உயிரோடு இருக்கும் தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு மதுரை மாநகராட்சி சார்பில் இறப்புச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்க, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சிலர் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரை அடுத்து. லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மதுரை மாநகராட்சியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள இறப்பு, பிறப்பு சான்றிதழை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி இறந்துவிட்டதாக கடந்த மாதம் 23 ஆம் தேதி இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதே போல் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை 2006 ஆம் ஆண்டு இறந்துவிட்டதாக கடந்த மாதம் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை மறுத்த மாநகராட்சி அதிகாரிகள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் கணினி பிரிவில் டிஜிட்டல் கையெழுத்தினை தவறாக பயன்படுத்தி போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளாக தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
|