கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் கடந்த டிசம்பர் 12ல் வெளியான படம் லிங்கா.
லிங்கா படம் எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் கிடைக்காததாலும், பெரிய அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இப்பிரச்னையில் ரஜினிகாந்த் தலையிட்டு தயாரிப்பாளரிடம் நஷ்டத் தொகையை பெற்றுத் தரவேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தொடர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அது மட்டுமல்லாமல், லிங்கா 100வது நாளில் ரஜினிகாந்த் வீடு முன்பு லிங்கா பட விநியோகிஸ்தர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் ஒரு பெரிய தொகையை இழப்பீடாக ரஜினி கொடுத்து பிரச்னையைத் தீர்த்து வைத்து விட்டதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதனை, லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பாளர் சங்கத்திடம் கடந்த 10 நாட்களுக்கு முன்னரே தெரிவித்ததாகவும், இந்தத் தொகையை விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பிரித்துக் கொள்வதிலேயே தாமதம் ஏற்பட்டதாகவும், இனி இந்தப் பிரச்னைக்கும் ரஜினிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
|