சாத்தூர் ஜெயராம ரெட்டியார் காமராசர் வீட்டிற்கு வந்தார் . அப்பழுக்கில்லா அரசியல்வாதி . காமராசரை இதயத்தில் குடிவைத்திருக்கும் இனிய நண்பர் .
இருவரும் அமர்ந்து இரண்டு மணி நேரம் தமிழ்நாட்டு அரசியல் போக்கு , மத்திய அரசின் நிர்வாகம் , காங்கிரஸ் கட்சியின் நிலவரம் , மக்களின் மனநிலை இவைபற்றி அலசி ஆராய்ந்தனர் . இரவு மணி பத்தரை .
பெருந்தலைவரிடம் விடை பெற்றுக்கொண்டு ரெட்டியார் வெளியேறப் போனார் . “ இனிமேல் எங்கே போய் என்னத்தைச் சாப்பிடப்போகிறீர் ? இங்கு சாப்பிட்டு விட்டுப் பிறகு புறப்படும் .” என்றார் தலைவர் .
“ வைரவா , ஐயாவிற்கு இருக்கை எடுத்துப்போடு .” என குரல் கொடுத்தார் .
ரெட்டியார் உள்ளே போய் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு காத்திருந்த காரில் கிளம்பிப்போனார் .
ஏற்கனவே சாப்பிட்டிருந்த தலைவர் தூங்குவதற்கு அறைக்குள் நுழைந்தார் . கடகடவென்று சப்தம் . வைரவன் இருக்கும்இடத்திற்குப்போனார் . அவன் பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்தான் .
சாப்பிட்டு விட்டாயா ?
பதில் இல்லை .
தனக்கிருந்த சாப்பாட்டை ஜெயராம ரெட்டியாருக்குக் கொடுத்துவிட்டு பட்டினியோடு படுக்கப்போயிருக்கும் வைரவனை உற்றுப் பார்த்தார் . வேதனையாக இருந்தது . கையில் பத்து ரூபாயைக்கொடுத்து எங்காவது போய் எதையாவது வாங்கிச் சாப்பிட்டுவிட்டு முதலில் வா என்றார் அவன் தயங்கினான் . கட்டாயப்படுத்திப் போகச் சென்னார் . கடைகள் அடைக்கபட்டிருந்ததால் இரண்டு வாழைப் பழங்கள் வாங்கிச் சாப்பிட்டு விட்டு மீதியைத்தலைவரிடம் கொடுத்தான் .
தலைவர் இதையறிந்து வருந்தினார் . “ வைரவா , நீ எத்தனை நாள் இதைப் போல் வந்தவருக்குச் சாப்பாடு போட்டுவிட்டுப் பட்டினாயகப் படுத்தாயோ ? உன்னை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன் , இனிமேல் என்னைப் பார்க்க வருகின்ற எவரையும் இரவு இங்கே சாப்பிடும்படி சொல்ல மாட்டேன் . இனி இப்படிப்பட்ட பட்டினி உனக்கு வரக்கூடாது .” என்று உருக்கமாகக் கூறினார் பெருந்தலைவர் . இந்தச் சம்பவத்திற்குப் பிறகு முன்னறிவிப்பின்றி வருகின்ற எவருக்கும் காமராசர் இல்லத்தில் இரவு உணவு தரப்பட்டதில்லை .
இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம்செய்த தலைவர் இரவு வந்தார் . இரவு பதினொரு மணி . நல்ல களைப்பு , சுற்றுலா மாளிகையில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று படுக்கத் தயாரானார் .
திடீரென்று மின்தடை ஏற்பட்டு விட்டது . ஒரே இருட்டு , புழுக்கம் , ஜெனரேட்டர் கொண்டுவர தாசில்தார் ஏற்பாடு செய்வது கண்டு அவரைத் தடுத்து நிறுத்தினார் .
சுற்றுலா மாளிகைக்கு எதிரிலுள்ள இரு வேப்ப மரங்களுக்கிடையில் அங்கு கிடந்த ஒரு நார்க் கட்டிலைததூக்கிவந்து போடச்சொன்னார் . ஜிலு ஜிலு காற்று . ஒரு தலையணை மட்டும் வைத்துக் கொண்டு தூங்கத் தொடங்கினார் . திடீரென்று எழுந்து உட்கார்ந்தார் . பக்கத்து அறையில் தங்கியுள்ள டி . எஸ் . பி - யை அழைத்து வரச்சொன்னார் . கூப்பிடப்போன ஆளை நிறுத்தி , “ டி . எஸ் . பி . உடை மாற்றியிருப்பார் . உத்தியோகத்திற்குரிய உடை அணிய வேண்டாம் . இப்போது அணிந்திருக்கும் இரவு உடையில் வந்தால்போதும் , வீண் சிரமம் எதற்கு ? உடனே அழைத்து வா .” என்றார் .
டி . எஸ் . பி . கூச்சத்துடன் வந்தார் . இரண்டு நிமிடங்களில் சொல்ல வேண்டியதைச்சொல்லி விட்டு அவரை அனுப்பி வைத்தார் . முதலமைச்சராக இருந்த நம் தலைவர் .
கட்டிலில் படுத்தார் . கண்ணை மூடினார் . டக் , டக் , என்று சத்தம் , தலையைத் தூக்கிப் பார்த்தார் . இரண்டு போலீஸ்காரர்கள் கையில் துப்பாக்கியுடன் இங்குமங்குமாக காவலுக்கு நடந்து கொண்டிருந்தனர் . தலைவர் அவர்களை அழைத்து , எனக்குக் காவல் இருந்தது போதும் உங்களுக்குக் களைப்பு இருக்குமல்லவா போய் இந்த உடுப்புக்களை மாற்றிவிட்டு ஓர் இடத்தில் நிம்மதியாகப் படுத்துத் தூங்குங்கள் என்றார் . போலீஸ்காரர்கள்இருவரும் போன பிறகு தூங்கப்போனார் .
தேர்தல் நேரம் கோவில்பட்டியிலிருந்து திருநெல்வேலி வந்து கொண்டிருந்த பெருந்தலைவர் காமராசரின் கார் தாழையூத்துப்பக்கம் ஒரு பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது .
காமராசரையும் டிரைவர் நாயரையும் செல்லப் பாண்டியன் அவர்கள் விரைந்து எடுத்துக் கொண்டுபோய் மருத்துவனையில் சேர்த்தார் .
கட்டுக்களோடு படுக்கையில் கிடந்த தலைவர் டிரைவர் நாயரை எங்கே என்று கேட்டார் . அடுத்துள்ள ஓர் அறையில் வைத்திருப்பதாகச் செல்லப் பாண்டியன் சொன்னார் .
காமராசர் , “ டிரைவரை அழைத்துவந்து என் பக்கத்துக் கட்டிலில் படுக்கவையுங்கள் , எல்லா டாக்டர்களும் என்னைக் கவனித்துக் கொண்டு அவனைச் சரியாகக் கவனிக்காமல் விட்டாலும் விடலாம் . என்மீது பற்றுகொண்ட சிலர் என்னை இப்படிக் கவிழ்த்து விட்டானே என்ற கோபத்தில் அவனைத் தாக்கினாலும் தாக்கலாம் . நாயர் நல்லவன் . இவ்வளவு நாளும் என்னைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டான் . எதிரே வருகின்ற வண்டிக்காரன் தவறாலதான் இந்த விபத்து நேர்ந்தது . அவனை ஒன்றும் சொல்லாதீர்கள் ” என்று கேட்டுக்கொண்டார் .
டிரைவர் நாயரைப் பக்கத்துக் கட்டிலில் படுக்க வைத்த பிறகுதான் அவர் முகத்தில் அமைதி ஏற்பட்டது .
|