|
|||||
மார்ச் 8: போராட்டத்தில் பூத்த பூ! |
|||||
1789 .மன்னராட்சிக்கு எதிராக பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த முதலாளிகளும், தொழிலாளர்களும் மற்றும் பொது மக்களும் தங்களது உரிமைகளைக் கோரி புரட்சியைத் துவக்கியிருந்தனர். பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் இறங்கியபோது உலகிலேயே மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற இனமான பெண்ணினம் மட்டும் சும்மா இருக்குமா? உழைக்கும் மக்களுடன் சேர்ந்து அதுவும் போராட்டத்தில் குதித்தது. சுதந்திரத்துவம்(freedom), சமத்துவம்(equality), பிரநிதித்துவம்(representation) என்ற கோரிக்கைகளை மக்கள் முன் வைத்திருந்தபோது அதனுடன் இணைந்த கோரிக்கையாக, ஆணுக்கு நிகரான உரிமைகள்; வேலைக்கேற்ற ஊதியம்; எட்டு மணிநேர வேலை; பெண்களுக்கு வாக்குரிமை, பெண்ணடிமைத்தனத்திலிருந்து விடுதலை ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போர்க்குணத்தின் உற்சாகம் பொங்கியெழ, விண் அதிரும் முழக்களுடன் ஊர்வலம் அரண்மனையை நோக்கிச் சென்றது, அதிர்ந்துபோன வானம் முழக்கங்களின் அதிர்ச்சியால் பிளந்தது. கடும் மழை கொட்டியது. மெல்ல நகர்ந்த ஊர்வலம் அரண்மனையைச் சென்று அடைந்தது. மன்னனின் பாதுக்காவலர்களாக இருந்த இருவர் அங்கு மக்களைத் தாக்கினர். ஆனால் அவர்கள் இருவரும் அந்த இடத்திலேயே மக்களால் கொல்லப்பட்டனர். இதைக்கண்ட லூயிஸ் பிலிப் அதிர்ச்சியடைந்தான். பயந்தான். உங்களது கோரிக்கைகளைக் கண்டிப்பாகப் பரிசீலனை செய்கிறேன். அதையும் உங்களுக்குச் சாதகமானதாகவே அறிவிக்கிறேன் என்று சமாதானப்படுத்தினான். அதற்கிணையாக போராட்டமும் பரவ ஆரம்பித்தது. செய்தியைக் கேள்விப்பட்ட இடங்களிளெல்லாம் பெண்கள் போராட்டங்களில் குதிக்க ஆரம்பித்தனர். கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையிலும் மற்றும் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இப்போராட்டங்களில் கலந்துகொண்டனர். இந்த மாபெரும் தொடர் போராட்டங்களில் பெண்கள் ஈடுபடத்தொடங்கியதும் ஆளும் வர்க்கத்தால் பழைய நிலையில் நீடிக்க முடியவில்லை. இத்தாலியில் தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பெண்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராடி வெற்றி பெற்ற நாள் இது. 8 மணி நேர வேலைக்காகப் போராடிய தொழிலாளர்களுக்கு கிடைத்த மேநாள் போல வாக்குரிமைக்காகப் போராடிய பெண்ணினத்திற்குக் கிடைத்தது மார்ச் 8. மே தினம் உலகம் முழுதும் பரவியது போலவே, பெண்கள் தினமும் பரவியது. மேதினத்தை உலகம் முழுதும் எடுத்துச் சென்ற கம்யூனிஸ்ட்டுகள்தான், மார்ச் 8 ஆம் தேதியையும் அனைத்துலக பெண்கள் தினமாக உலகெங்கும் கொண்டுசென்றார்கள். அமெரிக்காவின் தொழில் நகரமான நியூயார்க் நகரத்தில் பெரும்பான்மையான பெண்கள், நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இவர்களது வேலை நேரம் பதினாறு மணி. ஆனால், பெற்ற கூலியோ மிகக் குறைவு. முதலாளிகள் மற்றும் நிர்வாகத்தில் உள்ள கேவலப்பயல்களின் பாலியல் தினவுகளைத் தீர்த்து வைத்தால்தான் அந்தக் கூலியையும் கூட பெற முடியும். இதுதான் அன்றைய அமெரிக்கச் சூழ்நிலை. 1857 இல் நியூயார்க் நகரிலே உழைக்கும் பெண்கள் கூடினார்கள். பெண்கள் அமைப்புகள் அதிகமாக உருவாகத் தொடங்கின. போராட்டங்கள் தொடர்ந்தன.. 1908இல் ஜனாதிபதியாக தியோடர் ரூஸ்வெல்ட் இருந்தார். வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு நிலை குலைந்து போனார். சில உரிமைகள் வழங்கப்பட்டன. போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை வெற்றி பெற்றது. உலகெங்குமுள்ள பெண்கள் அமைப்புகள் ஒன்றையொன்று தொடர்புகொண்டன. அதன் விளைவாக 1910இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கூடியது. ஜெர்மானியக் கம்யூனிஸ்ட்டுக்கட்சி மற்றும் தொழிலாளர் அமைப்புகளின் பிரதிநியாக இருந்த தோழர் கிளாரா ஜெட்கின் அந்த மாபெரும் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். அதன் பிறகு ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் தினம் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதால் அதே மார்ச் 8ஆம் தேதியானது, அனைத்துலகப் பெண்கள் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. |
|||||
world womens day is celebrated based on the incident started in 1789. |
|||||
by MAYIL on 08 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|