மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) மணியில் திகழ்தரும் நூல்போல் - கோக்கப்பட்ட பளிக்கு மணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல் போல; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு - இம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு குறிப்பு உண்டு.(அணி - புணர்ச்சியான் ஆய அழகு. அதனகத்துக் கிடத்தலாவது, அதனோடு உடன் நிகழ்தற்பாலதன்றி வைத்து உடனிகழ்தல். 'அதனை யான்அறிகின்றிலேன், நீ அறிந்து கூறல் வேண்டும்', என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
கோவைப்பட்ட நீலமணியின்கண்ணே தோற்றுகின்ற நூல்போல, இம்மடந்தை அழகினுள்ளே இவள் மறைக்கவும் தோற்றுகின்றதொரு துன்பம் உணடு. அழகு - புணர்ச்சியால் வந்த அழகுபோலுமென்னும் குறிப்பு.
தேவநேயப் பாவாணர் உரை:
(இதுவுமது) மணியில் திகழ்தரும்நூல்போல்-கோக்கப் பட்ட பளிக்கு மணியகத்துக் கிடந்து புறத்து விளங்கித் தோன்றும் நூல்போல ; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு - இப்பெண்ணின் அழககத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்ற தொரு குறிப்பு முண்டு . அணி கலவியாலான அழகு . அதனகத்துக் கிடத்தலாவது அதனுடன் தோன்றுதல்.
கலைஞர் உரை:
கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.
சாலமன் பாப்பையா உரை:
மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.
Translation
As through the crystal beads is seen the thread on which they 're strung
So in her beauty gleams some thought cannot find a tongue.
Explanation
There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.