முக்கிய வழக்குகளின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
‘தேசிய முக்கியத்துவம் மற்றும் அரசியலமைப்பு சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்வது தொடர்பாக, ஜெய் சிங், சட்ட மாணவர் சிநேகில் திரிபாதி மற்றும் பொறுப்புடைமை மற்றும் முறையான மாற்றத்துக்கான மையம் என்ற தொண்டு நிறுவனம் ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்தன.
இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும், நீதிபதி கன்வில்கரும் ஒருமித்த தீர்ப்பை அளித்தனர். மற்றொரு நீதிபதியான சந்திரசூட் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
தலைமை நீதிபதி மிஸ்ரா, கன்வில்கர் வழங்கிய தீர்ப்பில் கூறி இருந்ததாவது: முதற் கட்டமாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அரசியலைமைப்பு சார்ந்த வழக்குகளின் இறுதி விவாதங்களை சோதனை அடிப்படையில் நேரடி ஒளிபரப்பு செய்யலாம்.
இந்த வழக்கு விசாரணைக்கும் நேரடி ஒளிரப்புக்கும் 10 நிமிடம் என்ற அளவில் ஒளிபரப்பில் வித்தியாசம் இருக்க வேண்டும். இதில் முக்கிய தகவல் இடம்பெறவில்லை என தெரிந்தால் நீதிமன்ற அனுமதியுடன் அந்த விசாரணையை தணிக்கை செய்து ஒளிபரப்பலாம்.
இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்களின் உரிமைகளையும், வழக்கு தொடர்ந்தோரின் கண்ணியத்தையும் பாதுகாக்கும் வகையில் தேவையான விதிமுறைகள் வகுக்கப்படும். திருமணம் விவகாரம் மற்றும் பாலியல் குற்றச்சாட்டு போன்ற வழக்குகளை நேரடியாக ஒளிபரப்பக் கூடாது.
நீதித்துறையின் பொறுப்பை அதிகரிக்க, வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்வது உதவியாக இருக்கும். இந்த திட்டங்கள் குறித்த நடவடிக்கைகளை மத்திய சட்ட அமைச்சகம் மேற்கொள்ளும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
|