|
||||||||
மூன்றாம் திருமுறை-64 |
||||||||
3.064.திருப்பெருவேளூர்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் - பிரியாவீசுவரர்.
தேவியார் - மின்னனையாளம்மை.
3481 அண்ணாவுங் கழுக்குன்று மாயமலை
யவைவாழ்வார்
விண்ணோரு மண்ணோரும் வியந்தேத்த
வருள்செய்வார்
கண்ணாவா ருலகுக்குக் கருத்தானார்
புரமெரித்த
பெண்ணாணாம் பெருமானார் பெருவேளூர்
பிரியாரே
3.064.1
சிவபெருமான் திருவண்ணாமலையும், திருக்கழுகுன்றமும் ஆகிய மலைகளில் தம்மை அடைந்தோர்க்கு வாழ்வுதரும் பொருட்டு எழுந்தருளியுள்ளார். விண்ணுலகத்தவரும், மண்ணுலகத்தவரும் வியந்து போற்ற அருள்செய்வார். உலகிற்குக் கண்ணாக விளங்குபவர். வழிபடுபவர்களின் கருத்தில் இருப்பவர். முப்புரங்களை எரித்தவர், பெண்ணும், ஆணுமாக விளங்கும் அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தைப் பிரியாது வீற்றிருந்தருளுகின்றார்.
3482 கருமானி னுரியுடையர் கரிகாட
ரிமவானார்
மருமானா ரிவரென்று மடவாளோ
டுடனாவர்
பொருமான விடையூர்வ துடையார்வெண்
பொடிப்பூசும்
பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர்
பிரியாரே
3.064.2
சிவபெருமான் கரியமானின் தோலை ஆடையாக உடுத்தவர். சுடுகாட்டில் ஆடுபவர். இமவான் மருமகன் இவர் என்று சொல்லும்படி உமாதேவியை உடனாகக் கொண்டவர். போர்புரிய வல்ல பெருமையையுடைய இடப வாகனத்தில் ஊர்ந்து செல்பவர். திருவெண்ணீற்றினைப் பூசியவர். பிஞ்ஞகன் என்று போற்றப்படும் அச்சிவபெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரிய நாதர் ஆவார்.
3483 குணக்குந்தென் றிசைக்கண்ணுங் குடபாலும்
வடபாலும்
கணக்கென்ன வருள்செய்வார் கழிந்தோர்க்கு
மொழிந்தோர்க்கும்
வணக்கம்செய் மனத்தராய் வணங்காதார்
தமக்கென்றும்
பிணக்கஞ்செய் பெருமானார் பெருவேளூர்
பிரியாரே
3.064.3
சிவபெருமான் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என எத்திசையிலுள்ளோர்க்கும் ஒன்றுபோல் அருள்புரிவார். அஞ்ஞானத்தால் நாள்களைக் கழிப்பவர்கட்கும், மெய்ஞ்ஞானத்தால் தம்மைப் போற்றுவார்கட்கும், மனத்தால் சிந்தித்துக் காயத்தால் தம்மை வழிபடும் அடியவர்கட்கும் அருள்புரிபவர். வணங்கிப் போற்றாதவர் கட்கு மாறுபாடாக விளங்குபவர். அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.
3484 இறைக்கொண்ட வளையாளோ டிருகூறா
யொருகூறு
மறைக்கண்டத் திறைநாவர் மதிலெய்த
சிலைவலவர்
கறைக்கொண்ட மிடறுடையர் கனல்கிளருஞ்
சடைமுடிமேல்
பிறைக்கொண்ட பெருமானார் பெருவேளூர்
பிரியாரே
3.064.4
சிவபெருமான், முன்கையில் வளையலணிந்த உமாதேவி ஒரு கூறாகவும், தாம் ஒரு கூறாகவும் இருகூறுடைய அர்த்தநாரியாய் விளங்குபவர். வேதங்களை அருளிச் செய்த நாவுடையர். மும்மதில்களை எய்த மேருமலையை வில்லாக உடையவர். நஞ்சை அடக்கியதால் கறைகொண்ட கண்டத்தர். நெருப்புப்போல் மிளிரும் சிவந்த சடையில் பிறையணிந்த பெருமானாகிய அவர் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.
3485 விழையாதார் விழைவார்போல் விகிர்தங்கள்
பலபேசிக்
குழையாதார் குழைவார்போற் குணநல்ல
பலகூறி
அழையாவு மரற்றாவு மடிவீழ்வார்
தமக்கென்றும்
பிழையாத பெருமானார் பெருவேளூர்
பிரியாரே
3.064.5
உலகப் பொருள்களில் பற்றுக் கொண்டு விழையாமல் இறைவன்பால் விழைத்து பலவாறு போற்றி, உலகியலில் மருள்கொண்டு குழையாது, இறைவனின் திருவருளில் குழைந்து அவன் புகழைப் பலவாறு எடுத்துக்கூறி, “பெருமானே! அருள் புரிவீராக!” என அழைத்தும், அரற்றியும், அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்குபவர்கட்கு என்றும் தவறாது உடனே அருள்புரியும் சிவபெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.
3486 விரித்தார்நான் மறைப்பொருளை யுமையஞ்ச
விறல்வேழம்
உரித்தாரா முரிபோர்த்து மதின்மூன்று
மொருகணையால்
எரித்தாரா மிமைப்பளவி லிமையோர்க
டொழுதிறைஞ்சப்
பெருத்தாரெம் பெருமானார் பெருவேளூர்
பிரியாரே
3.064.6
சிவபெருமான் நான்மறைகளை விரித்துப் பொருள் உரைத்தவர். உமாதேவி அஞ்சும்படி யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர். மும்மதில்களையும் ஓர் அம்பினால் இமைக்கும் அளவில் எரித்தவர். தேவர்கள் வணங்கிப் போற்ற விசுவரூபம் கொண்ட எம்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.
3487 மறப்பிலா வடிமைக்கண் மனம்வைப்பார்
தமக்கெல்லாம்
சிறப்பிலார் மதிலெய்த சிலைவல்லா
ரொருகணையால்
இறப்பிலார் பிணியில்லார் தமக்கென்றும்
கேடிலார்
பிறப்பிலாப் பெருமானார் பெருவேளூர்
பிரியாரே
3.064.7
இறைவர் தம்மை மறவாது தமக்கு அடியவர்களாய் விளங்குபவர்கள் மனத்தில் வீற்றிருப்பவர். சிறப்பில்லாத பகையசுரர்களின் மும்மதில்களை மேருமலையை வில்லாகக் கொண்டு, அக்கினியைக் கணையாக எய்து நெருப்புண்ணும்படி அழித்தவர். அவர் இறப்பற்றவர். நோயில்லாதவர். கேடு இல்லாதவர். பிறப்பில்லாத அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.
3488 எரியார்வேற் கடற்றானை யிலங்கைக்கோன்
றனைவீழ
முரியார்ந்த தடந்தோள்க ளடர்த்துகந்த
முதலாளர்
வரியார்வெஞ் சிலைபிடித்து மடவாளை
யொருபாகம்
பிரியாத பெருமானார் பெருவேளூர்
பிரியாரே
3.064.8
நெருப்புப் போல் சிவந்த வேற்படை உடைய சேனைகளைக் கடல்போல் விரியப் பெற்றுள்ள இராவணன் அலறுமாறு, வலிமை வாய்ந்த அவனுடைய அகன்ற தோள்களை நெரித்துப் பின்னர் அவன் சாமகானம் பாடக் கேட்டுகந்த முதல்வரான சிவபெருமான், கட்டுக்களையுடைய கொடிய வில்லேந்தி, உமாதேவியைத் தம்திருமேனியின் ஒருபாகமாகப் பிரியாது பெற்று, திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.
3489 சேணியலு நெடுமாலுந் திசைமுகனுஞ்
செருவெய்திக்
காணியல்பை யறிவிலராய்க் கனல்வண்ண
ரடியிணைக்கீழ்
நாணியவர் தொழுதேத்த நாணாமே
யருள்செய்து
பேணியவெம் பெருமானார் பெருவேளூர்
பிரியாரே
3.064.9
திருவிக்கிரமாவதாரத்தில் வானை அளந்த திருமாலும், பிரமனும் செருக்குற்றுத் தாமே தலைவர் எனக் கருதி இறைவனைத் தேட, அவனைக் காணும் முறையை அறியாதவராய், நெருப்பு வண்ணமாய் நின்ற சிவபெருமானின் திருவடிக்கீழ் நாணமுற்று நின்று தொழுது போற்ற, அவர்களின் நாணத்தைப் போக்கி அருள்செய்து பாதுகாத்த அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.
3490 புற்றேறி யுணங்குவார் புகையார்ந்த
துகில்போர்ப்பார்
சொற்றேற வேண்டாநீர் தொழுமின்கள்
சுடர்வண்ணம்
மற்றேரும் பரிமாவு மதகளிறு
மிவையொழியப்
பெற்றேறும் பெருமானார் பெருவேளூர்
பிரியாரே
3.064.10
புற்றேறும்படி கடுமையான தவத்தால் உடம்பை வாட்டும் சமணர்களும், மஞ்சட்காவியூட்டிய ஆடையை அணியும் புத்தர்களும் இறையுண்மையை உணராது கூறும் சொற்களை நீங்கள் ஏற்க வேண்டா. நெருப்புப் போன்று சிவந்த வண்ணமுடையவனும், தேரும், குதிரையும், யானையும் வாகனமாகக் கொள்ளாது, இடபத்தை வாகனமாகக் கொண்டுள்ள தலைவனுமான, திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதனை நீவிர் தொழுது வணங்குங்கள்.
3491 பைம்பொன்சீர் மணிவாரிப் பலவுஞ்சேர்
கனியுந்தி
அம்பொன்செய் மடவரலா ரணிமல்கு
பெருவேளூர்
நம்பன்றன் கழல்பரவி நவில்கின்ற
மறைஞான
சம்பந்தன் தமிழ்வல்லார்க் கருவினைநோய்
சாராவே
3.064.11
அழகிய பொன்னையும், சிறந்த மணிகளான இரத்தினங்களையும், பலவகையான கனிகளையும் அடித்துக் கொண்டுவரும் காவிரியில், பொன்னாலாகிய அழகிய ஆபரணங்களை அணிந்த, நீராடும் மகளிர்கள் மிகுந்த திருப்பெருவேளூரில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிஅருளிய வேதம்வல்ல ஞானசம்பந்தனின் இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓத வல்லவர்களை அருவினைகளும், அவற்றால் வரும் பிறவிநோயும் சாரா.
திருச்சிற்றம்பலம்
3.064.திருப்பெருவேளூர் |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|