இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை மொரீஷியஸ் நாடு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
வரும், 15ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநாடு துவங்க இருக்கிறது. இந்நிலையில், இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, கனடா நாட்டு பிரதமர், ஸ்டீபன் ஹார்பர் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தார். தமிழக அரசியல் தலைவர்களின் மற்றும் சமூக ஆர்வலர்களின் தொடர் வற்புறுத்தலால், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்த மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார். இந்த வரிசையில் தற்போது மொரீஷியஸ் நாட்டு பிரதமரும் இணைந்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, மொரீஷியஸ் நாட்டு நாடாளமன்றத்தில், அந்நாட்டு பிரதமர் சந்திர ராம்கூலம் கூறியதாவது, இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது, மனித உரிமை மீறல்கள் நடந்தன. போர் முடிந்த பின்னரும் மனித உரிமை மீறகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ஒரு நாட்டின் எல்லாவற்றையும் விட முதன்மையானது மனித உரிமைக்கு மதிப்பு கொடுப்பது தான். ஆனால், இலங்கையில் இந்த விஷயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, காமன்வெல்த் மாநாட்டை மொரீஷியஸ் அரசு புறக்கணிப்பதாக ராம்கூலம் கூறியுள்ளார்.
|