தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் மே 14 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மே 14-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை விநியோகிக்கப்படும்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து வழக்கம்போல் ஒரே விண்ணப்பத்தை மாணவர்கள் பூர்த்தி செய்தாலே போதுமானது. எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைக்காத மாணவர்களுக்கு, கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் பி.டி.எஸ். படிப்பில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்கள் 2,555; இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உரிய 15 சதவீத இடங்கள், அதாவது 383 எம்.பி.பி.எஸ். இடங்கள் போக மீதமுள்ள 2,172 எம்.பி.பி.எஸ். இடங்கள் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரியவை ஆகும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கல்விக் கட்டணம் ரூ.4,000-த்தையும் சேர்த்து ஆண்டுக் கட்டணம் ரூ.12,290தான். இந்த இடங்கள் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கலந்தாய்வு நடைபெறும்.
மேலும், 12 தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 900க்கும் மேலானவை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.
|