|
||||||||
மூன்றாம் திருமுறை-57 |
||||||||
3.057.திருவொற்றியூர்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர்.
தேவியார் - வடிவுடையம்மை.
3405 விடையவன் விண்ணுமண்ணுந் தொழ நின்றவன்
வெண்மழுவாட்
படையவன் பாய்புலித்தோ லுடை கோவணம்
பல்கரந்தைச்
சடையவன் சாமவேதன் சசி தங்கிய
சங்கவெண்டோ
டுடையவன் னூனமில்லி யுறை யும்மிட
மொற்றியூரே
3.057.1
சிவபெருமான் இடபவாகனத்தை உடையவன். விண்ணுளோரும், இம்மண்ணுலக மாந்தரும் தொழுது போற்ற விளங்குபவன். கறைபடியாத மழுப்படை உடையவன். பாயும் புலித்தோலுடையும், கோவணமும் உடையவன். பலவிதமான மலர்களைச் சடையில் அணிந்தவன். சாமகானப் பிரியன். சந்திரனைச் சடையில் தாங்கி, சங்கினால் ஆகிய வெண்மையான தோடு என்னும் காதணி அணிந்தவன். குறைவில்லாத அப்பெருமான் தன்னை வழிபடும் அடியவர்களின் ஊனமாகக் கருதப்படும் குற்றம் குறைகளைக் களைந்து வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும்.
3406 பாரிடம் பாணிசெய்யப் பறைக் கட்செறு
பல்கணப்பேய்
சீரொடும் பாடலாட லில யஞ்சிதை
யாதகொள்கைத்
தாரிடும் போர்விடையன் றலைவன்றலை
யேகலனா
ஊரிடும் பிச்சைகொள்வா னுறை யும்மிட
மொற்றியூரே
3.057.2
பூதகணங்கள் பண்ணிசைத்துப் பாட, பறைகள் கொட்ட, கண்டாரைக் கொல்லவல்ல பல்வேறு பேய்க்கணங்கள் தாளத்தோடு இலயம் கெடாதவாறு பாடி ஆடத் திருநடனம் புரிபவன். கிண்கிணிமாலை அணிந்த போர்செய்யும் தன்மையுடைய இடப வாகனத்தில் வீற்றிருந்தருளும் தலைவன். பிரமகபாலத்தை உண்கலனாகக் கொண்டு ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்பவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும்.
3407 விளிதரு நீருமண்ணும் விசும் போடனல்
காலுமாகி
அளிதரு பேரருளா னர னாகிய
வாதிமூர்த்தி
களிதரு வண்டு பண்செய் கமழ் கொன்றையி னோடணிந்த
ஒளிதரு வெண்பிறையா னுறை யும்மிட
மொற்றியூரே
3.057.3
ஓசையுடன் பாயும் நீர், நிலம், ஆகாயம், நெருப்பு, காற்றுமாகி, மன்னுயிர்களைக் காக்கும் பெருங்கருணையாளன் ஆகிய சங்கார கர்த்தாவாகிய சிவபெருமானே உலகத்தோற்றத்திற்கும் நிமித்தகாரணனாவான். மலர்களிலுள்ள தேனைப்பருகிய மகிழ்ச்சியில் வண்டுகள் பண்ணிசைக்கும் நறுமணம் கமழும் கொன்றை மாலையோடு ஒளிரும் வெண்பிறைச் சந்திரனையும் சடையில் அணிந்த அச்சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும்.
3408 அரவமே கச்சதாக வரைத் தானலர்
கொன்றையந்தார்
விரவிவெண் ணூல்கிடந்த விரை யார்வரை
மார்பனெந்தை
பரவுவார் பாவமெல்லாம் பறைத் துப்படர்
புன்சடைமேல்
உரவுநீ ரேற்றபெம்மா னுறை யும்மிட
மொற்றியூரே
3.057.4
சிவபெருமான் இடையிலே பாம்மைப் கச்சாக அணிந்தவர். கொன்றை மலர்மாலை அணிந்தவர். வெண்ணிற முப்புரி நூலணிந்து கலவைச் சாந்தணிந்த மலைபோன்ற மார்பை உடையவர். எம் தந்தையான அச் சிவபெருமான் தம்மை வணங்குவாரின் பாவத்தைப் போக்கிப் படர்ந்த சடையின் மேல் கங்கையைத் தாங்கியவர். அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும்.
3409 விலகினார் வெய்யபாவம் விதி யாலருள்
செய்துநல்ல
பலகினார் மொந்தைதாளந் தகுணிச்சமும்
பாணியாலே
அலகினால் வீசிநீர்கொண் டடி மேலல
ரிட்டுமுட்டா
துலகினா ரேத்தநின்றா னுறை யும்மிட
மொற்றியூரே
3.057.5
கொடிய பாவத்திலிருந்து விடுபட்ட பக்குவ ஆன்மாக்கட்கு, விதிப்படி அருள்செய்து, சிவபெருமான் நல்ல பல வகையான வாத்தியங்களான மொந்தை, தாளம், தகுணிச்சம் என்னும் ஒருவகை தோற்கருவி முதலியன ஒலிக்கப் பாட்டோடும், தாளத்தோடும் எண்தோள் வீசி நின்று ஆட, உலகத்தோர் அவன் திருவடியில் மலர்களைத் தூவி, தங்கள் வழிபாடு தடைப்படா வண்ணம் துதித்து வணங்க அவன் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும்.
3410 கமையொடு நின்றசீரான் கழ லுஞ்சிலம்
புமொலிப்பச்
சுமையொடு மேலும்வைத்தான் விரி கொன்றையுஞ்
சோமனையும்
அமையொடு நீண்டதிண்டோ ளழ காயபொற் றோடிலங்க
உமையொடுங் கூடிநின்றா னுறை யும்மிட
மொற்றியூரே
3.057.6
பொறுமையுடன் விளங்கும் தலைவனான சிவபெருமான், தன் திருவடிகளிலுள்ள கழலும், சிலம்பும் ஒலிக்கச் சடைமுடியில் மலர்ந்த கொன்றையையும், சந்திரனையும் தாங்கிய, நீண்ட வலிமையான தோளழகு உடையவன். காதில் பொன்னாலாகிய தோடு பிரகாசிக்க உமாதேவியோடு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும்.
3411 நன்றியால் வாழ்வதுள்ளம் முல குக்கொடு
நன்மையாலே
கன்றனார் மும்மதிலுங் கரு மால்வரை
யோசிலையாப்
பொன்றினார் வார் சுடலைப் பொடி நீறணிந்
தாரழலம்
பொன்றினா லெய்தபெம்மா னுறை யும்மிட
மொற்றியூரே
3.057.7
உள்ளத்தில் பிறருக்கு உபகாரமாய் வாழ வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தச் சிவபெருமான், உலகத்தார்க்கு தீமை செய்த அசுரர்கள் வாழும் முப்புரங்களையும், பெருமை வாய்ந்த மேருமலையை வில்லாகக் கொண்டு அக்கினிக்கணை ஒன்றை எய்து அழித்தவர். நெடிய சுடலைப்பொடியாகிய நீற்றிணை அணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும்.
3412 பெற்றியாற் பித்தனொப்பான் பெரு மான்கரு
மானுரிதோல்
சுற்றியான் சுத்திசூலஞ் சுடர்க் கண்ணுதன்
மேல்விளங்கத்
தெற்றியாற் செற்றரக்கன் னுட லைச்செழு
மால்வரைக்கீழ்
ஒற்றியான் முற்றுமாள்வா னுறை யும்மிட
மொற்றியூரே
3.057.8
பித்தனைப் போன்று விளங்கும் சிவபெருமான், செய்கையால் அறிவில் பெரியவனாவான். கலைமானின் தோசை சுற்றி உடுத்தவன். சுத்தி, சூலம் எனபன ஏந்தியவன். நெற்றிக்கண் உடையவன். கோபமுடைய அரக்கனான இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க, அவன் அம்மலையின்கீழ் நெரியுமாறு தன் காற்பெருவிரலை அழுத்தியவன். உலகம் முழுவதையும் ஆட்கொண்டருளும் அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும்.
3413 திருவினார் போதினானுந் திரு மாலுமொர்
தெய்வமுன்னித்
தெரிவினாற் காணமாட்டார் திகழ் சேவடி
சிந்தைசெய்து
பரவினார் பாமெல்லாம் பறையப்படர்
பேரொளியோ
டொருவனாய் நின்றபெம்மா னுறை யும்மிட
மொற்றியூரே
3.057.9
இலக்குமி எழுந்தருளிய தாமரை மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும், திருமாலும் ஒப்பற்ற தெய்வத்தைக் காணவேண்டும் என நினைத்துத் தம்அறிவால் தேடிக் காணமாட்டாதவர் ஆயினர். சிவபெருமானின் சிவந்த திருவடிகளை மனத்தால் சிந்தித்து வழிபடுபவர்களின் பாவம் எல்லாம் அழியப் படர்ந்த பேரொளியோடு ஒப்பற்றவனாயிருந்த அச் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும்.
3414 தோகையம்பீலிகொள்வார் துவர்க் கூறைகள்
போர்த்துழல்வார்
ஆகம செல்வனாரை யலர் தூற்றுதல்
காரணமாக்
கூகையம் மாக்கள்சொல்லைக் குறிக் கொள்ளன்மி
னேழுலகும்
ஓகைதந் தாளவல்லா னுறை யும்மிட
மொற்றியூரே
3.057.10
நடந்து செல்லும்போது எறும்பு முதலிய சிறு பூச்சிகள் மிதிபட்டு இறந்துவிடாதிருக்க மயில்தோகை ஏந்திப் பெருக்கிச் செல்லும் சமணர்களும், துவர் ஆடையைப் போர்த்திய புத்தர்களும், ஆகமம் அருளிய, ஆகம நெறியில் பூசிக்கப்படும் செல்வரான சிவபெருமானைப் பழித்துக் கூறுவதால், கோட்டான் போன்று ஐயறிவுடைய விலங்குகட்கு ஒப்பாவாராதலால் அவர்கள் கூறும் சொற்களைப் பொருளெனக் கொள்ள வேண்டா. ஏழுலகும் மகிழுமாறு ஆட்கொள்ள வல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும்.
3415 ஒண்பிறை மல்குசென்னி யிறை வன்னுறை
யொற்றியூரைச்
சண்பையர் தந்தலைவன் றமிழ் ஞானசம்
பந்தன்சொன்ன
பண்புனை பாடல்பத்தும் பர விப்பணிந்
தேத்தவல்லார்
விண்புனை மேலுலகம் விருப் பெய்துவர்
வீடௌதே
3.057.11
ஒளிரும் பிறைச்சந்திரனைத் தலையில் சூடிய இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவொற்றியூரை, சண்பை என்று கூறப்படும் சீகாழியில் சிவம் பெருக்க அவதரித்த தலைவனான தமிழ் ஞானசம்பந்தன் அருளிய பண்ணோடு கூடிய இப்பாடல்கள் பத்தையும் ஓதி வழிபட வல்லவர்கள் விண்ணிலுள்ள சுவர்க்கலோத்தை அடைந்து வீடுபேற்றை எளிதில் அடைவர்.
திருச்சிற்றம்பலம்
3.057.திருவொற்றியூர் |
||||||||
by Swathi on 31 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|