பீகார் மாநிலம், பாட்னாவில் நேற்று ரயில் நிலையம், திரையரங்கு மற்றும் நரேந்திர மோடி பேசிய காந்தி மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகள் தொடர் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.
இந்த குண்டுவெடிப்பில், 6 பேர் பலியாகினர். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் வெடிக்காத குண்டுகளையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். ரயில் நிலைய கழிவறை அருகே குண்டு வெடித்த போது அங்கிருந்து சந்தேகப்படும்படியாக ஓடிய ஒருவனை போலீசார் வளைத்து பிடித்து கைதுசெய்துள்ளனர். மேலும், சந்தேகத்தின் பேரில், இரண்டு நபர்களையும் கைது செய்துள்ள போலீசார், பிடிபட்ட இந்த 3 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் தொடர் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
பாட்னா போலீசார், பிடிபட்டவர்களின் விபரங்களை ஜார்கண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியின் துர்வா பகுதியில் உள்ள அவர்களில் ஒருவனின் வீட்டில் போலீசார் நேற்று நள்ளிரவு அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிப் பொருட்கள், டெட்டனேட்ர் ஒயர், டைமர், குக்கர், தீவிரவாத குழுக்களின் துண்டு பிரசுரங்கள் மற்றும் அல் கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின் லேடனின் புகைப்படம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இதனால், பாட்னா தொடர் குண்டுவெடிப்புக்கும், அல் கொய்தா இயக்கத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா, என்ற கோணத்திலும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
|