இன்றைய தமிழ் சினிமா உலகில் கிராமத்தான் என்பதன் குறியீடாக மாறிபோய் இருக்கிறது மஞ்சப்பை. சினிமாக்காரர்கள் மனதில் இவ்வளவு எளப்பமாய் போனதற்கு மஞ்சளின் பெருமையை பற்றிய அவர்களின் அறியாமையே காரணம். பல்வேறு வண்ணங்கள் பற்றி நாம் அறிந்திருந்தாலும் மஞ்சள் நிறம் மட்டும் மனதை கவர்வதற்கு சில காரணங்களை சொல்லிச் சென்றிருக்கிறார்கள் நமது முன்னோர்கள். மங்கல நிகழ்ச்சிகளில் முதலிடம் வகிக்கும் ஒரு பொருளாக மஞ்சள்கிழங்கு, நம் உணவுகளில் கிருமி நீக்கியாக பயன்படும் மஞ்சள் பொடி, சத்துக்கள் நிறைந்த பழவகைகளில் மஞ்சள் நிறமுள்ளவை மட்டும் சில குறிப்பிட்ட சத்துக்களை தனக்குள் கொண்டிருக்கும் இயற்கை நிலை என்று பலவகைகளில் மஞ்சள் நிறம் மனித வாழ்வில் நலமும் வளமும் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. அதுபோல் மஞ்சப்பைக்கும் சில சிறப்புகள் உண்டு. திருமண வீடுகளில் மணமக்களை வாழ்த்திச் செல்லும் சொந்தங்களுக்கு தரும் மஞ்சள் நிற தாம்பூலப்பை மணவீட்டாரின் நன்றியினை மௌனமாக வெளிப்படுத்தும் குறியீடாகவே மாறி விட்டிருக்கிறது. பட்டுப்புடவை விற்பனை செய்யும் ஜவுளி நிறுவனங்கள் பட்டுப்புடவைகளை மஞ்சப்பையில் வைத்துக் கொடுப்பதற்கு மங்கலகரம் என்பதையும் தாண்டி மற்றொரு காரணமும் உண்டு. மஞ்சப்பையில் வைத்துப் பாதுகாக்கபடும் பட்டுச்சேலையில் உள்ள சரிகைகள் நீண்ட நாள்கள் புதுமெருகு மாறாமல் பாதுகாக்கப்படும் என்பதுவே அது. மேலும் குளிர்பதனப்பெட்டியில் மஞ்சப்பைக்குள் வைத்து பாதுகாக்கப்படும் பழங்கள், காய்கறிகள் வழக்கத்தை விட கூடுதல் நாள்கள் நீர்த்துப் போகாமல் பாதுகாப்பாக இருக்குமாம். இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு சிறப்பும் உண்டு மஞ்சப்பைக்கு. இன்று நாகரிகம் என்ற பெயரில் பல்வேறு பயன்பாட்டுக்கும் மக்களால் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்குப் பின் தூக்கி எறியப்படுகிறது. அவ்வாறு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் மக்காமல் சுற்றுச்சூழலையும் மண்ணையும் கெடுக்கும். சமீபத்திய சென்னை வெள்ளத்தின் கடுமைக்கு இவ்வாறு தூக்கி எறியபடுகிற பிளாஸ்டிக் பைகள் வாருகால் என்னும் மழைநீர் வடிகால் ஓடைகளை அடைத்துக் கொண்டு நீர்ப்போக்கிற்கு பெரும் தடையை உண்டாக்கியது மிகமுக்கிய காரணங்களில் ஒன்று என்று சொல்லப்படுகிறது. ஆனால் இப்படிப்பட்ட ஆபத்து எதுவும் கொஞ்சமும் இல்லாதது இந்த மஞ்சப்பை. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட மஞ்சப்பைக்கு சினிமாக்காரர்கள் மூலம் ஏன் இப்படி ஒரு எளப்பமான எண்ணம் உருவாகியிருக்கிறது என்பது தான் புரியவில்லை.
|