LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

மிசௌரி தமிழ்ப்பள்ளி – தமிழ்த்தேனீ போட்டிகள் 2015

மார்ச் 7, 2015 அன்று மிசௌரி தமிழ்ப்பள்ளியின் 2014-15 கல்வி ஆண்டுக்கான தமிழ்த்தேனீ போட்டிகள் செயின்ட் லூயிஸ் நகரில் டேனியல் பூன் நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றன.


ஆறு வயதிற்கு  உட்பட்டோர் பிரிவில் மட்டும் நாற்பது குழந்தைகள் போட்டியிட்டது, இதுவே முதல் முறை! இப்போட்டியைப் பற்றிய சுவையான தகவல்கள் இதோ!


இத்தமிழ்த்தேனீ போட்டியில் மிசெளரி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் தமிழ் தெரிந்த மிசௌரி-வாழ் குழந்தைகள் பலரும் கலந்து கொண்டார்கள். 


இப்போட்டியை ஒருங்கிணைக்க, நவம்பர்  2014 முதலே ஐவர் அடங்கிய குழு ஒன்று மும்முரமாக இயங்கத் தொடங்கியது. உழைக்கும் தேனீக்களாக செயல்பட்ட இவர்கள் ஒரு மாதத்திற்குள்  போட்டிக்கான பிரிவுகள்,  பயிற்சி எடுக்க வேண்டிய பாடங்கள்,  விதிமுறைகள் போன்றவற்றை தயார் செய்து, பள்ளி நிர்வாகத்தின் பரிசீலனைக்கு முன் வைத்தனர்.  


போட்டிக்கான பதிவுப்படிவம் ஜனவரி முதல் வாரத்தில் பெற்றோர்களுக்கு அனுப்பப்பட்டது. மொத்தம் 75 குழந்தைகள் பதிவு செய்திருந்தனர்.  போட்டி நாளன்று குழந்தைகள் மிகுந்த உற்சாகத்துடனும் குதூகலத்துடனும் காணப்பட்டனர்.  பொதுப்பள்ளியில் அவர்கள் பயிலும் வகுப்புகளுக்கு ஏற்ப அமைந்திருந்த 4 நிலைகளில் போட்டியிட்டனர்.  ஒவ்வொரு நிலைக்கும் 9 பரிசுகள் என்பது வழக்கமான ஒன்று. அதன்படி 4 நிலைகளில் மொத்தம் 36 பரிசுகள் ஒதுக்கப்பட்டிருந்தது.


ஆறு வயதிற்கு உட்பட்ட தேனீ-1 பிரிவுக் குழந்தைகள், ராகத்தோடு பாடல்கள் பாடியும், அபிநயத்தோடு கதைகள் சொல்லியும்,  மின்னல் வேகத்தில் படங்களைக் கண்டறிந்தும் நடுவர்களை வியப்பில் ஆழ்த்தினர். எவரைத் தேர்ந்தெடுப்பது, எவரைத் தவிர்ப்பது எனத் திகைத்துத் திணறினார்கள், நடுவர்கள். பிள்ளைகளோ, சிறிதும் அசராமல்  ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேறிக்கொண்டே வந்தனர். இறுதியில், இந்தத் தேனீ-1  பிரிவிலிருந்து இருமடங்கு வெற்றியாளர்கள், அதாவது 18 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டதும், இதுவே முதல் முறை.


நடுநிலை மற்றும் உயர்நிலை மாணவர்கள் திருக்குறளைத் தலைகீழாகக் கேட்டாலும் மனப்பாடமாக ஒப்பித்து, அழகாகப் பொருளும் கூறினர். மேலும்,  சொல்வதெழுதுதல் (dictation),  ஒரே ஓசையுடைய வார்த்தைகளை எழுதுதல்(rhyming words), கட்டுரை எழுதுதல்,  கட்டுரையைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுதல் போன்ற போட்டிகளில் பங்குபெற்று தம் தமிழ் எழுத்தறிவை ஆணித்தரமாக நிலைநாட்டினர்.


"தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு!" என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம்,  பேச்சுப் போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள், ”உடல் நலனைக் காக்க உதவும் உணவு வகைகள் மற்றும் பழக்க முறைகள்”, ”அலைபேசியினால் விளையும் நன்மை, தீமைகள்”, ”பாரதிதாசனின் தமிழ்த்திறமை” போன்ற ஏனைய தலைப்புகளில், ஆங்கிலம் கலக்காத அழகுத் தமிழில் நயம்பட உரைத்தனர்.


இறுதியாக, அனைத்து நிலை மாணவர்களும்  இணைந்து பல குழுக்களாகப் பங்கேற்ற பன்முகத் திறன் போட்டி (Jeopardy) நடைபெற்றது. படம் பார்த்து திருக்குறள் கண்டுபிடித்தல்,  மகாகவி பாரதியார்,  நாமக்கல் கவிஞர் பாடல்கள் , தமிழ் இலக்கியம், திரைப்படப் பாடல்கள் மற்றும் சொற்திறன் எனப் பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற சுவாரசியமான இப்போட்டியில் மாணவர்கள் காட்டிய ஆர்வமும், உற்சாகமும், பதில் சொல்லிய விதமும் காண்போரை வியக்க வைத்தது.


அனைத்துப் போட்டிகளும் குறித்த காலத்திற்குள் இனிதே நடைந்தேற முக்கிய காரணம், போட்டியன்று பறந்து பறந்து பணியாற்றிய தன்னார்வலர்கள்தாம்!


இவை எல்லாவற்றிற்கும் மகுடமாய் ஏப்ரல் 11, 2015 அன்று, போட்டிகளில் கலந்துகொண்ட குழந்தைகளுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக, முன்னாள் அமெரிக்கத் தமிழ்க்கல்வி கழகத்தலைவர் மற்றும் தற்போதைய நிர்வாகக்குழு இயக்குனரான முனைவர் திரு. அரசு செல்லையா அவர்கள் வருகை புரிந்து, அனைத்துக் குழந்தைகளையும் பாராட்டி, வெற்றிபெற்ற குழந்தைகளுக்குப் பரிசுக் கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கினார். பங்குபெற்ற மற்ற குழந்தைகளுக்குப்  பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கினார்.


வாழ்வது அமெரிக்க நாடாயிருந்தாலும், வளர்வது மேற்கத்திய ஆங்கிலச் சூழலாயிருந்தாலும், நம் குழந்தைகள் ஒவ்வொருவரும் தமது பேச்சால், எழுத்தால், எண்ணத்தால், அறிவால் தாங்கள் தமிழ்த்தாயின் மக்கள்தாம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில்அமைந்திருந்தன,  இந்தத் தமிழ்த்தேனீ போட்டிகள். இதில் பங்குபெற்ற குழந்தைகளுக்கும், அவர்களை வழிநடத்திய பெற்றோர்களுக்கும், இந்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி மாணவர்களை ஊக்குவிக்கும் மிசௌரி தமிழ்ப்பள்ளிக்கும் மனமார்ந்த நன்றிகள்!


           “வாழ்க தமிழ்! வளர்க தமிழின் புகழ்!”


 மிசெளரி தமிழ்ப்பள்ளி ஆசிரியைகள்,

 ரம்யா ஜானகிராம், ரேவதி திருநா

by Swathi   on 26 Apr 2015  0 Comments
Tags: Tamil Bee Competition   Missouri Tamil School   மிசௌரி தமிழ்ப்பள்ளி   தமிழ்த்தேனீ           
 தொடர்புடையவை-Related Articles
மிசௌரி தமிழ்ப்பள்ளி – தமிழ்த்தேனீ போட்டிகள் 2015 மிசௌரி தமிழ்ப்பள்ளி – தமிழ்த்தேனீ போட்டிகள் 2015
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.