|
||||||||
மூன்றாம் திருமுறை-63 |
||||||||
3.063.திருச்செங்காட்டங்குடி
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கணபதீசுவரர்.
தேவியார் - திருக்குழல்மாதம்மை.
3471 பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள்
பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய்
தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன்
பணிசெய்ய
வெங்காட்டு ளனலேந்தி விளையாடும்
பெருமானே
3.063.1
பசுமையான கிளைகளில் மலர்களையுடைய புன்னைமரத்தில் வீற்றிருக்கும் பறவைகளே! தலைவனான சிவபெருமான் என்னைப் பிரிந்ததால் உடம்பு பசலைநிறம் பெற, ஆடி ஆடி உல்லாசமாக இயங்கிய என் மகிழ்ச்சியை நீக்கி எனக்குத் தாங்காத துன்பம் தந்தான். அவன் திருச்செங்காட்டங்குடி என்னும் திருத்தலத்தில் சிறுத்தொண்டர் பணி செய்ய சுடுகாட்டுள், கையில் அனல் ஏந்தி திருநடனம் புரியும் பெருமானாவான்.
3472 பொன்னம்பூங் கழிக்கானற் புணர் துணையோ
டுடன்வாழும்
அன்னங்கா ளன்றில்கா ளகன் றும்போய்
வருவீர்காள்
கன்னவிறோட் சிறுத்தொண்டன்
கணபதீச் சரமேய
இன்னமுத னிணையடிக்கீ ழெனதல்ல
லுரையீரே
3.063.2
பொன்போன்ற மகரந்தத்தை உதிர்க்கும் புன்னைப் பூக்களையுடைய கடற்கரைச் சோலையில் தம் துணையோடு சேர்ந்து வாழும் அன்னப் பறவைகளே! அன்றில் பறவைகளே! நீங்கள் இச்சோலையிலிருந்து வெளி இடங்கட்கும் சென்று வரும் இயல்புடையவர்கள். கல் போன்று திண்மையான அழகிய தோள்களையுடைய சிறுத்தொண்டர் பணிசெய்யக் கணபதீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற இனிய அமுது போன்ற சிவபெருமானின் திருவடிக்கீழ் இருந்து என்னுடைய துன்பத்தைச் சொல்லமாட்டீர்களா?
3473 குட்டத்துங் குழிக்கரையுங் குளிர்பொய்கைத்
தடத்தகத்தும்
இட்டத்தா லிரைதேரு மிருஞ்சிறகின்
மடநாராய்
சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்
குடிமேய
வட்டவார் சடையார்க்கென் வருத்தஞ்சென்
றுரையாயே
3.063.3
குட்டை, குழி, குளிர்ந்த பொய்கை ஆகிய இடங்களில் விருப்பத்துடன் இரையைத் தேர்கின்ற பெரிய இரு சிறகுகளை உடைய இளநாரையே! புகழ்மிக்க சிறுத்தொண்டர் நியமத்தோடு வழிபடத் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந் தருளுகின்ற நீண்ட அடர்ந்த சடைமுடியுடைய சிவபெருமானிடம் சென்று என் வருத்தத்தை உரைக்க மாட்டாயோ? உரைப்பாயாக என்பது குறிப்பு.
3474 கானருகும் வயலருகுங் கழியருகுங்
கடலருகும்
மீனிரிய வருபுனலி லிரைதேர்வெண்
மடநாராய்
தேனமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்
குடிமேய
வானமருஞ் சடையார்க்கென் வருத்தஞ்சென்
றுரையாயே
3.063.4
கடற்கரைச் சோலையின் அருகிலும், வயல், கழி, கடல் ஆகியவற்றின் அருகிலும் பெருகும் நீரில் ஓடுகின்ற மீன்களை இரையாகத் தேரும் வெண்ணிறமான மட நாரையே! தேன் துளிக்கும் மாலைகளையுடைய சிறுத்தொண்டர் பணிசெய்யத் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற, மாலை வானம் போன்ற சிவந்த சடையுடைய சிவபெருமானிடம் சென்று என் வருத்தத்தை உரைப்பாயாக.
3475 ஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச்
சிறகுலர்த்தும்
பாரல்வாய்ச் சிறுகுருகே பயிறூவி
மடநாராய்
சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங்
குடிமேய
நீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென்
றுரையீரே
3.063.5
ஆரல், சுறவம் ஆகியன பாய்கின்ற அகன்ற கழனிகளில் சிறகுகளை உலர்த்துகின்ற நெடிய மூக்கையுடைய சிறிய உள்ளான் பறவையே!. அடர்ந்த சிறகுடைய இளநாரையே! புகழ்மிக்க சிறுத்தொண்டர் பணி செய்ய திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந் தருளுகின்ற கங்கையைத் தாங்கிய சடைமுடியுடைய சிவபெருமானிடம் சென்று என்னுடைய நிலையினை உரைப்பீர்களாக.
3476 குறைக்கொண்டா ரிடர்தீர்த்தல் கடனன்றே
குளிர்பொய்கைத்
துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா
மடநாராய்
கறைக்கண்டன் பிறைச்சென்னிக் கணபதீச்
சரமேய
சிறுத்தொண்டன் பெருமான்சீ ரருளொருநாட்
பெறலாமே
3.063.6
தங்களின் குறைகளைத் தீர்க்க வேண்டுபவர்களின் துன்பத்தைப் போக்குதல் தலைவரானவரின் கடமை அன்றோ? குளிர்ந்த குளத்தின் கரையில் கெண்டை மீனைக் கவர்ந்து இரையாகக் கொள்ளும் பறவையே! துணையைப் பிரியாதிருக்கும் மடநாரையே! நீலகண்டரும், பிறைச்சந்திரனைத் தலையிலே சூடியுள்ளவரும், கணபதீச்சரம் என்னும் திருக்கோயிலில் சிறுத்தொண்டரால் வழி படப்படுபவரும் ஆகிய சிவபெருமானது சீராகிய எய்ப்பிடத்து உதவும் பேரருளை நான் பெறுமாறு தூது சென்றுரைப்பீர்களாக!
3477 கருவடிய பசுங்கால்வெண் குருகேயொண்
கழிநாராய்
ஒருவடியா ளிரந்தாளென் றொருநாட்சென்
றுரையீரே
செருவடிதோட் சிறுத்தொண்டன் செங்காட்டங்
குடிமேய
திருவடிதன் திருவருளே பெறலாமோ
திறத்தவர்க்கே
3.063.7
கரிய சேற்றில் அளைந்த பசுங்காலையுடைய வெண்குருகே! அழகிய கழியிலுள்ள நாரையே! போர் செய்வதால் வலிமை பெற்ற அழகிய வடிவுடைய தோள்களையுடைய சிறுத்தொண்டர் வழிபடுகின்ற திருச்செங்காட்டங்குடியிலுள்ள திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானின் திரு வடிகளை வழிபடும் திறத்தவர்களே அவன் திருவருளைப் பெறலாமோ? ஓர் அடியாள் அவருடைய திருவருளைக் கெஞ்சி வேண்டினாள் என்று ஒரு நாளாவது சென்று அவரிடம் உரைப்பீராக!
3478 கூரார லிரைதேர்ந்து குளமுலவி
வயல்வாழும்
தாராவே மடநாராய் தமியேற்கொன்
றுரையீரே
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங்
குடிமேய
பேராளன் பெருமான்ற னருளொருநாட்
பெறலாமே
3.063.8
கூர்மையான அலகால் இரையைக் கொத்திக் குளங்களிலும், வயல்களிலும் வாழ்கின்ற தாரா என்ற பறவையே! மட நாரையே! என் பொருட்டுச் சிவபெருமானிடம் சென்று ஒரு செய்தியை சொல்வீரோ? சிறந்த புகழுடைய சிறுத்தொண்டர் வழிபடுகின்ற திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற கீர்த்தியுடைய சிவபெருமான் திருவருளை ஒருநாள் அடியேன் பெறுதல் இயலுமா?
3479 நறப்பொலிபூங் கழிக்கான னவில்குருகே
யுலகெல்லாம்
அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் னலர்கோட
லழகியதே
சிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்
குடிமேய
பிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம்
பெருநலமே
3.063.9
தேனுடைய பூக்கள் நிறைந்த கழியின் கரையிலுள்ள சோலையில் வாழ்கின்ற பறவையே! உலக மக்களெல்லாம் அறத்தைக் கருதி இடுகின்ற பிச்சையை ஏற்று உழல்கின்ற சிவபெருமானுக்குப் பிறர் என்னைத் தூற்றுமாறு செய்வது அழகாகுமா? சிறப்புடைய சிறுத்தொண்டன் வழிபடும் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற பிறப்பிலியாகிய சிவபெருமானுடைய திருநாமத்தைப் போற்றித் துதிசெய்யும் நான் எல்லாவிதப் பெருமைக்குரிய நலங்களை இழப்பது முறைமையா?
3480 செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங்
குடிமேய
வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட
னவன்வேண்ட
அந்தண்பூங் கலிக்காழி யடிகளையே
யடிபரவும்
சந்தங்கொள் சம்பந்தன் றமிழுரைப்போர்
தக்கோரே
3.063.11
சிறந்த, குளிர்ந்த, அழகிய ஆறுபாயும் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற, திருவெண்ணீறு அணிந்த மார்புடைய சிவனை, சிறுத்தொண்டர் வழிபட்டபடி, அழகிய, குளிர்ந்த ஒலிமிக்க காழியிலுள்ள இறைவனின் திருவடிகளை வணங்கும் ஞானசம்பந்தன் சந்தம் மிகுந்த திருத் தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் மனிதப் பிறவி எடுத்ததன் தகுதியைப் பெற்றவராவர்.
திருச்சிற்றம்பலம்
3.063.திருச்செங்காட்டங்குடி |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|