LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

பிழையும் திருத்தமும்

1. சொற்பிழைகளும் திருத்தமும்

1.பார்க்கிறது என்பது இலக்கணச்சொல். இதனைப் பொதுமக்கள் பாக்குது எனப் பிழைபட வழங்குகின்றனர். இவ்வாறு அகமுடையாள் என்பதை ஆம்படையாள் என்றும், அகத்துக்காரி என்பதை ஆத்துக்காரி என்றும், உபாத்தியாயர் என்பதை வாத்தி என்றும், ஒன்றி என்பதை ஒண்டி என்றும் பலவாறு பிழைபட வழங்குகின்றனர். இங்ஙனம் பிழைபட வழங்குவதால் இவை வழக்கில் வேரூன்றிவிடுகின்றான; உருச்சிதைந்து மருவி வழங்குகின்றன. ஆசிரியர்களும் பெற்றோர்களும் மற்றோர்களும் இவற்றைத் திருத்திச் செம்மையான சொற்களை வழங்கும்படி பயிற்சி அளிக்கவேண்டும். மாணவப் பருவத்திலேயே இவ்வழுக்கள் திருத்தப்படுதல் நலம். இங்ஙனம் பிழைபட வழங்கப்பெறும் சொற்களில் சிலவற்றைக் கீழே காண்க.

வழுச்சொல் திருத்தம்
கோடாலி கோடரி
தலகாணி தலையணை
நிகளம் நீளம்
தவக்களை தவளை
மச்சான் மைத்துனன்
போகச்சே போகும்பொழுது
வரச்சே வரும்பொழுது
அலமேலு அலர்மேல்
ரொம்ப நிரம்ப
வாங்கிண்டு வாங்கிக்கொண்டு
அரணாக்கயிறு அண்ணாக்கயிறு அரைஞாண்
இடை (நிறை) எடை
ஊரணி ஊருணி
என்னமோ என்னவோ
எண்ணை எண்ணெய்
எம்ப்ளது எண்பது
ஏழரை நாட்டுச் சனியன் ஏழரையாட்டைச் சனியன்
கண்ணாலம் கலியாணம்
கார்க்கும் காக்கும்
சக்களத்தி சகக்கழுத்தி
சிலவு செலவு
சுவற்றில் சுவரில்
சுந்திரம் சுந்தரம்
வெந்நித் தண்ணி வெந்நீர்
பச்சைத் தண்ணி தண்ணீர்
(தண்ணீர்க்) கொளாய் (தண்ணீர்க்) குழை


2. எழுத்துப் பிழைகளும் திருத்தமும்

1.பிள்ளைகள் தம் கட்டுரைகளில் ர, ற, வேறுபாடு தெரியாமல் எழுதும் சொற்களுள் சிலவற்றையும் அவற்றின் திருத்தத்தையும் காண்க:

பிழை திருத்தம்
உறிய உரிய
திரவுகோல் திறவுகோல்
வரலாரு வரலாறு
தவராகும் தவறாகும்
தெறியாமல் தெரியாமல்
மறியாதை மரியாதை
பிறாமணன் பிராமணன்
ஏரினான் ஏறினான்
கூறை வீடு கூரை வீடு
நிரைய நிறைய

2. இவ்வாறே பிள்ளைகள் ல, ள, ழ, வேறுபாடு அறியாமல் செய்யும் பிழைகள் பல. அவற்றுள் சிலவற்றையும் அவற்றின் திருத்ததையும் கீழே காண்க:


பிழை திருத்தம்
பளக்கம் பழக்கம்
வளிகள் வழிகள்
வழரும் வளரும்
மகழுக்கு மகளுக்கு
தெழிவு தெளிவு
கேழ்வி கேள்வி

3. இங்ஙனம் ந, ண, ன, வேறுபாடு அறியாமல் பிள்ளைகள் சில தவறுகள் செய்கின்றனர். அவற்றுள் சிலவற்றையும் அவற்றின் திருத்தத்தையும் கீழே காண்க:


பிழை திருத்தம்
உன்டாகின்ற உண்டாகின்ற
கற்பணா சக்தி கற்பனா சக்தி
தண்டணை தண்டனை
காரனம் காரணம்
ஜன்து ஜந்து
தன்னீர் தண்ணீர்

4. ஷ, ஸ, ஹ, க்ஷ, ஜ போன்ற வடமொழி எழுத்துக்களைச் சரியாக வழங்கத் தெரியாமலும், தமிழ் முறைப்படி மாற்றத் தெரியாமலும், ஒன்றை மற்றொன்றாகக் கருதியும் சில பிள்ளைகள் பிழைபட எழுதுகின்றனர். அவற்றுள் சிலவற்றையும் அவற்றின் திருத்தங்களையும் கீழே காண்க:


பிழை திருத்தம்
காக்ஷி காட்சி (தமிழ்ச் சொல்)
புஸ்பம் புஷ்பம்
சாட்க்ஷி சாக்ஷி
வய்ஷணவர்கள் வைஷ்ணவர்கள்
பக்சணம் பக்ஷணம்
மாக்ஷி மாட்சி (தமிழ்ச் சொல்)

5. வடசொற்களில் றகரத்தைச் சிலர் தவறாகச் சேர்த்து எழுதுகின்றனர். அதனால் வரும் பிழைகளையும் அவற்றுக்குரிய திருத்தங்களையும் கீழே காண்க:


பிழை திருத்தம்
றாமசாமி (இ) ராமசாமி
ஈ.சுவறன் ஈஸ்வரன்
நாறாயணன் நாராயணன்

6. சொல்லுக்கு இடையில் ற், ல், ள், என்ற எழுத்துக்கள் வேறு எந்த மெய்யெழுத்தோடும் இணைந்து வாரா; உயிர்மெய் எழுத்துக்களோடு தாம் இணைந்து வரும்; இரட்டித்தால் றகர, லகர, ளகரங்களாகத்தான் (உயிர்மெய் எழுத்தாகத்தான்) இரட்டிக்கும் இதனை அறியாது, மாணவர் செய்யும் தவறுகள் பல. அவர்கள் செய்யும் சில தவறுகளையும் அவற்றின் திருத்தங்களையும் கீழே காண்க:


பிழை திருத்தம்
கற்க்கும் கற்கும்
கல்த்தரை கல்தரை
கோள்ச் சொன்னான் கோள் சொன்னான்
தெற்க்கு தெற்கு
போல்த் தோன்றும் போல் தோன்றும்
அதற்க்கு அதற்கு
பற்ப்பல பற்பல
கட்க்குடி கட்குடி
பல்ப்பொடி பல்பொடி
கற்ப்பித்தான் கற்பித்தான்


3. செய்தித் தாள்கள்

1.ஒரு ஸ்தீரி கைதானாள்.

2.பஸ்ஸும் ரிக்ஷாவும் மோதிக் கொண்டது.

3.சபாநாயகர் கர்ஜனை.

4.கும்பகோணத்தில் கலாட்டா

இவ்வாறு தமிழ் நாள் இதழ்களில் பல தலைப்புக்களைக் காணலாம். இவற்றைக் கீழ்வருமாறு பிழையற்ற முறையில் எழுதலாம்:

1.ஒரு பெண் சிறைப்பட்டாள்.

2.பஸ்ஸும் ரிக்ஷாவும் மோதிக் கொண்டன.

3.அவைத் தலைவர் முழக்கம்.

4.கும்பகோணத்தில் குழப்பம்.

பெரும்பாலான நாள் இதழ்களில் தமிழ்ப் புலமையுடையவர் இல்லாத குறையால் அவ்விதழ்களில் பிறமொழிச் சொற்கள் மிகுதியாக வருகின்றன. தமிழ்ப் புலமையுடையார் நாள் இதழ் அலுவலகங்களில் பணியாற்றுவராயின், அத்தாள்களில் நல்ல தமிழை எதிர் பார்க்கலாம். மதுரையிலிருந்து வெளியாகும் `தமிழ் நாடு' என்னும் நாள் இதழில் பெரும்பாலும் பிழையற்ற தமிழ்ச் சொற்களைக் காணலாம். பிற செய்தித் தாள்களில் வரும் சொற்களையும் சொற்றொடர்களையும், `தமிழ் நாடு' இதழில் வரும் சொற்றொடர்களையும் கீழே கண்டு உண்மை தெளிக:

பிற செய்தித் தாள்கள் `தமிழ்நாடு' இதழ்
காங்கிரஸ் கமிட்டி காங்கிரசுக் குழு
கோயம்புத்தூர் ஜில்லா கோவை மாவட்டம்
சர்வ கலாசாலை பல்கலைக் கழகம்
மூன்று வருஷப் பட்டம் மூன்று ஆண்டுப் பட்டம்
ஸ்தாபனம் நிறுவனம்
உண்ணாவிரதம் உண்ணா நோன்பு
பந்தோபஸ்துக் கவுன்சில் பாதுகாப்புக் குழு
மெஜாரிட்டி ஸ்தானங்கள் பெரும்பான்மை இடங்கள்
மாஜி முதல் மந்திரி முன்னாள்
தலைமையமைச்சர்
வாசகசாலை படிப்பகம்
ஓட்டர் ஜாபிதா வாக்காளர் பட்டியல்
காரியதரிசி செயலாளர்
காரியக் கமிட்டி செயற்குழு
பிரேரேபித்தார் முன்மொழிந்தார்
அங்கத்தினர் உறுப்பினர்

தாய்மொழி வளர்ச்சியில் நாட்டமும் உண்மைத் தமிழ்ப் புலமையும் உடையவர் செய்தித்தாள் அலுவலகங்களில் இருப்பின், செய்தித்தாள்களில் நல்ல தமிழ்ச் சொற்களையும் எளிய இனிய செந்தமிழ் நடையையும் காணலாம். அத்தாள்களைப் படிக்கும் பொதுமக்களும் நாளடைவில் நல்ல தமிழ்ச் சொற்களைக் கற்றுக்கொள்வர்.


4. பெயர்ப் பலகைகள்

1.தமிழ் நாட்டுச் சிற்றுண்டி விடுதியில் உள்ள பெயர்ப் பலகைகளில் பிழைபட்ட தமிழ்ச் சொற்களைக் காணலாம். அவற்றோடு ஆங்கிலச் சொற்கள் தமிழ் எழுத்துக்களில் வரையப்பட்டுள்ளன. இவையனைத்தும் நல்ல தமிழில் இருத்தலே சாலச் சிறப்பாகும்.

இருப்பவை திருத்தம்
காப்பி ஹோட்டல் சிற்றுண்டி விடுதி
லஞ்சு ஹோம் ``
கபே (ஊயகந) ``
ரெஸ்டாரன்ட் ``


1.இவ்வாறே தமிழ் அல்லாத பிறமொழிச் சொற்களைப் பல்வேறு கடைப் பலகைகளிலும் தொழிற்சாலைப் பலகைகளிலும் எழுதியிருத்தலைக் காணலாம். அவற்றுள் சிலவற்றையும் அவற்றுக்கு நேரான தமிழ்ச் சொற்களையும் கீழே காண்க:

இப்பொழுது இருப்பவை தமிழ்ப் பெயர்கள்
ரைஸ் மில் அரிசி ஆலை
ஜின்னிங் பேக்டரி கொட்டை பிரிக்கும்
தொழிற்சாலை
காட்டன் மில் பருத்தி ஆலை
பேக்கரி (உ) ரொட்டி செய்யுமிடம்
பிரிண்டிங் பிரஸ் அச்சகம்
(ராஜேந்திரன்) சலூன் (இராஜேந்திரன்)
முடிதிருத்தகம்
முத்தையா லாண்டரி முத்தையன் சலவைக்கூடம்
ஜவுளி வியாபாரம் அறுவை வாணிகம்
புஸ்தக ஷாப் புத்தகக் கடை
மிட்டாய்க் கடை தின்பண்டக் கடை
மெடிக்கல் மார்ட் மருந்துக் கடை
லாட்ஜிங் தங்குதல்
போர்டிங் உண்ணுதல்
போர்டிங் அண்ட் லாட்ஜிங் உண்டியும் உறையுளும்
புக் செல்லர் புத்தகம் விற்பவர்
டெயிலரிங் ஷாப் தையற் கடை
பர்னிச்சர் மார்ட் மரப் பொருட் கடை


5. பிற பிழைகளும் திருத்தமும்
1. ஓர், ஒரு


1.ஒரு அணா ஓர் அணா

2.ஒரு வடை ஓர் வடை

இவ்வாறு ஓர் என்பதுவும் ஒரு என்பதுவும் எல்லாச் சொற்களுக்கு முன்பும் பயன்படுத்தப்படுகின்றன.
ஓர் + அணா - வருமொழி முதலில் `அ' என்னும் உயிரெழுத்து இருக்கிறது. அதனால் ஓர் என இருத்தலே ஓசை நயம் தருவதாகும். ஓரெழுத்து, ஓருயிர், ஓருண்மை, ஓரூர் என வருதல் வழக்காகும்; ஓசை நயமும் சிறந்து விளங்குகிறது.


(1) இவற்றையே ஒரு எழுத்து, ஒரு உயிர், ஒரு உண்மை, ஒரு ஊர் என்று சொல்லிப் பாருங்கள்; ஓசை நயம் கெடும். எனவே, உயிர் எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்களுக்கு முன்பு ஓர் என்பதைப் பயன்படுத்துதல் நலம்.
(2) உயிர் மெய்யெழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்களுக்கு முன்னர் ஒரு என்பதைப் பயன்படுத்துதல் நலம்.


ஒரு வீடு, ஒரு நகை, ஒரு கப்பல் - என வருதலே சிறப்பு.
2. அது, அஃது


1.அஃது இவ்வாறு உண்டாயிற்று.

2.அது வீட்டுப் பசு.

அஃது என்பதையடுத்து வரும் சொல்லில் முதல் எழுத்து உயிரெழுத்தாய் இருக்கவேண்டும். அது என்பதை அடுத்து வரும் சொல்லின் முதல் எழுத்து உயிர்மெய்யெழுத்தாய் இருத்தல் நலம். கீழ்வரும் சான்றுகளைக் காண்க:

1.அஃது அவ்வாறு இருப்பது முறையன்று.

2.அது வெளியே சென்றது.

3.இஃது என்னுடைய புத்தகம்.

4.இது முருகன் புத்தகம்.

5.அஃது அப்பாவால் வாங்கப்பட்டது.

6.அது யானையின் படம்.

3. தான், தாம்

அவன்தான் வந்தான்.
அவள்தான் பாடினாள்.
அதுதான் வந்தது.

இவ்வாறு ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால்களை அடுத்துத் `தான்' என்பது வரும். தான் என்பது ஒருமை; ஆதலால் இஃது ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் ஆகிய மூன்று பால்களையும் அடுத்தே வரும்.

1.அவர்தாம் வந்தார்.

2.அரசர்தாம் பேசினார்.

3.அரசியர்தாம் சென்றனர்.

4.பொதுமக்கள்தாம் பாராட்டினர்.

5.நாய்கள்தாம் ஓடின.

இவ்வாறு பலர்பால், பலவின்பால்களை அடுத்தே `தாம்' என்னும் பன்மைச்சொல் வருதல் முறை. இவற்றுக்கு மாறாக, அவன்தாம் வந்தான், அவர்தான் வந்தார் என்று சொல்வதோ, எழுதுவதோ தவறு.

4. அன்று, அல்ல, அல்லன் முதலியன

1.
1.அது நாய்அன்று.

2.இது பூனை அன்று.

3.அது மலை அன்று.

அன்று என்பது ஒன்றன்பால் வினைமுற்று. எனவே, எழுவாய் ஒன்றன்பாலாக வருதல் வேண்டும். மேல் வாக்கியங்களில் நாய், பூனை, மலை என்பன ஒன்றன்பால்கள். இவ்வாறு ஒன்றன்பாற் பெயர் ஒன்றன்பால் வினைமுற்றை ஏற்று வருவதே முறை.
இதற்கு மாறாக,


1.அது நாய் அல்ல.

2.இது பூனை அல்ல.

3.அது மலை அல்ல.

என்று எழுதுதல் தவறு.

2.
1.அவை நாய்கள் அல்ல.

2.இவை பூனைகள் அல்ல.

3.அவை மலைகள் அல்ல.

இங்க அல்ல என்பது பலவின்பால் வினைமுற்று. நாய்கள், பூனைகள், மலைகள் என்பவை பலவின்பாற் பெயர்கள். எனவே, பலவின்பாற் பெயர்கள் பலவின்பால் வினைமுற்றை ஏற்று வருவதே முறை. இதற்கு மாறாக,

1.அவை நாய்கள் அன்று

2.இவை பூனைகள் அன்று.

3.அவை மலைகள் அன்று.

என்று எழுதுதல் தவறு,

3.
1.இதைச் செய்தவன் குப்பன் அல்லன்.

2.தேர்வு எழுதியவன் முருகன் அல்லன்.

3.வந்தவன் வரதன் அல்லன்.

இவற்றில் குப்பன், முருகன், வரதன் என்பன ஆண்பால் பெயர்கள். அல்லன் என்பது ஆண்பால் வினைமுற்று, இவ்வாறு ஆண்பால் பெயருக்கு ஆண்பால் வினைமுற்றே பொருத்தமானது. இங்ஙனம் எழுதாமல்,

1.இதைச் செய்தவன் குப்பன் அல்ல.

2.தேர்வு எழுதியவன் முருகன் அல்ல.

3.வந்தவன் வரதன் அல்ல.

என்று எழுதுவது தவறு.

4.
1.கோலம் போட்டவள் கோமளம் அல்லள்.

2.பாடினவள் பத்மினி அல்லள்.

3.அவள் மாதவி அல்லள்.

இவ்வாறு பெண்பால் பெயருக்குப் பெண்பால் வினைமுற்று வருதலே பொருத்தமாகும். அவள் மாதவி அல்ல - என்று எழுதுவது தவறு.

5.
1.இங்கு வந்தவர் அரசர் அல்லர்.

2.குழப்பம் செய்தவர்கள் அதிகாரிகள் அல்லர்.

3.கூட்டத்தில் நசுக்குண்டவர் பெண்கள் அல்லர்.

இவ்வாறு பலர்பால் பெயர்களுக்குப் பலர்பால் வினைமுற்று வருதலே பொருத்தமாகும்.
கூட்டத்தில் நசுக்குண்டவர் பெண்கள் அல்ல - என்று எழுதுவது தவறு.

1.அல்லன் - ஆண்பால் வினைமுற்று.

2.அல்லள் - பெண்பால் வினைமுற்று.

3.அல்லர் - பலர்பால் வினைமுற்று.

4.அன்று - ஒன்றன்பால் வினைமுற்று.

5.அல்ல - பலவின்பால் வினைமுற்று.

5. வேண்டும் - வேண்டா

1.எனக்குப் பழம் வேண்டும்.

2.எனக்குக் காய் வேண்டா.

3.எனக்குப் பழங்கள் வேண்டும்.

4.எனக்குப் பழங்கள் வேண்டா.

இவற்றுள்,

வேண்டும் - உடன்பாட்டுவினை
வேண்டா - எதிர்மறைவினை

வேண்டா என்பதனை வேண்டாம் என்று சொல்லுவதோ, எழுதுவதோ தவறு. முதல் வகுப்புத் தமிழ்ப் பாட நூலில்,

``ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்''

என்று வருதல் தவறாகும்; அஃது,

``ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டா''

என்று இருத்தலே முறையானது.
இருக்க வேண்டா, சொல்ல வேண்டா, இணங்க வேண்டா, போக வேண்டா - என வருதலே முறையாகும்.

by Swathi   on 26 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.