|
||||||||
மூன்றாம் திருமுறை-122 |
||||||||
3.122.திருஓமமாம்புலியூர்
பண் - புறநீர்மை
திருச்சிற்றம்பலம்
4111 பூங்கொடி மடவா ளுமையொரு பாகம்
புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிரு ணட்ட மாடுமெம் விகிர்தர்
விருப்பொடு முறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச்
செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழா ரோமமாம் புலியூ
ருடையவர் வடதளி யதுவே
3.122.1
இறைவன் பூங்கொடி போன்ற உமாதேவியை ஒரு பாகமாக உடையவர். முறுக்குண்ட சடைமுடியையுடைய அடிகள். உலகம் சங்கரிக்கப்பட்டு ஒடுங்கிய ஊழிக்காலத்தில் நடனமாடும் விகிர்தர். அப்பெருமான் விருப்பத்துடன் வீற்றிருந்தருள்கின்ற இடம் எது என வினவில், தேன்மணம் கமழும் சோலைகளிலுள்ள செழுமையான மலர்களைக் குடைந்து நெருங்கிக் கூட்டமாயமைந்த வண்டுகள் இசைபாடுகின்ற, ஓங்கிய புகழையுடைய அந்தணர்கள் வாழ்கின்ற ஓமமாம்புலியூரில் அப்பெருமானுக்குரிய உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.
4112 சம்பரற் கருளிச் சலந்தரன் வீயத்
தழலுமிழ் சக்கரம் படைத்த
எம்பெரு மானா ரிமையவ ரேத்த
வினிதினங் குறைவிடம் வினவில்
அம்பர மாகி யழலுமிழ் புகையி
னாகுதி யான்மழை பொழியும்
உம்பர்க ளேத்து மோமமாம் புலியூ
ருடையவர் வடதளியதுவே
3.122.2
சம்பரன் என்னும் அசுரனுக்கு அருள்செய்தவரும், சலந்தரன் என்னும் அசுரன் அழியும்படி நெருப்பினை உமிழ்கின்ற சக்கரத்தைப் படைத்தவருமான எம் சிவபெருமானார் தேவர்களெல்லாம் வணங்கிப் போற்ற இனிதாக வீற்றிருந்தருளும் இடம், வேள்வி ஆற்ற அதன் புகைமண்டலமானது ஆகாயத்தினை அடைந்து மழைபொழிவதும், தேவர்களால் போற்றப்படுகின்றதுமான திரு ஓமமாம்புலியூரில் உள்ள உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.
4113 பாங்குடைத் தவத்துப் பகீரதற் கருளிப்
படர்சடைக் கரந்தநீர்க் கங்கை
தாங்குத றவிர்த்துத் தராதலத் திழித்த
தத்துவ னுறைவிடம் வினவில்
ஆங்கெரி மூன்று மமர்ந்துட னிருந்த
வங்கையா லாகுதி வேட்கும்
ஓங்கிய மறையோ ரோமமாம் புலியூ
ருடையவர் வடதளி யதுவே
3.122.3
சிறந்த குணமுடைய பகீரதனுடைய தவத்திற்கு அருள்செய்வது, தனது படர்ந்த சடையில் மறைத்தருளிய கங்கை நதியினைத் தாங்குதலைத் தவிர்த்துப் பூமியில் சிறிதளவு பாயும்படி செய்த தத்துவனாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற இடம், மூன்று எரி வளர்த்துத் தம் அழகிய கைகளால் நெய், சமித்து போன்றவைகளை வார்த்து வேள்விகள் செய்கின்ற, ஓங்கிய புகழை யுடைய அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உள்ள உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.
4114 புற்றர வணிந்து நீறுமெய் பூசிப்
பூதங்கள் சூழ்தர வூரூர்
பெற்றமொன் றேறிப் பெய்பலி கொள்ளும்
பிரானவ னுறைவிடம் வினவில்
கற்றநால் வேத மங்கமோ ராறுங்
கருத்தினா ரருத்தியாற் றெரியும்
உற்றபல் புகழா ரோமமாம் புலியூ
ருடையவர் வடதளி யதுவே
3.122.4
சிவபெருமான் புற்றில் வசிக்கும் இயல்புடைய பாம்பை அணிந்தவர். திருநீற்றினைத் தன்மேனி முழுவதும் பூசியவர். பூதகணங்கள் சூழ்ந்து வர, இடபத்தின் மேலேறி ஊரூராகச் சென்று பிச்சையேற்பவர். அப்பெருமான் இனிதாக வீற்றிருந்தருளும் இடம், தாங்கள் கற்ற நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள் இவற்றின் கருத்தை உணர்ந்தவர்களாய், அன்பும், புகழுமுடைய அந்தணர்கள் வாழும் திருஓமமாம்புலியூர் உடையவர் வடதளியே.
4115 நிலத்தவர் வான மாள்பவர் கீழோர்
துயர்கெட நெடியமாற் கருளால்
அலைத்தவல் லசுர ராசற வாழி
யளித்தவ னுறைவிடம் வினவில்
சலத்தினாற் பொருள்கள் வேண்டுதல் செய்யாத்
தன்மையார் நன்மையான் மிக்க
உலப்பில்பல் புகழா ரோமமாம் புலியூ
ருடையவர் வடதளி யதுவே
3.122.5
மண்ணுலகத்தவர்கள், வானுலகை ஆள்பவர்கள், பாதாள உலகத்தினர் ஆகியோரது துன்பம் கெடக் கொடிய அசுரர்கள் புரியும் தீமைகளை அழிக்குமாறு, நெடிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை அளித்த சிவபெருமான் இனிதாக வீற்றிருந்தருளும் இடம், தீய செயல்களால் பொருள் சேர்தலைச் செய்யாத நல்லொழுக்க சீலர்களும், பெரும்புகழ் மிக்க செயல் செய்யும் சான்றோர்களும் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரிலுள்ள உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.
4116 மணந்திகழ் திசைக ளெட்டுமே ழிசையு
மலியுமா றங்கமை வேள்வி
இணைந்தநால் வேத மூன்றெரி யிரண்டு
பிறப்பென வொருமையா லுணரும்
குணங்களு மவற்றின் கொள்பொருள் குற்ற
மற்றவை யுற்றது மெல்லாம்
உணர்ந்தவர் வாழு மோமமாம் புலியூ
ருடையவர் வடதளி யதுவே
3.122.6
எட்டுத் திசைகளும் புகழ்மணங் கமழ்கின்றதும், ஏழிசைகள் மலிந்துள்ளதும், ஆறங்கங்கள், ஐந்து வேள்விகள், நான்கு வேதங்கள், மூன்று எரிகள், இரண்டு பிறப்புகள் என இவற்றை ஒருமை மனத்தால் உணரும் குணங்களும், அவற்றின் பொருளும், குற்றமற்றவை, குற்றமுள்ளவை இவற்றை உணர்ந்து தௌந்தவர்களும் ஆன அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவரான சிவபெருமான் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.
4117 தலையொரு பத்துந் தடக்கையை திரட்டி
தானுடை யரக்கனொண் கயிலை
அலைவது செய்த வவன்றிறல் கெடுத்த
வாதியா ருறைவிடம் வினவில்
மலையென வோங்கு மாளிகை நிலவு
மாமதின் மாற்றல ரென்றும்
உலவுபல் புகழா ரோமமாம் புலியூ
ருடையவர் வடதளி யதுவே
3.122.8
பத்துத் தலைகளும், நீண்ட இருபது கைகளும் உடைய அரக்கனாக இராவணன் ஒளிபொருந்திய திருக்கயிலை மலையினை அசைக்கத் தொடங்க, அவனது வலிமையைக் கெடுத்த ஆதியாராகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் எதுவென வினவில், மலைபோல் ஓங்கியுயர்ந்த மாளிகையும், அதனுடன் விளங்கும் பெரிய மதிலும் கூடிய, செல்வநிலை என்றும் மாறாதவராய் விளங்குகின்ற பல்வகையான புகழ்களையுடைய அந்தணர்கள் வசிக்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.
4118 கள்ளவிழ் மலர்மே லிருந்தவன் கரியோ
னென்றிவர் காண்பரி தாய
ஒள்ளெரி யுருவ ருமையவ ளோடு
முகந்தினி துறைவிடம் வினவில் பள்ளநீரவாளைபாய்தரு கழனிப்
பனிமலர்ச் சோலைசூ ழாலை
ஒள்ளிய புகழா ரோமமாம் புலியூ
ருடையவர் வடதளி யதுவே
3.122.9
தேனுடைய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும், கருநிறமுடைய திருமாலும் இருவரும் காண்பதற்கு அரியவனாய் நெருப்புப் பிழம்பாய் நின்ற சிவபெருமான் உமாதேவியோடு இனிது வீற்றிருந்தருளும் இடம், பள்ளத்தை நோக்கிப் பாயும் நீரோடு வாளை மீன்கள் பாயும் வயல்களும், குளிர்ச்சி பொருந்திய மலர்ச்சோலைகள் சூழ்ந்த கரும்பு ஆலைகளும் உடைய, மிக்க புகழுடைய அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம் புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.
4119 தௌளிய ரல்லாத் தேரரோ டமணர்
தடுக்கொடு சீவர முடுக்கும்
கள்ளமார் மனத்துக் கலதிகட் கருளாக்
கடவுளா ருறைவிடம் வினவில்
நள்ளிருள் யாம நான்மறை தெரிந்து
நலந்திகழ் மூன்றெரி யோம்பும்
ஒள்ளியார் வாழு மோமமாம் புலியூ
ருடையவர் வடதளி யதுவே
3.122.10
தௌந்த அறிவில்லாத காவியாடை போர்த்திய புத்தர்களும், தடுக்கினை உடுக்கும் சமணர்களும் ஆகிய கள்ள உள்ளத்துடன் விளங்கும் கீழ் மக்கட்கு அருள்புரியாத கடவுளாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம், நள்ளிருள், யாமம் முதலிய அவ்வக் காலங்கட்கு ஏற்ப, நான்கு வேதங்களிலும் கூறியபடி தெய்வமந்திரங்களை ஓதி, நன்மை தரும் மூன்று அக்கினிகளை வளர்த்து வேள்வி செய்யும் மாசற்ற அறிவுடைய அந்தணர்கள் வாழும் திருஓமமாம் புலியூர் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.
4120 விளைதரு வயலுள் வெயில்செறி பவள
மேதிகண் மேய்புலத் திடறி
ஒளிதர மல்கு மோமமாம் புலியூ
ருடையவர் வடதளி யரனைக்
களிதரு நிவப்பிற் காண்டகு செல்வக்
காழியுண் ஞானசம் பந்தன்
அளிதரு பாடல் பத்தும்வல் லார்க
ளமரலோ கத்திருப் பாரே
3.122.11
நல்ல விளைச்சலைத் தருகின்ற வயல்களில் ஒளிமிக்க பவளங்கள், எருமைகள் மேய்கின்ற இடங்களில் அவைகளால் இடறப்பட்டு மேலும் ஒளியைத் தருகின்ற திருஓமமாம் புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை, களிப்பை உண்டாக்கும் உயர்ந்த காணத்தக்க செல்வத்தையுடைய சீகாழிப்பதியில் அவதரித்த திருஞானசம்பந்தர் போற்றிய, அருளை விளைவிக்கும் இத்திருப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள் சிவலோகத்தில் வீற்றிருப்பர்.
திருச்சிற்றம்பலம்
3.122.திருஓமமாம்புலியூர் |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|