு, புதிய அணையை கட்டி அதன் மூலம் ஊழல் செய்து பணம் சேர்க்கலாம் என முடிவு செய்கிறார். இதற்காக சோலையூர் அணையை பரிசோதிக்க வரும் பொன்வண்ணனை அவர் கொலை செய்து விடுகிறார். பொன்வண்ணன் சாவதற்கு முன் ஊர் தலைவரிடம் ஊரில் பல ஆண்டுகளாக மூடியிருக்கும் கோயிலை திறக்க வேண்டும் என்று கூறிவிட்டு இறக்கிறார்.
|
அந்த கோயிலை திறக்க வேண்டுமானால் கோயிலை கட்டிய லிங்கேஸ்வரனின் வாரிசுகள் தான் திறக்க வேண்டும். அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலையில் ஊர் தலைவரின் பேத்தியான அனுஷ்கா லிங்கேஸ்வரனின் வாரிசான லிங்கா என்னும் பேரன் ரஜினியை தேடி செல்கிறார்.
சென்னையில் ரஜினி தன் நண்பர்களான சந்தானம், கருணா ஆகியோருடன் திருட்டு தொழில் செய்து வருகிறார். இவர்கள் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு ஜெயிலிலுக்கு செல்கிறார்கள். இவர்களை அனுஷ்கா தன் முயற்சியால் ஜெயிலில் இருந்து வெளியில் எடுக்கிறார்.
அதன் பின்பு ரஜினியிடம் லிங்கேஸ்வரனின் பேரனான நீங்கள் எங்கள் கிராமத்துக்கு வந்து உங்கள் தாத்தா கட்டிய கோவிலை திறக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கு ரஜினி என் தாத்தா எனக்காக ஏதும் செய்யவில்லை ஆதலால் நான் வரமாட்டேன் என்று கூறி மறுக்கிறார்.
அதன் பின்பு ரஜினி தன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு 1.5 கோடி மதிப்புள்ள ஒரு நகையை திருடுகிறார். இந்த நகையை சேட்டான மதன்பாப்பிடம் கொடுக்கிறார். இவரை போலீசில் சிக்க வைக்கிறார் அனுஷ்கா. இதையறியும் ரஜினி, மதன்பாப்பால் நாமும் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து அனுஷ்காவுடன் சோலையூர் கிராமத்திற்கு பயணமாகிறார்.
அங்கு ஊர் தலைவரான விஜயகுமார், ரஜினியிடம் இந்த கோயிலில் உள்ள லிங்கம் மரகத கல்லால் செய்யப்பட்டது. இதை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறார்.
பல கோடி மதிப்புள்ள இந்த மரகத லிங்கத்தை திருடி விற்றால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்று எண்ணி கோயிலுக்கு செல்கிறார் ரஜினி. அங்கு கோயிலுக்கு யாரோ சென்று விட்டார்கள் என்று நினைத்து ஊர் மக்கள் கோயிலை சுற்றி வளைக்கிறார்கள். இதிலிருந்து தப்பிப்பதற்காக ரஜினி கோயிலை திறந்து பூஜை செய்கிறார்.
அப்போது மக்களிடம் விஜயகுமார், ரஜினியின் தாத்தா லிங்கேஸ்வரனின் பெருமைகளை எடுத்து கூறுகிறார். இதைக்கேட்ட ரஜினி, தன் தாத்தாவின் உயர்ந்த எண்ணத்தையும் உள்ளத்தையும் எண்ணி வருந்துகிறார். இதனால் அந்த ஊரை விட்டு செல்ல நினைக்கிறார்.
அப்போது விஜயகுமார், அணையை பார்வையிட்ட பொன்வண்ணனை யாரோ கொலை செய்து விட்டதாகவும், இந்த ஊரில் உள்ள பாலத்திற்கும், கோயிலுக்கும் ஆபத்து இருக்கிறது என்றும் கூறுகிறார். நீங்கள் கொலை செய்தவர்களை கண்டுபிடித்து இந்த ஊரை காக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
இறுதியில், லிங்காவின் முயற்சியில் அணை திறக்கப்பட்டதா? அல்லது ஜெகபதிபாபுவின் திட்டம் நிறைவேறியதா ? பொன்வண்ணனின் கொலைக்கு காரணம் என்ன என்பதை கண்டு பிடித்தாரா? அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? என்பதுதான் லிங்கா படத்தின் மீதிக்கதை.
எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் இது. சூப்பர் ஸ்டாரின் அறிமுக பாடல் காட்சிகள் அருமை. இரண்டு கதாபாத்திரத்திலும் அவருக்கே உரிய ஸ்டைலில் அசத்தியிருக்கிறார். வயது 60-யை கடந்தாலும் அவரது ஸ்டைலும், எனர்ஜியும் குறையவே இல்லை. கம்பீரமான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். இவர் பேசும் வசனங்கள் எல்லாம் திரையில் விசில் பறக்கிறது.
கதாநாயகிகளாக வரும் அனுஷாவும், சோனாக்ஷியும் நடிப்பில் திறம்பட செயல்பட்டுள்ளனர். பாடல்களைவிட பாடல் காட்சிகள் அருமை...
எந்திரனுக்குப் பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கிறார் சந்தானம். ’நண்பேண்டா’ என்று சொல்ல வந்து, ரஜினியைப் பார்த்து யோசித்து ‘நண்பேன்’ என்று நிறுத்துவதும், ரஜினி ‘டா’ என்று சொல்லிமுடிப்பதுமாக அறிமுகமே அமர்க்களம். சமீபத்தில் நல்ல காமெடி நடிகராக உருவாகிவரும் கருணாகரன், இதிலும் இருக்கிறார். ரஜினி, சந்தானம் என இரண்டு காமெடி ஜாம்பவான்களுக்குப் பின், இவரும் சிரிக்க வைக்கிறார்.
இவ்வளவு பிரம்மாண்டப் படத்தை, ஆயிரக்கணக்கான நடிகர்கள் பங்கேற்கும் காட்சிகள் நிரம்பிய ஒரு படத்தை ஆறுமாதத்தில் எடுப்பது காட்டியிருப்பது, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் திறமையை உயர்த்தி காட்டியிருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை அமர்க்களம்.
மொத்தத்தில் லிங்கா... பார்க்கலாம் போங்கா...
|