LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- மனோன்மணீயம்

நான்காம் அங்கம்: மூன்றாம் களம்

     இடம்: அரண்மனையில் ஒரு சார்.
    காலம்: நண்பகல்
    [ஜீவகன் தனியாய்ச் சோர்ந்து கிடக்க, சேவகர் வாயில் காக்க]

(நேரிடை ஆசிரியப்பா)
1-ம் சேவ:    செய்வதென்? செப்பீர். கைவதற் கியாமோ
ஆறுதல் கூறுவம்?
2-ம் சேவ:     
    கூறலும் வீணே!
    பெருத்த துயரிற் பேசும் தேற்றம்
    நெருப்பிடை நெய்சொரிந் தற்றே யென்பர்.
3-ம் சேவ:    பணிந்தியாம் அருகே நிற்போம் அன்றித்
துணிந்துமற் றதுதான் சொல்லுவர் யாவர்?
4-ம் சேவ:     நாரா யணரேல் தீரமாய் மொழிவர்.
3-ம் சேவ:    மெய்ம்மை! மெய்ம்மை! விளம்புவர் செம்மையாய்.
4-ம் சேவ:    எங்குமற் றவர்தாம் ஏகினர்? உணர்வைகொல்?
4-ம் சேவ:    மங்கைவாழ் மனைக்குநேர் ஓடுதல் கண்டேன்.
2-ம் சேவ:    சகிப்பளோ கேட்கில் தமியள்...
3-ம் சேவ:     
    ஆயினும்
    மகளால் அன்றி மன்னவன் தேறான்
    அதற்கே சென்றனர் போலும் ஆ! ஆ!
2-ம் சேவ:    நாரா யணரே நன்மதி உடையோர்.
4-ம் சேவ:     பாரீர்! இன்றவர் பண்ணிய சாகசம்,
இன்றியாம் பிழைத்ததிங் கிவரால் அன்றே..
[ஜீவகன் எழுந்து நடக்க]
3-ம் சேவ:    அரசன் அஃதோ எழுந்தான் காணீர்.
1-ம் சேவ:    உரைதரு கின்றான் யாதோ? ஒதுங்குமின்.
அடுத்திவண் நிற்பீர். அமைதி! அமைதி!
ஜீவகன்:     கெடுத்தேன் ஐயோ! கெடுத்தேன் நாணம்
விடுத்துயிர் இன்னும் வீணில் தரித்தேன்.
ஆ!ஆ! என்போல் யாருளர் வீணர்!
யாருளர் வீணர்! யாருளர்! யாருளர்!
பாண்டியன் தொல்குலம் பட்டபா டின்றுமற்
றிதுவோ! இதுவோ! மதிவரு குலமே!
மறுவறு நறவே! மாசறு மணியே!
அழியாப் பழிப்புனக் காக்கவோ உனது
வழியாய் உதித்தேன் மதியிலா யானும்!
அந்தோ! இந்து முதலா வந்த
முன்னோர் தம்முன் இன்னார்க் கிரிந்து
மாண்டவர் அன்றி மீண்டவர் உளரோ?
யாதினி செய்குவேன்! ஐயோ பொல்லாப்
பாதகன் மக்களுள் வெட்கமில் பதடி.
[பற்கடித்து]
போர்முகத் தோடிப் புறங்கொடுத் தேற்குக்
கார்முகம் என்செய! கடிவாள் என்செய!
[வில்லும் வாளும் எறிந்து]
ஓ!ஓ! இதனால் உண்டோர் பெரும்பயன்.
[மறுபடியும் வாளை எடுத்து நோக்கி நிற்க, சேவகர் ஓடிவர]
போ! போ! வௌியே போரிடைப் பொலியாது
வாளா இருந்த வாளுக்கீதோ
[நாராயாணன் வர]
எனதுயிர் ஈவேன் வினாவுவர் யாவர்?
நாரா:    மனோன்மணி தன்னை மறந்தாய் போலும்.
ஜீவ:     குழந்தாய்! குழந்தாய்!
[விழுந்து மூர்ச்சிக்க]
சேவகர்:     கொற்றவா! கொற்றவா!
நாரா:    பேசன்மின்!
[அரசனை மடியில் தாங்கி]
1-ம் சேவ:     பேசன்மின்!
நாரா:     வீசுமின்! அகன்மின்!
1-ம் சேவ:    வௌியே!
4-ம் சேவ:    பனிநீர்.
நாரா:     
    தௌிந்தே சிறிது
ஜீவ:     குழந்தாய்! குழந்தாய்! கொன்றேன் நின்சீர்!
[எழுந்து சோர்வாயிருக்க]
நாரா:    இழந்தால் இருப்பாளோ? என்செயத் துணிந்தாய்?
ஜீவ:    நஞ்சே எனக்கியான்! என்செய் வேனினி
இருதலைக் கொள்ளியில் எறும்பா னேனே!
செருமுகத்து இரிந்தென் மானம் செகுத்தும்
உயிரினை ஓம்பவோ உற்றது? ஓர்சிறு
மயிரினை இழக்கினும் மாயுமே கவரிமா.
பெருந்தகை பிரிந்தும்ஊன் சுமக்கும் பெற்றி
மருந்தாய் எனக்கே இருந்ததே நாரணா!
நாரா:    மன்னவ! யார்க்கும் தன்னுடல் மாய்த்தல்
அரிதோ? பெரிதாம் அஞர்வந் துற்றுழிக்
கருதிய தமரைக் காட்டிவிட் டோடி
ஒளிப்பதோ வீரமென் றுன்னினை?
ஜீவ:     
    ஓ!ஓ!
    போரிடை ஓடுவேன் வீரம் நாடுவனோ?
நாரா:    காலமும் களமும் கண்டு திரும்புதல்
சாலவும் வீரமே. தக்கவை உணரும்
தன்மையில் சௌரியம் மடமே. சூழ்ச்சிசேர்
வன்மையே வீரத் துயிராம் மன்னவ!
ஜீவ:     போதும்! போதும்நின் போலி நியாயம்!
சாதலுக் கஞ்சியோர் தனையளுக் காகச்
சூதக உடம்பைச் சுமக்கத் துணிந்தேன்
மன்னனும் அல்லன். வழுதியும் அல்லன்.
[சேவகரை நோக்கி]
என்னுடன் இருமின்! ஏன் நிற்கின்றீர்!
1-ம் சேவ:     இறைவ! ஈதென்னை!
ஜீவ:     இறைவனென் றென்னை
இசைப்பது வசையே! அஃதோ காண்மின்!
அசைந்த தொருநிழல், அஃதோ யானெனப்
பாருமின் பாண்டியன் போரிடைப் பட்டான்.
வாரும்! வாரும்! இருமின் யாவரும்.
நாரா:    வீணாய் வேற்றுரை விளம்பலை வேந்தே!
காணாய் அஃதோ! அவர்விடும் கண்ணீர்.
[சேவகர் அழுதலை நோக்கி]
ஜீவ:     வம்மின்! வம்மின்! எம்மனீர்! ஏனிது?
1-ம் சேவ:     பருதிகண் டன்றோ பங்கயம் அலரும்?
அரசநீ துயருறில் அழுங்கார் யாரே?
ஜீவ:    பிரியசே வகரே! பீடையேன்! துயரேன்!
இழந்தனம் முற்றும் ஒன்றோ எண்ணினீர்!
அழிந்ததோ நம்மரண்? ஒழிந்ததோ நம்படை?
மும்மையில் இம்மியும் உண்மையில் இழந்திலம்.
வெல்லுவம் இனியும் மீட்போம் நம்புகழ்
அல்லையேற் காண்மின்!
நாரா:    
    அதற்கென் ஐயம்?
    இறைவ! இப் போதுநீ இசைத்தவை சற்றும்
    குறைவிலை, தகுதியே, கூறிய படியே
    ஆவது காண்குவம், அழகார் அம்புயப்
    பூவின துயர்வு பொய்கையின் ஆழத்
    தளவா வதுபோல், உளமது கலங்கா
    ஊக்கம் ஒருவன தாக்கத் தளவெனத்
    துணிவார்க் குறுதுயர் தொடுமுன் எவ்வும்
    அணியார் பந்துறும் அடிபோல், முயற்சியில்
    இயக்கிய இன்பம் பயக்குமென் றிசைக்கும்
    சான்றோர் சொல்லும் சான்றே அன்றோ?
    ஆதலின் இறைவநீ ஓதிய படியே
    உள்ளத் தெழுச்சியும் உவகையோ டூக்கமும்
    தள்ளா முயற்சியும் தக்கோர் சார்பும்,
    [குடிலனும் பலதேவனும் வர]
    உண்டேல் ஊழையும் வெல்லுவம் மண்டமர்
    அடுவதோ அரிது வடிவேல் அரசே!
குடில:     இப்பரி சாயர சிருப்பது வியப்பே!
(தனக்குள்)
தக்கோர் என்றனன் சாற்றிய தென்னோ!
[அழுவதாக பாவித்து ஒருபுறம் ஒதுங்கி முகமறைந்து நிற்க]
ஜீவ:     ஏனிது குடில! ஏன்பல தேவ!
ஆனதென்? அமைச்ச! ஆ! ஆ!
குடில:     அடியேன்.
ஜீவ:     வருதி இப்புறம்! வருதியென் அருகே!
குடில:     (அழுது)
திருவடிச் சேவையில்
ஜீவ:     செய்தவை அறிவோம்.
குடில:     (ஏங்கி)
ஜனித்த நாள் முதலா...
ஜீவ:     உழைத்தனை! உண்மை!
குடில:    உடல்பொருள் ஆவி மூன்றையும் ஒருங்கே...
ஜீவ:    விடுத்தனை உண்மை, விளம்பலென்?
குடில:    உண்மையில்
பிசகிலன் என்பது...
ஜீவ:     நிசம்! நிசம்! அறிவோம்!
குடில:     (விம்மி)
எல்லாம் அறியும் ஈசனே சான்றெனக்கு
அல்லால் இல்லை...
ஜீவ:     அனைவரும் அறிவர்
குடில:     அருமை மகனிவன் ஒருவன்...
ஜீவ:     
    அறிகுவம்
குடில:     (பலதேவன் மார்பினைச் சுட்டிக் காட்டி)
பாராய் இறைவ!
ஜீவ:     (பலதேவனை நோக்கி)
வாராய்.
குடில:     
    இப்புண்
    ஆறுமா றென்னை? தேறுமா றென்னை?
    உன்னருள் அன்றிமற் றென்னுள தெமக்கே..
    <
ஜீவ:     அம்பின் குறியன்று, யாதிது?
குடில:     
    அடியேம்.
    அன்பின் குறியது!
ஜீவ:     
    ஆ!ஆ!
குடில:     
    ஆயினும்
    பொல்லாப் பகைவர் பொய்யர் அவர்பலர்...
    இல்லா தாக்குவர் இறைவ! என் மெய்ம்மை
    [அழ]
ஜீவ:    வெல்வோம் நாளை! விடுவிடு துயரம்.
குடில:    (தனதுள்)
அறிந்திலன் போலும் யாதும்.
[சிறிதுளம் தௌிந்து]
ஜீவ:     
    அழுங்கலை.
    வெறுந்துய ரேனிது? விடு! விடு! உலகில்
    வெற்றியும் தோல்வியும் உற்றிடல் இயல்பே,
    அழுவதோ அதற்கா விழுமிய மதியோய்!
குடில:    (தனதுள்)
சற்றும் அறிந்திலன்! என்னையென் சமுசயம்!
ஜீவ:    முற்றிலும் வெல்லுதும் நாளை அதற்கா
ஐயுறேல்! அஞ்சலை! ஆயிரம் வஞ்சியர்
நணுகினும் நாளை...
குடில:    
    நாயேற் கதனில்
    அணுவள வேனும் இலையிலை அயிர்ப்பு.
    நெடுநாள் ஆக நின்பணி விடைக்கே.
    உடலோ டாவியான் ஒப்பித் திருந்தும்
    கெடுவேன், அவையிக் கிளர்போ ரதனில்
    விடுமா றறியா வெட்கமில் பதடியாய்க்
    கொடியோர் சிலர்செய் கொடுஞ்சூ ததனால்
    தடுமா றடைந்தென் தகைமையும் புகழும்
    கெடுமா றுகுத்த கெடுமதி ஒன்றே
    கருத்திடைநினைதொறும் கண்ணிடு மணல்போல்
    உறுத்துவ திறைவ! ஒவ்வொரு கணமும்
    பகைவர்தம் படைமேற் படுகிலா வுடலம்
    கெடுவேற் கென்னோ கிடைத்ததிங் கறியேன்!
    அடுபோர்க் களத்தியாண் டடைந்திலன் ஐயோ!
    வடிவேல் ஒன்றென் மார்பிடை இதுபோல்
    [பலதேவனைக் காட்டி]
    படிமா றில்லாப் பாவியேன் எங்ஙனம்
    நோக்குவன் நின்முகம்? காக்குதி ஐயோ!
    தாக்குறு பகைவர் தம்படை என்னுயிர்
    போக்கில. நீயே போக்குதி! காக்குதி!
    இரக்கமுற் றுன்திருக் கரத்துறை வாளிவ்
    உரத்திடை ஊன்றிடில் உய்வன் அன்றேல்...
    [அழுது]
ஜீவ:    உத்தம பத்தியில் உனைப்போல் யாரே!
நாரா:     (தனதுள்)
மெத்தவுன் நன்றிந் நாடகம் வியப்பே!
மற்றக் கோழைக் குற்றதெப் படிப்புண்?
போரிடை உளதன் றியார்செய் தனர்பின்?
உணர்குவம். இப்பேச் சோய்விலாப் பழங்கதை
[நாராயணன் போக]
குடில:    சித்தமற் றவ்வகை தேர்ந்துள தென்னில்.
இத்தனை கருணையும் எனக்கென அருளுதி
பாதநற் பணிவிடை படைத்தநாள் முதலா
யாதுமொன் றெனக்கா இரந்திலன், உணர்வை
ஓதிய படியென் உரங்கிழித் துய்ப்பையேல்
போதுமிங் கெனக்(கு)அப் போதலோ காண்குவர்
மன்னுல குள்ளார் என்னுள நிலைமை!
உன்பெயர்க் குரிய ஒவ்வோர் எழுத்தும்
என்னுரத் தழியா எழுத்தினில் எழுதி
இருப்பதுன் உண்மையோ இலையோ என்பது
பொருக்கெனக் கிழித்திங் குணர்த்துதி புவிக்கே.
[முழந்தாளூன்றி நின்றழ]
ஜீவ:    அழுவதேன்? எழு! எழு! யாரறி யார்கள்!
உன்னுளம் படும்பா டென்னுளம் அறியும்.
என்னனு பவங்கேள். குடில! ஈதோ
சற்றுமுன் யானே தற்கொலை புரியத்
துணிந்துவாள் உருவினேன். துண்ணென நாரணன்
அணைந்திலன் ஆயினக் காலை...
குடில:    
    ஐயோ!
ஜீவ:     தடுத்தான்; விடுத்தேன்!
குடில:     (தனதுள்) கெடுத்தான் இங்கும்!
ஜீவ:    அரியே றன்ன அமைச்ச! பெரியோர்
தரியார்; சகியார் சிறிதொரு சழக்கும்.
ஆயினும் அத்தனை நோவதற் கென்னே?
வாளுறை சேர்த்திலம்! நாளையும் போர்செயக்
கருதினோம்! உறுதி! வெறுவியோ மீண்டோம்?
குடில:    வஞ்சியர் நெஞ்சமே சான்றுமற் றதற்கு
மீண்டதிற் குறைவென்? ஆ!ஆ! யாரே
வெருவினார்? சீ!சீ! வீணவ் வெண்ணம்!
இருதினம் பொருதனர் சிறுவனை வெலற்கென்
றொருமொழி கூறநம் உழையுளார் சிலர்செய்
[நாராயணன்ன் நின்றவிடம் நோக்கி]
சதியே யெனக்குத் தாங்காத் தளர்ச்சி
அதுவலால் என்குறை மதிகுல மருந்தே!
சென்றுநாம் இன்று திரும்பிய செயலே
நன்றெனப் போர்முறை நாடுவோர் நவில்வர்,
செவ்விதில் ஓடிநாய் கௌவிடும் சிறந்த
மடங்கலோ எதற்கும் மடங்கியே குதிக்கும்
குதித்தலும் பகையினை வதைத்தலும் ஒருகணம்
நாளை நீபாராய்! நாந்தூ தனுப்பும்
வேளையே அன்றி விரிதலை அனந்தை
ஊரார் இவ்வயின் உற்றதொன் றறியாச்
சீராய் முடியுநம் சிங்கச் செருத்திறம்!
மீண்டோம் என்றுனித் தூண்டிலின் மீனென
ஈண்டவன் இருக்குக; இருக்குக, வைகறை
வரும்வரை இருக்கில் வந்தவிவ் வஞ்சியர்,
ஒருவரும் மீள்கிலர், ஓர்கால் இக்குறி
தனக்கே தட்டிடில் தப்புவன் என்பதே
எனக்குள துயரம், அதற்கென் செய்வோம்!
ஆதலின் இறைவ! அஞ்சினேம் என்றொரு
போதுமே நினையார் போர்முறை அறிந்தோர்.
ஜீவ:     எவ்விதம் ஆயினும் ஆகுக. வைகறை
இதுவரை நிகழ்ந்தவற் றெதுகுறை வெனினும்
அதுவெலாம் அகலநின் றரும்போர் ஆற்றுதும்
குடில:     வஞ்சியான் இரவே அஞ்சிமற் றொழிந்திடில்
அதுவுமாம் விதமெது?
[சேவகன் வர]
சேவகன்:     
    உதியன் தூதுவன்
    உற்றுமற் றுன்றன் அற்றம்நோக் கினனே.
குடில:     சரி! சமாதனம் சாற்றவே சார்ந்தான்.
ஜீவ:    பெரிதே நிம்மதி! ஆ! ஆ! வரச்சொல்.
[வஞ்சித் தூதன் வர]
தூதன்:     தொழுதனன், தொழுதனன், வழுதி மன்னவா!
[வணங்கி]
அருளே அகமாத் தெருளே மதியா
அடலே உடலாத் தொடைபுக ழேயா
நின்றவென் இறைவன் நிகழ்த்திய மாற்றம்
ஒன்றுள துன்வயின் உரைக்க என்றே
விடுத்தனன் என்னை அடுத்ததூ துவனா.
இன்றுநீர் இருவரும் எதிர்த்ததில் யாவர்
வென்றனர் என்பது விளங்கிடும் உனக்கே.
பொருதிட இனியும் கருதிடில் வருவதும்
அறிகுவை! அதனால் அறிகுறி உட்கொண்
டுறுவது முன்னுணர்ந் துறவா வதற்கே
உன்னிடில் தாம்பிர பன்னியி னின்றொரு
கும்ப நீருமோர் நிம்ப மாலையும்
ஈந்தவன் ஆணையில் தாழ்ந்திடில் வாழ்வை!
மதிற்றிற மதித்திறு மாப்பையேல் நதியிடை
மட்பரி நடாத்தினோர்க் கொப்பா குவையே
ஆதலின் எங்கோன் ஓதிய மாற்றம்
யாதெனிற் கைதவா! வைகறை வருமின்
தாரும் நீரும்நீ தருவையேற் போரை
நிறுத்துவன், அல்லையேல் நின்புரம் முடிய
ஒறுத்திட உழிஞையும் சூடுவன், இரண்டில்
எப்படி உன்கருத் தப்படி அவற்கே.
ஜீவ:     நன்று! நன்று! நீ நவின்றனை, சிறுவன்
வென்றதை நினைத்தோ அலதுமேல் விளைவதைக்
கருதித் தன்னுளே வெருவியோ உன்னை
விடுத்தனன் என்பதிங் கெடுத்துரை யாதே
அடுத்திவண் உள்ளார் அறிகுவர் ஆயினும்,
மற்றவன் தந்தசொற் குற்ற நம்விடை
சாற்றுதும் கேட்டி, தன்பொருள் ஆயின்
ஏற்றிரந் தவாக்கியாம் யாதுமீந் திடுவோம்
அருந்திடச் சேரம் அவாவிய புனலும்
விரும்பிய சுரும்பார் வேம்பும் விதுகுலம்
வரும்பரம் பரைக்காம் அல்லால் எனக்கே
உளவல்; அதனால் ஒருவனீந் திடுதல்
களவெனக் காணுதி மற்றுநீ கழறிய
உழிஞையங் குளதெனில் வழுதிபாற் பழுதில்
நொச்சியும் உளதென நிச்சயம் கூறே.
தூதன்:     ஐயோ! கைதவ! ஆய்ந்திலை உன்றன்
மெய்யாம் இயல்பு மிகுமுன் சேனையின்
தீரமும் திறமும் உனதரும் வீரமும்
கண்முற் படுமுன் கவர்ந்தசே ரற்கிம்
மண்வலி கவர்தலோ வலிதென் றுன்னினை?
என்மதி குறித்தாய்! எடுத்தகைப் பிள்ளாய்!
குடில:     நில்லாய் தூதுவ! நின்தொழில் உன்னிறை
சொல்லிய வண்ணம் சொல்லி யாங்கள்
தரும்விடை கொடுப்போய்ச் சாற்றலே அன்றி
விரவிய பழிப்புரை விளம்புதல் அன்றே.
அதனால் உன்னுயிர் அவாவினை யாயின்
விரைவா யேகுதி விடுத்தவன் இடத்தே.
தூதன்:    குடிலா உன்மனப் படியே வந்தனம்;
மருவிய போரினி வைகறை வரையிலை.
இரவினில் வாழுமின் இவ்வர ணகத்தே.
[தூதுவன் போக]
குடில:    தூதிது சூதே, சொன்னேன் அன்றோ?
ஜீவ:     ஏதமில் மெய்ம்மையே ஆயினும் என்னை?
நீரும் தாரும் யாரே அளிப்பர்?
எனவோ அவைதாம்? யாதே வரினும்
மனவலி ஒல்கலை மானமே பெரிது.
சிதைவிடத் துரத்துவோர் பதையார் சிறிதும்
புதைபடுங் கணைக்குப் புறங்கொடா தும்பல்
மதிகுல மிதுகா றொருவரை வணங்கித்
தாழ்ந்துபின் நின்று வாழ்ந்ததும் அன்று!
மாற்றார் தமக்கு மதிகுல மாலையும்
ஆற்றுநீ ருடன் ஆண்மையும் அளித்து
நாணா துலகம் ஆளல்போல் நடித்தல்
நாணாற் பாவை உயிர்மருட் டுதலே
ஒட்டார் பின்சென் றுயிர்வாழ் தலினும்
கெட்டன் எனப்படல் அன்றே கீர்த்தி!
அதனாற் குடில! அறிகுறி துணிபாய்.
எதுவா யினும்வரில் வருக ஒருவனை
வணங்கியான் இணங்குவன் எனநீ மதியேல்.
[எழுந்து]
வருவோம் நொடியில் மனோன்மணி நங்குலத்
திருவினைக் கண்டுளந் தேற்றி மீள்குவம்
கருதுவ பலவுள, காணுதும்.
இருநீ அதுகா றிவ்வயின் இனிதே.
[ஜீவகன் போக]
குடில:     கருதுதற் கென்னே! வருவது கேடே,
தப்பினாய் இருமுறை. தப்பிலி நாரணன்
கெடுத்தான் பலவிதம் மடப்பயல் நீயே
(பலதேவனை நோக்கி)
அதற்கெலாம் காரணம்!
பலதே:     
    அறிகுவை, ஒருவன்
    இதுபோல் வேலுன் நெஞ்சிடை இறக்கிடில்
குடில:     உன்நடக் கையினால்!
பலதே:     
    உன்நடக் கையினால்!
    மன்னனைக் குத்திட உன்னினை; ஊழ்வினை!
    என்னையே குத்திட இசைந்தது; யார்பிழை?
    <
குடில:    பாழ்வாய் திறக்கலை. ஊழ்வினை! ஊழ்வினை!
பகைக்கலை எனநான் பலகாற் பகர்ந்துளேன்.
பலதே:     பகையோ? பிரியப் படுகையோ? பாவி
குடில:     பிரியமும் நீயும்! பேய்ப்பயல்! பேய்ப்பயல்!
எரிவதென் உளமுனை எண்ணும் தோறும்
அரியவென் பணமெலாம் அழித்துமற் றின்று!
பலதே:    பணம்பணம் என்றேன் பதைக்கிறாய் பிணமே!
நிணம்படு நெஞ்சுடன் நின்றேன். மனத்திற்
கண்டுநீ பேசுதி! மிண்டலை வறிதே!
[பலதேவன் போக]
குடில:    விதியிது! இவனுடன் விளம்பி யென்பயன்?
இதுவரை நினைத்தவை யெல்லாம் போயின!
புதுவழி கருதுவம்! போயின போகுக!
[மௌனம்]
எதுவுமிந் நாரணன் இருக்கில்,
அபாயம். ஆ!ஆ! உபாயமிங் கிதுவே.
[குடிலன் போக]

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.