LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஐம்பெருங் காப்பியங்கள்

மணிமேகலை பகுதி -3

 

24. ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த 
தொல் முது கணிகை தன் சூழ்ச்சியில் போயவன் 
விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது 
நெஞ்சு நடுக்குறக் கேட்டு மெய் வருந்தி 
மாதவி மகள் தனை வான் சிறை நீக்கக் 
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு 
'அரவு ஏர் அல்குல் அருந் தவ மடவார் 
உரவோற்கு அளித்த ஒருபத்து ஒருவரும் 
ஆயிரம்கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள 
மா இரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும் 24-010
ஆங்கு அவன் புதல்வனோடு அருந் தவன் முனிந்த 
ஓங்கிய சிறப்பின் ஒருநூற்று நால்வரும் 
திருக் கிளர் மணி முடித் தேவர் கோன் தன் முன் 
உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும் 
ஒன்று கடை நின்ற ஆறு இருபதின்மர் இத் 
தோன்று படு மா நகர்த் தோன்றிய நாள் முதல் 
யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர் 
மாபெருந்தேவி! மாதர் யாரினும் 
பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று 
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் 24-020
பரந்து படு மனைதொறும் பாத்திரம் ஏந்தி 
அரங்கக் கூத்தி சென்று ஐயம் கொண்டதும் 
நகுதல் அல்லது நாடகக் கணிகையர் 
தகுதி என்னார் தன்மை அன்மையின் 
மன்னவன் மகனே அன்றியும் மாதரால் 
இந் நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்! 
உம்பளம் தழீஇய உயர் மணல் நெடுங் கோட்டு 
பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல் 
கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா 
இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற 24-030
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு சிறை 
தானே தமியள் ஒருத்தி தோன்ற 
"இன்னள் ஆர்கொல் ஈங்கு இவள்?" என்று 
மன்னவன் அறியான் மயக்கம் எய்தாக் 
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் 
உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் 
உற்று உணர் உடம்பினும் வெற்றிச் சிலைக் காமன் 
மயிலையும் செயலையும் மாவும் குவளையும் 
பயில் இதழ்க் கமலமும் பருவத்து அலர்ந்த 
மலர் வாய் அம்பின் வாசம் கமழப் 24-040
பலர் புறங்கண்டோன் பணிந்து தொழில் கேட்ப 
ஒரு மதி எல்லை கழிப்பினும் உரையாள் 
பொரு அறு பூங்கொடி போயின அந் நாள் 
"யாங்கு ஒளித்தனள் அவ் இளங்கொடி!" என்றே 
வேந்தரை அட்டோன் மெல் இயல் தேர்வுழி 
நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி 
சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற 
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று 
"என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள் 
அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள்? 24-050
சொல்லுமின்" என்று தொழ அவன் உரைப்பான் 
"கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னைப் 
பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய் 
நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன் 
வாகை வேலோன் வளைவணன் தேவி 
வாசமயிலை வயிற்றுள் தோன்றிய 
பீலிவளை என்போள் பிறந்த அந் நாள் 
"இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய 
கருவொடு வரும்" எனக் கணி எடுத்து உரைத்தனன் 
ஆங்கு அப் புதல்வன் வரூஉம் அல்லது 24-060
பூங்கொடி வாராள் புலம்பல்! இது கேள் 
தீவகச் சாந்தி செய்யா நாள் உன் 
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம் 
மணிமேகலை தன் வாய்மொழியால் அது 
தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின் 
ஆங்குப் பதி அழிதலும் ஈங்குப் பதி கெடுதலும் 
வேந்தரை அட்டோய்! மெய் எனக் கொண்டு இக் 
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல் 
வாசவன் விழாக் கோள் மறவேல்" என்று 
மாதவன் போயின அந் நாள் தொட்டும் இக் 24-070
காவல் மா நகர் கலக்கு ஒழியாதால் 
தன் பெயர் மடந்தை துயருறுமாயின் 
மன் பெருந் தெய்வம் வருதலும் உண்டு என 
அஞ்சினேன் அரசன் தேவி!' என்று ஏத்தி 
'நல் மனம் பிறந்த நாடகக் கணிகையை 
என் மனைத் தருக' என இராசமாதேவி 
'கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் 
உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை 
தலைமையாக் கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை 
புலைமை என்று அஞ்சிப் போந்த பூங்கொடி 24-080
நின்னொடு போந்து நின் மனைப் புகுதாள் 
என்னொடு இருக்கும்' என்று ஈங்கு இவை சொல்வுழி 
மணிமேகலை திறம் மாதவி கேட்டு 
துணி கயம் துகள் படத் துளங்கிய அதுபோல் 
தௌியாச் சிந்தையள் சுதமதிக்கு உரைத்து 
வளி எறி கொம்பின் வருந்தி மெய்ந் நடுங்கி 
அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர் தம்முடன் 
மற வேல் மன்னவன் தேவி தன்பால் வரத் 
தேவியும் ஆயமும் சித்திராபதியும் 
மாதவி மகளும் மாதவர்க் காண்டலும் 24-090
எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளைக் கையால் 
தொழும்தகை மாதவன் துணை அடி வணங்க 
'அறிவு உண்டாக' என்று ஆங்கு அவன் கூறலும் 
இணை வளை நல்லாள் இராசமாதேவி 
அருந் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி 
திருந்து அடி விளக்கிச் சிறப்புச் செய்த பின் 
"யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என் 
காண்தகு நல்வினை நும்மை ஈங்கு அழைத்தது 
நாத் தொலைவு இல்லைஆயினும் தளர்ந்து 
மூத்த இவ் யாக்கை வாழ்க பல்லாண்டு!' என 24-100
'தேவி கேளாய்! செய் தவ யாக்கையின் 
மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன் 
பிறந்தார் "மூத்தார் பிணி நோய் உற்றார் 
இறந்தார்" என்கை இயல்பே இது கேள் 
பேதைமை செய்கை உணர்வே அருஉரு 
வாயில் ஊறே நுகர்வே வேட்கை 
பற்றே பவமே தோற்றம் வினைப் பயன் 
இற்று என வகுத்த இயல்பு ஈர் ஆறும் 
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் 
அறியாராயின் ஆழ் நரகு அறிகுவர் 24-110
"பேதைமை என்பது யாது?" என வினவின் 
ஓதிய இவற்றை உணராது மயங்கி 
இயற்படு பொருளால் கண்டது மறந்து 
முயற்கோடு உண்டு எனக் கேட்டது தௌிதல் 
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் 
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் 
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் 
தொக்க விலங்கும் பேயும் என்றே 
நல்வினை தீவினை என்று இரு வகையான் 
சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி 24-120
வினைப் பயன் விளையும்காலை உயிர்கட்கு 
மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும் 
"தீவினை என்பது யாது?" என வினவின் 
ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய் 
கொலையே களவே காமத் தீவிழைவு 
உலையா உடம்பில் தோன்றுவ முன்றும் 
பொய்யே குறளை கடுஞ் சொல் பயன் இல் 
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும் 
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று 
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப் 24-130
பத்து வகையால் பயன் தெரி புலவர் 
இத் திறம் படரார் படர்குவர் ஆயின் 
விலங்கும் பேயும் நரகரும் ஆகி 
கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர் 
"நல்வினை என்பது யாது?" என வினவின் 
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி 
சீலம் தாங்கித்தானம் தலைநின்று 
மேல் என வகுத்த ஒரு மூன்று திறத்து 
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி 
மேவிய மகிழ்ச்சி வினைப் பயன் உண்குவர் 24-140
அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர்! 
புரை தீர் நல் அறம் போற்றிக் கேண்மின் 
மறு பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ! 
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு 
இத் திறம் பலவும் இவற்றின் பகுதியும் 
முத்து ஏர் நகையாய்! முன்னுறக் கூறுவல்' 
என்று அவன் எழுதலும் இளங்கொடி எழுந்து 
நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி 
'தேவியும் ஆயமும் சித்திராபதியும் 
மாதவர் நல் மொழி மறவாது உய்ம்மின் 24-150
இந் நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின் 
"மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று" என்குவர் 
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின் நாள் 
மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி 
வஞ்சியுள் புக்கு மா பத்தினி தனக்கு 
எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல் 
"எனக்கு இடர் உண்டு" என்று இரங்கல் வேண்டா 
மனக்கு இனியீர்!" என்று அவரையும் வணங்கி 
வெந்துறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த 
அந்தி மாலை ஆய் இழை போகி 24-160
உலக அறவியும் முதியாள் குடிகையும் 
இலகு ஒளிக் கந்தமும் ஏத்தி வலம் கொண்டு 
அந்தரம் ஆறாப் பறந்து சென்று ஆய் இழை 
இந்திரன் மருமான் இரும் பதிப் புறத்து ஓர் 
பூம்பொழில் அகவயின் இழிந்து பொறையுயிர்த்து 
ஆங்கு வாழ் மாதவன் அடி இணை வணங்கி 
'இந் நகர்ப் பேர் யாது? இந் நகர் ஆளும் 
மன்னவன் யார்?" என மாதவன் கூறும் 
'நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன் 
பூமிசந்திரன் மகன் புண்ணியராசன் 24-170
ஈங்கு இவன் பிறந்த அந் நாள் தொட்டும் 
ஓங்கு உயர் வானத்துப் பெயல் பிழைப்பு அறியாது 
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம் 
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல்' என 
தகை மலர்த் தாரோன் தன் திறம் கூறினன் 
அகை மலர்ப் பூம்பொழில் அருந் தவன் தான் என் 24-176
25. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை
அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து 
தருமசாவகன் தன் அடி வணங்கி 
அறனும் மறனும் அநித்தமும் நித்தத் 
திறனும் துக்கமும் செல் உயிர்ப் புக்கிலும் 
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும் 
ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு 
'பெண் இணை இல்லாப் பெரு வனப்பு உற்றாள் 
கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா 
அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும் 
இங்கு இணை இல்லாள் இவள் யார்?' என்ன 25-010
காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன் 
'நாவல் அம் தீவில் இந் நங்கையை ஒப்பார் 
யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம் 
கிள்ளிவளவனொடு கெழுதகை வேண்டிக் 
கள் அவிழ் தாரோய்! கலத்தொடும் போகி 
காவிரிப் படப்பை நல் நகர் புக்கேன் 
மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்தாங்கு 
ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன் 
ஆங்கு அவள் இவள்! அவ் அகல் நகர் நீங்கி 
ஈங்கு வந்தனள்' என்றலும் இளங்கொடி 25-020
'நின் கைப் பாத்திரம் என் கைப் புகுந்தது 
மன் பெருஞ் செல்வத்து மயங்கினை அறியாய் 
அப் பிறப்பு அறிந்திலைஆயினும் ஆ வயிற்று 
இப் பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ? 
மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது 
பிணிப்புறு பிறவியின் பெற்றியை அறியாய் 
ஆங்கு வருவாய் அரச! நீ' என்று அப் 
பூங் கமழ் தாரோன்முன்னர்ப் புகன்று 
மை அறு விசும்பின் மடக்கொடி எழுந்து 
வெய்யவன் குடபால் வீழாமுன்னர் 25-030
> வான் நின்று இழிந்து மறி திரை உலாவும் 
பூ நாறு அடைகரை எங்கணும் போகி 
மணிப்பல்லவம் வலம் கொண்டு மடக்கொடி 
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும் 
தொழுது வலம் கொள்ள அத் தூ மணிப்பீடிகைப் 
பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த 
'காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை 
மாயம் இல் மாதவன் தன் அடி பணிந்து 
தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி 
பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம் 25-040
'விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும் 
கலங்கு அஞர்த் தீவினை கடிமின் கடிந்தால் 
தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர் 
ஆகலின் நல்வினை அயராது ஓம்புமின் 
புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன் 
உலகு உயக் கோடற்கு ஒருவன் தோன்றும் 
அந் நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது 
இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை 
மாற்று அருங் கூற்றம் வருவதன் முன்னம் 
போற்றுமின் அறம்' எனச் சாற்றிக் காட்டி 25-050
நாக் கடிப்பு ஆக வாய்ப் பறை அறைந்தீர் 
அவ் உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த 
வெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின் 
"பெரியவன் தோன்றாமுன்னர் இப் பீடிகை 
கரியவன் இட்ட காரணம் தானும் 
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய 
என் பிறப்பு உணர்த்தலும் என்?" என்று யான் தொழ 
"முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது 
மற்று அப் பீடிகை தன்மிசைப் பொறாஅது 
பீடிகை பொறுத்த பின்னர் அல்லது 25-060
வானவன் வணங்கான் மற்று அவ் வானவன் 
பெருமகற்கு அமைத்து 'பிறந்தார் பிறவியைத் 
தரும பீடிகை சாற்றுக' என்றே 
அருளினன் ஆதலின் ஆய் இழை பிறவியும் 
இருள் அறக் காட்டும்" என்று எடுத்து உரைத்தது 
அன்றே போன்றது அருந் தவர் வாய்மொழி 
இன்று எனக்கு' என்றே ஏத்தி வலம் கொண்டு 
ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும் 
ஆங்கு அப் பொழில் விட்டு அகநகர் புக்கு 
தந்தை முனியா தாய் பசு ஆக 25-070
வந்த பிறவியும் மா முனி அருளால் 
குடர்த் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர் 
அடர்ப் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும் 
மா முனி அருளால் மக்களை இல்லோன் 
பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும் 
ஆய் தொடி அரிவை அமரசுந்தரி எனும் 
தாய் வாய்க் கேட்டு தாழ் துயர் எய்தி 
இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம் 
பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து 
'செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க 25-080
அரைசு வீற்றிருந்து புரையோர்ப் பேணி 
நாடகம் கண்டு பாடல் பான்மையின் 
கேள்வி இன் இசை கேட்டு தேவியர் 
ஊடல் செவ்வி பார்த்து நீடாது 
பாடகத் தாமரைச் சீறடி பணிந்து 
தே மரு கொங்கையில் குங்குமம் எழுதி 
அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி 
நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி 
மதி முகக் கருங் கண் செங் கடை கலக்கக் 
கருப்பு வில்லி அருப்புக் கணை தூவ 25-090
தருக்கிய காமக் கள்ளாட்டு இகழ்ந்து 
தூ அறத் துறத்தல் நன்று' எனச் சாற்றி 
'தௌிந்த நாதன் என் செவிமுதல் இட்ட வித்து 
ஏதம் இன்றாய் இன்று விளைந்தது 
மணிமேகலை தான் காரணம் ஆக' என்று 
அணி மணி நீள் முடி அரசன் கூற 
'மனம் வேறு ஆயினன் மன்' என மந்திரி 
சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி 
'எம் கோ வாழி! என் சொல் கேண்மதி 
நும் கோன் உன்னைப் பெறுவதன் முன் நாள் 25-100
பன்னீராண்டு இப் பதி கெழு நல் நாடு 
மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு 
ஈன்றாள் குழவிக்கு இரங்காளாகி 
தான் தனி தின்னும் தகைமையது ஆயது 
காய் வெங் கோடையில் கார் தோன்றியதென 
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்! 
தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்கட்கு 
வானம் பொய்யாது மண் வளம் பிழையாது 
ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா 
நீ ஒழிகாலை நின் நாடு எல்லாம் 25-110
தாய் ஒழி குழவி போலக் கூஉம் 
துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ 
உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின் 
இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ! 
பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே! 
தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும் 
மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால் 
மதி மாறு ஒர்ந்தனை மன்னவ!' என்றே 
முதுமொழி கூற முதல்வன் கேட்டு 
'மணிபல்லவம் வலம் கொள்வதற்கு எழுந்த 25-120
தணியா வேட்கை தணித்தற்கு அரிதால் 
அரசும் உரிமையும் அகநகர்ச் சுற்றமும் 
ஒரு மதி எல்லை காத்தல் நின் கடன்' என 
'கலம் செய் கம்மியர் வருக' எனக் கூஉய் 
இலங்கு நீர்ப் புணரி எறி கரை எய்தி 
வங்கம் ஏறினன் மணிபல்லவத்திடை 
தங்காது அக் கலம் சென்று சார்ந்து இறுத்தலும் 
புரை தீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி 
அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி 
காவலன் தன்னொடும் கடல் திரை உலாவும் 25-130
தே மலர்ச் சோலைத் தீவகம் வலம் செய்து 
'பெருமகன்! காணாய் பிறப்பு உணர்விக்கும் 
தரும பீடிகை இது' எனக் காட்ட 
வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு 
உலந்த பிறவியை உயர் மணிப் பீடிகை 
கைஅகத்து எடுத்துக் காண்போர் முகத்தை 
மை அறு மண்டிலம் போலக் காட்ட 
'என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன் 
தென் தமிழ் மதுரைச் செழுங் கலைப் பாவாய்! 
மாரி நடு நாள் வயிறு காய் பசியால் 25-140
ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு 
இரந்தூண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு 
அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில் 
"நாடு வறம் கூரினும் இவ் ஓடு வறம் கூராது 
ஏடா! அழியல் எழுந்து இது கொள்க" என 
அமுதசுரபி அங்கையில் தந்து என் 
பவம் அறுவித்த வானோர் பாவாய்! 
உணர்வில் தோன்றி உரைப் பொருள் உணர்த்தும் 
மணி திகழ் அவிர் ஒளி மடந்தை! நின் அடி 
தேவர் ஆயினும் பிரமர் ஆயினும் 25-150
நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி 
பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது 
மறந்து வாழேன் மடந்தை!' என்று ஏத்தி 
மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து 
தென் மேற்காகச் சென்று திரை உலாம் 
கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர் 
தூ மலர்ப் புன்னைத் துறை நிழல் இருப்ப 
ஆபுத்திரனோடு ஆய் இழை இருந்தது 
காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி 
'அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு 25-160
பெருந் துயர் தீர்த்த அப் பெரியோய்! வந்தனை 
அந் நாள் நின்னை அயர்த்துப் போயினர் 
பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி 
நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர் 
ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண் 
ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர் 
ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண் 
ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப 
ஆய் மலர்ப் புன்னை அணி நிழல் கீழால் 
அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய 25-170
என்பு உடை யாக்கை இருந்தது காணாய் 
நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கிப் 
பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய் 
கொலைவன் அல்லையோ? கொற்றவன் ஆயினை! 
பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய 
மடவரல் நல்லாய்! நின் தன் மா நகர் 
கடல் வயிறு புக்கது காரணம் கேளாய் 
நாக நல் நாடு ஆள்வோன் தன் மகள் 
பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள் 
பனிப் பகை வானவன் வழியில் தோன்றிய 25-180
புனிற்று இளங் குழவியொடு பூங்கொடி பொருந்தி இத் 
தீவகம் வலம் செய்து தேவர் கோன் இட்ட 
மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி 
கம்பளச் செட்டி கலம் வந்து இறுப்ப 
அங்கு அவன்பால் சென்று அவன் திறம் அறிந்து 
"கொற்றவன் மகன் இவன் கொள்க" எனக் கொடுத்தலும் 
பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி 
பழுது இல் காட்சிப் பைந்தொடி புதல்வனைத் 
தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழிய 
கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள் 25-190
இலங்கு நீர் அடைகரை அக் கலம் கெட்டது 
கெடு கல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது 
வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப 
மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன் 
நல் மணி இழந்த நாகம் போன்று 
கானலும் கடலும் கரையும் தேர்வுழி 
வானவன் விழாக் கோள் மா நகர் ஒழிந்தது 
மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள் 
"அணி நகர் தன்னை அலை கடல் கொள்க" என 
இட்டனள் சாபம் பட்டது இதுவால் 25-200
கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த 
வடி வேல் தடக் கை வானவன் போல 
விரிதிரை வந்து வியல் நகர் விழுங்க 
ஒரு தனி போயினன் உலக மன்னவன் 
அருந் தவன் தன்னுடன் ஆய் இழை தாயரும் 
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர் 
பரப்பு நீர்ப் பௌவம் பலர் தொழ காப்போள் 
உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின் 
மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம் 
முன் நாள் எடுத்ததும் அந் நாள் ஆங்கு அவன் 25-210
அற அரசு ஆண்டதும் அறவணன் தன்பால் 
மறு பிறப்பாட்டி வஞ்சியுள் கேட்பை' என்று 
அந்தரத் தீவகத்து அருந் தெய்வம் போய பின் 
மன்னவன் இரங்கி மணிமேகலையுடன் 
துன்னிய தூ மணல் அகழத் தோன்றி 
ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கித் 
தான் பிணி அவிழாத் தகைமையது ஆகி 
வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த 
பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி 
மன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து 25-220
'என் உற்றனையோ இலங்கு இதழ்த் தாரோய்? 
நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது 
மன்னா! நின் தன் மறு பிறப்பு உணர்த்தி 
அந்தரத் தீவினும் அகன் பெருந் தீவினும் 
நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும் 
அரசர் தாமே அருளறம் பூண்டால் 
பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு? 
"அறம் எனப்படுவது யாது?" எனக் கேட்பின் 
மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம் 
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது 25-230
கண்டது இல்' எனக் காவலன் உரைக்கும் 
'என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும் 
நல் நுதல்! உரைத்த நல் அறம் செய்கேன் 
என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை 
நின்திறம் நீங்கல் ஆற்றேன் யான்' என 
'புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின் 
மன் பெரு நல் நாடு வாய் எடுத்து அழைக்கும் 
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன்' என்று 
அந்தரத்து எழுந்தனள் அணி இழை தான் என் 25-239
26 வஞ்சி மாநகர் புக்க காதை
அணி இழை அந்தரம் ஆறா எழுந்து 
தணியாக் காதல் தாய் கண்ணகியையும் 
கொடை கெழு தாதை கோவலன் தன்னையும் 
கடவுள் எழுதிய படிமம் காணிய 
வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து 
வணங்கி நின்று குணம் பல ஏத்தி 
'அற்புக் கடன் நில்லாது நல் தவம் படராது 
கற்புக் கடன் பூண்டு நும் கடன் முடித்தது 
அருளல் வேண்டும்' என்று அழுது முன் நிற்ப 
ஒரு பெரும் பத்தினிக் கடவுள் ஆங்கு உரைப்போள் 26-010
'எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது 
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள் 
மதுராபதி எனும் மா பெருந் தெய்வம் 
"இது நீர் முன் செய் வினையின் பயனால் 
காசு இல் பூம்பொழில் கலிங்க நல் நாட்டுத் 
தாய மன்னவர் வசுவும் குமரனும் 
சிங்கபுரமும் செழு நீர்க் கபிலையும் 
அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள் 
மூ இரு காவதம் முன்னுநர் இன்றி 
யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டுப் 26-020
பல் கலன் கொண்டு பலர் அறியாமல் 
எல் வளையாளோடு அரிபுரம் எய்தி 
பண்டக் கலம் பகர் சங்கமன் தன்னைக் 
கண்டனர் கூறத் தையல் நின் கணவன் 
பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் 
தீத் தொழிலாளன் தெற்றெனப் பற்றி 
ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு 
குற்றம் இலோனைக் கொலைபுரிந்திட்டனன் 
ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி 
ஏங்கி மெய்பெயர்ப்போள் இறு வரை ஏறி 26-030
இட்ட சாபம் கட்டியது ஆகும் 
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது" எனும் 
மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும் 
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன் 
மேற் செய் நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம் 
அவ் வினை இறுதியின் அடு சினப் பாவம் 
எவ் வகையானும் எய்துதல் ஒழியாது 
உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு 
யாங்கணும் இரு வினை உய்த்து உமைப் போல 
நீங்கு அரும் பிறவிக் கடலிடை நீந்தி 26-040
பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் 
"மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு 
ஒரு பெருந் திலகம்" என்று உரவோர் உரைக்கும் 
கரவு அரும் பெருமைக் கபிலை அம் பதியின் 
அளப்பு அரும் பாரமிதை அளவு இன்று நிறைத்து 
துளக்கம் இல் புத்த ஞாயிறு தோன்றிப் 
போதிமூலம் பொருந்தி வந்தருளி 
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து 
பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும் 
அந் நிலை எல்லாம் அழிவுறு வகையும் 26-050
இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி 
எண் அருஞ் சக்கரவாளம் எங்கணும் 
அண்ணல் அறக் கதிர் விரிக்கும்காலை 
பைந்தொடி! தந்தையுடனே பகவன் 
இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின் 
துன்பக் கதியில் தோற்றரவு இன்றி 
அன்பு உறு மனத்தோடு அவன் அறம் கேட்டு 
துறவி உள்ளம் தோன்றித் தொடரும் 
பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம் 
அத் திறம் ஆயினும் அநேக காலம் 26-060
எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம் 
நறை கமழ் கூந்தல் நங்கை! நீயும் 
முறைமையின் இந்த மூதூர் அகத்தே 
அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு 
மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய 
பின்னர் பெரியோன் பிடக நெறி கடவாய் 
இன்னது இவ் இயல்பு' எனத் தாய் எடுத்து உரைத்தலும் 
"இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் 
விளை பொருள் உரையார் வேற்று உருக் கொள்க" என 
மை அறு சிறப்பின் தெய்வதம் தந்த 26-070
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய் 
தேவ குலமும் தெற்றியும் பள்ளியும் 
பூ மலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து 
நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும் 
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும் 
எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில் 
செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் 
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் 
போர்த் தொழில் தானை குஞ்சியில் புனைய 
நில நாடு எல்லை தன் மலை நாடென்ன 26-080
கைம்மலைக் களிற்று இனம் தம்முள் மயங்க 
தேரும் மாவும் செறி கழல் மறவரும் 
கார் மயங்கு கடலின் கலி கொளக் கடைஇ 
கங்கை அம் பேர் யாற்று அடைகரைத் தங்கி 
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து 
கனக விசயர் முதல் பல வேந்தர் 
அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை 
சிமையம் ஓங்கிய இமைய மால் வரைத் 
தெய்வக் கல்லும் தன் திரு முடிமிசைச் 
செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன் 
வில் திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க 
பொன் கொடிப் பெயர்ப் படூஉம் பொன் நகர்ப் பொலிந்தனள் 
திருந்து நல் ஏது முதிர்ந்துளது ஆதலின் 
பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என் 26-094
27. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை
'நவை அறு நன் பொருள் உரைமினோ' என 
சமயக் கணக்கர் தம் திறம் சார்ந்து 
வைதிக மார்க்கத்து அளவை வாதியை 
எய்தினள் எய்தி 'நின் கடைப்பிடி இயம்பு' என 
'வேத வியாதனும் கிருதகோடியும் 
ஏதம் இல் சைமினி எனும் இவ் ஆசிரியர் 
பத்தும் எட்டும் ஆறும் பண்புறத் 
தம் தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர் 
காண்டல் கருதல் உவமம் ஆகமம் 
ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு 27-010
ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவறிவு 
எய்தி உண்டாம் நெறி என்று இவை தம்மால் 
பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும் 
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும் 
கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் 
நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால் 
சுவையும் மெய்யால் ஊறும் எனச் சொன்ன 
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று 
துக்கமும் சுகமும் எனத் துயக்கு அற அறிந்து 
உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி 27-020
பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி 
சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது 
கிட்டிய தேசம் நாமம் சாதி 
குணம் கிரியையின் அறிவது ஆகும் 
கருத்து அளவு ஆவது 
குறிக்கொள் அனுமானத்து அனுமேயத் 
தகைமை உணரும் தன்மையது ஆகும் 
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம் 
பொது எனப்படுவது சாதன சாத்தியம் 
இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும் 27-030
கடம் திகழ் யானைக் கான ஒலி கேட்டோன் 
உடங்கு "எழில் யானை அங்கு உண்டு" என உணர்தல் 
எச்சம் என்பது வெள்ள ஏதுவினால் 
நிச்சயித்து அத் தலை மழை நிகழ்வு உரைத்தல் 
முதல் என மொழிவது கருக்கொள் முகில் கண்டு 
"இது மழை பெய்யும் என இயம்பிடுதல் 
என்னும் ஏதுவின் ஒன்று முக் காலம் 
தன்னில் ஒன்றில் சார்ந்து உளதாகி 
மண்ட உயிர் முதல் மாசு இன்றாகி 
காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல் 27-040
உவமம் ஆவது ஒப்புமை அளவை 
"கவய மா ஆப் போலும்" எனக் கருதல் 
ஆகம அளவை அறிவன் நூலால் 
"போக புவனம் உண்டு" எனப் புலங்கொளல் 
அருத்தாபத்தி "ஆய்க்குடி கங்கை 
இருக்கும்" என்றால் கரையில் என்று எண்ணல் 
இயல்பு யானைமேல் இருந்தோன் தோட்டிற்கு 
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல் 
ஐதிகம் என்பது உலகு மறை "இம் மரத்து 
எய்தியது ஓர் பேய் உண்டு" எனத் தௌிதல் 27-050
அபாவம் என்பது இன்மை "ஓர் பொருளைத் 
தவாது அவ் இடத்துத் தான் இலை" என்றல் 
மீட்சி என்பது "இராமன் வென்றான்" என 
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல் 
உள்ள நெறி என்பது "நாராசத் திரிவில் 
கொள்ளத் தகுவது காந்தம்" எனக் கூறல் 
எட்டு உள பிரமாண ஆபாசங்கள் 
சுட்டுணர்வொடு திரியக் கோடல் ஐயம் 
தேராது தௌிதல் கண்டு உணராமை 
எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல் 27-060
நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது 
எனைப் பொருள் உண்மை மாத்திரை காண்டல் 
திரியக் கோடல் ஒன்றை ஒன்று என்றல் 
விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல் 
ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா 
மையல் தறியோ? மகனோ? என்றல் 
தேராது தௌிதல் செண்டு வௌியில் 
ஓராது தறியை மகன் என உணர்தல் 
கண்டு உணராமை கடு மாப் புலி ஒன்று 
அண்டலை முதலிய கண்டும் அறியாமை 27-070
இல் வழக்கு என்பது முயற்கோடு ஒப்பன 
சொல்லின் மாத்திரத்தால் கருத்தில் தோன்றல் 
உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்குத் தீப் 
புணர்ந்திடல் மருந்து எனப் புலம் கொள நினைத்தல் 
நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது 
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று 
பிறர் சொலக் கருதல் இப் பெற்றிய அளவைகள் 
பாங்குறும் உலோகாயதமே பௌத்தம் 
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் 
மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர் 27-080
தாம் பிருகற்பதி சினனே கபிலன் 
அக்கபாதன் கணாதன் சைமினி 
மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம் 
உவமானம் அருத்தாபத்தி அபாவம் 
இவையே இப்போது இயன்று உள அளவைகள்' 
என்றவன் தன்னை விட்டு 'இறைவன் ஈசன்' என 
நின்ற சைவ வாதி நேர்படுதலும் 
'பரசும் நின் தெய்வம் எப்படித்து?' என்ன 
'இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று 
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமய்க் 27-090
கட்டி நிற்போனும் கலை உருவினோனும் 
படைத்து விளையாடும் பண்பினோனும் 
துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோனும் 
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும் 
அன்னோன் இறைவன் ஆகும்' என்று உரைத்தனன் 
'பேர் உலகு எல்லாம்' பிரம வாதி 'ஓர் 
தேவன் இட்ட முட்டை' என்றனன் 
காதல் கொண்டு கடல்வணன் புராணம் 
ஓதினன் 'நாரணன் காப்பு' என்று உரைத்தனன் 
'கற்பம் கை சந்தம் கால் எண் கண் 27-100
தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு 
உற்ற வியாகரணம் முகம் பெற்றுச் 
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு 
ஆதி அந்தம் இல்லை அது நெறி' எனும் 
வேதியன் உரையின் விதியும் கேட்டு 
'மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற 
எத் திறத்தினும் இசையாது இவர் உரை' என 
ஆசீவக நூல் அறிந்த புராணனை 
'பேசும் நின் இறை யார்? நூற்பொருள் யாது?' என 
'எல்லை இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும் 27-110
புல்லிக் கிடந்து புலப்படுகின்ற 
வரம்பு இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து 
உரம் தரும் உயிரோடு ஒரு நால் வகை அணு 
அவ் அணு உற்றும் கண்டும் உணர்ந்திடப் 
பெய் வகை கூடிப் பிரிவதும் செய்யும் 
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின 
மலை மரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும் 
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும் 
அவ் வகை அறிவது உயிர் எனப் படுமே 
வற்பம் ஆகி உறும் நிலம் தாழ்ந்து 27-120
சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய் 
இழினென நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீத் 
தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம் 
காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை 
வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால் 
ஆதி இல்லாப் பரமாணுக்கள் 
தீதுற்று யாவதும் சிதைவது செய்யா 
புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா 
முது நீர் அணு நில அணுவாய்த் திரியா 
ஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யா 27-130
அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா 
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும் 
குலாம் மலை பிறவாக் கூடும் பலவும் 
பின்னையும் பிரிந்து தம் தன்மைய ஆகும் 
மன்னிய வயிரமாய்ச் செறிந்து வற்பமும் ஆம் 
வேய் ஆய்த் துளைபடும் பொருளா முளைக்கும் 
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம் 
நிறைந்த இவ் அணுக்கள் பூதமாய் நிகழின் 
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின் 
ஒன்று முக்கால் அரை கால் ஆய் உறும் 27-140
துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே 
இக் குணத்து அடைந்தால் அல்லது நிலன் ஆய்ச் 
சிக்கென்பதுவும் நீராய் இழிவதும் 
தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும் 
ஆய தொழிலை அடைந்திடமாட்டா 
ஓர் அணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர் 
தேரார் பூதத் திரட்சியுள் ஏனோர் 
மாலைப் போதில் ஒரு மயிர் அறியார் 
சாலத் திரள் மயிர் தோற்றுதல் சாலும் 
கருமம் பிறப்பும் கரு நீலப் பிறப்பும் 27-150
பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும் 
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும் 
என்று இவ் ஆறு பிறப்பினும் மேவி 
பண்புறு வரிசையின் பாற்பட்டுப் பிறந்தோர் 
கழி வெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர் 
அழியல் வேண்டார் அது உறற்பாலார் 
இது செம்போக்கின் இயல்பு இது தப்பும் 
அது மண்டலம் என்று அறியல் வேண்டும் 
பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் 
உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் 27-160
பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும் 
கருவில் பட்ட பொழுதே கலக்கும் 
இன்பமும் துன்பமும் இவையும் அணு எனத் தகும் 
முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது 
மற்கலி நூலின் வகை இது' என்ன 
சொல் தடுமாற்றத் தொடர்ச்சியை விட்டு 
நிகண்ட வாதியை 'நீ உரை நின்னால் 
புகழும் தலைவன் யார்? நூற்பொருள் யாவை, 
அப் பொருள் நிகழ்வும் கட்டும் வீடும் 
மெய்ப்பட விளம்பு' என விளம்பல் உறுவோன் 27-170
'இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன் 
தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும் 
அதன்மாத்திகாயமும் கால ஆகாயமும் 
தீது இல் சீவனும் பரமாணுக்களும் 
நல்வினையும் தீவினையும் அவ் வினையால் 
செய்வுறு பந்தமும் வீடும் இத் திறத்த 
ஆன்ற பொருள் தன் தன்மையது ஆயும் 
தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும் 
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று 
நுனித்த குணத்து ஓர் கணத்தின் கண்ணே 27-180
தோற்றமும் நிலையும் கேடும் என்னும் 
மாற்று அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம் 
நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம் 
நிம்பத்து அப் பொருள் அன்மை அநித்தயம் 
பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம் 
இயற்றி அப் பயறு அழிதலும் ஏதுத் 
தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய் 
பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா 
அப்படித்தாகி அதன் மாத்திகாயமும் 
எப் பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் 2 27-190
காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும் 
ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும் 
ஆக்கும் ஆகாயம் எல்லாப் பொருட்கும் 
பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும் 
சீவன் உடம்போடு ஒத்துக் கூடி 
தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும் 
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும் 
சீர்சால் நல்வினை தீவினை அவை செயும் 
வரு வழி இரண்டையும் மாற்றி முன்செய் 
அரு வினைப் பயன் அனுபவித்து அறுத்திடுதல் 27-200
அது வீடு ஆகும்' என்றனன் அவன்பின் 
'இது சாங்கிய மதம்' என்று எடுத்து உரைப்போன் 
'தனை அறிவு அரிதாய் தான் முக் குணமாய் 
மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய் 
எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடம் எனச் 
சொல்லுதல் மூலப் பகுதி சித்தத்து 
மான் என்று உரைத்த புத்தி வௌிப்பட்டு 
அதன்கண் ஆகாயம் வௌிப்பட்டு அதன்கண் 
வாயு வௌிப்பட்டு அதன்கண் அங்கி 
ஆனது வௌிப்பட்டு அதன்கண் அப்பின் 27-210
தன்மை வௌிப்பட்டு அதில் மண் வௌிப்பட்டு 
அவற்றின் கூட்டத்தில் மனம் வௌிப்பட்டு 
ஆர்ப்புறு மனத்து ஆங்கார விகாரமும் 
ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும் 
வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும் 
அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும் 
தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும் 
நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும் 
சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய் 
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என 27-220
ஆக்கிய இவை வௌிப்பட்டு இங்கு அறைந்த 
பூத விகாரத்தால் மலை மரம் முதல் 
ஓதிய வௌிப்பட்டு உலகாய் நிகழ்ந்து 
வந்த வழியே இவை சென்று அடங்கி 
அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும் 
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம் 
அறிதற்கு எளிதாய் முக் குணம் அன்றி 
பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி 
எப் பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி 
அப் பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் 27-230
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய் 
நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன் 
புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள 
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே 
மெய் வாய் கண் மூக்கு செவி தாமே 
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே 
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் 
ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம் 
உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம்' எனச் 
செயிர் அறச் செப்பிய திறமும் கேட்டு 27-240
'வைசேடிக! நின் வழக்கு உரை' என்ன 
'பொய் தீர் பொருளும் குணமும் கருமமும் 
சாமானியமும் விசேடமும் கூட்டமும் 
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது 
குணமும் தொழிலும் உடைத்தாய் எத் தொகைப் 
பொருளுக்கும் ஏது ஆம் அப் பொருள் ஒன்பான் 
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை 
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம் 
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் 
பயில் குணம் உடைத்து நின்ற நான்கும் 27-250
சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய 
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை 
மாசு இல் பெருமை சிறுமை வன்மை 
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் 
என்னும் நீர்மை பக்கம் முதல் அனேகம் 
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும் 
பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு 
உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான் 
போதலும் நிற்றலும் பொதுக் குணம் ஆதலின் 
சாதலும் நிகழ்தலும் அப் பொருள் தன்மை 27-260
ஒன்று அணு கூட்டம் குணமும் குணியும்' என்று 
ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே 
'பூத வாதியைப் புகல் நீ' என்னத் 
'தாதகிப் பூவும் கட்டியும் இட்டு 
மற்றும் கூட்ட மதுக் களி பிறந்தாங்கு 
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும் 
அவ் உணர்வு அவ் அப் பூதத்து அழிவுகளின் 
வெவ் வேறு பிரியும் பறை ஓசையின் கெடும் 
உயிரொடும் கூட்டிய உணர்வு உடைப் பூதமும் 
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் 27-270
அவ் அப் பூத வழி அவை பிறக்கும் 
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும் 
உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே 
கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும் 
இம்மையும் இம்மைப் பயனும் இப் பிறப்பே 
பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்' 
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு 
'நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன் 
பிறந்த முன் பிறப்பை எய்தப் பெறுதலின் 
அறிந்தோர் உண்டோ?' என்று நக்கிடுதலும் 27-280
'தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும் 
மையல் உறுவார் மனம் வேறு ஆம் வகை 
ஐயம் அன்றி இல்லை' என்றலும் 'நின் 
தந்தை தாயரை அனுமானத்தால் அலது 
இந்த ஞாலத்து எவ் வகை அறிவாய்? 
மெய்யுணர்வு இன்றி மெய்ப் பொருள் உணர்வு அரிய 
ஐயம் அல்லது இது சொல்லப் பெறாய்' என 
உள்வரிக் கோலமோடு உன்னிய பொருள் உரைத்து 
ஐவகைச் சமயமும் அறிந்தனள் ஆங்கு என் 27-289
28. கச்சி மாநகர் புக்க காதை
ஆங்கு தாயரோடு அறவணர்த் தேர்ந்து 
வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின் 
வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும் 
போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து 
சுருங்கைத் தூம்பின் மனை வளர் தோகையர் 
கருங் குழல் கழீஇய கலவை நீரும் 
எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும் 
தம் தமில் ஆடிய சாந்து கழி நீரும் 
புவி காவலன் தன் புண்ணிய நல் நாள் 
சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும் 28-010
மேலை மாதவர் பாதம் விளக்கும் 
சீல உபாசகர் செங் கை நறு நீரும் 
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைத்து 
நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும் 
உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால் 
செறித்து அரைப்போர் தம் செழு மனை நீரும் 
என்று இந் நீரே எங்கும் பாய்தலின் 
கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் 
ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி 
தாமரை குவளை கழுநீர் ஆம்பல் 28-020
பூமிசைப் பரந்து பொறி வண்டு ஆர்ப்ப 
இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து 
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய 
கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில் 
பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த 
வெள்ளிக் குன்றம் உள் கிழிந்து அன்ன 
நெடு நிலைதோறும் நிலாச் சுதை மலரும் 
கொடி மிடை வாயில் குறுகினள் புக்கு 
கடை காப்பு அமைந்த காவலாளர் 
மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும் 28-030
பல் மீன் விலைஞர் வெள் உப்புப் பகருநர் 
கள் நொடையாட்டியர் காழியர் கூவியர் 
மைந் நிண விலைஞர் பாசவர் வாசவர் 
என்னுநர் மறுகும் இருங் கோவேட்களும் 
செம்பு செய்ஞ்ஞ்அரும் கஞ்சகாரரும் 
பைம்பொன் செய்ஞ்ஞ்அரும் பொன் செய் கொல்லரும் 
மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும் 
வரம் தர எழுதிய ஓவிய மாக்களும் 
தோலின் துன்னரும் துன்ன வினைஞரும் 
மாலைக்காரரும் காலக் கணிதரும் 28-040
நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப 
நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும் 
பாணர் என்று இவர் பல் வகை மறுகும் 
விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரோடு 
இலங்கு மணி வினைஞ்அர் இரீஇய மறுகும் 
வேத்தியல் பொது இயல் என்று இவ் இரண்டின் 
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும் 
பால் வேறு ஆக எண் வகைப் பட்ட 
கூலம் குவைஇய கூல மறுகும் 
மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும் 28-050
போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும் 
கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை 
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும் 
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும் 
பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும் 
மறையோர் அருந் தொழில் குறையா மறுகும் 
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும் 
எனைப் பெருந் தொழில் செய் ஏனோர் மறுகும் 
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் 
புதுக் கோள் யானையும் பொன் தார்ப் புரவியும் 28-060
கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும் 
சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும் 
வேணவா மிகுக்கும் விரை மரக் காவும் 
விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து 
நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும் 
சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும் 
கோலம் குயின்ற கொள்கை இடங்களும் 
கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமோடு 
அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும் 
இந்திர விகாரம் என எழில் பெற்று 28-070
நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர் 
உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள் 
கோவலன் தாதை மா தவம் புரிந்தோன் 
பாதம் பணிந்து தன் பாத்திர தானமும் 
தானப் பயத்தால் சாவக மன்னவன் 
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும் 
செல்வற் கொணர்ந்து அத் தீவகப் பீடிகை 
ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும் 
உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி 
மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள 28-080
அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு 
இறவாது இப் பதிப் புகுந்தது கேட்டதும் 
சாவக மன்னன் தன் நாடு எய்த 
தீவகம் விட்டு இத் திரு நகர் புகுந்ததும் 
புக்க பின் அந்தப் பொய் உருவுடனே 
தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும் 
அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம் 
செவ்விது அன்மையின் சிந்தை வையாததும் 
நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி 
மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும் 28-090
சொல்லினள் ஆதலின் 'தூயோய்! நின்னை என் 
நல்வினைப் பயன்கொல் நான் கண்டது?' எனத் 
'தையல்' கேள் நின் தாதையும் தாயும் 
செய்த தீவினையின் செழு நகர் கேடுற 
துன்புற விளிந்தமை கேட்டுச் சுகதன் 
அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின் 
மனைத்திறவாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து 
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும் 
நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே 
மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன் 28-100
புரிந்த யான் இப் பூங் கொடிப் பெயர்ப் படூஉம் 
திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய் 
குடக் கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை 
விடர்ச் சிலை பொறித்த வேந்தன் முன் நாள் 
துப்பு அடு செவ் வாய்த் துடி இடையாரொடும் 
இப் பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள் 
இலங்கா தீவத்துச் சமனொளி என்னும் 
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும் 
தரும சாரணர் தங்கிய குணத்தோர் 
கரு முகில் படலத்துக் ககனத்து இயங்குவோர் 28-110
அரைசற்கு ஏது அவ் வழி நிகழ்தலின் 
புரையோர் தாமும் இப் பூம்பொழில் இழிந்து 
கல் தலத்து இருந்துழி காவலன்விரும்பி 
முன் தவம் உடைமையின் முனிகளை ஏத்திப் 
பங்கயச் சேவடி விளக்கி பான்மையின் 
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம் 
பாத்திரத்து அளித்துப் பலபல சிறப்பொடு 
வேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின் 
பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும் 
அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை 28-120
இன்ப ஆர் அமுது இறைவன் செவிமுதல் 
துன்பம் நீங்கச் சொரியும் அந் நாள் 
நின் பெருந் தாதைக்கு ஒன்பது வழி முறை 
முன்னோன் கோவலன் மன்னவன் தனக்கு 
நீங்காக் காதல் பாங்கன் ஆதலின் 
தாங்க நல் அறம் தானும் கேட்டு 
முன்னோர் முறைமையின் படைத்ததை அன்றி 
தன்னான் இயன்ற தனம் பல கோடி 
எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈத்து 
தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய 28-130
வான் ஓங்கு சிமையத்து வால் ஒளிச் சயித்தம் 
ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது 
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இத் 
தண்டாக் காட்சித் தவத்தோர் அருளிக் 
"காவிரிப் பட்டினம் கடல் கொளும்" என்ற அத் 
தூ உரை கேட்டுத் துணிந்து இவண் இருந்தது 
இன்னும் கேளாய் நல் நெறி மாதே! 
"தீவினை உருப்பச் சென்ற நின் தாதையும் 
தேவரில் தோற்றி முன்செய் தவப் பயத்தால் 
ஆங்கு அத் தீவினை இன்னும் துய்த்துப் 28-140
பூங்கொடி! முன்னவன் போதியில் நல் அறம் 
தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கிக் 
காதலி தன்னொடு கபிலை அம் பதியில் 
நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும்" என்று 
அற்புதக் கிளவி அறிந்தோர் கூறச் 
சொல் பயன் உணர்ந்தேன் தோகை! யானும் 
அந் நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன் 
நின்னது தன்மை அந் நெடு நிலைக் கந்தில் துன்னிய 
துவதிகன் உரையின் துணிந்தனை அன்றோ? 
தவ நெறி அறவணன் சாற்றக் கேட்டனன் 28-150
ஆங்கு அவன் தானும் நின் அறத்திற்கு ஏது 
பூங்கொடி! கச்சி மா நகர் ஆதலின் 
மற்று அம் மா நகர் மாதவன் பெயர் நாள் 
பொன் தொடி தாயரும் அப் பதிப் படர்ந்தனர் 
அன்னதை அன்றியும் அணி இழை! கேளாய் 
பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து 
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் 
அந் நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் 
இன்மையின் இந் நகர் எய்தினர் காணாய் 
ஆர் உயிர் மருந்தே! அந் நாட்டு அகவயின் 28-160
கார் எனத் தோன்றிக் காத்தல் நின் கடன்' என 
அருந் தவன் அருள ஆய் இழை வணங்கித் 
திருந்திய பாத்திரம் செங் கையின் ஏந்திக் 
கொடி மதில் மூதூர்க் குடக்கண் நின்று ஓங்கி 
வட திசை மருங்கின் வானத்து இயங்கித் 
தேவர் கோமான் காவல் மாநகர் 
மண் மிசைக் கிடந்தென வளம் தலைமயங்கிய 
பொன் நகர் வறிதாப் புல்லென்று ஆயது 
கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை 
பொன் கொடி மூதூர்ப் புரிசை வலம் கொண்டு 28-170
நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து 
தொடு கழல் கிள்ளி துணை இளங் கிள்ளி 
செம் பொன் மாச் சினைத் திருமணிப் பாசடைப் 
பைம் பூம் போதிப் பகவற்கு இயற்றிய 
சேதியம் தொழுது தென்மேற்கு ஆக 
தாது அணி பூம்பொழில் தான் சென்று எய்தலும் 
வையம் காவலன் தன் பால் சென்று 
கைதொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன் 
'கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் 
நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள் 28-180
> அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு 
தங்காது இப் பதித் தருமதவனத்தே 
வந்து தோன்றினள் மா மழை போல்' என 
மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பி 
'கந்திற்பாவை கட்டுரை எல்லாம் 
வாய் ஆகின்று' என வந்தித்து ஏத்தி 
ஆய் வளை நல்லாள் தன்னுழைச் சென்று 
'செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ 
கொங்கு அவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ 
நலத்தகை நல்லாய்! நல் நாடு எல்லாம் 28-190
அலத்தல்காலை ஆகியது அறியேன் 
மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி 
"உயங்காதொழி நின் உயர் தவத்தால் ஓர் 
காரிகை தோன்றும் அவள் பெருங் கடிஞையின் 
ஆருயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும் 
ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின் 
தாங்கா மாரியும் தான் நனி பொழியும் 
அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த 
பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால் 
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது 28-200
பார் அகம் விதியின் பண்டையோர் இழைத்த 
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு 
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என 
பொய்கையும் பொழிலும் புனைமின்" என்று அறைந்து அத் 
தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது 
இவ் இடம்" என்றே அவ் இடம் காட்ட அத் 
தீவகம் போன்ற காஅகம் பொருந்திக் 
கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள் 
'பண்டை எம் பிறப்பினைப் பான்மையின் காட்டிய 
அங்கு அப் பீடிகை இது என' அறவோன் 28-210
பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்து 
தீவதிலகையும் திரு மணிமேகலா 
மா பெருந் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு 
ஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்து 
விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற 
தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்திப் 
பங்கயப் பீடிகை பசிப் பிணி மருந்து எனும் 
அங்கையின் ஏந்திய அமுதசுரபியை 
வைத்து நின்று 'எல்லா உயிரும் வருக' என 
பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின் 28-220
மொய்த்த மூ அறு பாடை மாக்களில் 
காணார் கேளார் கால் முடம் ஆனோர் 
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் 
படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர் 
மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும் 
பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும் 
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி 
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய் 
பெருந் தவர் கைப் பெய் பிச்சையின் பயனும் 
நீரும் நிலமும் காலமும் கருவியும் 28-230
சீர் பெற வித்திய வித்தின் விளைவும் 
பெருகியதென்ன பெரு வளம் சுரப்ப 
வசித் தொழில் உதவி வளம் தந்தது என 
பசிப் பிணி தீர்த்த பாவையை ஏத்திச் 
செல்லும்காலை தாயர் தம்முடன் 
அல்லவை கடிந்த அறவண அடிகளும் 
மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி 
நல் அறச்சாலை நண்ணினர் சேறலும் 
சென்று அவர் தம்மைத் திருவடி வணங்கி 
'நன்று' என விரும்பி நல் அடி கழுவி 28-240
ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகைப் 
போனகம் ஏந்தி பொழுதினில் கொண்டபின் 
பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து 
'வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம்' என 
மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என் 28-245
29. தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை
இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்தி 
அறம் திகழ் நாவின் அறவணன் உரைப்போன் 
'வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன் 
தன் மகள் பீலிவளை தான் பயந்த 
புனிற்று இளங் குழவியைத் தீவகம் பொருந்தி 
தனிக் கலக் கம்பளச் செட்டி கைத் தரலும் 
வணங்கிக் கொண்டு அவன் வங்கம் ஏற்றிக் 
கொணர்ந்திடும் அந் நாள் கூர் இருள் யாமத்து 
அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும் 
மரக்கலம் கெடுத்தோன் மைந்தனைக் காணாது 29-010
அரைசற்கு உணர்த்தலும் அவன் அயர்வுற்று 
விரைவனன் தேடி விழாக்கோள் மறப்பத் 
தன் விழாத் தவிர்தலின் வானவர் தலைவன் 
நின் உயிர்த் தந்தை நெடுங் குலத்து உதித்த 
மன் உயிர் முதல்வன் மகர வேலையுள் 
முன்னிய வங்கம் முங்கிக் கேடுற 
பொன்னின் ஊசி பசுங் கம்பளத்துத் 
துன்னியதென்னத் தொடு கடல் உழந்துழி 
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா 
வழுவாச் சீலம் வாழ்மையின் கொண்ட 29-020
பான்மையின் தனாது பாண்டு கம்பளம் 
தான் நடுக்குற்ற தன்மை நோக்கி 
"ஆதி முதல்வன் போதி மூலத்து 
நாதன் ஆவோன் நளி நீர்ப் பரப்பின் 
எவ்வம் உற்றான் தனது எவ்வம் தீர்" எனப் 
பவ்வத்து எடுத்து "பாரமிதை முற்றவும் 
அற அரசு ஆளவும் அற ஆழி உருட்டவும் 
பிறவிதோறு உதவும் பெற்றியள்" என்றே 
சாரணர் அறிந்தோர் காரணம் கூற 
அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரைத் 29-030
தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும் 
அன்றே கனவில் நனவென அறைந்த 
மென் பூ மேனி மணிமேகலா தெய்வம் 
என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து 
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும் 
பகரும் நின் பொருட்டால் இப் பதிப் 'படர்ந்தனம்' 
என்றலும் அறவணன் தாள் இணை இறைஞ்சி 
'பொன் திகழ் புத்த பீடிகை போற்றும் 
தீவதிலகையும் இத் திறம் செப்பினள் 
ஆதலின் அன்ன அணி நகர் மருங்கே 29-040
வேற்றுருக் கொண்டு வெவ் வேறு உரைக்கும் 
நூல் துறைச் சமய நுண் பொருள் கேட்டே 
அவ் உரு என்ன ஐ வகைச் சமயமும் 
செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன் 
அடிகள்! மெய்ப்பொருள் அருளுக' என்ன 
'நொடிகுவென் நங்காய்! நுண்ணிதின் கேள் நீ 
ஆதி சினேந்திரன் அளவை இரண்டே 
ஏதம் இல் பிரத்தியம் கருத்து அளவு என்னச் 
சுட்டுணர்வைப் பிரத்தியக்கம் எனச் சொலி 
விட்டனர் நாம சாதி குணம் கிரியைகள் 29-050
மற்று அவை அனுமானத்தும் அடையும் என 
காரண காரிய சாமானியக் கருத்து 
ஓரின் பிழைக்கையும் உண்டு பிழையாதது 
கனலில் புகைபோல் காரியக் கருத்தே 
ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில் 
ஆன முறைமையின் அனுமானம் ஆம் பிற 
பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம் 
நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில் 
பக்கம் "இம் மலை நெருப்புடைத்து" என்றல் 
"புகையுடைத்து ஆதலால்" எனல் பொருந்து ஏது 29-060
"வகை அமை அடுக்களை போல்" திட்டாந்தம் 
உபநயம் "மலையும் புகையுடைத்து" என்றல் 
நிகமனம் "புகையுடைத்தே நெருப்புடைத்து" என்றல் 
"நெருப்புடைத்து அல்லாது யாதொன்று அது புகைப் 
பொருத்தம் இன்று புனல்போல்" என்றல் 
மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய் 
வைதன்மிய திட்டாந்தம் ஆகும் 
தூய காரிய ஏதுச் சுபாவம் 
ஆயின் "சத்தம் அநித்தம்" என்றல் 
பக்கம் "பண்ணப்படுதலால்" எனல் 29-070
பக்க தன்ம வசனம் ஆகும் 
"யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது 
அநித்தம் கடம் போல்" என்றல் சபக்கத் 
தொடர்ச்சி "யாதொன்று அநித்தம் அல்லாதது 
பண்ணப் படாதது ஆகாசம் போல்" எனல் 
விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க 
அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது 
"இவ் வெள்ளிடைக்கண் குடம் இலை" என்றல் 
செவ்விய பக்கம் "தோன்றாமையில்" எனல் 
பக்க தன்ம வசனம் ஆகும் 29-080
"இன்மையின் கண்டிலம் முயற்கோடு" என்றல் 
அந் நெறிச் சபக்கம் "யாதொன்று உண்டு அது 
தோற்றரவு அடுக்கும் கைந் நெல்லிபோல்" எனல் 
ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும் 
இவ்வகை ஏது பொருள் சாதிப்பன 
"என்னை காரியம் புகை சாதித்தது?" என்னின் 
"புகை உள இடத்து நெருப்பு உண்டு" என்னும் 
அன்னுவயத்தாலும் "நெருப்பு இலா இடத்துப் 
புகை இல்லை" என்னும் வெதிரேகத்தாலும் 
புகஈ நெருப்பைச் சாதித்தது என்னின் 29-090
நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான 
ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம் 
வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின் 
மேல் நோக்கிக் கறுத்திருப்ப பகைத்திருப்ப 
தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும் 
அன்னுவயம் சாதிக்கின் "முன்னும் 
கழுதையையும் கணிகையையும் 
தம்மில் ஒருகாலத்து ஓர் இடத்தே 
அன்னுவயம் கண்டான் பிற்காலத்து 
கழுதையைக் கண்ட இடத்தே கணிகையை 29-100
அனுமிக்க வேண்டும் அது கூடா" "நெருப்பு 
இலா இடத்துப் புகை இலை எனல் நேர் அத் 
திருத்தகு வெதிரேகம் சாதிக்கும்" என்னின் 
"நாய் வால் இல்லாக் கழுதையின் பிடரில் 
நரி வாலும் இலையா காணப்பட்ட 
அதனையே கொண்டு பிறிதோர் இடத்து 
நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல் 
அரிதாம்" அதனால் அதுவும் ஆகாது 
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும் 
திட்டாந்தத்திலே சென்று அடங்கும் 29-110
பக்கம் ஏது திட்டாந்தங்கள் 
ஒக்க நல்லவும் தீயவும் உள அதில் 
வௌிப்பட்டுள்ள தன்மியினையும் 
வௌிப்பட்டுள சாத்திய தன்மத்திறம் 
பிறிதின் வேறு ஆம் வேறுபாட்டினையும் 
தன்கண் சார்த்திய நயம் தருதல் உடையது 
நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான் 
"சத்தம் அநித்தம் நித்தம்" என்று ஒன்றைப் 
பற்றி நாட்டப்படுவது தன்மி 
சத்தம் சாத்திய தன்மம் ஆவது 29-120
நித்த அநித்தம் நிகழும் நல் ஏது 
மூன்றாய்த் தோன்றும் மொழிந்த பக்கத்து 
ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும் 
விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம் 
சாதிக்கின் பொருள் தன்னால் பக்கத்து 
ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல் 
சத்த அநித்தம் சாத்தியம் ஆயின் 
"ஒத்த அநித்தம் கட ஆதி போல்" எனல் 
விபக்கம் விளம்பில் "யாதொன்று யாதொன்று 
அநித்தம் அல்லாதது பண்ணப் படாதது 29-130
ஆ அகாசம் போல்" என்று ஆகும் 
பண்ணப்படுதலும் செயலிடைத் தோன்றலும் 
நண்ணிய பக்கம் சபக்கத்திலும் ஆய் 
விபக்கத்து இன்றி அநித்தத்தினுக்கு 
மிகத் தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க 
ஏதம் இல் திட்டாந்தம் இரு வகைய 
சாதன்மியம் வைதன்மியம் என 
சாதன்மியம் எனப்படுவது தானே 
"அநித்தம் கட ஆதி அன்னுவயத்து" என்கை 
வைதன்மிய திட்டாந்தம் "சாத்தியம் 29-140
எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை" 
இத்திறம் நல்ல சாதனத்து ஒத்தன 
தீய பக்கமும் தீய ஏதுவும் 
தீய எடுத்துக்காட்டும் ஆவன 
பக்கப் போலியும் ஏதுப் போலியும் 
திட்டாந்தப் போலியும் ஆஅம் இவற்றுள் 
பக்கப்போலி ஒன்பது வகைப்படும் 
பிரத்தியக்க விருத்தம் அனுமான 
விருத்தம் சுவசன விருத்தம் உலோக 
விருத்தம் ஆகம விருத்தம் அப்பிர 29-150
சித்த விசேடணம் அப்பிரசித்த 
விசேடியம் அப்பிரசித்த உபயம் 
அப்பிரசித்த சம்பந்தம் என 
எண்ணிய இவற்றுள் பிரத்தியக்க விருத்தம் 
கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும் 
"சத்தம் செவிக்குப் புலன் அன்று" என்றல் 
மற்று அனுமான விருத்தம் ஆவது 
கருத்து அளவையை மாறாகக் கூறல் 
"அநித்தியக் கடத்தை நித்தியம்" என்றல் 
சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல் 29-160
"என் தாய் மலடி" என்றே இயம்பல் 
உலக விருத்தம் உலகின் மாறாம் உரை 
"இலகு மதி சந்திரன் அல்ல" என்றல் 
ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல் 
அநித்த வாதியா உள்ள வைசேடிகன் 
"அநித்தியத்தை நித்தியம்" என நுவறல் 
அப்பிரசித்த விசேடணம் ஆவது 
தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை 
பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனைக் 
குறித்து "சத்தம் விநாசி" என்றால் 29-170
அவன் அவிநாசவாதி ஆதலின் 
சாத்திய விநாசம் அப்பிரசித்தம் ஆகும் 
அப்பிரசித்த விசேடியம் ஆவது 
எதிரிக்குத் தன்மி பிரசித்தம் இன்றி 
இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற 
பௌத்தனைக் குறித்து "ஆன்மாச் சைதனியவான்" 
என்றால் அவன் அநான்ம வாதி 
ஆதலின் தன்மி அப்பிரசித்தம் 
அப்பிரசித்த உபயம் ஆவது 
மாறு ஆனோர்க்குத் தன்மி சாத்தியம் 29-180
ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல் 
பகர் வைசேடிகன் பௌத்தனைக் குறித்து 
"சுகம் முதலிய தொகைப் பொருட்குக் காரணம் 
ஆன்மா" என்றால் சுகமும் ஆன்மாவும் 
தாம் இசையாமையின் அப்பிரசித்த உபயம் 
அப்பிரசித்த சம்பந்தம் ஆவது 
எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல் 
மாறு ஆம் பௌத்தற்கு "சத்த அநித்தம்" 
கூறில் அவன்ன் கொள்கை அஃது ஆகலில் 
வேறு சாதிக்க வேண்டாது ஆகும் 29-190
ஏதுப் போலி ஓதின் மூன்று ஆகும் 
அசித்தம் அநைகாந்திகம் விருத்தம்ம் என 
உபய அசித்தம் அன்னியதர அசித்தம் 
சித்த அசித்தம் ஆசிரய அசித்தம் 
என நான்கு அசித்தம் உபய அசித்தம் 
சாதன ஏது இருவர்க்கும் இன்றி 
"சத்தம் அநித்தம் கண் புலத்து" என்றல் 
அன்னியதர அசித்தம் மாறு ஆய் நின்றாற்கு 
உன்னிய ஏது அன்றாய் ஒழிதல் 
"சத்தம் செயலுறல் அநித்தம்" என்னின் 29-200
சித்த வௌிப்பாடு அல்லது செயலுறல் 
உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும் 
சித்த அசித்தம் ஆவது 
ஏது சங்கயமாய்ச் சாதித்தல் 
ஆவி பனி என ஐயுறா நின்றே 
"தூய புகை நெருப்பு உண்டு" எனத் துணிதல் 
ஆசிரய அசித்தம் மாறு ஆனவனுக்கு 
ஏற்ற தன்மி இன்மை காட்டுதல் 
"ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம்" என்னின் 
"ஆகாசம் பொருள் அல்ல" என்பாற்குத் 29-210
தன்மி அசித்தம் அநைகாந்திகமும் 
சாதாரணம் அசாதாரணம் சபக்கைக 
தேசவிருத்தி விபக்க வியாபி 
விபக்கைகதேச விருத்தி சபக்க 
வியாபி உபயைகதேச விருத்தி 
விருத்த வியபிசாரி என்று ஆறு 
சாதாரணம் சபக்க விபக்கத்துக்கும் 
ஏதுப் பொதுவாய் இருத்தல் "சத்தம் 
அநித்தம் அறியப்படுதலின்" என்றால் 
"அறியப்படுதல் நித்த அநித்தம் இரண்டுக்கும் 29-220
செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ? 
ஆகாசம் போல நித்தத்து அறிவோ?" 
என்னல் அசாதாரணம் ஆவது தான் 
உன்னிய பக்கத்து உண்டாம் ஏதுச் 
சபக்க விபக்கம் தம்மில் இன்றாதல் 
"சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்" 
என்னின் "கேட்கப்படல்" எனும் ஏதுப் 
பக்கத்து உள்ளதாயின் அல்லது 
சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின் 
சங்கயம் எய்தி அநேகாந்திகம் ஆம் 29-230
சபக்கைகதேச விருத்தி விபக்க 
வியாபி ஆவது ஏதுச் சபக்கத்து 
ஓர் இடத்து எய்தி விபக்கத்து எங்கும் 
உண்டாதல் ஆகும் "சத்தம் செயலிடைத் 
தோன்றாதாகும் அநித்தம் ஆகலின்" 
என்றால் "அநித்தம்" என்ற ஏதுச் 
செயலிடைத் தோன்றாமைக்குச் சபக்கம் 
மின்னினும் ஆகாசத்தினும் மின்னின் 
நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின் 
அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் "கடம் போல் 29-240
அழிந்து செயலில் தோன்றுமோ? மின் போல் 
அழிந்து செயலில் தோன்றாதோ?" எனல் 
விபக்கைகதேச விருத்தி சபக்க 
வியாபி ஆவது ஏது விபக்கத்து 
ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல் 
"சத்தம் செயலிடைத் தோன்றும் அநித்தம் ஆதலின்" எனின் 
அநித்த ஏதுச் செயலிடைத் தோன்றற்கு 
விபக்க ஆகாயத்தினும் மின்னினும் 
மின்னின் நிகழ்ந்து ஆகாசத்துக் காணாது 
சபக்கக் கட ஆதிகள் தம்மில் 29-250
எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல "மின் போல் 
அநித்தம் ஆய்ச் செயலிடைத் தோன்றாதோ? கடம்போல் 
அநித்தம் ஆய்ச் செயலிடைத் தோன்றுமோ? எனல் 
உபயைகதேச விருத்தி ஏதுச் 
சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி 
ஓர் தேசத்து வர்த்தித்தல் "சத்தம் 
நித்தம் அமூர்த்தம் ஆதலின்" என்னின் 
அமூர்த்த ஏது நித்தத்தினுக்குச் 
சபக்க ஆகாச பரமாணுக்களின் 
ஆகாசத்து நிகழ்ந்து மூர்த்தம் ஆம் 29-260
பரமாணுவின் நிகழாமையானும் 
விபக்கமான கட சுக ஆதிகளில் 
சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும் 
ஏகதேசத்து நிகழ்வது ஏகாந்தம் அன்று 
"அமூர்த்தம் ஆகாசம்போல நித்தமோ? 
அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ?" எனல் 
விருத்த வியபிசாரி திருந்தா ஏது ஆய் 
விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல் 
"சத்தம் அநித்தம் செயலிடைத் தோன்றலின் 
ஒத்தது" எனின் அச் செயலிடைத் தோன்றற்குச் 29-270
சபக்கமாயுள்ள கட ஆதி நிற்க 
"சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் 
சத்தத்துவம் போல்" எனச் சாற்றிடுதல் 
இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல 
விருத்தம் தன்னைத் திருத்தக விளம்பின் 
தன்மச் சொரூப விபரீத சாதனம் 
தன்ம விசேட விபரீத சாதனம் 
தன்மிச் சொரூப விபரீத சாதனம் 
தன்மி விசேட விபரீத சாதனம் 
என்ன நான்கு வகையது ஆகும் அத் 29-280
தன்மச் சொரூப விபரீத சாதனம் 
சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து 
உருவம் கெடுதல் "சத்தம் நித்தம் 
பண்ணப்படுதலின்" என்றால் பண்ணப் 
படுவது அநித்தம் ஆதலின் பண்ணப்பட்ட 
ஏதுச் சாத்திய தன்ம நித்தத்தை விட்டு 
அநித்தம் சாதித்தலான் விபரீதம் 
தன்ம விசேட விபரீத சாதனம் 
சொன்ன ஏதுச் சாத்திய தன்மம் 
தன்னிடை விசேடம் கெடச் சாதித்தல் 29-290
"கண் முதல் ஓர்க்கும் இந்திரியங்கள் 
எண்ணின் பரார்த்தம் தொக்கு நிற்றலினால் 
சயன ஆசனங்கள் போல" என்றால் 
"தொக்கு நிற்றலின்" என்கின்ற ஏதுச் 
சயன ஆசனத்தின் பராத்தம்போல் கண் முதல் 
இந்தியங்களியும் பரார்த்தத்தில் சாதித்துச் 
சயன ஆசனவானைப் போல் ஆகிக் 
கண் முதல் இந்தியத்துக்கும் பரனாய்ச் 
சாதிக்கிற நிர் அவயவமாயுள்ள 
ஆன்மாவைச் சாவயவமாகச் 29-300
சாதித்துச் சாத்திய தன்மத்தின் 
விசேடம் கெடுத்தலின் விபரீதம் 
தன்மிச் சொரூப விபரீத சாதனம் 
தன்மியுடைய சொரூப மாத்திரத்தினை 
ஏதுத் தானே விபரீதப்படுத்தல் 
"பாவம் திரவியம் கன்மம் அன்று 
குணமும் அன்று எத் திரவியம் ஆம் எக் 
குண கன்மத்து உண்மையின் வேறாதலால் 
சாமானிய விசேடம்போல்" என்றால் 
"பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய் 29-310
நின்றவற்றின்னிடை உண்மை வேறு ஆதலால்" என்று 
காட்டப்பட்ட ஏது மூன்றினுடை 
உண்மை பேதுப்படுத்தும் பொதுவாம் 
உண்மை சாத்தியத்து இல்லாமையினும் 
திட்டாந்தத்தில் சாமானியம் விசேடம் 
போக்கிப் பிறிதொன்று இல்லாமையானும் 
பாவம் என்று பகர்ந்த தன்மியினை 
அபாவம் ஆக்குதலான் விபரீதம் 
தன்மி விசேட விபரீத சாதனம் 
தன்மி விசேட அபாவம் சாதித்தல் 29-320
முன்னம் காட்டப்பட்ட ஏதுவே 
பாவம் ஆகின்றது கருத்தாவுடைய 
கிரியையும் குணமும் ஆம் அதனை விபரீதம் 
ஆக்கியது ஆதலான் தன்மி விசேடம் 
கெடுத்தது தீய எடுத்துக்காட்டு ஆவன 
தாமே திட்டாந்த ஆபாசங்கள் 
திட்டாந்தம் இரு வகைப் படும் என்று முன் 
கூறப்பட்டன இங்கண் அவற்றுள் 
சாதன்மிய திட்டாந்த ஆபாசம் 
ஓதில் ஐந்து வகை உளதாகும் 29-330
சாதன தன்ம விகலமும் சாத்திய 
தன்ம விகலமும் உபய தன்ம 
விகலமும் அநன்னுவயம் விபரீதான் 
னுவயம் என்ன வைதன்மிய திட் 
டாந்த ஆபாசமும் ஐ வகைய 
சாத்தியா வியாவிருத்தி 
சாதனா வியாவிருத்தி 
உபயா வியாவிருத்தி அவ்வெதிரேகம் 
விபரீத வெதிரேகம் என்ன இவற்றுள் 
சாதன தன்ம விகலம் ஆவது 29-340
திட்டாந்தத்தில் சாதனம் குறைவது 
"சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் 
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் 
ஆதலான் காண்புற்றது பரமாணுவில்" எனின் 
திட்டாந்தப் பரமாணு 
நித்தத்தோடு மூர்த்தம் ஆதலான் 
சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பிச் 
சாதன தன்ம அமூர்த்தத்துவம் குறையும் 
சாத்திய தன்ம விகலம் ஆவது 
காட்டப்பட்ட திட்டாந்தத்தில் 29-350
சாத்திய தன்மம் குறைவுபடுதல் 
"சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால் 
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் 
புத்திபோல்" என்றால் 
திட்டாந்தமாகக் காட்டப்பட்ட 
புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே 
அநித்தம் ஆதலான் சாதன அமூர்த்தத்துவம் 
நிரம்பி சாத்திய நித்தத்துவம் குறையும் 
உபய தன்ம விகலம் ஆவது 
காட்டப்பட்ட திட்டாந்தத்திலே 29-360
சாத்திய சாதனம் இரண்டும் குறைதல் 
அன்றியும் அது தான் சன்னும் அசன்னும் 
என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள 
உபய தன்ம விகலம் ஆவது 
உள்ள பொருட்கண் சாத்திய சாதனம் 
கொள்ளும் இரண்டும் குறையக் காட்டுதல் 
"சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் 
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் 
கடம் போல்" எனின் திட்டாந்தமாகக் 
காட்டப்பட்ட கடம் தான் உண்டாகிச் 29-370
சாத்தியமாய் உள நித்தத்துவமும் 
சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும் 
அசன்னா உள்ள உபய தன்ம விகலம் 
இல்லாப்பொருட்கண் சாத்திய சாதனம் 
என்னும் இரண்டும் குறையக் காட்டுதல் 
"சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான் 
யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம் 
ஆகாசம் போல்" எனும் திட்டாந்தத்து 
சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும் 
சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும் 29-380
இரண்டும் "ஆகாசம் அசத்து" என்பானுக்கு 
அதன்கண் இன்மையானே குறையும் 
"உண்டு" என்பானுக்கு ஆகாசம் நித்தம் 
அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும் 
அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம் 
தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே 
இரண்டனுடைய உண்மையைக் காட்டுதல் 
"சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின் 
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம்" எனும் 
அன்னுவயம் சொல்லாது "குடத்தின்கண்ணே 29-390
கிருத்த அநித்தம் காணப்பட்ட" 
என்றால் அன்னுவயம் தெரியாதாகும் 
விபரீதான்னுவயம் வியாபகத்துடைய 
அன்னுவயத்தாலே வியாப்பியம் விதித்தல் 
"சத்தம் அநித்தம் கிருத்தத்தால்" எனின் 
"யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம்" என 
வியாப்பியத்தால் வியாபக்கத்தைக் கருதாது 
"யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம்" என 
வியாபகத்தால் வியாப்பியத்தைக் கருதுதல் 
அப்படிக் கருதின் வியாபகம் வியாப்பியத்தை 29-400
இன்றியும் நிகழ்தலின் விபரீதம் ஆம் 
வைதன்மிய திட்டாந்தத்துச் 
சாத்தியா வியாவிருத்தி ஆவது 
சாதன தன்மம் மீண்டு 
சாத்திய தன்மம் மீளாதுஒழிதல் 
"சத்தம் நித்தம் அமூர்த்தத்து" என்றால் 
"யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது 
அமூர்த்தமும் அன்று பரமாணுப் போல்" எனின் 
அப்படித் திட்டாந்தமாகக் காட்டப்பட்ட 
பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் ஆதலின் 29-410
சாதன அமூர்த்தம் மீண்டு 
சாத்திய நித்தம் மீளாதுஒழிதல் 
சாதனா வியாவிருத்தி ஆவது 
சாத்திய தன்மம் மீண்டு 
சாதன தன்மம் மீளாது ஒழிதல் 
"சத்தம் நித்தம் அமூர்த்தத்து" என்றால் 
"யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது 
அமூர்த்தமும் அன்று கன்மம்போல்" என்றால் 
வைதன்மிய திட்டாந்தமாகக் 
காட்டப்பட்ட கன்மம் 29-420
அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின் 
சாத்தியமான நித்தியம் மீண்டு 
சாதனமான அமூர்த்தம் மீளாது 
உபயா வியாவிருத்தி காட்டப்பட்ட 
வைதன்மிய திட்டாந்தத்தினின்று 
சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும் 
உண்மையின் உபயா வியாவிருத்தி 
இன்மையின் உபயா வியாவிருத்தி 
என இருவகை உண்மையின் 
உபயா வியாவிருத்தி உள்ள பொருட்கண் 29-430
சாத்திய சாதனம் மீளாதபடி 
வைதன்மிய திட்டாந்தம் காட்டல் 
"சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின்" 
என்றாற்கு "யாதொன்று யாதொன்று நித்தம் அன்று 
அமூர்த்தமும் அன்று ஆகாசம்போல்" என்றால் 
"வைதன்மிய திட்டாந்தமாகக் காட்டப்பட்ட 
ஆகாசம் பொருள்" என்பாற்கு 
ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான் 
சாத்திய நித்தமும் சாதனமா உள்ள 
அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இன்மையின் 29-440
உபயா வியாவிருத்தி ஆவது 
"சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்" 
என்ற இடத்து "யாதொன்று யாதொன்று அநித்தம் 
மூர்த்தமும் அன்ன்று ஆகாசம் போல்" என 
வைதன்மிய திட்டாந்தம் காட்டில் 
"ஆகாசம் பொருள் அல்ல" என்பானுக்கு 
ஆகாசம் தானே உண்மை இன்மையினால் 
சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும் 
மீட்சியும் மீளாமையும் இலையாகும் 
அவ்வெதிரேகம் ஆவது சாத்தியம் 29-450
இல்லா இடத்துச் சாதனம் இன்மை 
சொல்லாதே விடுதல் ஆகும் "சத்தம் 
நித்தம் பண்ணப்படாமையால்" என்றால் 
"யாதொன்று யாதொன்று நித்தம் அன்று 
பண்ணப்படுவது அல்லாது அதுவும் 
அன்று" எனும் இவ் வெதிரேகம் தெரியச் 
சொல்லாது "குடத்தின்கண்ணே பண்ணப் 
படுதலும் அநித்தமும் கண்டேம் ஆதலான்" 
என்னின் வெதிரேகம் தெரியாது 
விபரீத வெதிரேகம் ஆவது 29-460
பிரிவைத் தலைதடுமாறாச் சொல்லுதல் 
"சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின்" 
என்றால் என்று நின்ற இடத்து 
"யாதோர் இடத்து நித்தமும் இல்லை அவ் 
இடத்து மூர்த்தமும் இல்லை" எனாதே 
"யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அவ் 
இடத்து நித்தமும் இல்லை" என்றால் 
வெதிரேகம் மாறுகொள்ளும் எனக் கொள்க 
நாட்டிய இப்படி தீய சாதனத்தால் 
காட்டும் அனுமான ஆபாசத்தின் 
மெய்யும் பொய்யும் இத்திற விதியால் 
ஐயம் இன்றி அறிந்து கொள் ஆய்ந்து என் 29-472
30. பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
தானம் தாங்கிச் சீலம் தலைநின்று 
போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள் 
புத்த தன்ம சங்கம் என்னும் 
முத் திற மணியை மும்மையின் வணங்கி 
சரணாகதியாய்ச் 'சரண்' சென்று அடைந்தபின் 
முரணாத் திருவறமூர்த்தியை மொழிவோன் 
'அறிவு வறிதாய் உயிர் நிறை காலத்து 
முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப 
துடிதலோகம் ஒழியத் தோன்றி 
போதி மூலம் பொருந்தியிருந்து 30-010
மாரனை வென்று வீரன் ஆகி 
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும் 
வாமன் வாய்மை ஏமக் கட்டுரை 
இறந்த காலத்து எண் இல் புத்தர்களும் 
சிறந்து அருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது 
ஈர் அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய்ச் 
சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும் 
இலக்கு அணத் தொடர்தலின் 
மண்டில வகையாய் அறியக் காட்டி 
எதிர் முறை ஒப்ப மீட்சியும் ஆகி 30-020
ஈங்கு இது இல்லாவழி இல்லாகி 
ஈங்கு இது உள்ளவழி உண்டு ஆகலின் 
தக்க தக்க சார்பின் தோற்றம் எனச் 
சொற்றகப்பட்டும் இலக்கு அணத் தொடர்பால் 
கருதப்பட்டும் கண்டம் நான்கு உடைத்தாய் 
மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய் 
தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய் 
தோற்றற்கு ஏற்ற காலம் மூன்று உடைத்தாய் 
குற்றமும் வினையும் பயனும் விளைந்து 
நிலையில வறிய துன்பம் என நோக்க 30-030
உலையா வீட்டிற்கு உறுதி ஆகி 
நால்வகை வாய்மைக்குச் சார்பு இடன் ஆகி 
ஐந்து வகைக் கந்தத்து அமைதி ஆகி 
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி 
நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி 
இயன்ற நால்வகையால் வினா விடை உடைத்தாய் 
நின்மதி இன்றி ஊழ்பாடு இன்றிப் 
பின்போக்கு அல்லது பொன்றக் கெடாதாய் 
பண்ணுநர் இன்றிப் பண்ணப் படாதாய் 
யானும் இன்றி என்னதும் இன்றி 30-040
போனதும் இன்றி வந்ததும் இன்றி 
முடித்தலும் இன்றி முடிவும் இன்றி 
வினையும் பயனும் பிறப்பும் வீடும் 
இனையன எல்லாம் தானே ஆகிய 
பேதைமை செய்கை உணர்வே அருஉரு 
வாயில் ஊறே நுகர்வே வேட்கை 
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் 
இற்று என வகுத்த இயல்பு ஈர் ஆறும் 
பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர் 
அறியார்ஆயின் ஆழ் நரகு அறிகுவர் 30-050
"பேதைமை என்பது யாது?" என வினவின் 
ஓதிய இவற்றை உணராது மயங்கி 
இயற்படு பொருளால் கண்டது மறந்து 
முயற்கோடு உண்டு எனக் கேட்டது தௌிதல் 
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் 
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் 
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் 
தொக்க விலங்கும் பேயும் என்றே 
நல்வினை தீவினை என்று இரு வகையால் 
சொல்லப்பட்ட கருவில் சார்தலும் 30-060
கருவில் பட்ட பொழுதினுள் தோற்றி 
வினைப்பயன் விளையுங்காலை உயிர்கட்கு 
மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும் 
"தீவினை என்பது யாது?" என வினவின் 
ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய் 
கொலையே களவே காமத் தீவிழைவு 
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் 
பொய்யே குறளை கடுஞ்சொல் பயன் இல் 
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும் 
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று 30-070
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப் 
பத்து வகையால் பயன் தெரி புலவர் 
இத் திறம் படரார் படர்குவர் ஆயின் 
விலங்கும் பேயும் நரகரும் ஆகி 
கலங்கிய உள்ளக் கவலையின் தோன்றுவர் 
"நல்வினை என்பது யாது?" என வினவின் 
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச் 
சீலம் தாங்கித் தானம் தலைநின்று 
மேல் என வகுத்த ஒருமூன்று திறத்துத் 
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி 30-080
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் 
உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின் 
புரிவு இன்றாகிப் புலன் கொளாததுவே 
அருஉரு என்பது அவ் உணர்வு சார்ந்த 
உயிரும் உடம்பும் ஆகும் என்ப 
வாயில் ஆறும் ஆயுங்காலை 
உள்ளம் உறுவிக்க உறும் இடன் ஆகும் 
ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும் 
வேறு புலன்களை மேவுதல் என்ப 
நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல் 30-090
வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை 
பற்று எனப்படுவது பசைஇய அறிவே 
பவம் எனப்படுவது கரும ஈட்டம் 
தரும் முறை இது எனத் தாம்தாம் சார்தல் 
பிறப்பு எனப்படுவது அக் கருமப் பெற்றியின் 
உறப் புணர் உள்ளம் சார்பொடு கதிகளில் 
காரண காரிய உருக்களில் தோன்றல் 
பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய் 
இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல் 
மூப்பு என மொழிவது அந்தத்து அளவும் 30-100
தாக்கும் நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல் 
சாக்காடு என்பது அருஉருத் தன்மை 
யாக்கை வீழ் கதிரென மறைந்திடுதல் 
பேதைமை சார்வா செய்கை ஆகும் 
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும் 
உணர்ச்சி சார்வா அரூரு ஆகும் 
அருஉருச் சார்வா வாயில் ஆகும் 
வாயில் சார்வா ஊறு ஆகும்மே 
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும் 
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும் 30-110
வேட்கை சார்ந்து பற்று ஆகும்மே 
பற்றின் தோன்றும் கருமத் தொகுதி 
கருமத் தொகுதி காரணமாக 
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம் 
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு 
அவலம் அரற்றுக் கவலை கையாறு எனத் 
தவல் இல் துன்பம் தலைவரும் என்ப 
ஊழின் மண்டிலமாச் சூழும் இந் நுகர்ச்சி 
பேதைமை மீள செய்கை மீளும் 
செய்கை மீள உணர்ச்சி மீளும் 30-120
உணர்ச்சி மீள அருஉரு மீளும் 
அருஉரு மீள வாயில் மீளும் 
வாயில் மீள ஊறு மீளும் 
ஊறு மீள நுகர்ச்சி மீளும் 
நுகர்ச்சி மீள வேட்கை மீளும் 
வேட்கை மீள பற்று மீளும் 
பற்று மீள கருமத் தொகுதி 
மீளும் கருமத் தொகுதி மீளத் 
தோற்றம் மீளும் தோற்றம் மீளப் 
பிறப்பு மீளும் பிறப்பு பிணி மூப்புச் 30-130
சாக்காடு அவலம் அரற்றுக் கவலை 
கையாறு என்று இக் கடை இல் துன்பம் 
எல்லாம் மீளும் இவ் வகையால் மீட்சி 
ஆதிக் கண்டம் ஆகும் என்ப 
பேதைமை செய்கை என்று இவை இரண்டும் 
காரண வகைய ஆதலானே 
இரண்டாம் கண்டம் ஆகும் என்ப 
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே 
நுகர்ச்சி என்று நோக்கப்படுவன 
முன்னவற்று இயல்பான் துன்னிய ஆதலின் 30-140
மூன்றாம் கண்டம் வேட்கை பற்று 
கரும ஈட்டம் எனக் கட்டுரைப்பவை 
மற்று அப் பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள் 
குற்றமும் வினையும் ஆகலானே 
நான்காம் கண்டம் பிறப்பே பிணியே 
மூப்பே சாவு என மொழிந்திடும் துன்பம் 
என இவை பிறப்பில் உழக்கு பயன் ஆதலின் 
பிறப்பின் முதல் உணர்வு ஆதிச் சந்தி 
நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம் 
புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி 30-150
கன்மக் கூட்டத்தொடு வரு பிறப்பிடை 
முன்னிச் செல்வது மூன்றாம் சந்தி 
மூன்று வகைப் பிறப்பும் மொழியுங்காலை 
ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே 
தோன்றல் வீடு எனத் துணிந்து தோன்றியும் 
உணர்வு உள் அடங்க உருவாய்த் தோன்றியும் 
உணர்வும் உருவும் உடங்கத் தோன்றிப் 
புணர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும் 
காலம் மூன்றும் கருதுங்காலை 
இறந்த காலம் என்னல் வேண்டும் 30-160
மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை 
நிகழ்ந்த காலம் என நேரப்படுமே 
உணர்வே அருஉரு வாயில் ஊறே 
நுகர்வே வேட்கை பற்றே பவமே 
தோற்றம் என்று இவை சொல்லுங்காலை 
எதிர்காலம் என இசைக்கப்படுமே 
பிறப்பே பிணியே மூப்பே சாவே 
அவலம் அரற்று கவலை கையாறுகள் 
குலவிய குற்றம் எனக் கூறப்படுமே 
அவாவே பற்றே பேதைமை என்று இவை 30-170
புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும் 
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே 
நுகர்ச்சி பிறப்பு மூப்புப் பிணி சாவு இவை 
நிகழ்ச்சிப் பயன் ஆங்கே நேருங்காலை 
குற்றமும் வினையும் பயனும் துன்பம் 
பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா 
எப்பொருளுக்கும் ஆன்மா இலை என 
இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம் 
உணர்வே அருஉரு வாயில் ஊறே 
நுகர்வே பிறப்பே பிணி மூப்புச் சாவே 30-180
அவலம் அரற்றுக் கவலை கையாறு என 
நுவலப் படுவன நோய் ஆகும்மே 
அந் நோய் தனக்குப் 
பேதைமை செய்கை அவாவே பற்றுக் 
கரும ஈட்டம் இவை காரணம் ஆகும் 
துன்பம் தோற்றம் பற்றே காரணம் 
இன்பம் வீடே பற்றிலி காரணம் 
ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவது 
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை 
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன 30-190
அறுவகை வழக்கும் மறு இன்று கிளப்பின் 
தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை 
இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த 
உண்மை வழக்கும் இன்மை வழக்கும் 
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும் 
இல்லது சார்ந்த இன்மை வழக்கும் 
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும் 
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் எனச் 
சொல்லிய தொகைத் திறம் உடம்பு நீர் நாடு 
தொடர்ச்சி வித்து முளை தாள் என்று இந் 30-200
நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல் 
இயல்பு மிகுத்துரை ஈறுடைத்து என்றும் 
தோன்றிற்று என்றும் மூத்தது என்றும் 
மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்துரைத்தல் 
இயைந்துரை என்பது எழுத்துப் பல கூடச் 
சொல் எனத் தோற்றும் பல நாள் கூடிய 
எல்லையைத் திங்கள் என்று வழங்குதல் 
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயற்கோடு 
உள்ளது சார்ந்த உள் வழக்காகும் 
சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சி 30-210
உள்ளது சார்ந்த இல் வழக்காகும் 
சித்தம் உற்பவித்தது மின்போல் என்கை 
இல்லது சார்ந்த உண்மை வழக்காகும் 
காரணம் இன்றிக் காரியம் நேர்தல் 
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும் 
முயற்கோடு இன்மையின் தோற்றமும் இல் எனல் 
நான்கு நயம் எனத் தோன்றப்படுவன 
ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை இயல்பு என்க 
காரண காரியம் ஆகிய பொருள்களை 
ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம் 30-220
வீற்று வீற்றாக வேதனை கொள்வது 
வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும் 
பொன்றக் கெடா அப் பொருள் வழிப்பொருள்களுக்கு 
ஒன்றிய காரணம் உதவு காரியத்தைத் 
தருதற்கு உள்ளம் தான் இலை என்றல் 
புரிவின்மை நயம் எனப் புகறல் வேண்டும் 
நெல் வித்து அகத்துள் நெல் முளை தோற்றும் எனல் 
நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள்பயன் 
தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும் 
அப் பொருளிடைப் பற்று ஆகாது என்றும் 30-230
செய்வானொடு கோட்பாடு இலை என்றும் 
எய்து காரணத்து ஆம் காரியம் என்றும் 
அதுவும் அன்று அது அலாததும் அன்று என்றும் 
விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும் 
வினா விடை நான்கு உள 
துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல் 
வினாவின் விடுத்தல் வாய் வாளாமை எனத் 
"தோன்றியது கெடுமோ? கெடாதோ?" என்றால் 
"கேடு உண்டு" என்றல் துணிந்து சொலல் ஆகும் 
"செத்தான் பிறப்பானோ? பிறவானோ?" 30-240
என்று செப்பின் 
"பற்று இறந்தானோ? அல் மகனோ?" எனல் 
மிகக் கூறிட்டு மொழிதல் என விளம்புவர் 
வினாவின் விடுத்தல் "முட்டை முந்திற்றோ 
பனை முந்திற்றோ? எனக் கட்டுரை செய்" 
என்றால் "எம் முட்டைக்கு எப் பனை" என்றல் 
வாய் வாளாமை "ஆகாயப் பூப் 
பழைதோ, புதிதோ?" என்று புகல்வான் 
உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல் 
கட்டும் வீடும் அதன் காரணத்தது 30-250
ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை 
யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம் 
காமம் வெகுளி மயக்கம் காரணம் 
அநித்தம் துக்கம் அநான்மா அசுசி என 
தனித்துப் பார்த்துப் பற்று அறுத்திடுதல் 
மைத்திரி கருணா முதிதை என்று அறிந்து 
திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக! 
சுருதி சிந்தனா பாவனா தரிசனை 
கருதி உய்த்து மயக்கம் கடிக! 
இந் நால் வகையான் மனத்திருள் நீங்கு!' என்று 30-260
முன் பின் மலையா மங்கல மொழியின் 
ஞான தீபம் நன்கனம் காட்டத் 
தவத் திறம் பூண்டு தருமம் கேட்டுப் 
'பவத் திறம் அறுக!' எனப் பாவை நோற்றனள் என் 30-264
மணிமேகலை முற்றிற்று.

24. ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த தொல் முது கணிகை தன் சூழ்ச்சியில் போயவன் விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது நெஞ்சு நடுக்குறக் கேட்டு மெய் வருந்தி மாதவி மகள் தனை வான் சிறை நீக்கக் காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு 'அரவு ஏர் அல்குல் அருந் தவ மடவார் உரவோற்கு அளித்த ஒருபத்து ஒருவரும் ஆயிரம்கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள மா இரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும் 24-010
ஆங்கு அவன் புதல்வனோடு அருந் தவன் முனிந்த ஓங்கிய சிறப்பின் ஒருநூற்று நால்வரும் திருக் கிளர் மணி முடித் தேவர் கோன் தன் முன் உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும் ஒன்று கடை நின்ற ஆறு இருபதின்மர் இத் தோன்று படு மா நகர்த் தோன்றிய நாள் முதல் யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர் மாபெருந்தேவி! மாதர் யாரினும் பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் 24-020
பரந்து படு மனைதொறும் பாத்திரம் ஏந்தி அரங்கக் கூத்தி சென்று ஐயம் கொண்டதும் நகுதல் அல்லது நாடகக் கணிகையர் தகுதி என்னார் தன்மை அன்மையின் மன்னவன் மகனே அன்றியும் மாதரால் இந் நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்! உம்பளம் தழீஇய உயர் மணல் நெடுங் கோட்டு பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல் கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற 24-030
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு சிறை தானே தமியள் ஒருத்தி தோன்ற "இன்னள் ஆர்கொல் ஈங்கு இவள்?" என்று மன்னவன் அறியான் மயக்கம் எய்தாக் கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் உற்று உணர் உடம்பினும் வெற்றிச் சிலைக் காமன் மயிலையும் செயலையும் மாவும் குவளையும் பயில் இதழ்க் கமலமும் பருவத்து அலர்ந்த மலர் வாய் அம்பின் வாசம் கமழப் 24-040
பலர் புறங்கண்டோன் பணிந்து தொழில் கேட்ப ஒரு மதி எல்லை கழிப்பினும் உரையாள் பொரு அறு பூங்கொடி போயின அந் நாள் "யாங்கு ஒளித்தனள் அவ் இளங்கொடி!" என்றே வேந்தரை அட்டோன் மெல் இயல் தேர்வுழி நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற மன்னவன் அவனை வணங்கி முன் நின்று "என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள் அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள்? 24-050
சொல்லுமின்" என்று தொழ அவன் உரைப்பான் "கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னைப் பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய் நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன் வாகை வேலோன் வளைவணன் தேவி வாசமயிலை வயிற்றுள் தோன்றிய பீலிவளை என்போள் பிறந்த அந் நாள் "இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய கருவொடு வரும்" எனக் கணி எடுத்து உரைத்தனன் ஆங்கு அப் புதல்வன் வரூஉம் அல்லது 24-060
பூங்கொடி வாராள் புலம்பல்! இது கேள் தீவகச் சாந்தி செய்யா நாள் உன் காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம் மணிமேகலை தன் வாய்மொழியால் அது தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின் ஆங்குப் பதி அழிதலும் ஈங்குப் பதி கெடுதலும் வேந்தரை அட்டோய்! மெய் எனக் கொண்டு இக் காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல் வாசவன் விழாக் கோள் மறவேல்" என்று மாதவன் போயின அந் நாள் தொட்டும் இக் 24-070
காவல் மா நகர் கலக்கு ஒழியாதால் தன் பெயர் மடந்தை துயருறுமாயின் மன் பெருந் தெய்வம் வருதலும் உண்டு என அஞ்சினேன் அரசன் தேவி!' என்று ஏத்தி 'நல் மனம் பிறந்த நாடகக் கணிகையை என் மனைத் தருக' என இராசமாதேவி 'கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை தலைமையாக் கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை புலைமை என்று அஞ்சிப் போந்த பூங்கொடி 24-080
நின்னொடு போந்து நின் மனைப் புகுதாள் என்னொடு இருக்கும்' என்று ஈங்கு இவை சொல்வுழி மணிமேகலை திறம் மாதவி கேட்டு துணி கயம் துகள் படத் துளங்கிய அதுபோல் தௌியாச் சிந்தையள் சுதமதிக்கு உரைத்து வளி எறி கொம்பின் வருந்தி மெய்ந் நடுங்கி அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர் தம்முடன் மற வேல் மன்னவன் தேவி தன்பால் வரத் தேவியும் ஆயமும் சித்திராபதியும் மாதவி மகளும் மாதவர்க் காண்டலும் 24-090
எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளைக் கையால் தொழும்தகை மாதவன் துணை அடி வணங்க 'அறிவு உண்டாக' என்று ஆங்கு அவன் கூறலும் இணை வளை நல்லாள் இராசமாதேவி அருந் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி திருந்து அடி விளக்கிச் சிறப்புச் செய்த பின் "யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என் காண்தகு நல்வினை நும்மை ஈங்கு அழைத்தது நாத் தொலைவு இல்லைஆயினும் தளர்ந்து மூத்த இவ் யாக்கை வாழ்க பல்லாண்டு!' என 24-100'தேவி கேளாய்! செய் தவ யாக்கையின் மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன் பிறந்தார் "மூத்தார் பிணி நோய் உற்றார் இறந்தார்" என்கை இயல்பே இது கேள் பேதைமை செய்கை உணர்வே அருஉரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப் பயன் இற்று என வகுத்த இயல்பு ஈர் ஆறும் பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர் அறியாராயின் ஆழ் நரகு அறிகுவர் 24-110
"பேதைமை என்பது யாது?" என வினவின் ஓதிய இவற்றை உணராது மயங்கி இயற்படு பொருளால் கண்டது மறந்து முயற்கோடு உண்டு எனக் கேட்டது தௌிதல் உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்றே நல்வினை தீவினை என்று இரு வகையான் சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி 24-120
வினைப் பயன் விளையும்காலை உயிர்கட்கு மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும் "தீவினை என்பது யாது?" என வினவின் ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய் கொலையே களவே காமத் தீவிழைவு உலையா உடம்பில் தோன்றுவ முன்றும் பொய்யே குறளை கடுஞ் சொல் பயன் இல் சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும் வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப் 24-130
பத்து வகையால் பயன் தெரி புலவர் இத் திறம் படரார் படர்குவர் ஆயின் விலங்கும் பேயும் நரகரும் ஆகி கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர் "நல்வினை என்பது யாது?" என வினவின் சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி சீலம் தாங்கித்தானம் தலைநின்று மேல் என வகுத்த ஒரு மூன்று திறத்து தேவரும் மக்களும் பிரமரும் ஆகி மேவிய மகிழ்ச்சி வினைப் பயன் உண்குவர் 24-140
அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர்! புரை தீர் நல் அறம் போற்றிக் கேண்மின் மறு பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ! பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு இத் திறம் பலவும் இவற்றின் பகுதியும் முத்து ஏர் நகையாய்! முன்னுறக் கூறுவல்' என்று அவன் எழுதலும் இளங்கொடி எழுந்து நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி 'தேவியும் ஆயமும் சித்திராபதியும் மாதவர் நல் மொழி மறவாது உய்ம்மின் 24-150
இந் நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின் "மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று" என்குவர் ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின் நாள் மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி வஞ்சியுள் புக்கு மா பத்தினி தனக்கு எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல் "எனக்கு இடர் உண்டு" என்று இரங்கல் வேண்டா மனக்கு இனியீர்!" என்று அவரையும் வணங்கி வெந்துறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த அந்தி மாலை ஆய் இழை போகி 24-160
உலக அறவியும் முதியாள் குடிகையும் இலகு ஒளிக் கந்தமும் ஏத்தி வலம் கொண்டு அந்தரம் ஆறாப் பறந்து சென்று ஆய் இழை இந்திரன் மருமான் இரும் பதிப் புறத்து ஓர் பூம்பொழில் அகவயின் இழிந்து பொறையுயிர்த்து ஆங்கு வாழ் மாதவன் அடி இணை வணங்கி 'இந் நகர்ப் பேர் யாது? இந் நகர் ஆளும் மன்னவன் யார்?" என மாதவன் கூறும் 'நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன் பூமிசந்திரன் மகன் புண்ணியராசன் 24-170
ஈங்கு இவன் பிறந்த அந் நாள் தொட்டும் ஓங்கு உயர் வானத்துப் பெயல் பிழைப்பு அறியாது மண்ணும் மரனும் வளம் பல தரூஉம் உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல்' என தகை மலர்த் தாரோன் தன் திறம் கூறினன் அகை மலர்ப் பூம்பொழில் அருந் தவன் தான் என் 24-176
25. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை
அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து தருமசாவகன் தன் அடி வணங்கி அறனும் மறனும் அநித்தமும் நித்தத் திறனும் துக்கமும் செல் உயிர்ப் புக்கிலும் சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும் ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு 'பெண் இணை இல்லாப் பெரு வனப்பு உற்றாள் கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும் இங்கு இணை இல்லாள் இவள் யார்?' என்ன 25-010
காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன் 'நாவல் அம் தீவில் இந் நங்கையை ஒப்பார் யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம் கிள்ளிவளவனொடு கெழுதகை வேண்டிக் கள் அவிழ் தாரோய்! கலத்தொடும் போகி காவிரிப் படப்பை நல் நகர் புக்கேன் மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்தாங்கு ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன் ஆங்கு அவள் இவள்! அவ் அகல் நகர் நீங்கி ஈங்கு வந்தனள்' என்றலும் இளங்கொடி 25-020
'நின் கைப் பாத்திரம் என் கைப் புகுந்தது மன் பெருஞ் செல்வத்து மயங்கினை அறியாய் அப் பிறப்பு அறிந்திலைஆயினும் ஆ வயிற்று இப் பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ? மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது பிணிப்புறு பிறவியின் பெற்றியை அறியாய் ஆங்கு வருவாய் அரச! நீ' என்று அப் பூங் கமழ் தாரோன்முன்னர்ப் புகன்று மை அறு விசும்பின் மடக்கொடி எழுந்து வெய்யவன் குடபால் வீழாமுன்னர் 25-030
> வான் நின்று இழிந்து மறி திரை உலாவும் பூ நாறு அடைகரை எங்கணும் போகி மணிப்பல்லவம் வலம் கொண்டு மடக்கொடி பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும் தொழுது வலம் கொள்ள அத் தூ மணிப்பீடிகைப் பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த 'காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை மாயம் இல் மாதவன் தன் அடி பணிந்து தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம் 25-040
'விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும் கலங்கு அஞர்த் தீவினை கடிமின் கடிந்தால் தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர் ஆகலின் நல்வினை அயராது ஓம்புமின் புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன் உலகு உயக் கோடற்கு ஒருவன் தோன்றும் அந் நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை மாற்று அருங் கூற்றம் வருவதன் முன்னம் போற்றுமின் அறம்' எனச் சாற்றிக் காட்டி 25-050
நாக் கடிப்பு ஆக வாய்ப் பறை அறைந்தீர் அவ் உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த வெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின் "பெரியவன் தோன்றாமுன்னர் இப் பீடிகை கரியவன் இட்ட காரணம் தானும் மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய என் பிறப்பு உணர்த்தலும் என்?" என்று யான் தொழ "முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது மற்று அப் பீடிகை தன்மிசைப் பொறாஅது பீடிகை பொறுத்த பின்னர் அல்லது 25-060
வானவன் வணங்கான் மற்று அவ் வானவன் பெருமகற்கு அமைத்து 'பிறந்தார் பிறவியைத் தரும பீடிகை சாற்றுக' என்றே அருளினன் ஆதலின் ஆய் இழை பிறவியும் இருள் அறக் காட்டும்" என்று எடுத்து உரைத்தது அன்றே போன்றது அருந் தவர் வாய்மொழி இன்று எனக்கு' என்றே ஏத்தி வலம் கொண்டு ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும் ஆங்கு அப் பொழில் விட்டு அகநகர் புக்கு தந்தை முனியா தாய் பசு ஆக 25-070
வந்த பிறவியும் மா முனி அருளால் குடர்த் தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர் அடர்ப் பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும் மா முனி அருளால் மக்களை இல்லோன் பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும் ஆய் தொடி அரிவை அமரசுந்தரி எனும் தாய் வாய்க் கேட்டு தாழ் துயர் எய்தி இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம் பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து 'செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க 25-080
அரைசு வீற்றிருந்து புரையோர்ப் பேணி நாடகம் கண்டு பாடல் பான்மையின் கேள்வி இன் இசை கேட்டு தேவியர் ஊடல் செவ்வி பார்த்து நீடாது பாடகத் தாமரைச் சீறடி பணிந்து தே மரு கொங்கையில் குங்குமம் எழுதி அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி மதி முகக் கருங் கண் செங் கடை கலக்கக் கருப்பு வில்லி அருப்புக் கணை தூவ 25-090
தருக்கிய காமக் கள்ளாட்டு இகழ்ந்து தூ அறத் துறத்தல் நன்று' எனச் சாற்றி 'தௌிந்த நாதன் என் செவிமுதல் இட்ட வித்து ஏதம் இன்றாய் இன்று விளைந்தது மணிமேகலை தான் காரணம் ஆக' என்று அணி மணி நீள் முடி அரசன் கூற 'மனம் வேறு ஆயினன் மன்' என மந்திரி சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி 'எம் கோ வாழி! என் சொல் கேண்மதி நும் கோன் உன்னைப் பெறுவதன் முன் நாள் 25-100
பன்னீராண்டு இப் பதி கெழு நல் நாடு மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு ஈன்றாள் குழவிக்கு இரங்காளாகி தான் தனி தின்னும் தகைமையது ஆயது காய் வெங் கோடையில் கார் தோன்றியதென நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்! தோன்றிய பின்னர் தோன்றிய உயிர்கட்கு வானம் பொய்யாது மண் வளம் பிழையாது ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா நீ ஒழிகாலை நின் நாடு எல்லாம் 25-110
தாய் ஒழி குழவி போலக் கூஉம் துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின் இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ! பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே! தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும் மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால் மதி மாறு ஒர்ந்தனை மன்னவ!' என்றே முதுமொழி கூற முதல்வன் கேட்டு 'மணிபல்லவம் வலம் கொள்வதற்கு எழுந்த 25-120
தணியா வேட்கை தணித்தற்கு அரிதால் அரசும் உரிமையும் அகநகர்ச் சுற்றமும் ஒரு மதி எல்லை காத்தல் நின் கடன்' என 'கலம் செய் கம்மியர் வருக' எனக் கூஉய் இலங்கு நீர்ப் புணரி எறி கரை எய்தி வங்கம் ஏறினன் மணிபல்லவத்திடை தங்காது அக் கலம் சென்று சார்ந்து இறுத்தலும் புரை தீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி காவலன் தன்னொடும் கடல் திரை உலாவும் 25-130
தே மலர்ச் சோலைத் தீவகம் வலம் செய்து 'பெருமகன்! காணாய் பிறப்பு உணர்விக்கும் தரும பீடிகை இது' எனக் காட்ட வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு உலந்த பிறவியை உயர் மணிப் பீடிகை கைஅகத்து எடுத்துக் காண்போர் முகத்தை மை அறு மண்டிலம் போலக் காட்ட 'என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன் தென் தமிழ் மதுரைச் செழுங் கலைப் பாவாய்! மாரி நடு நாள் வயிறு காய் பசியால் 25-140
ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு இரந்தூண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில் "நாடு வறம் கூரினும் இவ் ஓடு வறம் கூராது ஏடா! அழியல் எழுந்து இது கொள்க" என அமுதசுரபி அங்கையில் தந்து என் பவம் அறுவித்த வானோர் பாவாய்! உணர்வில் தோன்றி உரைப் பொருள் உணர்த்தும் மணி திகழ் அவிர் ஒளி மடந்தை! நின் அடி தேவர் ஆயினும் பிரமர் ஆயினும் 25-150
நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது மறந்து வாழேன் மடந்தை!' என்று ஏத்தி மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து தென் மேற்காகச் சென்று திரை உலாம் கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர் தூ மலர்ப் புன்னைத் துறை நிழல் இருப்ப ஆபுத்திரனோடு ஆய் இழை இருந்தது காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி 'அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு 25-160
பெருந் துயர் தீர்த்த அப் பெரியோய்! வந்தனை அந் நாள் நின்னை அயர்த்துப் போயினர் பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர் ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண் ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர் ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண் ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப ஆய் மலர்ப் புன்னை அணி நிழல் கீழால் அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய 25-170
என்பு உடை யாக்கை இருந்தது காணாய் நின் உயிர் கொன்றாய் நின் உயிர்க்கு இரங்கிப் பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய் கொலைவன் அல்லையோ? கொற்றவன் ஆயினை! பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய மடவரல் நல்லாய்! நின் தன் மா நகர் கடல் வயிறு புக்கது காரணம் கேளாய் நாக நல் நாடு ஆள்வோன் தன் மகள் பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள் பனிப் பகை வானவன் வழியில் தோன்றிய 25-180
புனிற்று இளங் குழவியொடு பூங்கொடி பொருந்தி இத் தீவகம் வலம் செய்து தேவர் கோன் இட்ட மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி கம்பளச் செட்டி கலம் வந்து இறுப்ப அங்கு அவன்பால் சென்று அவன் திறம் அறிந்து "கொற்றவன் மகன் இவன் கொள்க" எனக் கொடுத்தலும் பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி பழுது இல் காட்சிப் பைந்தொடி புதல்வனைத் தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழிய கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள் 25-190
இலங்கு நீர் அடைகரை அக் கலம் கெட்டது கெடு கல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன் நல் மணி இழந்த நாகம் போன்று கானலும் கடலும் கரையும் தேர்வுழி வானவன் விழாக் கோள் மா நகர் ஒழிந்தது மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள் "அணி நகர் தன்னை அலை கடல் கொள்க" என இட்டனள் சாபம் பட்டது இதுவால் 25-200
கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த வடி வேல் தடக் கை வானவன் போல விரிதிரை வந்து வியல் நகர் விழுங்க ஒரு தனி போயினன் உலக மன்னவன் அருந் தவன் தன்னுடன் ஆய் இழை தாயரும் வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர் பரப்பு நீர்ப் பௌவம் பலர் தொழ காப்போள் உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின் மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம் முன் நாள் எடுத்ததும் அந் நாள் ஆங்கு அவன் 25-210
அற அரசு ஆண்டதும் அறவணன் தன்பால் மறு பிறப்பாட்டி வஞ்சியுள் கேட்பை' என்று அந்தரத் தீவகத்து அருந் தெய்வம் போய பின் மன்னவன் இரங்கி மணிமேகலையுடன் துன்னிய தூ மணல் அகழத் தோன்றி ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கித் தான் பிணி அவிழாத் தகைமையது ஆகி வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி மன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து 25-220
'என் உற்றனையோ இலங்கு இதழ்த் தாரோய்? நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது மன்னா! நின் தன் மறு பிறப்பு உணர்த்தி அந்தரத் தீவினும் அகன் பெருந் தீவினும் நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும் அரசர் தாமே அருளறம் பூண்டால் பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு? "அறம் எனப்படுவது யாது?" எனக் கேட்பின் மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது 25-230
கண்டது இல்' எனக் காவலன் உரைக்கும் 'என் நாட்டு ஆயினும் பிறர் நாட்டு ஆயினும் நல் நுதல்! உரைத்த நல் அறம் செய்கேன் என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை நின்திறம் நீங்கல் ஆற்றேன் யான்' என 'புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின் மன் பெரு நல் நாடு வாய் எடுத்து அழைக்கும் வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன்' என்று அந்தரத்து எழுந்தனள் அணி இழை தான் என் 25-239
26 வஞ்சி மாநகர் புக்க காதை
அணி இழை அந்தரம் ஆறா எழுந்து தணியாக் காதல் தாய் கண்ணகியையும் கொடை கெழு தாதை கோவலன் தன்னையும் கடவுள் எழுதிய படிமம் காணிய வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து வணங்கி நின்று குணம் பல ஏத்தி 'அற்புக் கடன் நில்லாது நல் தவம் படராது கற்புக் கடன் பூண்டு நும் கடன் முடித்தது அருளல் வேண்டும்' என்று அழுது முன் நிற்ப ஒரு பெரும் பத்தினிக் கடவுள் ஆங்கு உரைப்போள் 26-010
'எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள் மதுராபதி எனும் மா பெருந் தெய்வம் "இது நீர் முன் செய் வினையின் பயனால் காசு இல் பூம்பொழில் கலிங்க நல் நாட்டுத் தாய மன்னவர் வசுவும் குமரனும் சிங்கபுரமும் செழு நீர்க் கபிலையும் அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள் மூ இரு காவதம் முன்னுநர் இன்றி யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டுப் 26-020
பல் கலன் கொண்டு பலர் அறியாமல் எல் வளையாளோடு அரிபுரம் எய்தி பண்டக் கலம் பகர் சங்கமன் தன்னைக் கண்டனர் கூறத் தையல் நின் கணவன் பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் தீத் தொழிலாளன் தெற்றெனப் பற்றி ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு குற்றம் இலோனைக் கொலைபுரிந்திட்டனன் ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி ஏங்கி மெய்பெயர்ப்போள் இறு வரை ஏறி 26-030
இட்ட சாபம் கட்டியது ஆகும் உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது" எனும் மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும் சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன் மேற் செய் நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம் அவ் வினை இறுதியின் அடு சினப் பாவம் எவ் வகையானும் எய்துதல் ஒழியாது உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு யாங்கணும் இரு வினை உய்த்து உமைப் போல நீங்கு அரும் பிறவிக் கடலிடை நீந்தி 26-040
பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் "மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு ஒரு பெருந் திலகம்" என்று உரவோர் உரைக்கும் கரவு அரும் பெருமைக் கபிலை அம் பதியின் அளப்பு அரும் பாரமிதை அளவு இன்று நிறைத்து துளக்கம் இல் புத்த ஞாயிறு தோன்றிப் போதிமூலம் பொருந்தி வந்தருளி தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும் அந் நிலை எல்லாம் அழிவுறு வகையும் 26-050
இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி எண் அருஞ் சக்கரவாளம் எங்கணும் அண்ணல் அறக் கதிர் விரிக்கும்காலை பைந்தொடி! தந்தையுடனே பகவன் இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின் துன்பக் கதியில் தோற்றரவு இன்றி அன்பு உறு மனத்தோடு அவன் அறம் கேட்டு துறவி உள்ளம் தோன்றித் தொடரும் பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம் அத் திறம் ஆயினும் அநேக காலம் 26-060
எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம் நறை கமழ் கூந்தல் நங்கை! நீயும் முறைமையின் இந்த மூதூர் அகத்தே அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய பின்னர் பெரியோன் பிடக நெறி கடவாய் இன்னது இவ் இயல்பு' எனத் தாய் எடுத்து உரைத்தலும் "இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் விளை பொருள் உரையார் வேற்று உருக் கொள்க" என மை அறு சிறப்பின் தெய்வதம் தந்த 26-070
மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய் தேவ குலமும் தெற்றியும் பள்ளியும் பூ மலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும் நல் நெறி காணிய தொல் நூல் புலவரும் எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில் செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் போர்த் தொழில் தானை குஞ்சியில் புனைய நில நாடு எல்லை தன் மலை நாடென்ன 26-080
கைம்மலைக் களிற்று இனம் தம்முள் மயங்க தேரும் மாவும் செறி கழல் மறவரும் கார் மயங்கு கடலின் கலி கொளக் கடைஇ கங்கை அம் பேர் யாற்று அடைகரைத் தங்கி வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து கனக விசயர் முதல் பல வேந்தர் அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை சிமையம் ஓங்கிய இமைய மால் வரைத் தெய்வக் கல்லும் தன் திரு முடிமிசைச் செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன் வில் திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க பொன் கொடிப் பெயர்ப் படூஉம் பொன் நகர்ப் பொலிந்தனள் திருந்து நல் ஏது முதிர்ந்துளது ஆதலின் பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என் 26-094
27. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை
'நவை அறு நன் பொருள் உரைமினோ' என சமயக் கணக்கர் தம் திறம் சார்ந்து வைதிக மார்க்கத்து அளவை வாதியை எய்தினள் எய்தி 'நின் கடைப்பிடி இயம்பு' என 'வேத வியாதனும் கிருதகோடியும் ஏதம் இல் சைமினி எனும் இவ் ஆசிரியர் பத்தும் எட்டும் ஆறும் பண்புறத் தம் தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர் காண்டல் கருதல் உவமம் ஆகமம் ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு 27-010
ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவறிவு எய்தி உண்டாம் நெறி என்று இவை தம்மால் பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும் மருள் இல் காட்சி ஐ வகை ஆகும் கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால் சுவையும் மெய்யால் ஊறும் எனச் சொன்ன இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று துக்கமும் சுகமும் எனத் துயக்கு அற அறிந்து உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி 27-020
பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது கிட்டிய தேசம் நாமம் சாதி குணம் கிரியையின் அறிவது ஆகும் கருத்து அளவு ஆவது குறிக்கொள் அனுமானத்து அனுமேயத் தகைமை உணரும் தன்மையது ஆகும் மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம் பொது எனப்படுவது சாதன சாத்தியம் இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும் 27-030
கடம் திகழ் யானைக் கான ஒலி கேட்டோன் உடங்கு "எழில் யானை அங்கு உண்டு" என உணர்தல் எச்சம் என்பது வெள்ள ஏதுவினால் நிச்சயித்து அத் தலை மழை நிகழ்வு உரைத்தல் முதல் என மொழிவது கருக்கொள் முகில் கண்டு "இது மழை பெய்யும் என இயம்பிடுதல் என்னும் ஏதுவின் ஒன்று முக் காலம் தன்னில் ஒன்றில் சார்ந்து உளதாகி மண்ட உயிர் முதல் மாசு இன்றாகி காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல் 27-040
உவமம் ஆவது ஒப்புமை அளவை "கவய மா ஆப் போலும்" எனக் கருதல் ஆகம அளவை அறிவன் நூலால் "போக புவனம் உண்டு" எனப் புலங்கொளல் அருத்தாபத்தி "ஆய்க்குடி கங்கை இருக்கும்" என்றால் கரையில் என்று எண்ணல் இயல்பு யானைமேல் இருந்தோன் தோட்டிற்கு அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல் ஐதிகம் என்பது உலகு மறை "இம் மரத்து எய்தியது ஓர் பேய் உண்டு" எனத் தௌிதல் 27-050
அபாவம் என்பது இன்மை "ஓர் பொருளைத் தவாது அவ் இடத்துத் தான் இலை" என்றல் மீட்சி என்பது "இராமன் வென்றான்" என மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல் உள்ள நெறி என்பது "நாராசத் திரிவில் கொள்ளத் தகுவது காந்தம்" எனக் கூறல் எட்டு உள பிரமாண ஆபாசங்கள் சுட்டுணர்வொடு திரியக் கோடல் ஐயம் தேராது தௌிதல் கண்டு உணராமை எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல் 27-060
நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது எனைப் பொருள் உண்மை மாத்திரை காண்டல் திரியக் கோடல் ஒன்றை ஒன்று என்றல் விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல் ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா மையல் தறியோ? மகனோ? என்றல் தேராது தௌிதல் செண்டு வௌியில் ஓராது தறியை மகன் என உணர்தல் கண்டு உணராமை கடு மாப் புலி ஒன்று அண்டலை முதலிய கண்டும் அறியாமை 27-070
இல் வழக்கு என்பது முயற்கோடு ஒப்பன சொல்லின் மாத்திரத்தால் கருத்தில் தோன்றல் உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்குத் தீப் புணர்ந்திடல் மருந்து எனப் புலம் கொள நினைத்தல் நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று பிறர் சொலக் கருதல் இப் பெற்றிய அளவைகள் பாங்குறும் உலோகாயதமே பௌத்தம் சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர் 27-080
தாம் பிருகற்பதி சினனே கபிலன் அக்கபாதன் கணாதன் சைமினி மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம் உவமானம் அருத்தாபத்தி அபாவம் இவையே இப்போது இயன்று உள அளவைகள்' என்றவன் தன்னை விட்டு 'இறைவன் ஈசன்' என நின்ற சைவ வாதி நேர்படுதலும் 'பரசும் நின் தெய்வம் எப்படித்து?' என்ன 'இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று எட்டு வகையும் உயிரும் யாக்கையுமய்க் 27-090
கட்டி நிற்போனும் கலை உருவினோனும் படைத்து விளையாடும் பண்பினோனும் துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோனும் தன்னில் வேறு தான் ஒன்று இலோனும் அன்னோன் இறைவன் ஆகும்' என்று உரைத்தனன் 'பேர் உலகு எல்லாம்' பிரம வாதி 'ஓர் தேவன் இட்ட முட்டை' என்றனன் காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினன் 'நாரணன் காப்பு' என்று உரைத்தனன் 'கற்பம் கை சந்தம் கால் எண் கண் 27-100தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு உற்ற வியாகரணம் முகம் பெற்றுச் சார்பின் தோன்றா ஆரண வேதக்கு ஆதி அந்தம் இல்லை அது நெறி' எனும் வேதியன் உரையின் விதியும் கேட்டு 'மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற எத் திறத்தினும் இசையாது இவர் உரை' என ஆசீவக நூல் அறிந்த புராணனை 'பேசும் நின் இறை யார்? நூற்பொருள் யாது?' என 'எல்லை இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும் 27-110
புல்லிக் கிடந்து புலப்படுகின்ற வரம்பு இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து உரம் தரும் உயிரோடு ஒரு நால் வகை அணு அவ் அணு உற்றும் கண்டும் உணர்ந்திடப் பெய் வகை கூடிப் பிரிவதும் செய்யும் நிலம் நீர் தீ காற்று என நால் வகையின மலை மரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும் வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும் அவ் வகை அறிவது உயிர் எனப் படுமே வற்பம் ஆகி உறும் நிலம் தாழ்ந்து 27-120
சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய் இழினென நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீத் தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம் காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால் ஆதி இல்லாப் பரமாணுக்கள் தீதுற்று யாவதும் சிதைவது செய்யா புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா முது நீர் அணு நில அணுவாய்த் திரியா ஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யா 27-130
அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா உலாவும் தாழும் உயர்வதும் செய்யும் குலாம் மலை பிறவாக் கூடும் பலவும் பின்னையும் பிரிந்து தம் தன்மைய ஆகும் மன்னிய வயிரமாய்ச் செறிந்து வற்பமும் ஆம் வேய் ஆய்த் துளைபடும் பொருளா முளைக்கும் தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம் நிறைந்த இவ் அணுக்கள் பூதமாய் நிகழின் குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின் ஒன்று முக்கால் அரை கால் ஆய் உறும் 27-140
துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே இக் குணத்து அடைந்தால் அல்லது நிலன் ஆய்ச் சிக்கென்பதுவும் நீராய் இழிவதும் தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும் ஆய தொழிலை அடைந்திடமாட்டா ஓர் அணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர் தேரார் பூதத் திரட்சியுள் ஏனோர் மாலைப் போதில் ஒரு மயிர் அறியார் சாலத் திரள் மயிர் தோற்றுதல் சாலும் கருமம் பிறப்பும் கரு நீலப் பிறப்பும் 27-150
பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும் பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும் என்று இவ் ஆறு பிறப்பினும் மேவி பண்புறு வரிசையின் பாற்பட்டுப் பிறந்தோர் கழி வெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர் அழியல் வேண்டார் அது உறற்பாலார் இது செம்போக்கின் இயல்பு இது தப்பும் அது மண்டலம் என்று அறியல் வேண்டும் பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் 27-160
பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும் கருவில் பட்ட பொழுதே கலக்கும் இன்பமும் துன்பமும் இவையும் அணு எனத் தகும் முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது மற்கலி நூலின் வகை இது' என்ன சொல் தடுமாற்றத் தொடர்ச்சியை விட்டு நிகண்ட வாதியை 'நீ உரை நின்னால் புகழும் தலைவன் யார்? நூற்பொருள் யாவை, அப் பொருள் நிகழ்வும் கட்டும் வீடும் மெய்ப்பட விளம்பு' என விளம்பல் உறுவோன் 27-170
'இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன் தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும் அதன்மாத்திகாயமும் கால ஆகாயமும் தீது இல் சீவனும் பரமாணுக்களும் நல்வினையும் தீவினையும் அவ் வினையால் செய்வுறு பந்தமும் வீடும் இத் திறத்த ஆன்ற பொருள் தன் தன்மையது ஆயும் தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும் அநித்தமும் நித்தமும் ஆகி நின்று நுனித்த குணத்து ஓர் கணத்தின் கண்ணே 27-180
தோற்றமும் நிலையும் கேடும் என்னும் மாற்று அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம் நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம் நிம்பத்து அப் பொருள் அன்மை அநித்தயம் பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம் இயற்றி அப் பயறு அழிதலும் ஏதுத் தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய் பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா அப்படித்தாகி அதன் மாத்திகாயமும் எப் பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் 2 27-190
காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும் ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும் ஆக்கும் ஆகாயம் எல்லாப் பொருட்கும் பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும் சீவன் உடம்போடு ஒத்துக் கூடி தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும் ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும் சீர்சால் நல்வினை தீவினை அவை செயும் வரு வழி இரண்டையும் மாற்றி முன்செய் அரு வினைப் பயன் அனுபவித்து அறுத்திடுதல் 27-200
அது வீடு ஆகும்' என்றனன் அவன்பின் 'இது சாங்கிய மதம்' என்று எடுத்து உரைப்போன் 'தனை அறிவு அரிதாய் தான் முக் குணமாய் மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய் எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடம் எனச் சொல்லுதல் மூலப் பகுதி சித்தத்து மான் என்று உரைத்த புத்தி வௌிப்பட்டு அதன்கண் ஆகாயம் வௌிப்பட்டு அதன்கண் வாயு வௌிப்பட்டு அதன்கண் அங்கி ஆனது வௌிப்பட்டு அதன்கண் அப்பின் 27-210
தன்மை வௌிப்பட்டு அதில் மண் வௌிப்பட்டு அவற்றின் கூட்டத்தில் மனம் வௌிப்பட்டு ஆர்ப்புறு மனத்து ஆங்கார விகாரமும் ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும் வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும் அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும் தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும் நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும் சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய் வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என 27-220
ஆக்கிய இவை வௌிப்பட்டு இங்கு அறைந்த பூத விகாரத்தால் மலை மரம் முதல் ஓதிய வௌிப்பட்டு உலகாய் நிகழ்ந்து வந்த வழியே இவை சென்று அடங்கி அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும் ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம் அறிதற்கு எளிதாய் முக் குணம் அன்றி பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி எப் பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி அப் பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் 27-230
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய் நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன் புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே மெய் வாய் கண் மூக்கு செவி தாமே உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம் உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம்' எனச் செயிர் அறச் செப்பிய திறமும் கேட்டு 27-240
'வைசேடிக! நின் வழக்கு உரை' என்ன 'பொய் தீர் பொருளும் குணமும் கருமமும் சாமானியமும் விசேடமும் கூட்டமும் ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது குணமும் தொழிலும் உடைத்தாய் எத் தொகைப் பொருளுக்கும் ஏது ஆம் அப் பொருள் ஒன்பான் ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம் ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் பயில் குணம் உடைத்து நின்ற நான்கும் 27-250
சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை மாசு இல் பெருமை சிறுமை வன்மை மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் என்னும் நீர்மை பக்கம் முதல் அனேகம் கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும் பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான் போதலும் நிற்றலும் பொதுக் குணம் ஆதலின் சாதலும் நிகழ்தலும் அப் பொருள் தன்மை 27-260
ஒன்று அணு கூட்டம் குணமும் குணியும்' என்று ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே 'பூத வாதியைப் புகல் நீ' என்னத் 'தாதகிப் பூவும் கட்டியும் இட்டு மற்றும் கூட்ட மதுக் களி பிறந்தாங்கு உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும் அவ் உணர்வு அவ் அப் பூதத்து அழிவுகளின் வெவ் வேறு பிரியும் பறை ஓசையின் கெடும் உயிரொடும் கூட்டிய உணர்வு உடைப் பூதமும் உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் 27-270
அவ் அப் பூத வழி அவை பிறக்கும் மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும் உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும் இம்மையும் இம்மைப் பயனும் இப் பிறப்பே பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்' என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு 'நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன் பிறந்த முன் பிறப்பை எய்தப் பெறுதலின் அறிந்தோர் உண்டோ?' என்று நக்கிடுதலும் 27-280
'தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும் மையல் உறுவார் மனம் வேறு ஆம் வகை ஐயம் அன்றி இல்லை' என்றலும் 'நின் தந்தை தாயரை அனுமானத்தால் அலது இந்த ஞாலத்து எவ் வகை அறிவாய்? மெய்யுணர்வு இன்றி மெய்ப் பொருள் உணர்வு அரிய ஐயம் அல்லது இது சொல்லப் பெறாய்' என உள்வரிக் கோலமோடு உன்னிய பொருள் உரைத்து ஐவகைச் சமயமும் அறிந்தனள் ஆங்கு என் 27-289
28. கச்சி மாநகர் புக்க காதை
ஆங்கு தாயரோடு அறவணர்த் தேர்ந்து வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின் வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும் போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து சுருங்கைத் தூம்பின் மனை வளர் தோகையர் கருங் குழல் கழீஇய கலவை நீரும் எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும் தம் தமில் ஆடிய சாந்து கழி நீரும் புவி காவலன் தன் புண்ணிய நல் நாள் சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும் 28-010
மேலை மாதவர் பாதம் விளக்கும் சீல உபாசகர் செங் கை நறு நீரும் அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைத்து நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும் உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால் செறித்து அரைப்போர் தம் செழு மனை நீரும் என்று இந் நீரே எங்கும் பாய்தலின் கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி தாமரை குவளை கழுநீர் ஆம்பல் 28-020
பூமிசைப் பரந்து பொறி வண்டு ஆர்ப்ப இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில் பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த வெள்ளிக் குன்றம் உள் கிழிந்து அன்ன நெடு நிலைதோறும் நிலாச் சுதை மலரும் கொடி மிடை வாயில் குறுகினள் புக்கு கடை காப்பு அமைந்த காவலாளர் மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும் 28-030
பல் மீன் விலைஞர் வெள் உப்புப் பகருநர் கள் நொடையாட்டியர் காழியர் கூவியர் மைந் நிண விலைஞர் பாசவர் வாசவர் என்னுநர் மறுகும் இருங் கோவேட்களும் செம்பு செய்ஞ்ஞ்அரும் கஞ்சகாரரும் பைம்பொன் செய்ஞ்ஞ்அரும் பொன் செய் கொல்லரும் மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும் வரம் தர எழுதிய ஓவிய மாக்களும் தோலின் துன்னரும் துன்ன வினைஞரும் மாலைக்காரரும் காலக் கணிதரும் 28-040
நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும் பாணர் என்று இவர் பல் வகை மறுகும் விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரோடு இலங்கு மணி வினைஞ்அர் இரீஇய மறுகும் வேத்தியல் பொது இயல் என்று இவ் இரண்டின் கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும் பால் வேறு ஆக எண் வகைப் பட்ட கூலம் குவைஇய கூல மறுகும் மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும் 28-050
போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும் கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும் பொன் உரை காண்போர் நல் மனை மறுகும் பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும் மறையோர் அருந் தொழில் குறையா மறுகும் அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும் எனைப் பெருந் தொழில் செய் ஏனோர் மறுகும் மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் புதுக் கோள் யானையும் பொன் தார்ப் புரவியும் 28-060
கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும் சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும் வேணவா மிகுக்கும் விரை மரக் காவும் விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும் சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும் கோலம் குயின்ற கொள்கை இடங்களும் கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமோடு அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும் இந்திர விகாரம் என எழில் பெற்று 28-070
நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர் உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள் கோவலன் தாதை மா தவம் புரிந்தோன் பாதம் பணிந்து தன் பாத்திர தானமும் தானப் பயத்தால் சாவக மன்னவன் ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும் செல்வற் கொணர்ந்து அத் தீவகப் பீடிகை ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும் உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள 28-080
அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு இறவாது இப் பதிப் புகுந்தது கேட்டதும் சாவக மன்னன் தன் நாடு எய்த தீவகம் விட்டு இத் திரு நகர் புகுந்ததும் புக்க பின் அந்தப் பொய் உருவுடனே தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும் அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம் செவ்விது அன்மையின் சிந்தை வையாததும் நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும் 28-090
சொல்லினள் ஆதலின் 'தூயோய்! நின்னை என் நல்வினைப் பயன்கொல் நான் கண்டது?' எனத் 'தையல்' கேள் நின் தாதையும் தாயும் செய்த தீவினையின் செழு நகர் கேடுற துன்புற விளிந்தமை கேட்டுச் சுகதன் அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின் மனைத்திறவாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும் நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன் 28-100
புரிந்த யான் இப் பூங் கொடிப் பெயர்ப் படூஉம் திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய் குடக் கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை விடர்ச் சிலை பொறித்த வேந்தன் முன் நாள் துப்பு அடு செவ் வாய்த் துடி இடையாரொடும் இப் பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள் இலங்கா தீவத்துச் சமனொளி என்னும் சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும் தரும சாரணர் தங்கிய குணத்தோர் கரு முகில் படலத்துக் ககனத்து இயங்குவோர் 28-110
அரைசற்கு ஏது அவ் வழி நிகழ்தலின் புரையோர் தாமும் இப் பூம்பொழில் இழிந்து கல் தலத்து இருந்துழி காவலன்விரும்பி முன் தவம் உடைமையின் முனிகளை ஏத்திப் பங்கயச் சேவடி விளக்கி பான்மையின் அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம் பாத்திரத்து அளித்துப் பலபல சிறப்பொடு வேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின் பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும் அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை 28-120
இன்ப ஆர் அமுது இறைவன் செவிமுதல் துன்பம் நீங்கச் சொரியும் அந் நாள் நின் பெருந் தாதைக்கு ஒன்பது வழி முறை முன்னோன் கோவலன் மன்னவன் தனக்கு நீங்காக் காதல் பாங்கன் ஆதலின் தாங்க நல் அறம் தானும் கேட்டு முன்னோர் முறைமையின் படைத்ததை அன்றி தன்னான் இயன்ற தனம் பல கோடி எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈத்து தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய 28-130
வான் ஓங்கு சிமையத்து வால் ஒளிச் சயித்தம் ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இத் தண்டாக் காட்சித் தவத்தோர் அருளிக் "காவிரிப் பட்டினம் கடல் கொளும்" என்ற அத் தூ உரை கேட்டுத் துணிந்து இவண் இருந்தது இன்னும் கேளாய் நல் நெறி மாதே! "தீவினை உருப்பச் சென்ற நின் தாதையும் தேவரில் தோற்றி முன்செய் தவப் பயத்தால் ஆங்கு அத் தீவினை இன்னும் துய்த்துப் 28-140
பூங்கொடி! முன்னவன் போதியில் நல் அறம் தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கிக் காதலி தன்னொடு கபிலை அம் பதியில் நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும்" என்று அற்புதக் கிளவி அறிந்தோர் கூறச் சொல் பயன் உணர்ந்தேன் தோகை! யானும் அந் நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன் நின்னது தன்மை அந் நெடு நிலைக் கந்தில் துன்னிய துவதிகன் உரையின் துணிந்தனை அன்றோ? தவ நெறி அறவணன் சாற்றக் கேட்டனன் 28-150
ஆங்கு அவன் தானும் நின் அறத்திற்கு ஏது பூங்கொடி! கச்சி மா நகர் ஆதலின் மற்று அம் மா நகர் மாதவன் பெயர் நாள் பொன் தொடி தாயரும் அப் பதிப் படர்ந்தனர் அன்னதை அன்றியும் அணி இழை! கேளாய் பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் அந் நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் இன்மையின் இந் நகர் எய்தினர் காணாய் ஆர் உயிர் மருந்தே! அந் நாட்டு அகவயின் 28-160
கார் எனத் தோன்றிக் காத்தல் நின் கடன்' என அருந் தவன் அருள ஆய் இழை வணங்கித் திருந்திய பாத்திரம் செங் கையின் ஏந்திக் கொடி மதில் மூதூர்க் குடக்கண் நின்று ஓங்கி வட திசை மருங்கின் வானத்து இயங்கித் தேவர் கோமான் காவல் மாநகர் மண் மிசைக் கிடந்தென வளம் தலைமயங்கிய பொன் நகர் வறிதாப் புல்லென்று ஆயது கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை பொன் கொடி மூதூர்ப் புரிசை வலம் கொண்டு 28-170
நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து தொடு கழல் கிள்ளி துணை இளங் கிள்ளி செம் பொன் மாச் சினைத் திருமணிப் பாசடைப் பைம் பூம் போதிப் பகவற்கு இயற்றிய சேதியம் தொழுது தென்மேற்கு ஆக தாது அணி பூம்பொழில் தான் சென்று எய்தலும் வையம் காவலன் தன் பால் சென்று கைதொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன் 'கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள் 28-180
> அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு தங்காது இப் பதித் தருமதவனத்தே வந்து தோன்றினள் மா மழை போல்' என மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பி 'கந்திற்பாவை கட்டுரை எல்லாம் வாய் ஆகின்று' என வந்தித்து ஏத்தி ஆய் வளை நல்லாள் தன்னுழைச் சென்று 'செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ கொங்கு அவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ நலத்தகை நல்லாய்! நல் நாடு எல்லாம் 28-190
அலத்தல்காலை ஆகியது அறியேன் மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி "உயங்காதொழி நின் உயர் தவத்தால் ஓர் காரிகை தோன்றும் அவள் பெருங் கடிஞையின் ஆருயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும் ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின் தாங்கா மாரியும் தான் நனி பொழியும் அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால் கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது 28-200
பார் அகம் விதியின் பண்டையோர் இழைத்த கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என பொய்கையும் பொழிலும் புனைமின்" என்று அறைந்து அத் தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது இவ் இடம்" என்றே அவ் இடம் காட்ட அத் தீவகம் போன்ற காஅகம் பொருந்திக் கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள் 'பண்டை எம் பிறப்பினைப் பான்மையின் காட்டிய அங்கு அப் பீடிகை இது என' அறவோன் 28-210
பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்து தீவதிலகையும் திரு மணிமேகலா மா பெருந் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு ஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்து விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்திப் பங்கயப் பீடிகை பசிப் பிணி மருந்து எனும் அங்கையின் ஏந்திய அமுதசுரபியை வைத்து நின்று 'எல்லா உயிரும் வருக' என பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின் 28-220
மொய்த்த மூ அறு பாடை மாக்களில் காணார் கேளார் கால் முடம் ஆனோர் பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர் மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும் பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும் மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய் பெருந் தவர் கைப் பெய் பிச்சையின் பயனும் நீரும் நிலமும் காலமும் கருவியும் 28-230
சீர் பெற வித்திய வித்தின் விளைவும் பெருகியதென்ன பெரு வளம் சுரப்ப வசித் தொழில் உதவி வளம் தந்தது என பசிப் பிணி தீர்த்த பாவையை ஏத்திச் செல்லும்காலை தாயர் தம்முடன் அல்லவை கடிந்த அறவண அடிகளும் மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி நல் அறச்சாலை நண்ணினர் சேறலும் சென்று அவர் தம்மைத் திருவடி வணங்கி 'நன்று' என விரும்பி நல் அடி கழுவி 28-240
ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகைப் போனகம் ஏந்தி பொழுதினில் கொண்டபின் பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து 'வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம்' என மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என் 28-245
29. தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை
இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்தி அறம் திகழ் நாவின் அறவணன் உரைப்போன் 'வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன் தன் மகள் பீலிவளை தான் பயந்த புனிற்று இளங் குழவியைத் தீவகம் பொருந்தி தனிக் கலக் கம்பளச் செட்டி கைத் தரலும் வணங்கிக் கொண்டு அவன் வங்கம் ஏற்றிக் கொணர்ந்திடும் அந் நாள் கூர் இருள் யாமத்து அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும் மரக்கலம் கெடுத்தோன் மைந்தனைக் காணாது 29-010
அரைசற்கு உணர்த்தலும் அவன் அயர்வுற்று விரைவனன் தேடி விழாக்கோள் மறப்பத் தன் விழாத் தவிர்தலின் வானவர் தலைவன் நின் உயிர்த் தந்தை நெடுங் குலத்து உதித்த மன் உயிர் முதல்வன் மகர வேலையுள் முன்னிய வங்கம் முங்கிக் கேடுற பொன்னின் ஊசி பசுங் கம்பளத்துத் துன்னியதென்னத் தொடு கடல் உழந்துழி எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா வழுவாச் சீலம் வாழ்மையின் கொண்ட 29-020
பான்மையின் தனாது பாண்டு கம்பளம் தான் நடுக்குற்ற தன்மை நோக்கி "ஆதி முதல்வன் போதி மூலத்து நாதன் ஆவோன் நளி நீர்ப் பரப்பின் எவ்வம் உற்றான் தனது எவ்வம் தீர்" எனப் பவ்வத்து எடுத்து "பாரமிதை முற்றவும் அற அரசு ஆளவும் அற ஆழி உருட்டவும் பிறவிதோறு உதவும் பெற்றியள்" என்றே சாரணர் அறிந்தோர் காரணம் கூற அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரைத் 29-030
தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும் அன்றே கனவில் நனவென அறைந்த மென் பூ மேனி மணிமேகலா தெய்வம் என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும் பகரும் நின் பொருட்டால் இப் பதிப் 'படர்ந்தனம்' என்றலும் அறவணன் தாள் இணை இறைஞ்சி 'பொன் திகழ் புத்த பீடிகை போற்றும் தீவதிலகையும் இத் திறம் செப்பினள் ஆதலின் அன்ன அணி நகர் மருங்கே 29-040
வேற்றுருக் கொண்டு வெவ் வேறு உரைக்கும் நூல் துறைச் சமய நுண் பொருள் கேட்டே அவ் உரு என்ன ஐ வகைச் சமயமும் செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன் அடிகள்! மெய்ப்பொருள் அருளுக' என்ன 'நொடிகுவென் நங்காய்! நுண்ணிதின் கேள் நீ ஆதி சினேந்திரன் அளவை இரண்டே ஏதம் இல் பிரத்தியம் கருத்து அளவு என்னச் சுட்டுணர்வைப் பிரத்தியக்கம் எனச் சொலி விட்டனர் நாம சாதி குணம் கிரியைகள் 29-050
மற்று அவை அனுமானத்தும் அடையும் என காரண காரிய சாமானியக் கருத்து ஓரின் பிழைக்கையும் உண்டு பிழையாதது கனலில் புகைபோல் காரியக் கருத்தே ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில் ஆன முறைமையின் அனுமானம் ஆம் பிற பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம் நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில் பக்கம் "இம் மலை நெருப்புடைத்து" என்றல் "புகையுடைத்து ஆதலால்" எனல் பொருந்து ஏது 29-060
"வகை அமை அடுக்களை போல்" திட்டாந்தம் உபநயம் "மலையும் புகையுடைத்து" என்றல் நிகமனம் "புகையுடைத்தே நெருப்புடைத்து" என்றல் "நெருப்புடைத்து அல்லாது யாதொன்று அது புகைப் பொருத்தம் இன்று புனல்போல்" என்றல் மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய் வைதன்மிய திட்டாந்தம் ஆகும் தூய காரிய ஏதுச் சுபாவம் ஆயின் "சத்தம் அநித்தம்" என்றல் பக்கம் "பண்ணப்படுதலால்" எனல் 29-070
பக்க தன்ம வசனம் ஆகும் "யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது அநித்தம் கடம் போல்" என்றல் சபக்கத் தொடர்ச்சி "யாதொன்று அநித்தம் அல்லாதது பண்ணப் படாதது ஆகாசம் போல்" எனல் விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது "இவ் வெள்ளிடைக்கண் குடம் இலை" என்றல் செவ்விய பக்கம் "தோன்றாமையில்" எனல் பக்க தன்ம வசனம் ஆகும் 29-080
"இன்மையின் கண்டிலம் முயற்கோடு" என்றல் அந் நெறிச் சபக்கம் "யாதொன்று உண்டு அது தோற்றரவு அடுக்கும் கைந் நெல்லிபோல்" எனல் ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும் இவ்வகை ஏது பொருள் சாதிப்பன "என்னை காரியம் புகை சாதித்தது?" என்னின் "புகை உள இடத்து நெருப்பு உண்டு" என்னும் அன்னுவயத்தாலும் "நெருப்பு இலா இடத்துப் புகை இல்லை" என்னும் வெதிரேகத்தாலும் புகஈ நெருப்பைச் சாதித்தது என்னின் 29-090
நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம் வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின் மேல் நோக்கிக் கறுத்திருப்ப பகைத்திருப்ப தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும் அன்னுவயம் சாதிக்கின் "முன்னும் கழுதையையும் கணிகையையும் தம்மில் ஒருகாலத்து ஓர் இடத்தே அன்னுவயம் கண்டான் பிற்காலத்து கழுதையைக் கண்ட இடத்தே கணிகையை 29-100
அனுமிக்க வேண்டும் அது கூடா" "நெருப்பு இலா இடத்துப் புகை இலை எனல் நேர் அத் திருத்தகு வெதிரேகம் சாதிக்கும்" என்னின் "நாய் வால் இல்லாக் கழுதையின் பிடரில் நரி வாலும் இலையா காணப்பட்ட அதனையே கொண்டு பிறிதோர் இடத்து நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல் அரிதாம்" அதனால் அதுவும் ஆகாது ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும் திட்டாந்தத்திலே சென்று அடங்கும் 29-110
பக்கம் ஏது திட்டாந்தங்கள் ஒக்க நல்லவும் தீயவும் உள அதில் வௌிப்பட்டுள்ள தன்மியினையும் வௌிப்பட்டுள சாத்திய தன்மத்திறம் பிறிதின் வேறு ஆம் வேறுபாட்டினையும் தன்கண் சார்த்திய நயம் தருதல் உடையது நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான் "சத்தம் அநித்தம் நித்தம்" என்று ஒன்றைப் பற்றி நாட்டப்படுவது தன்மி சத்தம் சாத்திய தன்மம் ஆவது 29-120
நித்த அநித்தம் நிகழும் நல் ஏது மூன்றாய்த் தோன்றும் மொழிந்த பக்கத்து ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும் விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம் சாதிக்கின் பொருள் தன்னால் பக்கத்து ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல் சத்த அநித்தம் சாத்தியம் ஆயின் "ஒத்த அநித்தம் கட ஆதி போல்" எனல் விபக்கம் விளம்பில் "யாதொன்று யாதொன்று அநித்தம் அல்லாதது பண்ணப் படாதது 29-130
ஆ அகாசம் போல்" என்று ஆகும் பண்ணப்படுதலும் செயலிடைத் தோன்றலும் நண்ணிய பக்கம் சபக்கத்திலும் ஆய் விபக்கத்து இன்றி அநித்தத்தினுக்கு மிகத் தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க ஏதம் இல் திட்டாந்தம் இரு வகைய சாதன்மியம் வைதன்மியம் என சாதன்மியம் எனப்படுவது தானே "அநித்தம் கட ஆதி அன்னுவயத்து" என்கை வைதன்மிய திட்டாந்தம் "சாத்தியம் 29-140
எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை" இத்திறம் நல்ல சாதனத்து ஒத்தன தீய பக்கமும் தீய ஏதுவும் தீய எடுத்துக்காட்டும் ஆவன பக்கப் போலியும் ஏதுப் போலியும் திட்டாந்தப் போலியும் ஆஅம் இவற்றுள் பக்கப்போலி ஒன்பது வகைப்படும் பிரத்தியக்க விருத்தம் அனுமான விருத்தம் சுவசன விருத்தம் உலோக விருத்தம் ஆகம விருத்தம் அப்பிர 29-150
சித்த விசேடணம் அப்பிரசித்த விசேடியம் அப்பிரசித்த உபயம் அப்பிரசித்த சம்பந்தம் என எண்ணிய இவற்றுள் பிரத்தியக்க விருத்தம் கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும் "சத்தம் செவிக்குப் புலன் அன்று" என்றல் மற்று அனுமான விருத்தம் ஆவது கருத்து அளவையை மாறாகக் கூறல் "அநித்தியக் கடத்தை நித்தியம்" என்றல் சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல் 29-160
"என் தாய் மலடி" என்றே இயம்பல் உலக விருத்தம் உலகின் மாறாம் உரை "இலகு மதி சந்திரன் அல்ல" என்றல் ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல் அநித்த வாதியா உள்ள வைசேடிகன் "அநித்தியத்தை நித்தியம்" என நுவறல் அப்பிரசித்த விசேடணம் ஆவது தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனைக் குறித்து "சத்தம் விநாசி" என்றால் 29-170
அவன் அவிநாசவாதி ஆதலின் சாத்திய விநாசம் அப்பிரசித்தம் ஆகும் அப்பிரசித்த விசேடியம் ஆவது எதிரிக்குத் தன்மி பிரசித்தம் இன்றி இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற பௌத்தனைக் குறித்து "ஆன்மாச் சைதனியவான்" என்றால் அவன் அநான்ம வாதி ஆதலின் தன்மி அப்பிரசித்தம் அப்பிரசித்த உபயம் ஆவது மாறு ஆனோர்க்குத் தன்மி சாத்தியம் 29-180
ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல் பகர் வைசேடிகன் பௌத்தனைக் குறித்து "சுகம் முதலிய தொகைப் பொருட்குக் காரணம் ஆன்மா" என்றால் சுகமும் ஆன்மாவும் தாம் இசையாமையின் அப்பிரசித்த உபயம் அப்பிரசித்த சம்பந்தம் ஆவது எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல் மாறு ஆம் பௌத்தற்கு "சத்த அநித்தம்" கூறில் அவன்ன் கொள்கை அஃது ஆகலில் வேறு சாதிக்க வேண்டாது ஆகும் 29-190
ஏதுப் போலி ஓதின் மூன்று ஆகும் அசித்தம் அநைகாந்திகம் விருத்தம்ம் என உபய அசித்தம் அன்னியதர அசித்தம் சித்த அசித்தம் ஆசிரய அசித்தம் என நான்கு அசித்தம் உபய அசித்தம் சாதன ஏது இருவர்க்கும் இன்றி "சத்தம் அநித்தம் கண் புலத்து" என்றல் அன்னியதர அசித்தம் மாறு ஆய் நின்றாற்கு உன்னிய ஏது அன்றாய் ஒழிதல் "சத்தம் செயலுறல் அநித்தம்" என்னின் 29-200
சித்த வௌிப்பாடு அல்லது செயலுறல் உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும் சித்த அசித்தம் ஆவது ஏது சங்கயமாய்ச் சாதித்தல் ஆவி பனி என ஐயுறா நின்றே "தூய புகை நெருப்பு உண்டு" எனத் துணிதல் ஆசிரய அசித்தம் மாறு ஆனவனுக்கு ஏற்ற தன்மி இன்மை காட்டுதல் "ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம்" என்னின் "ஆகாசம் பொருள் அல்ல" என்பாற்குத் 29-210
தன்மி அசித்தம் அநைகாந்திகமும் சாதாரணம் அசாதாரணம் சபக்கைக தேசவிருத்தி விபக்க வியாபி விபக்கைகதேச விருத்தி சபக்க வியாபி உபயைகதேச விருத்தி விருத்த வியபிசாரி என்று ஆறு சாதாரணம் சபக்க விபக்கத்துக்கும் ஏதுப் பொதுவாய் இருத்தல் "சத்தம் அநித்தம் அறியப்படுதலின்" என்றால் "அறியப்படுதல் நித்த அநித்தம் இரண்டுக்கும் 29-220
செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ? ஆகாசம் போல நித்தத்து அறிவோ?" என்னல் அசாதாரணம் ஆவது தான் உன்னிய பக்கத்து உண்டாம் ஏதுச் சபக்க விபக்கம் தம்மில் இன்றாதல் "சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்" என்னின் "கேட்கப்படல்" எனும் ஏதுப் பக்கத்து உள்ளதாயின் அல்லது சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின் சங்கயம் எய்தி அநேகாந்திகம் ஆம் 29-230
சபக்கைகதேச விருத்தி விபக்க வியாபி ஆவது ஏதுச் சபக்கத்து ஓர் இடத்து எய்தி விபக்கத்து எங்கும் உண்டாதல் ஆகும் "சத்தம் செயலிடைத் தோன்றாதாகும் அநித்தம் ஆகலின்" என்றால் "அநித்தம்" என்ற ஏதுச் செயலிடைத் தோன்றாமைக்குச் சபக்கம் மின்னினும் ஆகாசத்தினும் மின்னின் நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின் அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் "கடம் போல் 29-240
அழிந்து செயலில் தோன்றுமோ? மின் போல் அழிந்து செயலில் தோன்றாதோ?" எனல் விபக்கைகதேச விருத்தி சபக்க வியாபி ஆவது ஏது விபக்கத்து ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல் "சத்தம் செயலிடைத் தோன்றும் அநித்தம் ஆதலின்" எனின் அநித்த ஏதுச் செயலிடைத் தோன்றற்கு விபக்க ஆகாயத்தினும் மின்னினும் மின்னின் நிகழ்ந்து ஆகாசத்துக் காணாது சபக்கக் கட ஆதிகள் தம்மில் 29-250
எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல "மின் போல் அநித்தம் ஆய்ச் செயலிடைத் தோன்றாதோ? கடம்போல் அநித்தம் ஆய்ச் செயலிடைத் தோன்றுமோ? எனல் உபயைகதேச விருத்தி ஏதுச் சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி ஓர் தேசத்து வர்த்தித்தல் "சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின்" என்னின் அமூர்த்த ஏது நித்தத்தினுக்குச் சபக்க ஆகாச பரமாணுக்களின் ஆகாசத்து நிகழ்ந்து மூர்த்தம் ஆம் 29-260
பரமாணுவின் நிகழாமையானும் விபக்கமான கட சுக ஆதிகளில் சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும் ஏகதேசத்து நிகழ்வது ஏகாந்தம் அன்று "அமூர்த்தம் ஆகாசம்போல நித்தமோ? அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ?" எனல் விருத்த வியபிசாரி திருந்தா ஏது ஆய் விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல் "சத்தம் அநித்தம் செயலிடைத் தோன்றலின் ஒத்தது" எனின் அச் செயலிடைத் தோன்றற்குச் 29-270
சபக்கமாயுள்ள கட ஆதி நிற்க "சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் சத்தத்துவம் போல்" எனச் சாற்றிடுதல் இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல விருத்தம் தன்னைத் திருத்தக விளம்பின் தன்மச் சொரூப விபரீத சாதனம் தன்ம விசேட விபரீத சாதனம் தன்மிச் சொரூப விபரீத சாதனம் தன்மி விசேட விபரீத சாதனம் என்ன நான்கு வகையது ஆகும் அத் 29-280
தன்மச் சொரூப விபரீத சாதனம் சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து உருவம் கெடுதல் "சத்தம் நித்தம் பண்ணப்படுதலின்" என்றால் பண்ணப் படுவது அநித்தம் ஆதலின் பண்ணப்பட்ட ஏதுச் சாத்திய தன்ம நித்தத்தை விட்டு அநித்தம் சாதித்தலான் விபரீதம் தன்ம விசேட விபரீத சாதனம் சொன்ன ஏதுச் சாத்திய தன்மம் தன்னிடை விசேடம் கெடச் சாதித்தல் 29-290
"கண் முதல் ஓர்க்கும் இந்திரியங்கள் எண்ணின் பரார்த்தம் தொக்கு நிற்றலினால் சயன ஆசனங்கள் போல" என்றால் "தொக்கு நிற்றலின்" என்கின்ற ஏதுச் சயன ஆசனத்தின் பராத்தம்போல் கண் முதல் இந்தியங்களியும் பரார்த்தத்தில் சாதித்துச் சயன ஆசனவானைப் போல் ஆகிக் கண் முதல் இந்தியத்துக்கும் பரனாய்ச் சாதிக்கிற நிர் அவயவமாயுள்ள ஆன்மாவைச் சாவயவமாகச் 29-300
சாதித்துச் சாத்திய தன்மத்தின் விசேடம் கெடுத்தலின் விபரீதம் தன்மிச் சொரூப விபரீத சாதனம் தன்மியுடைய சொரூப மாத்திரத்தினை ஏதுத் தானே விபரீதப்படுத்தல் "பாவம் திரவியம் கன்மம் அன்று குணமும் அன்று எத் திரவியம் ஆம் எக் குண கன்மத்து உண்மையின் வேறாதலால் சாமானிய விசேடம்போல்" என்றால் "பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய் 29-310
நின்றவற்றின்னிடை உண்மை வேறு ஆதலால்" என்று காட்டப்பட்ட ஏது மூன்றினுடை உண்மை பேதுப்படுத்தும் பொதுவாம் உண்மை சாத்தியத்து இல்லாமையினும் திட்டாந்தத்தில் சாமானியம் விசேடம் போக்கிப் பிறிதொன்று இல்லாமையானும் பாவம் என்று பகர்ந்த தன்மியினை அபாவம் ஆக்குதலான் விபரீதம் தன்மி விசேட விபரீத சாதனம் தன்மி விசேட அபாவம் சாதித்தல் 29-320
முன்னம் காட்டப்பட்ட ஏதுவே பாவம் ஆகின்றது கருத்தாவுடைய கிரியையும் குணமும் ஆம் அதனை விபரீதம் ஆக்கியது ஆதலான் தன்மி விசேடம் கெடுத்தது தீய எடுத்துக்காட்டு ஆவன தாமே திட்டாந்த ஆபாசங்கள் திட்டாந்தம் இரு வகைப் படும் என்று முன் கூறப்பட்டன இங்கண் அவற்றுள் சாதன்மிய திட்டாந்த ஆபாசம் ஓதில் ஐந்து வகை உளதாகும் 29-330
சாதன தன்ம விகலமும் சாத்திய தன்ம விகலமும் உபய தன்ம விகலமும் அநன்னுவயம் விபரீதான் னுவயம் என்ன வைதன்மிய திட் டாந்த ஆபாசமும் ஐ வகைய சாத்தியா வியாவிருத்தி சாதனா வியாவிருத்தி உபயா வியாவிருத்தி அவ்வெதிரேகம் விபரீத வெதிரேகம் என்ன இவற்றுள் சாதன தன்ம விகலம் ஆவது 29-340
திட்டாந்தத்தில் சாதனம் குறைவது "சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் ஆதலான் காண்புற்றது பரமாணுவில்" எனின் திட்டாந்தப் பரமாணு நித்தத்தோடு மூர்த்தம் ஆதலான் சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பிச் சாதன தன்ம அமூர்த்தத்துவம் குறையும் சாத்திய தன்ம விகலம் ஆவது காட்டப்பட்ட திட்டாந்தத்தில் 29-350
சாத்திய தன்மம் குறைவுபடுதல் "சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால் யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் புத்திபோல்" என்றால் திட்டாந்தமாகக் காட்டப்பட்ட புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே அநித்தம் ஆதலான் சாதன அமூர்த்தத்துவம் நிரம்பி சாத்திய நித்தத்துவம் குறையும் உபய தன்ம விகலம் ஆவது காட்டப்பட்ட திட்டாந்தத்திலே 29-360
சாத்திய சாதனம் இரண்டும் குறைதல் அன்றியும் அது தான் சன்னும் அசன்னும் என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள உபய தன்ம விகலம் ஆவது உள்ள பொருட்கண் சாத்திய சாதனம் கொள்ளும் இரண்டும் குறையக் காட்டுதல் "சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் கடம் போல்" எனின் திட்டாந்தமாகக் காட்டப்பட்ட கடம் தான் உண்டாகிச் 29-370
சாத்தியமாய் உள நித்தத்துவமும் சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும் அசன்னா உள்ள உபய தன்ம விகலம் இல்லாப்பொருட்கண் சாத்திய சாதனம் என்னும் இரண்டும் குறையக் காட்டுதல் "சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான் யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம் ஆகாசம் போல்" எனும் திட்டாந்தத்து சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும் சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும் 29-380
இரண்டும் "ஆகாசம் அசத்து" என்பானுக்கு அதன்கண் இன்மையானே குறையும் "உண்டு" என்பானுக்கு ஆகாசம் நித்தம் அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும் அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம் தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே இரண்டனுடைய உண்மையைக் காட்டுதல் "சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின் யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம்" எனும் அன்னுவயம் சொல்லாது "குடத்தின்கண்ணே 29-390
கிருத்த அநித்தம் காணப்பட்ட" என்றால் அன்னுவயம் தெரியாதாகும் விபரீதான்னுவயம் வியாபகத்துடைய அன்னுவயத்தாலே வியாப்பியம் விதித்தல் "சத்தம் அநித்தம் கிருத்தத்தால்" எனின் "யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம்" என வியாப்பியத்தால் வியாபக்கத்தைக் கருதாது "யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம்" என வியாபகத்தால் வியாப்பியத்தைக் கருதுதல் அப்படிக் கருதின் வியாபகம் வியாப்பியத்தை 29-400
இன்றியும் நிகழ்தலின் விபரீதம் ஆம் வைதன்மிய திட்டாந்தத்துச் சாத்தியா வியாவிருத்தி ஆவது சாதன தன்மம் மீண்டு சாத்திய தன்மம் மீளாதுஒழிதல் "சத்தம் நித்தம் அமூர்த்தத்து" என்றால் "யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது அமூர்த்தமும் அன்று பரமாணுப் போல்" எனின் அப்படித் திட்டாந்தமாகக் காட்டப்பட்ட பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் ஆதலின் 29-410
சாதன அமூர்த்தம் மீண்டு சாத்திய நித்தம் மீளாதுஒழிதல் சாதனா வியாவிருத்தி ஆவது சாத்திய தன்மம் மீண்டு சாதன தன்மம் மீளாது ஒழிதல் "சத்தம் நித்தம் அமூர்த்தத்து" என்றால் "யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது அமூர்த்தமும் அன்று கன்மம்போல்" என்றால் வைதன்மிய திட்டாந்தமாகக் காட்டப்பட்ட கன்மம் 29-420
அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின் சாத்தியமான நித்தியம் மீண்டு சாதனமான அமூர்த்தம் மீளாது உபயா வியாவிருத்தி காட்டப்பட்ட வைதன்மிய திட்டாந்தத்தினின்று சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும் உண்மையின் உபயா வியாவிருத்தி இன்மையின் உபயா வியாவிருத்தி என இருவகை உண்மையின் உபயா வியாவிருத்தி உள்ள பொருட்கண் 29-430
சாத்திய சாதனம் மீளாதபடி வைதன்மிய திட்டாந்தம் காட்டல் "சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின்" என்றாற்கு "யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அமூர்த்தமும் அன்று ஆகாசம்போல்" என்றால் "வைதன்மிய திட்டாந்தமாகக் காட்டப்பட்ட ஆகாசம் பொருள்" என்பாற்கு ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான் சாத்திய நித்தமும் சாதனமா உள்ள அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இன்மையின் 29-440
உபயா வியாவிருத்தி ஆவது "சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்" என்ற இடத்து "யாதொன்று யாதொன்று அநித்தம் மூர்த்தமும் அன்ன்று ஆகாசம் போல்" என வைதன்மிய திட்டாந்தம் காட்டில் "ஆகாசம் பொருள் அல்ல" என்பானுக்கு ஆகாசம் தானே உண்மை இன்மையினால் சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும் மீட்சியும் மீளாமையும் இலையாகும் அவ்வெதிரேகம் ஆவது சாத்தியம் 29-450
இல்லா இடத்துச் சாதனம் இன்மை சொல்லாதே விடுதல் ஆகும் "சத்தம் நித்தம் பண்ணப்படாமையால்" என்றால் "யாதொன்று யாதொன்று நித்தம் அன்று பண்ணப்படுவது அல்லாது அதுவும் அன்று" எனும் இவ் வெதிரேகம் தெரியச் சொல்லாது "குடத்தின்கண்ணே பண்ணப் படுதலும் அநித்தமும் கண்டேம் ஆதலான்" என்னின் வெதிரேகம் தெரியாது விபரீத வெதிரேகம் ஆவது 29-460
பிரிவைத் தலைதடுமாறாச் சொல்லுதல் "சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின்" என்றால் என்று நின்ற இடத்து "யாதோர் இடத்து நித்தமும் இல்லை அவ் இடத்து மூர்த்தமும் இல்லை" எனாதே "யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அவ் இடத்து நித்தமும் இல்லை" என்றால் வெதிரேகம் மாறுகொள்ளும் எனக் கொள்க நாட்டிய இப்படி தீய சாதனத்தால் காட்டும் அனுமான ஆபாசத்தின் மெய்யும் பொய்யும் இத்திற விதியால் ஐயம் இன்றி அறிந்து கொள் ஆய்ந்து என் 29-472

30. பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
தானம் தாங்கிச் சீலம் தலைநின்று போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள் புத்த தன்ம சங்கம் என்னும் முத் திற மணியை மும்மையின் வணங்கி சரணாகதியாய்ச் 'சரண்' சென்று அடைந்தபின் முரணாத் திருவறமூர்த்தியை மொழிவோன் 'அறிவு வறிதாய் உயிர் நிறை காலத்து முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப துடிதலோகம் ஒழியத் தோன்றி போதி மூலம் பொருந்தியிருந்து 30-010
மாரனை வென்று வீரன் ஆகி குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும் வாமன் வாய்மை ஏமக் கட்டுரை இறந்த காலத்து எண் இல் புத்தர்களும் சிறந்து அருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது ஈர் அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய்ச் சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும் இலக்கு அணத் தொடர்தலின் மண்டில வகையாய் அறியக் காட்டி எதிர் முறை ஒப்ப மீட்சியும் ஆகி 30-020
ஈங்கு இது இல்லாவழி இல்லாகி ஈங்கு இது உள்ளவழி உண்டு ஆகலின் தக்க தக்க சார்பின் தோற்றம் எனச் சொற்றகப்பட்டும் இலக்கு அணத் தொடர்பால் கருதப்பட்டும் கண்டம் நான்கு உடைத்தாய் மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய் தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய் தோற்றற்கு ஏற்ற காலம் மூன்று உடைத்தாய் குற்றமும் வினையும் பயனும் விளைந்து நிலையில வறிய துன்பம் என நோக்க 30-030
உலையா வீட்டிற்கு உறுதி ஆகி நால்வகை வாய்மைக்குச் சார்பு இடன் ஆகி ஐந்து வகைக் கந்தத்து அமைதி ஆகி மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி இயன்ற நால்வகையால் வினா விடை உடைத்தாய் நின்மதி இன்றி ஊழ்பாடு இன்றிப் பின்போக்கு அல்லது பொன்றக் கெடாதாய் பண்ணுநர் இன்றிப் பண்ணப் படாதாய் யானும் இன்றி என்னதும் இன்றி 30-040
போனதும் இன்றி வந்ததும் இன்றி முடித்தலும் இன்றி முடிவும் இன்றி வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனையன எல்லாம் தானே ஆகிய பேதைமை செய்கை உணர்வே அருஉரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் இற்று என வகுத்த இயல்பு ஈர் ஆறும் பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர் அறியார்ஆயின் ஆழ் நரகு அறிகுவர் 30-050
"பேதைமை என்பது யாது?" என வினவின் ஓதிய இவற்றை உணராது மயங்கி இயற்படு பொருளால் கண்டது மறந்து முயற்கோடு உண்டு எனக் கேட்டது தௌிதல் உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்றே நல்வினை தீவினை என்று இரு வகையால் சொல்லப்பட்ட கருவில் சார்தலும் 30-060
கருவில் பட்ட பொழுதினுள் தோற்றி வினைப்பயன் விளையுங்காலை உயிர்கட்கு மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும் "தீவினை என்பது யாது?" என வினவின் ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய் கொலையே களவே காமத் தீவிழைவு உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் பொய்யே குறளை கடுஞ்சொல் பயன் இல் சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும் வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று 30-070
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப் பத்து வகையால் பயன் தெரி புலவர் இத் திறம் படரார் படர்குவர் ஆயின் விலங்கும் பேயும் நரகரும் ஆகி கலங்கிய உள்ளக் கவலையின் தோன்றுவர் "நல்வினை என்பது யாது?" என வினவின் சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச் சீலம் தாங்கித் தானம் தலைநின்று மேல் என வகுத்த ஒருமூன்று திறத்துத் தேவரும் மக்களும் பிரமரும் ஆகி 30-080
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின் புரிவு இன்றாகிப் புலன் கொளாததுவே அருஉரு என்பது அவ் உணர்வு சார்ந்த உயிரும் உடம்பும் ஆகும் என்ப வாயில் ஆறும் ஆயுங்காலை உள்ளம் உறுவிக்க உறும் இடன் ஆகும் ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும் வேறு புலன்களை மேவுதல் என்ப நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல் 30-090
வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை பற்று எனப்படுவது பசைஇய அறிவே பவம் எனப்படுவது கரும ஈட்டம் தரும் முறை இது எனத் தாம்தாம் சார்தல் பிறப்பு எனப்படுவது அக் கருமப் பெற்றியின் உறப் புணர் உள்ளம் சார்பொடு கதிகளில் காரண காரிய உருக்களில் தோன்றல் பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய் இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல் மூப்பு என மொழிவது அந்தத்து அளவும் 30-100
தாக்கும் நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல் சாக்காடு என்பது அருஉருத் தன்மை யாக்கை வீழ் கதிரென மறைந்திடுதல் பேதைமை சார்வா செய்கை ஆகும் செய்கை சார்வா உணர்ச்சி ஆகும் உணர்ச்சி சார்வா அரூரு ஆகும் அருஉருச் சார்வா வாயில் ஆகும் வாயில் சார்வா ஊறு ஆகும்மே ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும் நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும் 30-110
வேட்கை சார்ந்து பற்று ஆகும்மே பற்றின் தோன்றும் கருமத் தொகுதி கருமத் தொகுதி காரணமாக வருமே ஏனை வழிமுறைத் தோற்றம் தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு அவலம் அரற்றுக் கவலை கையாறு எனத் தவல் இல் துன்பம் தலைவரும் என்ப ஊழின் மண்டிலமாச் சூழும் இந் நுகர்ச்சி பேதைமை மீள செய்கை மீளும் செய்கை மீள உணர்ச்சி மீளும் 30-120
உணர்ச்சி மீள அருஉரு மீளும் அருஉரு மீள வாயில் மீளும் வாயில் மீள ஊறு மீளும் ஊறு மீள நுகர்ச்சி மீளும் நுகர்ச்சி மீள வேட்கை மீளும் வேட்கை மீள பற்று மீளும் பற்று மீள கருமத் தொகுதி மீளும் கருமத் தொகுதி மீளத் தோற்றம் மீளும் தோற்றம் மீளப் பிறப்பு மீளும் பிறப்பு பிணி மூப்புச் 30-130
சாக்காடு அவலம் அரற்றுக் கவலை கையாறு என்று இக் கடை இல் துன்பம் எல்லாம் மீளும் இவ் வகையால் மீட்சி ஆதிக் கண்டம் ஆகும் என்ப பேதைமை செய்கை என்று இவை இரண்டும் காரண வகைய ஆதலானே இரண்டாம் கண்டம் ஆகும் என்ப உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே நுகர்ச்சி என்று நோக்கப்படுவன முன்னவற்று இயல்பான் துன்னிய ஆதலின் 30-140
மூன்றாம் கண்டம் வேட்கை பற்று கரும ஈட்டம் எனக் கட்டுரைப்பவை மற்று அப் பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள் குற்றமும் வினையும் ஆகலானே நான்காம் கண்டம் பிறப்பே பிணியே மூப்பே சாவு என மொழிந்திடும் துன்பம் என இவை பிறப்பில் உழக்கு பயன் ஆதலின் பிறப்பின் முதல் உணர்வு ஆதிச் சந்தி நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம் புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி 30-150
கன்மக் கூட்டத்தொடு வரு பிறப்பிடை முன்னிச் செல்வது மூன்றாம் சந்தி மூன்று வகைப் பிறப்பும் மொழியுங்காலை ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே தோன்றல் வீடு எனத் துணிந்து தோன்றியும் உணர்வு உள் அடங்க உருவாய்த் தோன்றியும் உணர்வும் உருவும் உடங்கத் தோன்றிப் புணர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும் காலம் மூன்றும் கருதுங்காலை இறந்த காலம் என்னல் வேண்டும் 30-160
மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை நிகழ்ந்த காலம் என நேரப்படுமே உணர்வே அருஉரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் என்று இவை சொல்லுங்காலை எதிர்காலம் என இசைக்கப்படுமே பிறப்பே பிணியே மூப்பே சாவே அவலம் அரற்று கவலை கையாறுகள் குலவிய குற்றம் எனக் கூறப்படுமே அவாவே பற்றே பேதைமை என்று இவை 30-170
புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும் உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே நுகர்ச்சி பிறப்பு மூப்புப் பிணி சாவு இவை நிகழ்ச்சிப் பயன் ஆங்கே நேருங்காலை குற்றமும் வினையும் பயனும் துன்பம் பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா எப்பொருளுக்கும் ஆன்மா இலை என இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம் உணர்வே அருஉரு வாயில் ஊறே நுகர்வே பிறப்பே பிணி மூப்புச் சாவே 30-180
அவலம் அரற்றுக் கவலை கையாறு என நுவலப் படுவன நோய் ஆகும்மே அந் நோய் தனக்குப் பேதைமை செய்கை அவாவே பற்றுக் கரும ஈட்டம் இவை காரணம் ஆகும் துன்பம் தோற்றம் பற்றே காரணம் இன்பம் வீடே பற்றிலி காரணம் ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவது உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன 30-190
அறுவகை வழக்கும் மறு இன்று கிளப்பின் தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த உண்மை வழக்கும் இன்மை வழக்கும் உள்ளது சார்ந்த உண்மை வழக்கும் இல்லது சார்ந்த இன்மை வழக்கும் உள்ளது சார்ந்த இன்மை வழக்கும் இல்லது சார்ந்த உண்மை வழக்கும் எனச் சொல்லிய தொகைத் திறம் உடம்பு நீர் நாடு தொடர்ச்சி வித்து முளை தாள் என்று இந் 30-200
நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல் இயல்பு மிகுத்துரை ஈறுடைத்து என்றும் தோன்றிற்று என்றும் மூத்தது என்றும் மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்துரைத்தல் இயைந்துரை என்பது எழுத்துப் பல கூடச் சொல் எனத் தோற்றும் பல நாள் கூடிய எல்லையைத் திங்கள் என்று வழங்குதல் உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயற்கோடு உள்ளது சார்ந்த உள் வழக்காகும் சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சி 30-210
உள்ளது சார்ந்த இல் வழக்காகும் சித்தம் உற்பவித்தது மின்போல் என்கை இல்லது சார்ந்த உண்மை வழக்காகும் காரணம் இன்றிக் காரியம் நேர்தல் இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும் முயற்கோடு இன்மையின் தோற்றமும் இல் எனல் நான்கு நயம் எனத் தோன்றப்படுவன ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை இயல்பு என்க காரண காரியம் ஆகிய பொருள்களை ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம் 30-220
வீற்று வீற்றாக வேதனை கொள்வது வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும் பொன்றக் கெடா அப் பொருள் வழிப்பொருள்களுக்கு ஒன்றிய காரணம் உதவு காரியத்தைத் தருதற்கு உள்ளம் தான் இலை என்றல் புரிவின்மை நயம் எனப் புகறல் வேண்டும் நெல் வித்து அகத்துள் நெல் முளை தோற்றும் எனல் நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள்பயன் தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும் அப் பொருளிடைப் பற்று ஆகாது என்றும் 30-230
செய்வானொடு கோட்பாடு இலை என்றும் எய்து காரணத்து ஆம் காரியம் என்றும் அதுவும் அன்று அது அலாததும் அன்று என்றும் விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும் வினா விடை நான்கு உள துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல் வினாவின் விடுத்தல் வாய் வாளாமை எனத் "தோன்றியது கெடுமோ? கெடாதோ?" என்றால் "கேடு உண்டு" என்றல் துணிந்து சொலல் ஆகும் "செத்தான் பிறப்பானோ? பிறவானோ?" 30-240
என்று செப்பின் "பற்று இறந்தானோ? அல் மகனோ?" எனல் மிகக் கூறிட்டு மொழிதல் என விளம்புவர் வினாவின் விடுத்தல் "முட்டை முந்திற்றோ பனை முந்திற்றோ? எனக் கட்டுரை செய்" என்றால் "எம் முட்டைக்கு எப் பனை" என்றல் வாய் வாளாமை "ஆகாயப் பூப் பழைதோ, புதிதோ?" என்று புகல்வான் உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல் கட்டும் வீடும் அதன் காரணத்தது 30-250
ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம் காமம் வெகுளி மயக்கம் காரணம் அநித்தம் துக்கம் அநான்மா அசுசி என தனித்துப் பார்த்துப் பற்று அறுத்திடுதல் மைத்திரி கருணா முதிதை என்று அறிந்து திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக! சுருதி சிந்தனா பாவனா தரிசனை கருதி உய்த்து மயக்கம் கடிக! இந் நால் வகையான் மனத்திருள் நீங்கு!' என்று 30-260
முன் பின் மலையா மங்கல மொழியின் ஞான தீபம் நன்கனம் காட்டத் தவத் திறம் பூண்டு தருமம் கேட்டுப் 'பவத் திறம் அறுக!' எனப் பாவை நோற்றனள் என் 30-264


மணிமேகலை முற்றிற்று.

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.