|
||||||||
மூன்றாம் திருமுறை-71 |
||||||||
3.071.திருவைகாவூர்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வில்லவனேசர்.
தேவியார் - வளைக்கைவல்லியம்மை.
3559 கோழைமிட றாககவி கோளுமில வாகவிசை
கூடும்வகையால்
ஏழையடி யாரவர்கள் யாவை சொன சொன்மகிழு
மீசனிடமாம்
தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை
தாறுசிதறி
வாழையுதிர் வீழ்கனிக ளூறிவயல் சேறுசெயும் வைகாவிலே
3.071.1
சிவனைத் தவிர வேறு பற்றுக்கோடில்லாத ஏழையடியவர்கள், கோழை பொருந்திய கழுத்து உடையராயினும், பாடும் கவிகளைப் பொருளுணரும்படி நிறுத்திப் பாடாவிடினும், தங்களால் இயன்ற இசையில், பக்தியுடன் பாடுகின்ற பாடல்கள் எவையாய் இருந்தாலும், அவற்றிற்கு மகிழ்கின்றவன் சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது தென்னை மரத்தின் முற்றிய காய்கள் கமுக மரத்தில் விழ, அதன் வரிசையான குலைகள் சிதறி வாழைக்குலையில் விழ, அவ்வாழை மரங்களினின்றும் உதிர்ந்து வீழ்கின்ற கனிகள் வயலில் ஊறி அதனைச் சேறாகச் செய்யும் வளமிக்க திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும்.
3560 அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ
தாகவெழிலார்
விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன்
விரும்புமிடமாம்
புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல்
சூழ்தடமெலாம்
வண்டினிசை பாடவழகார்குயின்மி ழற்றுபொழில்
வைகாவிலே
3.071.2
வானளாவிய பெரிய மேருமலையை வில்லாகவும், அக்கினியைக் கணையாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு, பகையசுரர்களின் அழகிய முப்புரங்களை எரியுண்ணும்படி செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, தாமரை மலர்களில் வண்டுகள் புகுந்து தேனுண்டு விளையாடி, வயல்களில் அவற்றைச் சுற்றியுள்ள குளங்களிலும் தேனுண்ட மகிழ்ச்சியில் இசைபாட, அதற்கேற்ப அழகிய குயில்கள் கூவுகின்ற சோலைகளையுடைய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும்.
3561 ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவை
யுணர்ந்தவடியார்
ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல
நாதனிடமாம்
ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்க
டோறுமழகார்
வானமதி யோடுமழை நீண்முகில்கள் வந்தணவும்
வைகாலிலே
3.071.3
மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகரணங்களால் செய்யப்படும் குற்றங்கள் இல்லாதவர்களாய், நல்ல தவத்தை மேற்கொண்டு, பதிநூல்களை நன்கு கற்று, கேட்டுத் தௌய உணர்ந்த அடியார்கள் ஞானத்தால் வணங்க, நாடேறும் அருள் செய்ய வல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, நல்ல வயல் வளமும் அழகிய சந்திரனைத் தொடும்படி ஓங்கியுயர்ந்த மதில்களும், மழைதரும் மேகங்கள் தவழும் சோலைகளும் விளங்குகின்ற திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும்.
3562 இன்னவுரு வின்னநிற மென்றறிவ தேலரிது
நீதிபலவும்
தன்னவுரு வாமெனமி குத்ததவ னீதியொடு
தானர்விடம்
முன்னைவினை போய்வகையி னான்முழு
துணர்ந்துமுயல்
கின்றமுனிவர்
மன்னவிரு போதுமரு வித்தொழுது சேரும்வயல்
வைகாவிலே
3.071.4
சிவபெருமானை இன்ன உருவம் உடையவன்; இன்ன நிறம் உடையவன் என்று உயிர்கள் தம் ஆன்ம போதத்தால் அறியமுடியாது. புண்ணியங்கள் பலவும் தனது உரு என்று சொல்லும்படி மிகுந்த தவக்கோலத்தை உடையவன். அப்பெருமான் அருளோடு வீற்றிருந்தருளும் இடம், முன்னை வினைகளெல்லாம் நீங்க, அவனை வணங்கும் நெறிகளை முறைப்படி முழுவதும் உணர்ந்து நிட்டைகூட முயல்கின்ற முனிவர்கள் காலை, மாலை என்ற இருவேளைகளிலும் சென்று தொழுது போற்றும், வயல்வளம் பொருந்திய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும்.
3563 வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி
யாறுசமயம்
ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ
யொருவனிடமாம்
மேதகைய கேதகைள் புன்னையொடு ஞாழலவை
மிக்கவழகார்
மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில்
வைகாவிலே
3.071.5
வேதங்களை ஓதியும், ஓதுவித்தும், வேள்விகள் பலசெய்தும், விதிப்படி ஆறு சமயநூல்களைக் கற்றும், உணர்ந்தும் உள்ள பூவுலகதேவர்கள் என்று போற்றப்படும் அந்தணர்கள் தொழ அவர்கட்கு அருள்செய்கின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், சிறந்த தாழைகள், புன்னை, புலிநகக்கொன்றை மிகுந்துள்ளதும், மிக்க அழகுடைய மாதவிக் கொடிகள் நறுமணம் கமழவும் வண்டுகள் பல பாடவும் விளங்கும் சோலைகள் சூழ்ந்ததுமாகிய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும்.
3564 நஞ்சமுது செய்தமணி கண்டனமை யாளுடைய
ஞானமுதல்வன்
செஞ்சடையி டைப்புனல்க ரந்தசிவலோகனமர்
கின்றவிடமாம்
அஞ்சுடரொ டாறுபத மேழினிசை யெண்ணரிய
வண்ணமுளவாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல்
வைகாவிலே
3.071.6
சிவபெருமான் நஞ்சை அமுது போன்று உட்கொண்டவன். நம்மை ஆட்கொள்கின்ற ஞானமுதல்வன். சிவந்த சடையிலே கங்கையை ஒளித்த சிவலோக நாயகனாகிய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது அழகிய தீபச்சுடருடன், பிரணவம் முதலாகிய பஞ்சாட்சரத்தைப் பொருளுணர்ந்தது உச்சரித்து, ஏழுசுரங்களோடு பாடும் தோத்திரப் பாடல்களைப் பாடி, எண்ண முடியாத விதத்தில் ஆடவர்களோடு மகளிர்கள் பலரும் தொழுது வணங்கும், வயல்வளமிக்க திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும்.
3565 நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர்
வல்லவகையால்
தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய்
சோதியிடமாம்
நீளவளர் சோலைதொறு நாளிபல துன்றுகனி
நின்றதுதிர
வாளைகுதிகொள்ளமது நாறமலர் விரியும்வயல்
வைகாவிலே
3.071.7
நாள்தோறும் பக்தியோடு தோத்திரப் பாடல்கள் பாடி, ஞானமலர்களான கொல்லாமை, அருள், ஐம்பொறி அடக்கல், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு இவை கொண்டு தோள்களும், கைகளும் கூப்பித் தொழுபவர்கட்கு அருள் செய்கின்ற சோதிவடிவான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, நீண்டு வளர்ந்த சோலைகளிலுள்ள தென்னைகளிலிருந்து முற்றிய நெற்றுக்கள் உதிர, அதனால் வாளைமீன்கள் துள்ளிப்பாய, அதனால் தேன்மணக்கும் மலர்கள் விரிய வயல்கள் சூழ்ந்த திருவைகாவூர் என்னும் திருத்தலம் ஆகும்.
3566 கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ
டுத்தகடியோன்
ஐயிருசி ரங்களையொ ருங்குடனெ ரித்தவழ
கன்றனிடமாம்
கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு
திப்பலவிதம்
வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில்
வைகாவிலே
3.071.8
இருபது கைகளும், வலிமையான உடம்பும் துன்புறும்படி பெரிய கயிலைமலையைப் பெயர்த்த தீயோனான இராவணனின் பத்துத் தலைகளையும் ஒருங்கே நெரித்த அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், இவ்வையகத்திலுள்ள அடியவர்கள் பலர் கையில் மலர் கொண்டு, காலையும், மாலையும் தியானித்து, பக்தியுடன் பலவிதத் தோத்திரங்களைப் பாடி வணங்கிப் போற்றுகின்ற அழகிய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும்.
3567 அந்தமுத லாதிபெரு மானமரர் கோனையயன்
மாலுமிவர்கள்
எந்தைபெரு மானிறைவ னென்றுதொழ நின்றருள்செ
யீசனிடமாம்
சிந்தைசெய்து பாடுமடி யார்பொடிமெய் பூசியெழு
தொண்டரவர்கள்
வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல்
வைகாவிலே
3.071.9
இவ்வுலக ஒடுக்கத்திற்கும், தோற்றத்திற்கும் நிமித்த காரணனான சிவபெருமான், பிரமனும், திருமாலும் தங்கள் செருக்கொழிந்து “எம் தந்தையே! தலைவனே! இறைவனே” என்று தொழுது போற்ற அவர்கட்கு அருள் செய்து வீற்றிருந்தருளும் இடமாவது, சிந்தித்துப் பாடும் அடியார்களும், தன் மேனியிலே திருநீற்றைப் பூசியுள்ள தொண்டர்களும் நறுமணம் கமழும் மலர்களை ஏந்தி, வழிபடுவதற்கு ஒருவரையொருவர் முந்துகின்ற, நற்கதிதரும் திருத்தலமாகிய திருவைகாவூர் ஆகும்.
3568 ஈசனெமை யாளுடைய வெந்தைபெரு மானிறைவ
னென்றுதனையே
பேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை
யாவவனிடம்
தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ
நின்றபுகழோன்
வாசமல ரானபல தூவியணை யும்பதிநல்
வைகாவிலே
3.071.10
சிவபெருமானை எம்மை ஆட்கொள்ளும் தந்தை, தலைவன், இறைவன் என்று போற்றுதல் செய்யாத சமணர்கள், புத்தர்கள் இவர்களின் சித்தத்தில் புகாத அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, எல்லா தேசத்தாரும் கூடிநின்று போற்ற, நிலைத்த புகழுடைய அப்பெருமானை நறுமணமிக்க நல்மலர்களைத் தூவி வழிபட நற்கதிதரும் திருத்தலமாகிய திருவைகாவூர் ஆகும்.
3569 முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்றிருவை
காவிலதனை
செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம்
பந்தனு ரைசெய்
உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவ
ருருத்திரரெனப்
பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ
ரும்புகழொடே
3.071.11
முழுவதுமாய் நம்மை ஆட்கொண்ட முக்கண்ணுடைய முதல்வனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவைகாவில் என்னும் திருத்தலத்தைப் போற்றி, தன்னையடைந்தோர் வினைகளை அழிக்கும் சிரபுரத்தில் அவதரித்த தலைவனான ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப்பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள் உருத்திரர்களாகிச் சிவலோகத்தில் முத்தியின்பத்தில் இருந்து பிரியாது புகழுடன் வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
3.071.திருவைகாவூர் |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|