|
|||||
மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி காலமானார் |
|||||
"மக்கள் சக்தி" இயக்கத்தின் தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி (வயது 82) சென்னையில் 20-01-2013ல் காலமானார். அவர் பிரிந்தாலும் அவர் விட்டுச்செல்லும் சிந்தனைகளை லட்சோப லட்சம் இளைஞர்கள் அடைகாத்து வைத்திருக்கிறார்கள். அவரின் ஆதமா சாந்தியடைய பிரார்த்திப்போம். வாழ்க்கை குறிப்பு: மனவியலைப் பற்றித் தொடர்ந்து கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்ப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வருபவர் டாக்டர்.எம்.எஸ். உதயமூர்த்தி. மனோதத்துவங்களை வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதை சுமார் 40 நூல்களில் வடித்துத் தந்திருக்கிறார் அவர். சிறந்த ஆசிரியர் என்ற விருதும், Fulbright Scholar என்ற கெளரவமும் இவருக்கு உண்டு. இவர் எழுதிய “எண்ணங்கள் “ நூல் தமிழக கல்லூரிகளில் பாடமாக இருக்கிறது. மேலும் இது 62 பதிப்புகளுக்குமேல் சென்று வாசகர்களிடம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது.
அறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகிய மூவரிடமும் நன்கு பழகியவர். அறிஞர் அண்ணாவின் அமெரிக்க பயணத்தின்போது அவருடனேயே இருந்து தமிழகத்திற்கு தேவையான பல தொடர்புகளை ஏற்படுத்தியவர். எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆவதற்கு முன் அவரை அமெரிக்க பல்கலைகழகங்களின் மூலம் அமெரிக்கா அழைத்துவர ஏற்பாடு செய்தவர். நேர்மையான அரசுக்கு தாரக மந்திரமாக, அரசியலுக்கு வர ஆர்வம உள்ள இளைஞர்கள் சுயவளர்ச்சி, சுய முனேற்றம் மற்றும் சமுதாய ஈடுபாடு என்ற மூன்று நிலைகளில் வரவேண்டும் என்று வலியுறுத்தியவர். இளைஞர்களிடையே எம்.எஸ். உதயமூர்த்தி நடத்திய நிகழ்ச்சிகள் தன்னம்பிக்கையை விதைப்பவையாக இருந்தன.
இலங்கை பிரச்சினைக்கு தீர்வுக்கான எம்.ஜி.ஆர். மற்றும் கலைஞருக்கு பாலமாக விளங்கியவர். நதிநீர் இணைப்பிற்காக தொடர்ந்து வலியுறுத்தியவர். தனது அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற ஒரு புதிய சமுதாயத்தை தமிழகம் பெறவேண்டும் என்று விரும்பி “மக்கள் சக்தி இயக்கம்” என்ற அமைப்பை உருவாக்கி தேர்தலில் நின்றவர்.
வெளிநாடுகளில் உள்ள இளைஞர்கள் அரசியல், சமூக மாற்றத்தில் ஈடுபட விருப்பம் இருக்கும் இளைஞர்கள் இவரது சுய சரிதையான “என்னை செதுக்கிய எண்ணங்களை” தவறாமல் படியுங்கள். உங்கள் பல கேள்விகளுக்கு அதில் பதில் இருக்கும். இவர் காலத்தில் கன்னியாகுமரியில் இருந்து கிருஷ்ணகிரி வரை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எழுச்சி ஊட்டியவர். டைரக்டர் பாலச்சந்தர் “உன்னால் முடியும் தம்பி” என்ற தலைப்பில் கதாநாயகனுக்கு உதயமூர்த்தி என்ற பெயரைச் சூட்டி, ஒரு திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
எம்.எஸ்.உதயமூர்த்தி தஞ்சை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை அருகில் விளநகர் என்ற கிராமத்தில் பிறந்தவர். அவருக்கு சித்தார்த், அசோக் என்ற இரண்டு மகன்களும், கமலா என்ற மகளும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். |
|||||
by Swathi on 21 Jan 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|