LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

பொருள்

1. அகப்பொருள்
ஒருவனும் ஒருத்தியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பலபடியாக விளக்கிக் கூறுவதே அகப்பொருள் என்பது. காதற் செய்திகள் புறத்தே கூறலாகா நிலையில் அகத்தே அடங்க வேண்டுவன ஆதலின், `அகப்பொருள்' எனப் பெயர் பெற்றன. அகப்பொருள் பற்றிய இலக்கண நூல்கள் தமிழில் பல உண்டு.

பலர் அறியத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு தலைவன் தலைவியர் மேற்கொண்டு ஒழுகும் வாழ்க்கை களவு வாழ்க்கை என்றும், மணம் முடிந்தபின்பு வாழும் வாழ்க்கை கற்பு வாழ்க்கை என்றும் கூறப்படும். இவை பற்றிய விவரங்களைக் கூறும் இயல் (பகுதி) முறையே களவியல், கற்பியல் எனப் பெயர்பெறும். ஒவ்வொரு வாழ்க்கையிலும் பல நிகழ்ச்சிகள் உண்டு. அவ்வொவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு துறை எனப்பெயர் பெறும். இத்தகைய துறைகள் ஏறத்தாழ நானூறு வரை அகப்பொருள் நூலில் கூறப்பட்டுள்ளன. இவ்விவரங்களைத் தொல்காப்பியத்துக் களவியல், கற்பியல், பொருளியல் என்னும் இயல்களிலும், இறையனார் களவியல் நூலிலும், நம்பி யகப்பொருள் இலக்கணத்திலும், கோவை நூல்களிலும், சங்க நூல்களாகிய அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு முதலிய இலக்கிய நூல்களிலும் விரிவாகக் காணலாம்.

அகப்பொருள் இலக்கணத்தில் ஏழு திணைகள் உண்டு. (திணை - ஒழுக்கம்). (1) கைக்கிளை (2) பெருந்திணை (3) ஐந்திணை (குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்) என்பன.

1. கைக்கிளை: தலைவன் விரும்பாமல் தலைவிமட்டும் தலைவனை விரும்புதலும், தலைவி விரும்பாமல் தலைவன் மட்டும் தலைவியை விரும்புதலும் ஒரு தலைக்காமம் எனப்படும். கைக்கிளை - ஒரு தலைக்காமம்.

2. பெருந்திணை: இது பொருந்தாக் காமம் எனப் பொருள்படும். வயதினால் பொருத்தம் அற்றவர் கூடுதலும், வலிதிற் கூடலும் இவைபோன்ற பிறவும் பெருந்திணை எனப்படும்.

3. ஐந்திணை: ஒத்த வயதும் ஒத்த பண்பும் ஒத்த கல்வியும் உடைய தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டுச் சேருதல் ஐந்தினை அல்லது ஒத்த காமம் எனப்படும். இவ்வொத்த காமத்திற்குக் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து ஒழுக்கங்கள் உண்டு. ஒவ்வொர் ஒழுக்கத்துக்கும் (1) முதற்பொருள் (2) கருப் பொருள் (3) உரிப்பொருள் என மூவகைப் பொருள்கள் உண்டு. அவைப் பற்றிய சில விவரங்களை இங்குக் காண்க:


1.முதற் பொருள்
நிலமும் பொழுதும் முதற் பொருளென்று சொல்லப்படும்.

1. நிலம் - குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என ஐவகைப்படும்.


1.குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த இடமும்.

2.முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்.

3.பாலை - முல்லையும் குறிஞ்சியும் திரிந்த பொட்டல் வெளி.

4.மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்.

5.நெய்தல் - கடலும் கடல்சார்ந்த இடமும்.

2.பொழுது: (1) பெரும்பொழுது (2) சிறு பொழுது என இருவகைப்படும்.

1.பெரும்பொழுது ஓராண்டிற்குரிய ஆறு பருவங்கள். அவை கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். ஒவ்வொரு பெரும்பொழுதும் இரண்டு மாத கால அளவையுடையது.

2.சிறுபொழுது: (1) வைகறை (2) காலை (3) நண்பகல் (4) ஏற்பாடு (5) மாலை (6) யாமம் என ஆறுவகைப்படும்.

1.வைகறை - விடியற்காலம்
2.நண்பகல் - உச்சிப்பொழுது
3.ஏற்பாடு - சூரியன் மறையும் பொழுது
4.மாலை - நிசியின் முன்னும்
ஏற்பாட்டின் பின்னுமுண்டாகிய காலம்
5.யாமம் - இடையிரவு.

1.கூதிர், முன்பனி என்னும் பெரும்பொழுதுகளும் யாமம் என்னும் சிறுபொழுதும் குறிஞ்சித் திணைக்கு உரிய பொழுதுகள்.

2.வேனில், பின்பனி என்னும் பெரும்பொழுதுகளும், நண்பகல் என்னும் சிறுபொழுதும் பாலைத் திணைக்கு உரியவை.

3.கார் காலமும் மாலைக் காலமும் முல்லைத் திணைக்கு உரிய பொழுதுகள்.

4.ஆறு பெரும்பொழுதுகளும், விடியற்காலமும் மருதத்திற்கு உரிய பொழுதுகள்.

5.ஆறு பெரும்பொழுதுகளும், ஏற்பாடு என்னும் சிறு பொழுதும் நெய்தற்கு உரிய பொழுதுகள்.

இவ்வாறு விரித்துரைக்கப்பட்ட ஐவகை நிலங்களும், பெரும்பொழுதுகள் ஆறும், சிறு பொழுதுகள் ஆறும் அகப்பொருள் இலக்கணத்தில் முதற்பொருள் என்று கூறப்படும்.

2.கருப்பொருள்
ஒவ்வொரு நிலத்திலும் உள்ள (1) தெய்வம் (2) உயர்ந்தவர் (3) பொது மக்கள் (4) பறவை (5) விலங்கு (6) ஊர் (7) நீர் (8) பூ (9) மரம் (10) உணவுப் பொருள்கள் (11) பறை (12) யாழ் (13) பண் (14) தொழில் என்னும் 14 வகைகள் கருப்பொருள் எனப்படும்.


1.குறிஞ்சிக் கருப்பொருள்

1.தெய்வம் - முருகன்

2.உயர்ந்தோர் - பொருப்பன், சிலம்பன், வெற்பன், கொடிச்சி, குறத்தி.

3.பொதுமக்கள் - குறவர், கானவர், குறத்தியர்.

4.பறவை - கிளி, மயில்.

5.விலங்கு - புலி, கரடி, யானை, சிங்கம்.

6.ஊர் - சிறுகுடி.

7.நீர் - அருவி நீர், சுனைநீர்.

8.பூ - வேங்கைப் பூ, குறிஞ்சிப் பூ, காந்தட் பூ.

9.மரம் - சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நாகம், மூங்கில்.

10.உணவு - மலை நெல், மூங்கில் அரிசி, திணை.

11.பறை - தொண்டகப் பறை.

12.யாழ் - குறிஞ்சி யாழ்.

13.பண் - குறிஞ்சிப் பண்.

14.தொழில் - வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினை காத்தல், தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல், அருவி நீராடல், சுனை நீராடல் முதலியன.

2.பாலைக் கருப்பொருள்

1.தெய்வம் - துர்க்கை.

2.உயர்ந்தோர் - விடலை, காளை, மீளி, எயிற்றி.

3.பொதுமக்கள் - எயினர், எறிற்றியர், மறவர், மறத்தியர்.

4.புள் - புறா, பருந்து, எருவை, கழுகு.

5.விலங்கு - செந்நாய்.

6.ஊர் - குறும்பு.

7.நீர் - நீரில்லாக் குழி, நீரில்லாக் கிணறு.

8.பூ - குராஅப்பூ, மராஅப்பூ.

9.மரம் - உழிஞை, பாலை, ஓமை, இருப்பை.

10.உணவு - வழிப்பறி பொருள், பதியிற் கவர்ந்த பொருள்.

11.பறை - துடி.

12.யாழ் - பாலையாழ்.

13.பண் - பஞ்சரம்.

14.தொழில் - போர் செய்தல், பகற்சூறையாடுதல் முதலியன.

3.முல்லைக் கருப்பொருள்

1.தெய்வம் - திருமால்.

2.உயர்ந்தோர் - குறும்பொறை நாடன், தோன்றல் மனைவி, கிழத்தி.

3.பொது மக்கள் - இடையர், இடைச்சியர், ஆயர் ஆய்ச்சியர்.

4.புள் - காட்டுக் கோழி.

5.பூவிலங்கு - மான், முயல்.

6.ஊர் - பாடி.

7.நீர் - குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர்.

8.பூ - குல்லைப்பூ, முல்லைப்பூ, தோன்றிப்பூ, பிடவம்பூ.

9.மரம் - கொன்றை, காயா, குருந்தம்.

10.உணவு - வரகு, சாமை, முதிரை.

11.பறை - ஏறங்கோட் பறை.

12.யாழ் - முல்லையாழ்.

13.பண் - சாதாரி.

14.தொழில் - சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றின் களை கட்டல், அவற்றை அரிதல், கடா விடுதல் கொன்றைக் குழல் ஊதுதல், கால்நடைகளை மேய்த்தல், கொல்லேறு தழுவுதல், குரவைக் கூத்தாடல், கான்யாறாடல் முதலியன.

4.மருதக் கருப்பொருள்

1.தெய்வம் - இந்திரன்.

2.உயர்ந்தோர் - ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி.

3.பொதுமக்கள் - உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்.

4.புள் - வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், பெகு நாரை, கம்புள், குருகு தாரா.

5.விலங்கு - எருமை, நீர் நாய்.

6.ஊர் - பேரூர், மூதூர்.

7.நீர் - யாற்று நீர், கிணற்று நீர், குளத்து நீர்.

8.பூ - தாமரைப்பூ, கழுநீர்ப்பூ, குவளைப்பூ.

9.மரம் - காஞ்சி, வஞ்சி, மருதம்.

10.உணவு - செந்நெல்லரிசி, வெண்ணெல்லரிசி.

11.பறை - நெல்லரிகிணை, மணமுழவு.

12.யாழ் - மருத யாழ்.

13.பண் - மருதப் பண்.

14.தொழில் - விழாச் செய்தல், வயற் களை கட்டல், நெல்லரிதல், கடா விடுதல், குளங்குடைதல், புதுநீராடல் முதலியன.

5.நெய்தற் கருப்பொருள்

1.தெய்வம் - வருணன்.

2.உயர்ந்தோர் - சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுளைச்சி.

3.தாழ்ந்தோர் - நுளையர், நுளைச்சியர், பரதர், புரத்தியர், அளவர், அளத்தியர்.

4.புள் - கடற்காகம்.

5.விலங்கு - சுறாமீன்.

6.ஊர் - பாக்கம், பட்டினம்.

7.நீர் - உவர் நீர்க்கேணி, கவர்நீர்.

8.பூ - நெய்தற்பூ, தாழம்பூ, முண்டகப்பூ, அடம்பம்பூ.

9.மரம் - கண்டல், புன்னை, ஞாழல்.

10.உணவு - மீன், மீனையும், உப்பையும் விற்றுப் பெற்ற பொருள்கள்.

11.பறை - மீன் கோட்பறை, நாவாய்ப் பம்பை.

12.யாழ் - விளரியாழ்.

13.பண் - செவ்வழிப்பண்.

14.தொழில் - மீன் பிடித்தல், உப்புண்டாக்கல், அவை விற்றல், மீன் உணக்கல், அவற்றை உண்ணவரும் பறவைகளை ஓட்டுதல், கடலாடல் முதலியன.

3.உரிப்பொருள்
மேற்சொல்லப்பட்ட ஒவ்வொரு நிலத்துக்கும் உயிர்நாடியாக உரிமை பூண்டு நிற்கும் பொருள் உரிப்பொருள் எனப்படும்.


நிலம் உரிப்பொருள்
1. குறிஞ்சி புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
2. பாலை பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
3. முல்லை இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
4. மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமும்
5. நெய்தல் புலம்பலும் புலம்பல் நிமித்தமும்


2. புறப்பொருள்
மனிதன் பெறத்தக்க நான்கு பேறுகளில் `இன்பம்' ஒழிந்த அறம், பொருள், வீடு என்னும் மூன்றும் அனைவரும் அறியத்தக்க நிலையில் இருப்பவை. இவை அகவொழுக்கத்தைச் சார்ந்தவை அல்ல: புற (வெளிப்படை) ஒழுக்கத்தைச் சேர்ந்தவை. ஆதலின் புறப்பொருள் எனப்பட்டன. அறம் பற்றிய விவரங்களும், பொருள் பற்றிய செய்திகளும், வீடுபற்றிய விவரங்களும் இப்பகுதியில் விரிவாகப் பேசப்படும்.

புறநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டில் பல பாடல்கள், நீதி நூல்கள், காவியங்கள் முதலியன புறப்பொருள் இலக்கிய நூல்களாம்.

புறப்பொருள் வெண்பாமாலை, தொல்காப்பியப் புறத்திணை இயல் முதலியன புறப்பொருள் இலக்கண நூல்களாம். புறப்பொருட் பகுதியில் அரசனுடைய போர்ச் செய்திகளை எட்டுத் திணைகளாக வகுத்து, ஒவ்வொரு திணைக்கும் பல துறைகளை அமைத்து, இலக்கண ஆசிரியர்கள் போர் விவரங்களை விரித்துக் கூறியுள்ளார்கள். அத்திணைகள் முறையே வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை எனப் பெயர் பெறும், இவ்வெட்டுடன் பாடாண்திணை, பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என்னும் நான்கும் சேரும். எனவே, புறப்பொருள் பன்னிரண்டு திணைகள் உடையதாகும். இவை பற்றிய சில விவரங்களை இங்குக் காண்க.


1.வெட்சித்திணை: பகைவர் நாட்டின் மீது படையெடுக்க விரும்பும் வேற்றரசன் தன் வீரர்களை முதலில் ஏவி அந்நாட்டுக் கால்நடைகளைப் (படையெடுப்புப் போரில் அவை இறந்துபடாமல் இருக்க வேண்டும் என்னும் கருத்தால்) கைப்பற்றுவது வழக்கம். இது வெட்சித்திணை எனப்படும். இப்போருக்குரிய வீரர் வெட்சிப்பூவைச் சூடிக் கொள்ளுதல் மரபு. இத்திணையில் பல துறைகள் உண்டு.

2.கரந்தைத் திணை: கால் நடைகளைக் கைப்பற்ற வந்த வீரர்களை அந்நாட்டு வீரர்கள் எதிர்த்துப் போரிடலும், கால்நடைகளை மீட்டுக்கொண்டு வருதலும் கரந்தைத் திணை எனப்படும். இப்போருக்குரிய வீரர் கரந்தைபூவைச் சூடிக் கொள்ளுதல் மரபு. இத்திணையிலும் பல துறைகள் உண்டு.

3.வஞ்சித் திணை: ஓரரசன் தன் மாற்றன்மேல் படையெடுத்துப் போதல் வஞ்சித் திணை எனப்படும். அவனும் வீரரும் வஞ்சிப் பூவைச் சூடிக் கொள்ளுதல் மரபு. இதிலும் பல துறைகள் உண்டு.

4.காஞ்சித் திணை: படையெடுத்து வந்த அரசனைப் படையெடுக்கப்பட்ட அரசன் எதிர்த்தல் காஞ்சித் திணை எனப்படும். இப்போரில் ஈ.டுபட்டோர் காஞ்சிப்பூவைச் சூடுதல் மரபு. இத்திணையிலும் பல துறைகள் உண்டு.

5.உழிஞைத் திணை: அரசன் பகைவனது கோட்டை மதிலை வளைத்துப் போரிடலும், உள் நுழைய முயலுதலும், அம்முயற்சியில் ஈ.டுபட்டோர் உழிஞைப் பூவைச் சூடுதல் மரபு. இத்திணையிலும் பல துறைகள் உண்டு.

6.நொச்சித் திணை: முற்றுகையிடப்பட்ட அரசனும் வீரரும் கோட்டைக்குள்ளிருந்தே முற்றுகையிட்டோருடன் போர் புரிதல் நொச்சித்திணை எனப்படும். இப்போரில் ஈ.டுபட்ட வீரர் நொச்சிப் பூவைப் சூடுதல் மரபு. இத்திணையிலும் பல துறைகள் உண்டு.

7.தும்பைத் திணை: இரு திறத்துப்படைகளும் பொருதல் தும்பைத் திணை எனப்படும். இதில் ஈ.டுபட்டவர் தும்பைப் பூவைச் சூடுதல் மரபு. இத்திணையிலும் பல போர்த்துறைகள் உண்டு.

8.வாகைத் திணை: போரில் வெற்றிபெற்ற அரசனுடையதும் வீரரதுமாகிய வெற்றியைச் சிறப்பித்தப் பாராட்டுதல் வாகைத் திணை எனப்படும். வெற்றி கொண்டாடுவோர் வாகைப் பூவை அடையாளமாகச் சூடிக்கொள்ளுதல் மரபு. இத்திணையிலும் பல துறைகள் உண்டு.

9.பாடாண திணை: ஒருவன் பெயர், புகழ், வலிமை, கொடை, தண்ணளி முதலியவற்றை ஆராய்ந்து சொல்லுதல். பாடாண் திணை என்பது பாடப்படும் ஆண் மகனுடைய ஒழுகலாறு என்னும் பொருளை உடையது. இது வாயில்நிலை முதலிய நாற்பத்தேழு துறைகளை உடையது.

10.பொதுவியல்: இது மேற்கூறப்பெற்ற புறத்திணைகட்கெல்லாம் பொதுவாய் உள்ளனவும், அவற்றில் கூறாது ஒழிந்தனவும் ஆகிய இலக்கணங்களைக் கூறுவது. இது போந்தை முதலிய முப்பத்தேழு துறைகளையுடையது.

11.கைக்கிளை: இஃது ஒருதலைக்காமம் பற்றிய செய்திகளைக் கொண்டது. இஃது ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று என்னும் இரண்டு பகுப்புக்களையுடையது; இது காட்சி முதலிய பத்தொன்பது துறைகளையுடையது.

12.பெருந்திணை: இது பொருந்தாக் காமம் பற்றிய செய்திகளைக் கூறுவது. இஃது ஆண்பாற் கூற்று, இருபாற் பெருந்திணை என்னும் இரண்டு பிரிவுகளையுடையது; இதில் செலவு அழுங்கல் முதலிய முப்பத்தாறு துறைகள் உண்டு.

3. திணை மயக்கம்
1. மாமல்லபுரம் (மஹாபலிபுரம்) கடற்கரை ஊர். ஆகவே இலக்கணப்படி அதனை நெய்தல் என்று கூற வேண்டும். ஆனால் அவ்வூரில் பாறைகளும் சிறுசிறு குன்றுகளும் இருக்கின்றன. பாறைகளும் சிறுசிறு குன்றுகளும் குறிஞ்சி நிலத்தை சார்ந்தவை. அவை இங்கு நெய்தல் நிலத்தில் இருக்கின்றன. எனவே, நெய்தலும் குறிஞ்சியும் மாமல்லபுரத்தில் மயங்கி (சேர்ந்து) இருக்கின்றன. நெய்தல் திணையும் குறிஞ்சித் திணையும் மயங்கியுள்ளன என்று கூறலாம்.

மேலே கூறப்பட்ட மலைகளுக்கும் பாறைகளுக்கும் சிறிது தொலைவில் நெல் வயல்கள் இருக்கின்றன. எனவே, மருதத்திணையும் அங்கு மயங்கியுள்ளது என்று கூறலாம்.

2. அவ்வூர்ப் பகுதியில் பரதவர் தாம் பிடிக்கும் மீன்களை முல்லை நிலத்தார்க்குக் கொடுத்துப் பண்டமாற்று முறையால் அவர்களிடமிருந்து கவுதாரியையும் வேலையும் பெறுகின்றனர்; நெய்தல் நிலச் சிறுமியர் முல்லை நில மகளிரிடம் வாங்கும் அவரைக்கும் திணைக்கும்
``கவரு மீன்குவை கழியவர் காணவர்க் களித்துச்
சிவலுஞ்சேவலும் மாறியுஞ், சிறுகழிச் சியர்கள்
அவரை யேனலுக் கெயிற்றியர் பவளமுத் தளந்தும்
உவரி நெய்தலுங் கானமுங் கலந்துள வொழுக்கம்.''

by Swathi   on 26 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.