|
|||||
பிரசவ பாதிப்பால் கோமா நிலை: பெண்ணுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கும் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவு! |
|||||
பிரசவ பாதிப்பால் 18 ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ள பெண்ணுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு உள்ளது. குமரி மாவட்டம், பொன்மனை அருகே இடைக்கட்டான்களை பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷா (வயது 18). இவர், மதுரை உயர்நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷூக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருந்ததாவது: ‘‘என் தாய் ஷோபா கடந்த 2000ம் ஆண்டு குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்தார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் நான் பிறந்தேன். அப்போது எனது தாய்க்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டதில் பிரச்னை ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றவர் இன்னும் குணமடையவில்லை. என் தந்தையோ விவாகரத்து பெற்று வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனவே தவறான சிகிச்சைக்கு உரிய இழப்பீடு வழங்கவும், தாய்க்கு தேவையான சிகிச்சை வழங்கவும், எனது கல்விச்செலவுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ இவ்வாறு அதில் கூறி இருந்தார். இதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (நீதி) தரப்பில், தாமாக முன் வந்து பொதுநல மனுவாக தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆசாரிபள்ளம் அரசு தலைமை மருத்துவமனை டீன் தலைமை யிலான மருத்துவ வல்லுநர் குழுவினர் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தனர். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஷோபாவிற்கு தொடர் சிகிச்சை அளித்தாலும் பலன் கிடைக்காது. அவர் மீண்டு வர வாய்ப்பில்லை என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து நீதிபதிகள், கோமாவிலுள்ள பெண்ணின் இறுதி வாழ்நாள் வரையில் மாற்றுத்திறனாளிக்குரிய திட்டத்தின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்க கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். |
|||||
by Mani Bharathi on 11 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|