அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடந்து வீழ்ச்சி அடைந்து வருவதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் கியாஸ் போன்ற எரிபொருள் விலையும் உயர்ந்ததால், மத்திய அரசுக்கான மானிய சுமை ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடியாக அதிகரித்தது. இதனை ஈடுகட்டுவதற்காக பெட்ரோலிய பொருட்களின் விலையை சிறிது உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. சமையல் கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைத்ததற்கும், விலையை சமீபத்தில் உயர்த்தியதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தாலும் வேறு வழி இல்லாததால், சமையல் கியாஸ் விலையை ஒரு சிலிண்டருக்கு மாதம் ரூ.10 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.25 உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.இது தொடர்பாக மத்திய மந்திரிசபை கூடி விரைவில் முடிவு எடுக்கும் என்று பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
|