|
||||||||
மூன்றாம் திருமுறை-102 |
||||||||
3.102.திருநாரையூர்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சௌந்தரேசர்.
தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.
3890 காம்பினை வென்றமென் றோளி பாகங்
கலந்தா னலந்தாங்கு
தேம்புனல் சூழ்திகழ் மாமடு விற்றிரு
நாரை யூர்மேய
பூம்புனல் சேர்புரி புன்ச டையான்
புலியின் னுரிதோன்மேல்
பாம்பினை வீக்கிய பண்ட ரங்கன்
பாதம் பணிவோமே
3.102.1
சிவபெருமான், மூங்கிலைப் போன்ற தோளையுடைய உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக் கொண்டவர். நலம் தரும் இனிய நீர் சூழ்ந்த சிறந்த நீர்நிலைகளையுடைய திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். அழகிய கங்கையையும், முறுக்குண்ட சிவந்த சடையையுமுடையவர். புலித்தோலாடை அணிந்தவர். பாம்பைக் கச்சாகக் கட்டியவர். பண்டரங்கன் என்னும் திருப் பெயர் உடையவர். அத்தகைய சிவபெருமானின் திருப்பாதங்களை நாம் பணிவோமாக.
3891 தீவினை யாயின தீர்க்க நின்றான்
றிருநாரை யூர்மேயான்
பூவினை மேவு சடைமுடி யான்புடை
சூழப் பலபூதம்
ஆவினி லைந்துங்கொண் டாட்டு கந்தா
னடங்கார் மதின்மூன்றும்
ஏவினை யெய் தழித்தான் கழலே
பரவா வெழுவோமே
3.102.2
சிவபெருமான் தம்மை வழிபடுபவர்களின் தீவினைகளைத் தீர்த்தருள்பவர். திருநாரையூர் என்னும் திருத் தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர். பூமாலையணிந்த சடைமுடி உடையவர். பூதகணங்கள் புடைசூழ விளங்குபவர். பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் (பஞ்சகவ்வியம்) அபிடேகம் செய்து கொள்வதில் விருப்பமுடையவர். அடங்காது திரிந்த பகையசுரர்களின் மும்மதில்களை ஓர் அம்பு எய்து அழித்தவர். அப்பெருமானின் திருவடிகளை நாம் வழிபட்டு உயர்வடைவோமாக!.
3892 மாயவன் சேயவன் வெள்ளி யவன்
விடஞ்சேரு மைமிடற்றன்
ஆயவ னாகியொ ரந்தர மும்மவ
னென்று வரையாகம்
தீயவ னீரவன் பூமி யவன்றிரு
நாரை யூர்தன்னில்
மேயவ னைத்தொழு வாரவர் மேல்வினை
யாயின வீடுமே
3.102.3
கருநிறமுடைய திருமால், செந்நிறமுடைய உருத்திரன், வெள்ளைத் தாமரைப் பூவில் வீற்றிருக்கும் பிரமன் விட முண்ட நீலகண்டமுடைய மகேசுவரன் ஆகிய மூர்த்தி பேதங்களும், மற்றும் பல வேறுபாடான மூர்த்தி பேதங்களும் தாமேயாகியவர். மலைபோன்ற திருமேனி உடையவர். நெருப்பு, நீர், பூமி (உபலட்சணத்தால் காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர்) இவற்றையும் உடம்பாக உடையவர். திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பு வீற்றிருந்தருள்பவர். அப்பெருமானைத் தொழு வாருடைய வினைகள் முழுதும் அவர்களைவிட்டு நீங்கும்.
3893 துஞ்சிரு ளாடுவர் தூமுறுவல்
துளங்குமு டம்பினராய்
அஞ்சுட ராரெரி யாடு வரார்அழ
லார்வி ழிக்கண்
நஞ்சுமிழ் நாக மரைக்கசைப் பர்நல
னோங்கு நாரையூர்
எஞ்சிவ னார்க்கடி மைப்படு வார்க்கினி
யில்லை யேதமே
3.102.4
சிவபெருமான் அமைத்தும் ஒடுங்குகின்ற ஊழிக் காலத்தில் திருநடனம் செய்பவர். தூய புன்சிரிப்போடு விளங்கும் திருமேனியர். அழகிய சுடரானது நன்கு எரியும்படி கைகளை வீசி ஆடுவார். நெற்றியில் நெருப்புக் கண்ணுடையவர். நஞ்சைக் கக்கும் நாகத்தை அரையில் கச்சாகக் கட்டியவர். நலம் பெருகச் செய்யும் திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற எம் சிவபெருமானுக்கு அடிமைத் தொண்டு செய்பவர்கட்கு இனி எந்நாளும் துன்பம் என்பதே இல்லை.
3894 பொங்கி ளங்கொன் றையினார் கடலில்
விடமுண் டிமையோர்கள்
தங்களை யாரிடர் தீர நின்ற
தலைவர் சடைமேலோர்
திங்களைவைத்தன லாட லினார்திரு
நாரை யூர்மேய
வெங்கனல் வெண்ணீ றணிய வல்லா
ரவரே விழுமியரே
3.102.5
சிவபெருமான், செழித்து விளங்கும் இடங்கொன்றை மலரைச் சூடியவர். பாற்கடலில் தோன்றிய விடத்தை உண்டு தேவர்களின் பெருந்துயரைத் தீர்த்த தலைவர். சடைமேல் ஒரு சந்திரனை அணிந்து நெருப்பைக் கையிலேந்தி ஆடுபவர். திரு நாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். வெங்கனலால் நீறாக்கப்பட்ட வெண்ணீற்றினை அணியவல்ல அப்பெருமானே யாவரினும் மேலானவர் ஆவர்.
3895 பாரு றுவாய் மையினார் பரவும்
பரமேட்டி பைங்கொன்றைத்
தாரு றுமார் புடையான் மலையின்
றலைவன் மலைமகளைச்
சீரு றுமா மறுகிற் சிறைவண்
டறையுந் திருநாரை
யூரு றையெம் மிறைவர்க் கிவையொன்
றொடொன் றொவ்வாவே
3.102.6
சிவபெருமான், இந்நிலவுலகம் முழுவதும் புகழ் பரவும் மெய்யுணர்வுடையவர்களால் வணங்கப்படும் மேலான பரம்பொருள் ஆவார். பசுமைவாய்ந்த கொன்றை மாலையை அணிந்த மார்புடையவர். கைலைமலையின் தலைவர். மலைமகளைச் சிறப்புடன் ஒரு பாகமாகக் கொண்டவர். வீதிகள் சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்கின்ற இறைவர் அணிந்துள்ள பொருள்கள் ஒன்றோடொன்று ஒவ்வாதனவாம்.
3896 கள்ளி யிடுதலை யேந்துகை யர்கரி
காடர் கண்ணுதலர்
வெள்ளிய கோவண வாடை தன்மேல்
மிளிரா டரவார்த்து
நள்ளிரு ணட்டம தாடுவர் நன்னல
னோங்கு நாரையூர்
உள்ளிய போழ்தி லெம்மேல் வருவல்
வினையாயின வோடுமே
3.102.7
சிவபெருமான் கள்ளிச் செடிகள் நிறைந்த சுடுகாட்டில் இடப்பட்ட மண்டையோட்டை ஏந்திய கையையுடையவர். சுடுகாட்டில் இருப்பவர். நெற்றிக் கண்ணர். வெண்ணிறக் கோவண ஆடையை அணிந்து, அதன்மேல் ஒளிரும், ஆடுகின்ற பாம்பைக் கச்சாகக் கட்டி நள்ளிருளில் நடனமாடுபவர். நல்ல நலன்களை எல்லாம் மேன்மேலும் பெருகத் தருகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை நினைத்த மாத்திரத்தில் எம்மேல் வருகின்ற வலிய வினைகள் யாவும் ஓடிவிடும்.
3897 நாமமெ னைப்பல வும்முடை யான்நல
னோங்கு நாரையூர்
தாமொம் மெனப்ப றையாழ் குழல்
தாளார் கழல்பயில
ஈம விளக்கெரி சூழ்சு டலை
யியம்பும் மிடுகாட்டில்
சாம முரைக்கநின் றாடு வானுந்
தழலாய சங்கரனே
3.102.8
நலன்களைப் பெருகச் செய்யும் திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் பல திருப்பெயர்களை உடையவர். பறை, யாழ், குழல் முதலியன தாம் ஒம் என ஒலிக்க, அவற்றொடு ஒத்துத் தம் திருவடிகளில் அணிந்துள்ள கழல்கள் ஒலிக்க, காட்டில், கொள்ளி விளக்கு எரிய, சாமகானம் ஒலிக்க நின்றாடுகின்ற பெருமான் நெருப்புருவான சங்கரனே ஆவார்.
3898 ஊனுடைவெண் டலைகொண் டுழல்வா
னொளிர்புன் சடைமேலோர்
வானிடைவெண் மதிவைத் துகந்தான்
வரிவண் டியாழ்முரலத்
தேனுடைமா மலரன்னம் வைகுந்
திருநாரை யூர்மேய
ஆனிடையைந் துகந்தா னடியே
பரவா வடைவோமே
3.102.9
சிவபெருமான் ஊனுடை மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டு, பிச்சையேற்றுத் திரிபவர். ஒளிர்கின்ற சடைமேல், வானத்தில் தவழும் வெண்ணிறச் சந்திரனை அணிந்து, மகிழ்பவர். வரிகளையுடைய வண்டுகள் யாழிசைபோல் ஒலிக்க, தேன் உடைய சிறந்த தாமரை மலரில் அன்னம் தங்க விளங்கும் திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். பசுவில் இருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுதலை விரும்புபவர். அப்பெருமானின் திருவடிகளை வணங்கி நற்கதி அடைவோமாக!
3899 தூசுபு னைதுவ ராடைமேவுந்
தொழிலாருடம்பினிலுள்
மாசுனைந்துடைநீத்தவர்கண்
மயனீர்மை கேளாதே
தேசுடையீர்கள் தௌந்தடைமின்
திருநாரை யூர்தன்னில்
பூசுபொடித்த லைவ ரடியா
ரடியே பொருத்தமே 3.102.10
மஞ்சட் காவி உடை உடுத்தும் புத்தர்களும், உடம்பிலும், உள்ளத்திலும், அழுக்கினைக் கொண்டு ஆடை உடுத்தலை ஒழித்தவர்களாகிய சமணர்களும் கூறும் மயக்கும் தன்மையுடைய மொழிகளைக் கேளாதீர்கள். மெய்யறிவுடையவர்களே! சிவபெருமானே மெய்ப்பொருள் என்பதைத் தௌவாக உணர்ந்து, திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, திருவெண்ணீறு பூசிய தலைவராகிய சிவபெருமானின் திருவடி களையும், அவர் அடியார்களின் திருவடிகளையும் வணங்குவதே பொருந்தும் எனக்கொண்டு அவற்றைச் சரணாக அடையுங்கள்.
3900 தண்மதி தாழ்பொழில் சூழ் புகலித்
தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்மதி சேர்சடை யானுறையுந்
திருநாரை யூர்தன்மேல்
பண்மதி யாற்சொன்ன பாடல் பத்தும்
பயின்றார் வினைபோகி
மண்மதி யாதுபோய் வான்புகுவர்
வானோ ரெதிர்கொளவே
3.102.11
குளிர்ச்சி பொருந்திய சந்திரன் தவழ்கின்ற சோலைகள் சூழ்ந்த திருப்புகலி என்னும் திருத்தலத்தில் அவதரித்த தமிழ் வல்ல ஞானசம்பந்தன், ஒளி பொருந்திய சந்திரனை அணிந்த சடையையுடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருநாரையூர் என்னும் திருத்தலத்தின் மேல், பயில்வோருக்கு இசையறிவு உண்டாகும் வண்ணம் பாடியருளிய இப்பாடல்கள் பத்தையும் பயின்று ஓத வல்லவர்கள் மண்ணுலக வாழ்க்கை நிலையற்றதென உணர்ந்து அதனை மதியாது, தேவர்கள் எதிர் கொண்டழைக்க வானுலகை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
3.102.திருநாரையூர் |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|