|
||||||||
மூன்றாம் திருமுறை-105 |
||||||||
3.105.திருக்கலிக்காமூர்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுந்தரேசுவரர்.
தேவியார் - அழகுவனமுலையம்மை.
3923 மடல்வரை யின்மது விம்முசோலை
வயல்சூழ்ந் தழகாருங்
கடல்வரை யோதங் கலந்துமுத்தஞ்
சொரியுங் கலிக்காமூர்
உடல்வரை யின்னுயிர் வாழ்க்கையாய
வொருவன் கழலேத்த
இடர்தொட ராவினை யானசிந்தும்
மிறைவன் னருளாமே
3.105.1
பூ இதழ்களில் அளவற்ற தேன் பெருகுகின்ற சோலைகளும், வயல்களும் சூழ, மலைபோன்ற வரும் அலைகளில் கலந்து முத்துக்களைக் கடல் சொரிகின்ற திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவனும், உடல் எல்லையில் தங்கும் உயிர் வாழ்வதற்குக் காரணமான உயிராகிய ஒப்பற்றவனுமாகிய சிவபெருமான் திருவடிகளை வணங்கித் துதிக்கத் துன்பங்கள் தொடரமாட்டா. அத்துன்பங்கட்குக் காரணமான, அநுபவித்துக் கழிந்தவை போக எஞ்சியுள்ள வினைகளும் அழிந்துபோகும். இறைவனின் திருவருட்சக்தி பதியும் பேரின்பம் பெறுவர்.
3924 மைவரை போற்றிரை யோடுகூடிப்
புடையே மலிந்தோதங்
கைவரை யால்வளர் சங்கமெங்கும்
மிகுக்குங் கலிக்காமூர்
மெய்வரை யான்மகள் பாகன்றன்னை
விரும்ப வுடல்வாழும்
ஐவரை யாசறுத் தாளுமென்பர்
அதுவுஞ் சரதமே
3.105.2
மேகம் படியும் மலைபேன்ற அலைகளோடு கூடிவரும் கடல், கரையின் கண்ணே பருத்த சங்குகளை எங்கும் மிகுதியாகக் குவிக்கும் திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, மலையரசன் மகளான உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டவரான சிவபெருமானை விரும்பி அடைய, அப்பெருமான் நமது உடலில் வாழும் ஐந்து இந்திரியங்களையும் குற்றமறுத்து நம்மை ஆட்கொள்வர் என்று அறிஞர்கள் கூறுவர். அஃது உண்மையேயாம்.
3925 தூவிய நீர்மல ரேந்திவையத்
தவர்க டொழுதேத்தக்
காவியி னேர்விழி மாதரென்றுங்
கவினார் கலிக்காமூர்
மேவிய வீசனை யெம்பிரானை
விரும்பி வழிபட்டால்
ஆவியுள் நீங்கல னாதிமூர்த்தி
யமரர் பெருமானே
3.105.3
அபிடேகம் செய்யும் பொருட்டுத் தூய நீரையும், பூசிக்கும் பொருட்டு மலர்களையும் ஏந்தி வந்து இவ்வுலகத்தவர்களும், நீலோற்பல மலர்போன்ற கண்களை உடைய பெண்களும் வணங்கிப் போற்ற, என்றும்அழகுடன் திகழும் திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, எம் தலைவனான சிவபெருமானை விரும்பி வழிபட்டால், ஆதிமூர்த்தியும் தேவர்கட்கெல்லாம் தலைவனுமான அப்பெருமான் உயிரினுள் நீங்கலாகாத தன்மையோடு விளங்குவான்.
3926 குன்றுகள் போற்றிரை யுந்தியந்தண்
மணியார் தரமேதி
கன்றுடன் புல்கியா யம்மனைசூழ்
கவினார் கலிக்காமூர்
என்றுண ரூழியும் வாழுமெந்தை
பெருமா னடியேத்தி
நின்றுணர் வாரை நினையகில்லார்
நீசர் நமன்றமரே
3.105.4
குன்றுகளைப் போன்ற உயர்ந்த கடலலைகள் அழகிய குளிர்ச்சி பொருந்திய முத்துக்களைத் தள்ளிக் கொண்டு வந்து சேர்த்தலும், எருமைக் கூட்டங்கள் கன்றுகளோடு கூடித் தத்தம் மனைகளைச் சென்று சேர்தலுமுடைய அழகு பொருந்திய திருக்கலிக்காமூர் என்ற திருத்தலத்தில் ஊழிக்காலத்திலும் வீற்றிருந்தருளும் எந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி நின்று வழிபடுகின்ற அடியவர்களை நினையாதவர்கள் கீழ்மக்கள் ஆவர். அவர்கள் இயமனது சுற்றத்தாரும் ஆவர்.
3927 வானிடை வாண்மதி மாடந்தீண்ட
மருங்கே கடலோதங்
கானிடை நீழலிற் கண்டல்வாழுங்
கழிசூழ் கலிக்காமூர்
ஆனிடை யைந்துகந் தாடினானை
யமரர் தொழுதேத்த
நானடை வாம்வண மன்புதந்த
நலமே நினைவோமே
3.105.5
வானத்தில் ஒளிரும் சந்திரனைத் தொடுமளவு உயர்ந்த மாடங்களும், பக்கங்களில் கடலலைகள் மோதச் சோலைகளில் நிழலில் செழித்து வளரும் தாழைகளும் கொண்ட உப்பங் கழிகள் சூழ்தலுமுடையது திருக்கலிக்காமூர். இத்திருத் தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவரும், பசுவிலிருந்து பெறப்படும் பஞ்ச கவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுகின்றவரும் ஆய சிவபெருமானைத் தேவர்கள் தொழுது போற்ற அவர்கள் அடையாத நலன்களை அடியேன் அடையும் வண்ணம் அன்புடன் அவன் அருள்புரிந்த சிறப்பினை அடையும் வண்ணம் அன்புடன் அவன் அருள்புரிந்த சிறப்பினை என்றும் நினைந்து போற்றுவோமாக!
3928 துறைவளர் கேதகை மீதுவாசஞ்
சூழ்வான் மலிதென்றல்
கறைவள ருங்கட லோதமென்றுங்
கலிக்குங் கலிக்காமூர்
மறைவள ரும்பொரு ளாயினானை
மனத்தா னினைந்தேத்த
நிறைவள ரும்புக ழெய்தும்வாதை
நினையா வினைபோமே
3.105.6
கடற்கரையில் வளர்ந்துள்ள தாழையின் பூவின் நறுமணத்தைக் கவர்ந்து வீசுகின்ற தென்றலோடு, மிக்க கரு நிறமுடைய கடலலைகள் எக்காலத்தும் ஒலிக்கின்ற திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, நால்வேதங்களின் உட்பொருளாக விளங்கும் சிவபெருமானை மனத்தால் நினைந்து போற்ற எக்காலத்தும் அழியாத புகழ் வந்து சேரும். துன்பம் வந்து சேர நினையாது. அத்துன்பத்திற்குக் காரணமான வினைகளும் நீங்கும்.
3929 கோலநன் மேனியின் மாதர்மைந்தர்
கொணர்மங் கலியத்திற்
காலமும் பொய்க்கினுந் தாம்வழுவா
தியற்றுங் கலிக்காமூர்
ஞாலமுந் தீவளி ஞாயிறாய
நம்பன் கழலேத்தி
ஓலமி டாதவ ரூழியென்று
முணர்வைத் துறந்தாரே
3.105.7
அழகிய நல்ல மேனியுடைய மகளிரும், ஆடவரும்; காலமழை பொய்த்தாலும், பூசைக்குரிய மங்கலப் பொருள்களை வழுவாது கொண்டுவந்து சேர்த்துப் பூசை நடத்தும் சிறப்புடையது திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலமாகும். அங்கு வீற்றிருந்தருளுகின்ற நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், ஞாயிறு, திங்கள், ஆன்மா என்னும் அட்டமூர்த்தமாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி, உள்ளம் உருகி ஓலமிடாதவர்கள் ஊழிக் காலம் வரை வாழ்ந்தாலும் சிவஞானம் கைவரப் பெறாதவர் ஆவர்.
3930 ஊரர வந்தலை நீண்முடியா
னொலிநீ ருலகாண்டு
காரர வக்கடல் சூழவாழும்
பதியாங் கலிக்காமூர்
தேரர வல்குலம் பேதையஞ்சத்
திருந்து வரைபேர்த்தான்
ஆரர வம்பட வைத்தபாத
முடையா னிடமாமே
3.105.8
ஊருகின்ற பாம்பைத் தலையிலுள்ள நீண்ட முடியில் அணிந்து, ஒலிக்கின்ற நீரையுடைய இவ்வுலகம் முழுமையும் ஆண்டு, கறுத்த ஆரவாரமுடைய கடல்சூழச் சிவபெருமான் வீற்றிருந்தருளும்பதி திருக்கலிக்காமூர் என்பதாம். அது தேர் போன்ற அகன்ற அல்குலையுடைய உமாதேவி அஞ்சும்படி திருக்கயிலை மலையைப் பெயர்த்த இராவணன் அதன்கீழ் நசுக்குண்டு அலறும்படி தம் திருப்பாத விரலை ஊன்றிய சிவபெருமானுடைய இருப்பிடமாகும்.
3931 அருவரை யேந்திய மாலுமற்றை
யலர்மே லுறைவானும்
இருவரு மஞ்ச வெரியுருவா
யெழுந்தான் கலிக்காமூர்
ஒருவரை யான்மகள் பாகன்றன்னை
யுணர்வாற் றொழுதேத்தத்
திருமரு வுஞ்சிதை வில்லைச்செம்மைத்
தேசுண் டவர்பாலே
3.105.9
கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிய திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் ஆகிய இருவரும் அஞ்சும்படி பெருஞ்சோதி வடிவாய் நின்றவரும், திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்கின்றவரும், ஒப்பற்ற மலை அரசன் மகளை ஒரு பாகமாக உடையவருமான சிவபெருமானை மெய்யுணர்வால் தொழுது போற்றுபவர்களைச் செல்வம் வந்தடையும். அவர்கட்கு எவ்விதக் குறைவும் இல்லை. மேலும் அவர்களிடம் செம்மையான சிவஞானம் உண்டாகும். அச்சிவஞானத்தால் முத்திபெறுவர் என்பது குறிப்பு.
3932 மாசு பிறக்கிய மேனியாரு
மருவுந் துவராடை
மீசு பிறக்கிய மெய்யினாரு
மறியா ரவர்தோற்றங்
காசினி நீர்த்திரண் மண்டியெங்கும்
வளமார் கலிக்காமூர்
ஈசனை யெந்தை பிரானையேத்தி
நினைவார் வினைபோமே
3.105.10
நீராடாததால் அழுக்கு உடலையுடைய சமணர்களும், மஞ்சட் காவியாடையைப் போர்த்திய உடலையுடைய புத்தர்களும் சிவபெருமானது பெருமையை அறியாதவர்கள். எனவே அவர்களைப் பின்பற்றாத இந்நிலவுலகில் நீர்ப்பெருக்கு எங்கும் நிறைந்து நல்லவளம் பொருந்திய திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எம் தந்தையும் தலைவனுமான சிவபெருமானைப் போற்றித் தியானிப்பவர்களுடைய வினைகள் நில்லாது போம்.
3933 ஆழியு ணஞ்சமு தாரவுண்டன்
றமரர்க் கமுதுண்ண
ஊழிதொறும்முள ராவளித்தா
னுலகத் துயர்கின்ற
காழியுண் ஞானசம் பந்தன்சொன்ன
தமிழாற் கலிக்காமூர்
வாழி யெம்மானை வணங்கியேத்த
மருவா பிணிதானே
3.105.11
பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதமாகத் தாம் உண்டு அன்று தேவர்கட்கு அமுதத்தை அளித்து ஊழிதோறும் நிலைத்திருக்குமாறு அருள்செய்தவர் சிவபெருமான். இவ்வுலகில் உயர்ச்சியடைகின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பாமாலையால், திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில் வாழும் எம் தந்தையாகிய சிவபெருமானை வணங்கிப் போற்ற, அவ்வாறு வணங்குபவர்களை நோய்கள் வந்து அணுகா.
திருச்சிற்றம்பலம்
3.105.திருக்கலிக்காமூர் |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|