பெண்எனப் பெயரிய பெருமகள் குலனுள் உணாநிலன் உண்டு பராய அப் பெருந்தவம் கண்ணுற உருப்பெறும் காட்சியது என்னக் கருவுயிர்த் தெடுத்த குடிமுதல் அன்னை நின்னையும் கடந்தது அன்னவள் அருங்கற்பு (5)
அரிகடல் மூழ்கிப் பெறும் அருள் பெற்ற நிலமகள் கடந்தது நலனவள் பொறையே இருவினை நாடி உயிர்தொறும் அமைத்த ஊழையும் கடந்தது வாய்மையின் மதனே கற்பகம் போலும் அற்புதம் பழுத்த (10)
நின் இலம் கடந்தது அன்னவள் இல்லம் பேரா வாய்மைநின் ஊரனைக் கடந்தது மற்றவள் ஊரன் கொற்ற வெண்குடையே ஏழுளைப் புரவியோடு எழுகதிர் நோக்கிய சிற்றிலை நெரிஞ்சில் பொற்பூ என்ன (15)
நின்முகக் கிளையினர் தம்மையும் கடந்தனர் மற்றவள் பார்த்த மதிக்கிளை யினரே உடல்நிழல் மான உனதருள் நிற்கும் என்னையும் கடந்தனள் பொன்னவட்கு இனியோன் கொலைமதில் மூன்றும் இகலறக் கடந்து (20)
பெருநிலவு எறித்த புகர்முகத் துளைக்கை பொழிமதக் கறையடி அழிதரக் கடந்து களவில் தொழில்செய் அரிமகன் உடலம் திருநுதல் நோக்கத்து எரிபெறக் கடந்து மாறுகொண்டு அறையும் மதிநூல் கடல்கிளர் (25)
சமயக் கணக்கர் தம்திறம் கடந்து புலனொடு தியங்கும் பொய்உளம் கடந்த மலருடன் நிறைந்து வான்வழி கடந்த பொழில்நிறை கூடல் புதுமதிச் சடையோன் மன்நிலை கட வா மனத்தவர் போல (30)
ஒன்னவர் இடும்திறைச் செலினும் தன்நிலை கடவாது அவன்பரித் தேரே. (32)
|