LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மனோன்மணீயம்

முதல் அங்கம்: நான்காம் களம்

     இடம்: கன்னி மாடம்
    காலம்: மாலை
    [மனோன்மணி சயனித்திருக்க, ஜீவகன்,
    வாணி, செவிலி சுற்றி நிற்க]

(நேரிசை ஆசிரியப்பா)
ஜீவகன்:    உன்னன் பிதுவோ? என்னுயி ரமிர்தே!
உனக்குறு துயரம் எனக்குரை யாததென்?
விரும்பிய தென்னென் றுரைக்கில் விசும்பில்
அரும்பிய அம்புலி யாயினுங் கொணர்வன்;
வருத்துவ தென்னென வழக்கின் மாய்ப்பன்
உறுத்துங் கூற்றுவ நாயினும் ஒறுத்தே
தாய்க்கு மொழித்த சூலோ? தையால்!
வாய்க்கு மொளித்த உணவோ? மங்காய்!
ஏதா யினுமெனக் கோதா துளதோ?
பளிங்கும் பழித்த நெஞ்சாய்! உனக்குங்

களங்கம் வந்த காரண மெதுவோ?
பஞ்ச வனக்கிளி செஞ்சொல் மிழற்றி
இசையது விரித்தோர் பிசித மரமேல்
இருந்து பாடு மெல்லை, ஓர் வானவன்
திருந்திய இன்னிசை யமுதிற் செப்பிய

போயது கண்டு, சேயதோர் போந்தையில்
தனியே பறந்துபோய்த் தங்கி, அங்கவன்
பாடிய இசையே கூவிட உன்னி
நாடி நாடிப் பாடியும் வராது
வாடி வாயது மூடி, மௌனமாய்

வருந்தி யிருந்ததாய்க் கண்ட கனாவும்
நேற்றன் றோவெனக் கியம்பினை! நெஞ்சில்
தோற்றிய தெல்லாம் இங்ஙனஞ் சொல்லும்
பேதாய்! இன்றெனக் கென்னோ
ஓதா யுன்றன் உளமுறு துயரே!
செவிலி:    உன்பிதா உலகாள் வேந்தன் அன்பாய்ச்
சொல்லா யென்னில் துப்பிதழ் துடித்துச்
சொல்ல உன்னியுஞ் சொல்லா தடக்கில்
யாம்படுந் துயரம் அறிந் துங்,
காம்படு தோளீ! கருதாய் போன்மே.
ஜீவ:     ஐயோ! இதற்கென் செய்வேன்? ஆ! ஆ!
பொய்யோ பண்ணிய புண்ணிய மனைத்தும்?
பிள்ளை யில்லாச் செல்வங் கள்ளியிற்
சோறே போலப் பேரே யன்றி
வேறே யென்பயன் விளைக்கு மென்றுனி

நெடுநாள் நைந்து நொந்து கெடுவேன்!
பட்டபா டெல்லாங் கெட்டுப் பரிதி
வந்துழி யகலும் பனியெனச் சுந்தர
முனிவன் முயன்ற வேள்வியாற் பிள்ளைக்
கனியென வுனையான் கண்டநாள் தொட்டு

நின்முக நோக்கியும் நின்சொற் கேட்டும்
என்மிகை நீக்கி இன்பமெய்தி,
உன்மன மகிழ்ச்சிக் குதவுவ உஞற்ற
உயிர்தரித் திருந்தேன்; செயிர்தீ ரறமும்
வாய்மையும் மாறா நேசமுந் தூய்மையுந்

தங்கிய உன்னுளம் என்னுளந் தன்னுடன்
எங்குங் கலந்த இயல்பா லன்றோ
மறந்தே னுன்தாய் இறந்த பிரிவும்!
உன்னை யன்றி யென்னுயிர்க் குலகில்,
எதுவோ வுறுதி யியம்பாய்?

மதிகுலம் விளங்க வருமனோன் மணியே
மனோன்:    (கண்ணீர் தளும்பி)
> எந்தையே! எனதன் பினுக்கோ ரிழுக்கு
வந்த தன்று; மேல் வருவது மிலை; இலை;
உரைக்கற் பாற்றதொன் றில்லை;
உரைப்பதெப் படியான் உணரா தொழியிலே?
ஜீவ:     குழந்தாய்! என்குலக் கொழுந்தே! அழாய்நீ
அழுவையே லாற்றேன்; நீயழல் இதுவரை
கண்டது மிலை; யான் கேட்டது மிலையே;
பெண்களின் பேதமை யென்னே! தங்களைப்
பெற்றா ருற்றார் களுக்குந் தமக்கும்,
விழுமம் விளைத்துத் தாமே யழுவர்.

(வாணியை நோக்கி)
என்னே யவர்தம் ஏழைமை! மின்னேய்!
மருங்குல் வாணீ! வாராய் இப்புறம்
அருங்கலை யாய்ந்தநின் தந்தை சொன்மதியும்,
உன்புத் தியுமுகுத் திழல்வதென் வம்பில்?

நலமே சிறந்த குலமே பிறந்த
பலதே வனாமொரு பாக்கிய சிலாக்கியன்
தன்னை நீ விடுத்துப் பின்னையோர் பித்தனை
நச்சிய தென்னை? சீச்சீ!
நகை யாகும்நீ செயும் வகையே.
வாணி:     அகலிடந் தனிபுரந் தாளும் வேந்தே
நிகழுமென் சிறிய நினைவெலாம் விரிந்து
விநயமாய் நின்பால் விளம்ப எனது
நாணம் நாவெழா தடக்கு மாயினும்
பேணி யொருமொழி பேசுவன்,
நேசமில் வதுவை நாசகா ரணமே.
ஜீவ:     புதுமைநீ புகன்றாய்! வதுவைமங் கையர்க்குப்
பெற்றா ராற்றுவர்! ஆற்றிய வழியே
தையலார் மையலாய் நேயம் பூண்டு
வாழ்வது கடமை; அதனில்
தாழ்வது தகுதியோ தருமமோ சாற்றே.
வாணி:     கற்பனைக் கெதிராய் அற்பமும் மொழியேன்;
ஆயினும் ஐயமொன் றுண்டு; நேயமும்
ஆக்கப் படும்பொரு ளாகுமோ? நோக்கில்
துன்பே நிறையும் மன்பே ருலகாம்

எரியுங் கானல் விரியும் பாலையில்
திரியும் மனிதர் நெஞ்சஞ் சிறிது
தங்கி அங்கவர் அங்கங் குளிரத்
தாருவாய்த் தழைத்தும், ஓயாத் தொழிலில்
நேருந் தாகம் நீக்குவான் நிமல

ஊற்றா யிருந்தவ ருள்ளம் ஆற்றியும்
ஆறலை கள்வர் அறுபகை மீறில்
உறுதுணை யாயவர் நெறிமுறை காத்தும்,
முயற்சியாம் வழியில் அயர்ச்சி நேரிடில்
ஊன்றுகோ லாயவர் ஊக்க முயர்த்தியும்
இவ்விதம் யாரையுஞ் செவ்விதிற் படுத்தி,
இகத்துள சுகத்திற்கு அளவுகோ லாகி,
பரத்துள சுகத்தை வரித்தசித் திரமாய்,
இல்லற மென்பதன் நல்லுயி ரேயாய்,
நின்ற காதலின் நிலைமை, நினையில்,

இரும்பும் காந்தமும் பொருந்துந் தன்மைபோல்
இருவர் சிந்தையும் இயல்பா யுருகி
ஒன்றாந் தன்மை யன்றி, ஒருவரால்
ஆக்கப் படும்பொரு ளாமோ?
வீக்கிய சுழற்கால் வேந்தர் வேந்தே!
ஜீவ:     ஆமோ அன்றோ யாமஃ தறியேம்;
பிஞ்சிற் பழுத்த பேச்சொழி; மிஞ்சலை;
மங்கைய ரென்றுஞ் சுதந்தா பங்கர்;
பேதையர்; எளிதிற் பிறழ்ந்திடு முளத்தர்;
முதியவுன் தந்தை மதியிலுன் மதியோ

பெரிது?மற் றவர்தமில் உன்னயம் பேண
உரியவர் யாவர்? ஓதிய படியே
பலதே வனுக்கே உடன்படல் கடமை
வாணி:     இலையெனில்?
ஜீவ:     கன்னியா யிருப்பாய் என்றும்.
வாணி:     சம்மதம்.
ஜீவ:     கிணற்றிலோர் மதிகொடு சாடில்
எம்மதி கொண்டுநீ யெழுவாய்? பேதாய்!
கன்னியா யிருக்கில் உன்னழ கென்னாம்?
அரைக்கி லன்றோ சந்தனங் கமழும்?
வாணி:     விரைதரு மோசிறு கறையான் அரிக்கில்?
ஜீவ:     நானே பிடித்த முயற்கு மூன்றுகால்
ஆனால் எங்ஙனம்?
வாணி:     அரிவையர் பிழைப்பர்? (சேடி வர)
சேடி:     சுந்தர முனிவர் வந்தனர் வாயிலில்.
கால நோக்கினர்
ஜீவ:     சாலவு மினிதே;
ஆசனங் கொணர்தி.

(வாணியை நோக்கி)
யோசனை வேண்டாம்
எப்படி யாயினிஞ் சகடர் சொற்படி
நடத்து வம்மன்றல்; நன்குநீ யுணர்தி;
ஆயினுந் தந்தனம் ஐந்துநாள்;
ஆய்ந்தறி விப்பாய் வாய்ந்தவுன் கருத்தே.
வாணி:     இறக்கினும் இறைவ! அதற்கியா னிசையேன்;
பொறுத்தருள் யானிவண் புகன்ற
மறுத்துரை யனைத்தும் மாற்றல ரேறே.
[சுந்தர முனிவர் வர]
ஜீவ:     (முனிவரை தொழுது)
வணங்குது முன்றன் மணங்கமழ் சேவடி;
இருந்தரு ளுதியெம் இறைவ!
பரிந்துநீ வந்ததெம் பாக்கியப் பயனே.
சுந்தர:     (மனோன்மணியை நோக்கி)
தீதிலை யாதும்? க்ஷேமமே போலும்
ஏதோ மனோன்மணி, ஓதாய்
வேறுபா டாய்நீ விளங்குமாறே
மனோன்மணி:     (வணங்கி)
கருணையே யுருவாய் வருமுனீ சுரரே
எல்லா மறியும் உம்பாற்
சொல்ல வல்லதொன் றில்லை சுகமே.
செவிலி:    (மனோன்மணியை நோக்கி)
கரும்பே, யாங்கள் விரும்புங் கனியே!
முனிவர் பாலுநீ யொளிப்பையே னிலிங்கு
யார்வயி னுரைப்பாய்! ஐயோ! இதுவென்?
(முனிவரை நோக்கி)
ஆர்வமும் ஞானமும் அணிகல னாக்கொள்
தேசிக வடிவே! செப்புமா றறிகிலம்
மாசறு மனோன்மணி தன்னுரு மாறி
நேற்றிரா முதலாத் தோற்றுந் தோற்றம்
மண்ணாள் மேனியும்; உண்ணாள் அமுதும்;
நண்ணாள் ஊசலும்; எண்ணாள் பந்தும்;
முடியாள் குழலும்; படியாள் இசையும்;

தடவாள் யாழும்; நடவாள் பொழிலும்;
அணியாள் பணியும்; பணியாள் ஏவலும்;
மறந்தாள் கிளியும்; துறந்தாள் அனமும்;
தூங்குவல் போன்றே ஏங்குவள்; எளியை
நோக்குவள் போன்றே நோக்குவள் வௌியை;

கேட்டுங் கேட்கிலள்; பார்த்தும் பார்க்கிலள்;
மீட்டுங் கேட்பள்; மீட்டும் பார்ப்பள்;
தனியே யிருப்பள்; தனியே சிரிப்பள்!
விழிநீர் பொழிவள்; மெய்விதிர்த் தழுவள்;
இங்ஙன மிருக்கில் எங்ஙன மாமோ?

வாணியும் யானும் வருந்திக் கேட்டும்
பேணி யிதுவரை ஒருமொழி பேசிலள்
அரசன் கேட்டும் உரைத்திலள் அன்பாய்!
முனிவ! நீ வினவியும் மொழியா ளாயின்
எவருடன் இனிமேல் இசைப்பள்?
தவவுரு வாய்வரு தனிமுதற் சுடரே!
சுந்தர:     (ஜீவகனை நோக்கி)
குழவிப் பருவம் நழுவுங் காலை
களிமிகு கன்னிய ருளமும் வாக்கும்
புளியம் பழமுந் தோடும் போலாம்.
காதல் வெள்ளங் கதித்துப் பரந்து
மாதருள்ளம் வாக்கெனும் நீண்ட
இருகரை புரண்டு பெருமூச் செறியில்,
எண்ண மெங்ஙனம் நண்ணும் நாவினை?
தாதா அன்பு போதா தாகுங்
காலங் கன்னியர்க் குளதெனும் பெற்றி
சாலவும் மறந்தனை போலும்; தழைத்துப்
படர்கொடி பருவம் அணையில் நட்ட
இடமது துறந்துநல் லின்ப மெய்த
அருகுள தருவை யவாவும் அடையின்
முருகவிழ் முகையுஞ் சுவைதரு கனியும்
அகமகிழ்ந் தளித்து மிகவளர்ந் தோங்கும்;
இலையெனில் நலமிழந் தொல்கும்; அதனால்
நிசிதவே லரசா டவியில்
உசிதமா மொருதரு விரைந்துநீ யுணரே.
ஜீவ:     எங்குல குருவே! இயம்பிய தொவ்வும்
எங்குள திக்கொடிக் கிசைந்த
பொங்கெழில் பொலியும் புரையறு தருவே
சுந்தர:     உலகுள மற்றை யரசெலாம் நலமில்
கள்ளியுங் கருவேற் காடுமா யொழிய
சகமெலாந் தங்க நிழலது பரப்பித்
தொலைவிலாத் துன்னலர் வரினும் அவர்தலை
யிலையெனும் வீரமே இலையாய்த் தழைத்து
புகழ்மணங் கமழும் குணம்பல பூத்து
துனிவரு முயிர்க்குள துன்பந் துடைப்பான்
கனியுங் கருணையே கனியாக் காய்த்து;
தருமநா டென்னும் ஒருநா மங்கொள்
திருவாழ் கோடாஞ் சேரதே சத்துப்
புருடோத் தமனெனும் பொருவிலாப் புருடன்
நீங்கி லில்லை நினது
பூங்கொடி படரப் பாங்காந் தருவே.
ஜீவ:     நல்லது தேவரீர் சொல்லிய படியே,
இடுக்கண் களைந்த இறைவ!
நடத்துவன் யோசனை பண்ணை நன்றே
சுந்தர:     யோசனை வேண்டிய தன்று நடேசன்
என்றுள னொருவன்; ஏவில்;
சென்றவன் முடிப்பன் மன்றல் சிறக்கலே
ஜீவ:     கெடலறு சூழ்ச்சிக் குடிலனோ டுசாவி...
சுந்தர:     (எழுத்து)
அரகர! குருபர! கிருபா நிதியே!
காவாய் காவலன் ஈன்ற
பாவையை நீயே காவாய் பசுபதே!
[சுந்தர முனிவர் போக]
ஜீவ:     தொழுதோம்; தொழுதோம்; செவிலி யவ்வறைக்
கெழுதுங் கருவகள் கொணராய்
பழுதிலாக் குடிலற் குணர்த்துவம் பரிந்தே
[ஜீவகன் முதலியோர் போக]

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.