திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும் நல்லோரால் கொண்டாடப்படாது. ('உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான் வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும் தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன் ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை எய்துதல் இல்லை. இது பொருள் செய்ய மாட்டானென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனைவிக்கு அஞ்சி நடக்கும் மறுமைப்பயன் இல்லாதவனது; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று-வினைமுயற்சி வெற்றிபெறுவதில்லை. இல்லறஞ்செய்தற் குரிய உரிமையின்மையின் 'மறுமையிலாளன்' என்றும், ஆண்மையின்மையின் 'வீறெய்தலின்று' என்றும், கூறினார்.
கலைஞர் உரை:
மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.
Translation
No glory crowns e'en manly actions wrought
By him who dreads his wife, nor gives the other world a thought.
Explanation
The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.