திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் - மாந்தர்க்குப் பொது உணர்வு தம் மனம் காரணமாக உண்டாம் இன்னான் எனப்படும் சொல் இனத்தான் ஆம் - 'இவன் இத்தன்மையன்' என்று உலகத்தாரான் சொல்லப்படும் சொல் இனம் காரணமாக உண்டாம். (இயற்கையாய புலன் உணர்வு மாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின், அதனை மனத்தான் ஆம் என்றும், செயற்கையாய விசேட உணர்வுபற்றி நல்லன் என்றாகத் தீயன் என்றாக நிகழும் சொற்கு இனம் வேண்டுதலின், அதனை 'இனத்தான் ஆம்' என்றும் கூறினார். உவமையளவை கொள்ளாது 'அத் திரிபும்' மனத்தான் ஆம் என்பாரை நோக்கி, இதனான் அது மறுத்துக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
மாந்தர்க்கு அறிவு மனத்தினானே யுண்டாம், ஆயினும் தான் சேர்ந்த இனத்தினால் இனியனல்லன் என்று பிறரால் பழிக்கப்படுஞ் சொல் உண்டாம்.
இது பிறரால் பழிக்கப்படுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் -மாந்தர்க்கு இயற்கையாகிய அறிவு அவரவர் மனம் கரணமாக உண்டாகும்; இன்னான் எனப்படும் சொல் இனத்தான் ஆம் -ஆயின், இவன் இத்தன்மையனென்று பிறரால் சிறப்பாகச் சுட்டிச் சொல்லப்படுஞ் சொல் இனம் கரணியமாக உண்டாகும்.
கரணம் கருவி. இயல்பாக ஒரே தன்மையிலுள்ள மழைநீர் நன்னீ ரென்றும் உவர் நீரென்றும் வேறுபடுத்திச் சொல்லப் படுவதற்கு, அது சேர்ந்துள்ள நிலமே கரணியமாவதுபோல், இயல்பாக ஒரே தன்மையரான மாந்தரும் நல்லவரென்றும் தீயவரென்றும் வேறுபடுத்திச் சொல்லப்படுவதற்கு, அவர் சேர்ந்த இனமே கரணிய மென்பது கருத்து.
கலைஞர் உரை:
ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொறுத்து அமையும். அவர்
இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும்
கூட்டத்தைப் பொருத்து அமையும்
சாலமன் பாப்பையா உரை:
மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.
Translation
Perceptions manifold in men are of the mind alone;
The value of the man by his companionship is known.
Explanation
The power of knowing is from the mind; (but) his character is from that of his associates.