தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில் அமெரிக்காவிலுள்ள விர்ஜினியா மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள், மொய்விருந்து நடத்தி, அதன் மூலம் வரும் தொகையை பொருளாதார ரீதியில் நலிந்த தமிழக விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். இதற்காக சான்டில்லி பகுதியில் வரும் 29(ஜூலை, 2017) ஆம் தேதி மொய் விருந்து நடத்துகின்றனர். ஒருவர் பொருளாதார ரீதியில் நலிவடைந்துவிட்டால், அவர் தனது வாழ்வாதாரத்துக்கு மொய் விருந்து நடத்தி அதன் மூலம் கிடைக்கும் நிதியை வைத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வார். இந்த பண்பாட்டு முறை தற்போது தமிழகத்தில் அழிந்து கொண்டிருந்தாலும், தமிழகத்தின் ஒரு சில கிராமங்களில் மொய் விருந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
இதே போன்று தமிழகத்தில் தண்ணீரின்றி தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உதவ மொய் விருந்து நடத்தி நிதி சேர்க்க அமெரிக்க வாழ் தமிழர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த மொய் விருந்துக்காக , விர்ஜினியா வட்டார தமிழர்களுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சி குறித்த தகவல்களுக்கு (760) 716-0579, (571) 242-9749 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
|