இடம்: அரண்மனையில் மண மண்டபம் காலம்: நடுநிசி [அமைச்சர் படைவீரர் முதலியோர் அரசனை எதிர்பார்த்து நிற்க]
(நிலைமண்டில ஆசிரியப்பா] முதற்படைத் தலைவன்: அடிகள்பின் போயினர் யாவர்? அறிவீர் 2-ம் படை: நடரா சனைநீர் அறியீர் போலும்? முதற்படை: அறிவேன். ஆ!ஆ! அரிவையர் யாரே வெறிகொளார் காணில்! வீணில் வாணியைக் கெடுத்தான் கிழவன். 3-ம் படை: அடுத்ததம் மணமும்! தெரியீர் போலும்! 1-ம் படை: தெரியேன், செய்தியென்? 3-ம் படை: கோணிலா நாரணன் கொடுஞ்சிறை தவிர்த்தலும் வாணியின் மனப்படி மன்றல் நடத்தலும் இவ்வரம் இரண்டும் அம்மணி வேண்ட அளித்தனன் அனுமதி களிப்புடன் அரசன். 1-ம் படை: இருதிரை இட்டவா றிப்போ தறிந்தேன் ஒருதிரை வாணிக் கொருதிரை மணிக்கே. 3-ம் படை: எத்திரை தாய்க்கென் றியம்புதி கேட்போம். 1-ம் படை: இத்திரை தாய்க்காம். 3-ம் படை: சீ! சீ! அத்திரை. 2-ம் படை: எத்திரை ஆயினென்? ஏனிரை கின்றீர்? 1-ம் படை: இருதிரை வந்தவா றிதுவே ஆயினும் ஒருதிரைக் கொருதிரை எத்தனை தூரம்? 3-ம் படை: அதோ அவன் அறிகுவன். அறிந்திதோ வருவேன். [3-ம் படைஞன் மற்றோரிடம் போல] 1-ம் படை: ஐயோ! பொய்யறும் அன்னையும் மணிக்கும் பொய்யன் பலதே வனுக்குமோ பொருத்தம்? 2-ம் படை: வருத்தமேன் உனக்கு? மன்னன் திருவுளக் கருத்தனு சரித்துநாம் காட்டலே கடமை. [3ம் படைஞன் மீண்டும் வர] 3-ம் படை: (முதற்படை நோக்கி) இப்புறம் வருதி, செப்புவன் ரகசியம். சத்தியம் செய்தபின் சாற்றினன். நீயும் எத்திறத் தோர்க்கும் இயம்பல. பத்திரம்! அத்திரை மணத்திற் கன்றுமற் றப்புறம் நெருங்கிய சுருங்கையொன் றுளதாம். அவ்வழி செல்லில் வெகுதொலை செல்லுமாம். இப்போர் வெல்லும் வரையும் அவ்வழி மணந்தோர் இருவரும் எய்தி வாழ்ந் திருப்பராம் 1-ம் படை: சரி! சரி! பொருவரும் புத்திமான் குடிலன். எத்தனை விரைவினிற் சமைத்தான்! வெகுதிறம் உடையான் 3-ம் படை: இப்போ தன்றது; நகரா ரம்பம் எப்போ தப்போ தேவரும் துயரம் கருதிமுன் செய்தனன். 1-ம் படை: ஒருவரும் அறிந்திலம் [முருகன் வர] 3-ம் படை: யாரது? முருகனோ? நாரணன் எங்கே? முருகன்: நாரணன் அப்புறம் போயினன்; வருவன். 3-ம் படை: பிழைத்தீர் இம்முறை முருகன்: பிழைத்திலம் என்றும்! 3-ம் படை: அத்திரைச் செய்தி அறிவாய் வைத்ததார்? முருகன்: வைத்ததா ராயினென்? வெந்தது வீடு! [இருவரும் நகைக்க] 2-ம் படை: வாயினை மூடுமின். வந்தனன் மணமகன். முருகன்: ஈயோ வாயில் ஏறிட நாயே! 1ம் படை: அரசனும் முனிவரும் அதோ வருகின்றார்! [ஜீவகன், சுந்தர முனிவர், கருணாகரர், நிஷ்டாபரர், பலதேவன், நடராசன், நாராயணன் முதலியோர் வர] ஜீவகன்: இருமின் இருமின்! அமர்காள் யாரும்! [ஜீவகன், முனிவர் முதலியோர் தத்தம் இடமிருக்க] கொலுவோ கொல்லிது! மணவறை! இருமின் பலதேவ ரேநும் பிதாவிது காறும் வந்திலர் என்னை? பலதேவன்: மன்னவர் மன்ன! அந்தியிற் கண்டேன் அடியேன், அதன்பின் ஒருவரும் கண்டிலர், தனிபோ யினராம் ஜீவ: இருமிரும் நீரும், எங்கேனும்நம் காரிய மேயவர் கருத்தெப் பொழுதும் (நாராயணனை நோக்கி) பாரீர் அவர்படும் பாடு. நாராயணன்: பார்ப்பேன்! சத்தியம் சயிக்குமேற் சாற்றியபடியே! ஜீவ: இத்தகை உழைப்போர் எப்புவ னமுமிலை. எண்ணிநிச் சயித்த இத்தொழில் இனியாம் பண்ணற் கென்தடை? சுவாமி! அடிகள் தந்தனன் முகூர்த்தம் வந்ததோ? சுந்தர: வந்தது! [புருடோத்தமனும், குடிலனும், அருள்வரதன் முதலிய மெய்க்காப்பளருடன் கற்படை வழிவர] புருடோ: நின்மின்! நின்மின்! பாதகன் பத்திரம்! [கற்படையில் அருள்வரதனை நோக்கி] என்பின் இருவர் வருக. (தனதுள்) இதுவென்? இந்நிசி எத்தனை விளக்கு! ஏதோ மன்னவை போலும்! மந்திராலோசனை! இவர்சுந் தரரே! அவர்நட ராஜர்! இவர்களிங் குளரோ! எய்திய தெவ்வழி? இத்திரை எதற்கோ? அத்திரை எதற்கோ? இத்தனைக் கோலா கலமென் சபைக்கு? மாலையும் கோலமும் காணின் மணவறை போலாம். அறிந்தினிப் போவதே நன்மை. மந்திரம் ஆயின் மற்றதும் அறிவோம். இந்த நல்திரை நமக் கெத்தனை உதவி! [திரைக்குப் பின் மறைந்து நிற்க] ஜீவ: என்குலம் காக்க எனவருள் பழுத்துக் கங்கணம் கட்டிய கருணா நிதிகாள்! மனத்திறத் தாழ்ந்த மதிமந் திர்காள்! எனக்கென உயிர்வாழி என்படை வீரர்காள்! ஒருமொழி கூறிட அனுமதி தருமின். ஆடையின் சிறப்பெலாம் அணிவோர் சிறப்பே பாடையின் சிறப்பெலாம் பயில்வோர் சிறப்பே எள்ளரும் மதிகுலச் சிறப்பெலாம் எமர்காள்! கள்ளமின் நும்முனோர் காப்பின் சிறப்பே, ஆதலின் உமக்குப சாரம்யான் ஓதுதல், மெய்க்குயிர் கைக்குநா விளம்புதல் மானும். ஈண்டுகாத் திடுவல்யான் எனக்கடன் பூண்டதும் மதிகுல மருந்தாய் வாய்த்தஎன் சிறுமி விதைபடும் ஆலென விளங்கினள். அவளைக் காத்திடும் உபாயம் கண்டிட இச்சபை சேர்த்தனன் என்பது தெரிவீர் நீவிர். இன்று நாம் பட்டதோர் இழுக்கிவ் வைகறை பொன்றியோ வென்றோ போக்குவம் திண்ணம். ஒருகுலத் தொருவன் ஒருமரத் தோரிலை அப்படி அன்று நம் கற்பகச் சிறுகனி! தப்பிடின் மதிகுலப் பெயரே தவறும். அரியவிச் சந்தியைப் பெரிதும் கருதுமின். இருந்திடச் சிறியள். அபாயம்! தனியே பிரிந்திடப் பெரியள். பிழை!அஃ தன்றியும் குலமுடி வெண்ணிக் குலையுநம் உளத்திற் கிலையத னாலோர் இயல்சமா தானம் ஆதலில் அரியதற் காலத் தியல்பை யாதென நீவிர் ஆய்ந்தியான் இப்போ தோதிடும் உபாயத் தாலுறு நன்மையும் தீமையும் நன்றாய்த் தெரிந்து செப்புமின்! குடிலனை அறியார் யாரிக் கொற்றவை? 2-ம் படை: குடிலனை அறியுமே குவலயம் அனைத்தும். ஜீவ: அறிந்திடில் இறும்பூ தணையார் யாவர்? மதியுளார் யாரவன் மதியதி சயித்திடார்? நெஞ்சுளார் யாரவன் வன்திறற் கஞ்சார்? யார்வையார் அவனிடத் தாரா ஆர்வம்? உண்மைக் குறைவிடம்; திண்மைக் கணிகலம்! சத்திய வித்து; பத்தியும் மத்தன். ஆள்வினை தனக்காள்; கேள்விதன் கேள்வன், ஏன்மிக? நமர்காள்! இந்நடு நிசியிலும் யானறி யாதுழைக் கின்றவன் எனக்கா, நன்றே இங்கவன் இலாமையும் அன்றேல் தற்புகழ் கேட்க அற்பமும் இசையான். புரு: (தனதுள்) எத்தனி களங்கமில் சுத்தன்! கட்டம்! ஜீவ: பற்பல பாக்கியம் படைத்துளர் பாண்டுளோர் ஒப்பரும் அமைச்சனை இப்படை ஒருவரும் முன்னுமுளோர் பெற்றிலர்; பின்னுளார் பெறுவதும் ஐயமென் றுரைப்பேன், அன்னவன் புதல்வன் மெய்ம்மையும், வாரமும் வீரவா சாரமும் பத்திசேர் புத்தியும், யுத்திசேர் ஊக்கமும் உடையனாய் உடையவும் தற்பிர திமைபோல், இனியொரு தலைமுறை நனிசே வகஞ்செய இங்குவீற் றிருந்திலன் ஆயின், எமர்காள்! எங்குநீர் கண்டுளீர் இச்சிறு வயதிற் பலதே வனைப்போர் பலிதமாம் சிறுதரு? 2-ம் படை: இலையிலை எங்கும்! இவர்போல் யாவர்? ஜீவ: எனதர சுரிமையும் எனதர சியல்பும் தமதார் உயிர்போல் தாம்நினைந் திதுவரை எவ்வள வுழைத்துளார் இவ்விரு வருமெனச் செவ்விதின் எனைவிட நீவிரே தெரிவீர். இக்குலம் அவர்க்கு மிக்கதோர் கடன்பா டுடையதென் றொருவரும் அயிர்ப்புறார். அதனால் தடையற அக்கடன் தவிர்க்கவும் நம்முளம் கலக்கிடும் அபாயம் விலக்கவும் ஒருமணம் எண்ணினேன். பண்ணுவேன் இசைவேல் நுமக்கும் மணவினை முடிந்த மறுகணம் மணந்தோர் இருவரும் இவ்விடம் விடுத்துநம் முனிவரர் தாபதம் சென்று தங்குவர். இத்தகை ஆபதம் கருதியே அருட்கடல் அடிகள் தாமே வருந்திச் சமைத்துளார் அவ்விடம் போமா றொருசிறு புரையறு சுருங்கை. அவ்வுழி இருவரும் அடைந்தபின், நம்மைக் கவ்விய கௌவையும் கவலையும் விடுதலால், வஞ்சியன் ஒருவனோ, எஞ்சலில் உலகெலாம் சேரினும் நம்முன் தீச்செறி பஞ்சே. இதுவே என்னுளம், இதுவே நமது மதிகுலம் பிழைக்கும் மார்க்கமென் றடிகளும் அருளினர் ஆக்ஞை! ஆயினும் நுமது தெருளுறு சூழ்ச்சியும் தெரிந்திட விருப்பே. (நேரிசை ஆசிரியப்பா) உரையீர் சகடரே உமதபிப் பிராயம் சகடன்: அரசர் குலமன்று. ஆயினென்? சரி? சரி நாராயணன்: (தனதுள்) மருமகன் தப்பிய வருத்தம் போலும். ஜீவ: குலந்தேர் வதுநற் குணந்தேர் வதுவே பெயரால் என்னை? பேயனிவ் வஞ்சியான் பெயரால் அரசன்! செயலாற் புலையன்! 2-ம் படை: செய! செய! சரிசரி! தௌிந்தோம்! தௌிந்தோம்! நாரா: மனிதரால் ஆவதொன் றில்லை. மன்னவா! இனியெலாம் ஈசன திச்சை. சகடன்: சரி! சரி! யாவரும்: சம்மதம்! சம்மதம்! சர்வசம் மதமே! ஜீவ: வாராய்! நாரணா! ஆனால் அப்புறம் சென்று நம் மனோன்மணிச் செல்வியை யழைத்து மன்றல் திரைப்பின் வரச்செய் [நாராயணன் போக] யார்க்கும் சம்மதம் எனிலிச் சடங்கினை முடிப்போம் வம்மின்! இனியிது மங்கல மணவறை. கவலை அகற்றுமின் கட்டுடன்! பனிநீர்த் திவலை சிதறுமின்! சிரிமின்! களினின்! இன்று நாம் வென்றோம் என்றே எண்ணுமின்! இனிநாம் வெல்லற் கென் தடை? தினமணி வருமுன் ஏகுவம், அரைநா ழிகைத்தொழில்! ஆற்றுவம் அரும்போர் கூற்றுமே அஞ்ச நாளைநல் வேளை; நம்மணி பிறந்தநாள் ஓரோர் மங்கல விசேடம்! சகடன்: ஓ! ஓ! சரி! சரி! ஒவ்வொரு வருடமும் அதிசயம்! [நாராயணன் திரும்பிவர - மனோன்மணி, வாணி முதலிய தோழியருடன், திரைப்பின் நிற்க] நாரா: இட்டநின் கட்டளைப் படியே எய்தினர். ஜீவ: (நாராயணனை நோக்கி) மற்றவர் கவலை மாற்றிட ஒருபா சாற்றிசைத் திடுவளோ வாணி? சாற்றுதி! வாணி: (பாட) (கொச்சகக் கலிப்பா)
நீர்நிலையின் முதலையின்வாய் நிலைகுலைந்த கரிமுன் ஓர்முறையுன் பெயர்விளிக்க உதவினைவந் தெனவுரைப்பர்; ஆர்துயர அளக்கர் விழும் அறிவிலியான் அழைப்பதற்குன் பேர்தெரியேன் ஆயிடினும் பிறகிடல்நின் பெருந்தகையோ. பாரரசர் துகிலுரியப் பரிதவிக்கும் ஒருதெரிவை சீர்துவரை நகர்கருதிச் சிதைவொழிந்தாள் என் உரைப்பர்; ஆர்துணையும் அறவிருக்கும் அறிவிலில்யான் அழைப்பதற்குன் ஊர்தெரியேன் ஆயிடினும் உறுதிதரல் உனக்குரித்தே. மறலிவர மனம்பதறும் மார்க்கண்டன் உனதிலிங்கக் குறிதழுவி அழிவில்வரம் கொண்டான்முன் எனவுரைப்பர்; வெறிகழுமிப் பொறியழியும் வெம்பாவி விரவுதற்குன் நெறியறியேன் ஆயிடினும் நேர்நிற்றல் நினதருளே.
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) சுந்தர: எதுவோ இதனினும் ஏற்புடைப் பிரார்த்தனை? மந்திரம் தந்திரம் வழங்கும் நற்செபம் யாவையும் இதுவே பாவாய்! மனோன்மணி? வருதி இப்புறம் வாங்குதி மாலை. [மனோன்மணி மணமாலை கொண்டு பலதேவனெதிர் வர] ஒருதனி முதல்வன் உணர்வன் உன்னுளம் உன்னன் புண்மையேல் இன்னமும் காப்பன். [புருடோத்தமன் திரைவிட்டு வௌிவந்து நிற்க] 1-ம் படை: ஆற்றேன்! ஆற்றேன்! ஐய! இத் தோற்றம். 3-ம் படை: ஊற்றிருந் தொழுகி உள்வறந் ததுகண். 4-ம் படை: அமையா நோக்கமும் இமையா நாட்டமும் ஏங்கியம் உகமும் நீங்கிய இதழும் உயிரிலா நிலையும் உணர்விலா நடையும் பார்த்திடிற் சூத்திரப் பாவையே, பாவம்! [மனோன்மணி புருடோத்தமனைக் காண; உடன் அவன் நிற்குமிடம் விரைவில் நடக்க] யாவரும்: எங்கே போகிறாள்? இதுயார்? இதுயார்? புரு: இங்கோ நீயுளை! என்னுயிர் அமிர்தே! [புருடோத்தமன் தலைதாழ்க்க; மனோன்மணி மாலைசூட்டி] அவன் றோளோடு தளர்ந்து மூர்ச்சிக்க] சுந்தர: மங்கலம்! மங்கலம்! மங்கலம்! உமக்கே சோரன்! சோரன்! சேரன்! சேரன்! நிஷ்டாபரர்: கண்டேன்! கண்டேன்! கருணா கரரே! [கருணாகரரைத் தழுவ] யாவரும்: பற்றுமின்! பற்றுமின்! சுற்றுமின்! எற்றுமின்! பலதே: கொன்மின்! கொன்மின்! [யாவரும் புருடோத்தமனைச் சூழ; சுந்தரர் கூட்டம் விலக்க] சுந்தர: நின்மின்! நின்மின்! [அருள்வரதனும் மெய்க்காப்பளரும் வர] அருள்வர: அடையின் அடைவீர் யமபுரம். அகன்மின்! [புருடோத்தமனையும் மனோன்மணியையும் சூழ்ந்து நின்று காக்க] யாவரும்: படையுடன் பாதகன்! [யாவரும் பின்னிட விலங்குடன் குடிலனைக் காட்டி] அருள்: பாதகன் இங்குளான், ஜீவ: குடிலா உனக்குமிக் கெடுதியேன்? ஐயோ! அடிகாள்! இதுவென்! இதுவென் அநீதி அறியேன் இச்சூ தறியேன்! அறியேன்! சுந்தர: பொறு! பொறு! ஜீவக! அறிகுதும் விரைவில்! புரு: வஞ்சியான் வஞ்சியான்! மன்னவ! உன்சொல் அஞ்சினேன். சூதுன் அமைச்சன் செய்கை சுருங்கையின் தன்மை சொல்லியென் னையிங் கொருங்கே அழைத்தான் உன்னகர் கவர. உன்னர சுரிமையும் உன்னகர் நாடும் என்னிடம் இரந்தான். இச்சூ திதற்கா! ஓதிய சுருங்கையின் உண்மைகண் டிவன்தன் சூதும் துரோகமும் சொலியுனைத் தெருட்ட எண்ணியான் வந்துழி இவ்வொளி விளக்கும் பண்ணியல் பாட்டும் பழையபுண் ணியமும் தூண்டிட ஈண்டுமற் றடையவும் யாண்டும் எனதுயிர் அவாவிய இவ்வரு மருந்தை நனவினிற் காணவும் நண்ணவும் பெற்றேன். பிரிகிலம் இனிமேல், உரியநின் உரிமை யாதே ஆயினும் ஆகுக. ஈதோ! மீள்குவன் விடைகொடு. நாளையும் வேட்பையேற் காண்போம் ஞாட்பிடை நட்பே! ஜீவ: உண்மையோ? குடில! உரையாய்!... [குடிலன் முகங்கவிழ்ந்து நிற்க] நாரா: இதுவுநின் உண்மையோ! மௌனமேன்? யாவரும்: ஓகோ! பாவி! நாரா: படபடத் திடுநின் பாழ்வாய் திறவாய்! சுந்தர: விடு! விடு! விசாரணைக் கிதுவன்றமையம்! நன்மையே யாவும் நன்மையாய் முடியின், வாராய் ஜீவக! பாராய் உன்மகள் தாராத் தன்னிரு காதோட் சூட்டி எண்படு மார்பிடைக் கண்படு நிலைமை. இருமனம் ஏனினி! என்றுமிப் படியே மருகனு மகளும் வாழ்க! வாழ்த் துதியே. ஜீவ: கண்மணீ! அதற்குட் கண்வள்ர்ந் தனையோ! உன்னையும் மறந்துறங் குதியேல் இனிமேல் என்னையுங் கெண்ணுவை! இறும்பூ திருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்தமை! [மனோன்மணி திடுக்கிட்டு விழிக்க] வெருவலை! மணியே! பிரியீர் இனியே. வாழ்த்து - மருட்பா பள்ள உவர்க்கடலிற் பாய்ந்தோடும் வெள்ளமென உள்ளம் உவந்தோடி ஒன்றாய் - விள்ளா மணியின தொளியும் மலரது மணமும் அணிபெறு மொழியின் அருத்தமும் போல, இந்நிசி யாகவெஞ் ஞான்றும் மன்னிய அன்புடன் வாழ்மதி சிறந்தே! [யாவரும் வாழ்த்த]
ஐந்தாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று.
கலித்துறை
சிறிதா யினும்பற் றிலாதுகை யற்ற திருமகடன் குறியாந் தலைவன் குடிலன்பின் எய்திய கொள்கை கண்டீர் அறிவாம் எனுநம் அகங்காரம் ஆறும் அவத்தையினிற் செறிவா யிருக்குந் திருக்கு வௌிப்படும் சீரிதுவே.
|