சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவருமான மேலாண்மை பொன்னுச்சாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.அவருக்கு வயது 66
கிராமப்புற எளிய மக்களின் வாழ்க்கைப் பாடுகளை தன்னுடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் உரத்துப் பேசும் குரலாகவே மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார். தமிழ் இலக்கியத்திலும் சரி, முற்போக்கு இலக்கியத்திலும் சரி, மேலாண்மை பொன்னுச்சாமியின் பங்களிப்பு அளப்பரியது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கிய 32 எழுத்தாளர்களில் ஒருவரான இவர், விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்கிற கிராமத்தில் பிறந்தார். இவருக்கு 10 வயதாக இருக்கும்போது, தந்தையை இழந்தார். இளம் வயதிலேயே தாயையும் இழந்து, அவரும் அவருடைய தம்பி கரிகாலனும் வாழ்வோடு மல்லுக்கட்டி, வறுமையைத் தங்கள் மனபலத்தால் வென்று தம்மை நிலைநிறுத்திக்கொண்டவர்கள்.
கல்வி மறுக்கப்பட்ட குழந்தையாக வளர்ந்த இவருக்கு, புத்தகங்களின்மீது தீராக் காதல் இருந்தது. அப்போது இவர், கதைகளும் எழுதத் தொடங்கினார். 1972இல் ‘செம்மலர்’ இதழில் பரிசு என்ற சிறுகதையை முதலில் எழுதினார். இவர் 24 சிறுகதை தொகுப்புகள், 6 நாவல்கள், 5 குறுநாவல்கள், ஒரு கட்டுரை தொகுப்பை எழுதியுள்ளார்.
லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது, அமுதன் அடிகளார் விருது, வடஅமெரிக்க தமிழ்சங்க பேரவை விருது, 5 முறை ஸ்டேட் பாங்க் விருது, 8 முறை இலக்கிய சிந்தனை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இதுவரை பெற்றுள்ளார். கல்கி சிறுகதை போட்டியில் இரண்டு முறை இவரது சிறுகதைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய ‘மின்சார பூ’ என்ற சிறுகதை தொகுப்பிற்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது கடந்த 2007 ம் ஆண்டு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை உடல் நலக்குறைவால் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அவரது உயிர் உடலை விட்டு பிரிந்தது.
|