|
||||||||
மூன்றாம் திருமுறை-56 |
||||||||
3.056.திருப்பிரமபுரம்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
3394 இறையவ னீசனெந்தை யிமை யோர்தொழு
தேத்தநின்ற
கறையணி கண்டன்வெண்டோ டணி காதினன்
காலத்தன்று
மறைமொழி வாய்மையினான் மலையா ளொடு
மன்னுசென்னிப்
பிறையணி செஞ்சடையான் பிர மாபுரம்
பேணுமினே
3.056.1
இறைவன், ஈசன், எம் தந்தை என்று வானவர்கள் தொழுது போற்ற நின்று, நஞ்சுண்ட கறுத்த கண்டத்தினன். சங்கினாலாகிய குழையணிந்த காதினையுடையவன். அக்காலத்தில் வேதத்தின் பொருளை உபதேசித்தருளியவன். மலைமகளான உமாதேவியோடு தலையில் பிறைச்சந்திரனை அணிந்த சிவந்த சடையுடைய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக!
3395 சடையினன் சாமவேதன் சரி கோவண
வன்மழுவாட்
படையினன் பாய்புலித்தோ லுடை யான்மறை
பல்கலைநூல்
உடையவ னூனமில்லி யுட னாயுமை
நங்கையென்னும்
பெடையொடும் பேணுமிடம் பிர மாபுரம்
பேணுமினே
3.056.2
இறைவன் சடைமுடியுடையவன். சாமவேதத்தில் விருப்பமுடையவன். சரிந்த கோவண ஆடையை அணிந்தவன். மழுவாகிய படை உடையவன். பாயும் புலியின் தோலை உடையவன். வேதம் முதலான பல கலைநூல்களில் கூறப்படும் தலைவன். எத்தகைய குறைபாடும் இல்லாத அவன், உமாதேவியோடு விரும்பி வீற்றிருந்தருளுமிடமான திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக!
3396 மாணியை நாடுகால னுயிர் மாய்தரச்
செற்றுக்காளி
காணிய வாடல்கொண்டான் கலந் தூர்வழி
சென்றுபிச்சை
ஊணியல் பாகக்கொண்டங் குட னேயுமை
நங்கையொடும்
பேணிய கோயின்மன்னும் பிர மாபுரம்
பேணுமினே
3.056.3
இறைவன் பிரமசாரியான மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனின் உயிரை மாய்த்தவன். காளிதேவி காணுமாறு திருநடனம் புரிந்தவன். பிரமகபாலத்தைக் கையிலேந்தி ஊர்தோறும் சென்று பிச்சையேற்று உண்ணுதலை இயல்பாகக் காண்டவன். அப்பெருமான் உமாதேவியோடு விரும்பி வீற்றிருந்தருளும் கோயிலாக நிலைபெற்றுள்ள திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக.
3397 பாரிடம் விண்ணுமெங்கும் பயி னஞ்சு
பரந்துமிண்டப்
பேரிடர்த் தேவர்கணம் பெரு மானிது
காவெனலும்
ஓரிடத் தேகரந்தங் குமை நங்கையொ
டும்முடனே
பேரிட மாகக்கொண்ட பிர மாபுரம்
பேணுமினே
3.056.4
நிலவுலகிலும், விண்ணுலகிலும் எங்கும் பயின்ற விடமானது பரவிப் பெருக, அதனால் பெருந்துன்பத்திற்குட்பட்ட தேவர்கள் அனைவரும், “பெருமானே! காப்பாற்றுவீர்களாக” என்று பிரார்த்திக்க, அவ்விடத்தைக் கண்டத்தில் கரந்து அருள்புரிந்த அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற பெருமை மிகுந்த திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக.
3398 நச்சர வச்சடைமே னளிர் திங்களு
மொன்றவைத்தங்
கச்ச மெழவிடைமே லழ கார்மழு
வேந்திநல்ல
இச்சை பகர்ந்துமிக விடு மின்பலி
யென்றுநாளும்
பிச்சைகொ ளண்ணனண்ணும் பிர மாபுரம்
பேணுமினே
3.056.5
இறைவன் விடம் பொருந்திய பாம்பைச் சடைமுடியில் தரித்து, குளிர்ச்சி பொருந்திய சந்திரனையும் அதனுடன் ஒன்றி இருக்குமாறு செய்தவன். அழகிய இடப வாகனத்தின் மீது அமர்ந்து அச்சம் தரும் மழுப்படையை ஏந்தியவன். இன்மொழிகள் பேசி ‘மிக இடுங்கள்’ என்று நாள்தோறும் பிச்சை ஏற்கும் தலைவனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக!
3399 பெற்றவன் முப்புரங்கள் பிழை யாவண்ணம்
வாளியினாற்
செற்றவன் செஞ்சடையிற் றிகழ் கங்கை
தனைத்தரித்திட்
டொற்றை விடையினனா யுமை நங்கையொ
டும்முடனே
பெற்றிமை யாலிருந்தான் பிர மாபுரம்
பேணுமினே
3.056.6
இறைவன் திரிபுர அசுரர்கள் தவத்தினால் பெற்ற வலிய மூன்றுபுரங்களையும் தப்பாவண்ணம் ஓரம்பினால் அழித்தவன். சிவந்த சடையில் அழகிய கங்கையைத் தரித்தவன். ஒற்றை இடபவாகனம் ஏறினவன். உமாதேவியோடு அவன் வீற்றிருந்தருளும் பெருமையுடைய திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக!
3400 வேத மலிந்தவொலி விழ வின்னொலி
வீணையொலி
கீத மலிந்துடனே கிள ரத்திகழ்
பௌவமறை
ஓத மலிந்துயர்வான் முக டேறவொண்
மால்வரையான்
பேதையொ டும்மிருந்தான் பிர மாபுரம்
பேணுமினே
3.056.7
வேதங்களை ஓதுகின்ற ஒலி, வீணையின் இன்னொலி, கீதஒலி இவை ஒருசேர எழுந்த கடல்ஓசையை அடக்குமாறு, வானத்தின் உச்சியை அடைவதாய் உள்ள, ஒளி பொருந்திய பெரிய கயிலைமலையானாகிய சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.
3401 இமையவ ரஞ்சியோட வெதிர் வாரவர்
தம்மையின்றி
அமைதரு வல்லரக்கன் னடர்த் தும்மலை
யன்றெடுப்பக்
குமையது செய்துபாடக் கொற்ற வாளொடு
நாள்கொடுத்திட்
டுமையொ டிருந்தபிரான் பிர மாபுர
முன்னுமினே
3.056.8
தேவர்கள் அஞ்சியோடத் தன்னை எதிர்ப்பவர் யாருமில்லாது அமைந்த வல்லசுரனாகிய இராவணன் பண்டைக் காலத்தில் கயிலையைப் பெயர்த்து எடுக்க, சிவபெருமான் தன் காற்பெருவிரலை ஊன்றி அவன் அம்மலைக்கீழ் நசுங்கும்படி துன்பம் செய்து, பின் அவன் தவறுணர்ந்து சாமகானம் பாடித் துதிக்க, அவனுக்கு வெற்றிதரும் வாளொடு, நீண்ட வாழ்நாளும் கொடுத்து அருள்செய்து, உமாதேவியாரோடு வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.
3402 ஞால மளித்தவனும் மரி யும்மடி
யோடுமுடி
காலம் பலசெலவுங் கண்டி லாமையி
னாற்கதறி
ஓல மிடவருளி யுமை நங்கையொ
டும்முடனாய்
ஏல விருந்தபிரான் பிர மாபுர
மேத்துமினே
3.056.9
இப்பூவுலகைப் படைத்த பிரமனும், திருமாலும்,பலகாலம் இறைவனுடைய அடிமுடியைத் தேடி அலைந்து காண முடியாது கதறி ஓலமிட அவர்கட்கு அருள்புரிந்த அச்சிவ பெருமான் உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.
3403 துவருறு மாடையினார் தொக்க பீலியர்
நக்கரையர்
அவரவர் தன்மைகள்கண் டணு கேன்மின்
னருள்பெறுவீர்
கவருறு சிந்தையொன்றிக் கழி காலமெல்
லாம்படைத்த
இவரவ ரென்றிறைஞ்சிப் பிர மாபுர
மேத்துமினே
3.056.10
மஞ்சட்காவி ஊட்டப்பட்ட ஆடையணிந்த புத்தர்களும், தொகுத்துக் கட்டிய மயிற்பீலியைக் கையிலேந்தி யவராய், ஆடையில்லாத இடையையுடைய சமணர்களும், இறையுண்மையை அறியாதவர்களாதலால் அவர்களை அணுகாதீர். திருவருள் பெற விரும்பும் அடியார்களே! ஐயம் பல நிறைந்த மனத்தை ஒருமுகப்படுத்தி, சென்ற காலம் முதலிய எல்லாக் காலத்தையும் படைத்த முழுமுதற்கடவுள் சிவபெருமான் என்று வணங்கி, அப்பெருமான் வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.
3404 உரைதரு நான்மறையோர் புகழ்ந் தேத்தவொண்
மாதினொடும்
வரையென வீற்றிருந்தான் மலி கின்ற
பிரமபுரத்
தரசினை யேத்தவல்ல வணி சம்பந்தன்
பத்தும்வல்லார்
விரைதரு விண்ணுலகம் மெதிர் கொள்ள
விரும்புவரே
3.056.11
சிவபெருமானது பெருமையை உரைக்கும் நான்கு வேதங்களையும் பயின்றவர்கள் அப்பெருமானைப் புகழ்ந்து போற்ற, அழகிய உமாதேவியோடு மலைபோன்று உறுதிப் பொருளாக விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற பிரமாபுரத்தில் அருளாட்சியைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்களை நறுமணம் கமழும் விண்ணுலகத்துத் தேவர்கள் எதிர்கொண்டழைத்துச் செல்ல விரும்புவர்.
3.056.திருப்பிரமபுரம் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|