|
||||||||
மிசெளரி தமிழ்ப்பள்ளி – தமிழ்த்தேனீ போட்டிகள் 2017 |
||||||||
ஏப்ரல் 8, 2017 அன்று, மிசௌரி தமிழ்ப் பள்ளியின் 2015-16 கல்வி ஆண்டுக்கான தமிழ்த் தேனீப் போட்டிகள் செயின்ட் லூயிஸ் நகரில், பார்க்வே சௌத்வெஸ்ட் நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றன. இதில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மட்டுமில்லாமல், மிசெளரி-வாழ் தமிழ்க் குழந்தைகள் பலரும் நூற்றுக்கும் மேலான எண்ணிக்கையில் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களை வலைத்தமிழ் சார்பாகப் பேட்டி கண்டு தொகுக்கப்பட்ட காணொலியை நமது வலைத்தமிழ் இணையதளத்தில் காணலாம்.
இந்த நிகழ்ச்சியில், குழந்தைகள், பொதுப்பள்ளியில் தாம் பயிலும் வகுப்புகளுக்கு ஏற்ப அமைந்திருந்த 5 நிலைகளில் போட்டியிட்டனர். தேனீ 1 மாணவர்கள் இராகத்தோடு பாடல்கள் பாடியும், மின்னல் வேகத்தில் விடுகதைகளைக் கண்டறிந்தும், படங்களைக் கண்டறிந்தும் நடுவர்களைத் தம் மழலை கலந்த தமிழால் மயக்கினர். தேனீ 2 மாணவர்கள், ஔவையின் கொன்றைவேந்தனைப் பொருளோடு ஒப்பித்தும், அபிநயத்தோடு கதைகள் சொல்லியும், இணைச்சொற்களைக் கண்டறிந்தும் நடுவர்களை வியப்பில் ஆழ்த்தினர். நடுநிலை மாணவர்கள் திருக்குறள் கதைகளைத் திறம்பட கூறினர். மேலும், நடுவர்கள் கொடுத்த காட்சியை தமிழில் விவரித்தல், வார்த்தைகளைக் கண்டறிந்து எழுதுதல் (Scrambled words) போன்ற போட்டிகள் மூலம் தம் தமிழறிவைப் புலப்படுத்தினர். உயர்நிலை மாணவர்கள், பழமொழி நானூறு, நீதிநெறி விளக்கம் போன்ற செய்யுள்களை ஒப்பித்ததுடன், மொழிபெயர்த்தல், வார்த்தை விளையாட்டு, கட்டுரையைப் படித்து விடையளித்தல் போன்ற போட்டிகளில் பங்குபெற்று தம் தமிழ் எழுத்தறிவை நிலைநாட்டினர். "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு!" என்று, பேச்சுப் போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் தமிழ் இலக்கியம் காட்டும் நட்பை பற்றி அழகுத் தமிழில் நயம்பட உரைத்தனர். மிகவும் சுவாரசியமான திருக்குறள் வினாடி வினா நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்கள் திருக்குறளை எந்த வடிவில் கேட்டாலும் அநாயாசமாகக் கண்டறிந்து நடுவர்களையும், பார்வையாளர்களையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தனர். தமிழ்த்தேனீப் போட்டிகள் மூலமாக தம் தமிழறிவை வளர்த்துக்கொண்ட நம் இளஞ்சிறாரை ஊக்குவிக்கும் விதமாக பரிசளிப்பு விழாவும் அதே தேதியில் இனிதே நடந்தேறியது. நிகழ்ச்சிகள் குறித்த காலத்திற்குள் எந்தத் தடைகளும் இன்றி இனிதே நடைந்தேற முக்கியக் காரணம், போட்டியன்று பறந்து பறந்து பணியாற்றிய தன்னார்வலர்கள் தாம்! பங்குபெற்ற குழந்தைகளும்க்கு, அவர்களை வழிநடத்திய பெற்றோர்களும், போட்டிகளை திறம்பட நடத்திக் கொடுத்த நடுவர்களும் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பும் தமிழை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது. -செயின்ட்லூயிஸ் நகரிலிருந்து செந்தில்நாதன் மற்றும் இளங்கோ
|
||||||||
by Swathi on 26 Apr 2017 0 Comments | ||||||||
Tags: Missouri Tamil school Tamil Bee 2017 2017 Tamil Bee மிசெளரி தமிழ்ப்பள்ளி தமிழ்த்தேனீ | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|