|
||||||||
மூன்றாம் திருமுறை-73 |
||||||||
3.073.திருப்பட்டீச்சரம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பட்டீச்சரநாதர்.
தேவியார் - பல்வளைநாயகியம்மை.
3581 பாடன்மறை சூடன்மதி பல்வளையொர்
பாகமதின் மூன்றொர்கணையால்
கூடவெரி யூட்டியெழில் காட்டிநிழல்
கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாடமழ பாடியுறை பட்டிசர
மேயகடி கட்டரவினார்
வேடநிலை கொண்டவரை வீடுநெறி
காட்டிவினை வீடுமவரே
3.073.1
சிவபெருமான் வேதங்களை அருளிச்செய்து வேதப் பொருளாயும் விளங்குபவர். பிறைச்சந்திரனைச் சூடியவர். பல வளையல்களையணிந்த உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர். மதில்கள் மூன்றினையும் ஒரு கணையால் எரித்த வீர அழகைக் காட்டியவர். நிழல்தரும் சோலைகள் சூழ்ந்த திருப்பழையாறையில், மாடங்களையுடைய திருமழபாடி என்னும் நகரில், திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார். பாம்பைக் கச்சாகக் கட்டியவர். வேடநிலைக்கேற்ப நல்லொழுக்கத்தில் நிற்கும் அடியவர்களின் வினைகளைப் போக்கி முத்திநெறி அருளவல்லவர்.
3582 நீரின்மலி புன்சடையர் நீளரவு
கச்சையது நச்சிலையதோர்
கூரின்மலி சூலமது வேந்தியுடை
கோவணமு மானினுரிதோல்
காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள்
காதல்செய்து மேயநகர்தான்
பாரின்மலி சீர்பழைசை பட்டிசர
மேத்தவினை பற்றழியுமே
3.073.2
சிவபெருமான் கங்கையைச் சடையில் தாங்கியவர். நீண்ட பாம்பைக் கச்சாகக் கட்டியவர். கூர்மையான இலைபோன்ற வடிவுடைய கொடிய சூலப்படையை ஏந்தியவர். கோவண ஆடை அணிந்தவர். மான் தோலையும் அணிந்தவர். கார்காலத்தில் மலரும் கொன்றையை மாலையாக அணிந்தவர். அத்தகைய கடவுள் விரும்பி வீற்றிருந்தருளும் தலமாவது பூமியில் மிக்க புகழையுடைய திருப்பழையாறை ஆகும். அங்குள்ள திருப்பட்டீச்சரம் என்னும் கோயிலிலுள்ள இறைவனைப் போற்றி வணங்க நம் வினைகள் யாவும் அடியோடு அழியும்.
3583 காலைமட வார்கள்புன லாடுவது
கௌவைகடி யார்மறுகெலாம்
மாலைமண நாறுபழை யாறைமழ
பாடியழ காயமலிசீர்ப்
பாலையன நீறுபுனை மார்பனுறை
பட்டிசர மேபரவுவார்
மேலையொரு மால்கடல்கள் போல்பெருகி
விண்ணுலக மாளுமவரே
3.073.3
பெண்கள் காலையில் நீர்நிலைகளில் நீராடுவதால் உண்டாகும் ஓசையை உடையதாய், மாலையில் பூசை செய்வதால் வீதிகளிலெல்லாம் நறுமணம் கமழ்வதாய் உள்ள திருப்பழையாறை என்னும் தலத்தில் மழபாடி என்னும் பகுதியில், தன் திருமேனி முழுவதும் மிக்க சிறப்புடைய பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசிய மார்புடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலை வணங்குவார் இம்மையில் கடல்போல் செல்வம் பெருக, மறுமையில் விண்ணுலகை ஆள்வர்.
3584 கண்ணின்மிசை நண்ணியிழி விப்பமுக
மேத்துகமழ் செஞ்சடையினான்
பண்ணின்மிசை நின்றுபல பாணிபட
வாடவல பான்மதியினான்
மண்ணின்மிசை நேரின்மழ பாடிமலி
பட்டிசர மேமருவுவார்
விண்ணின்மிசை வாழுமிமை யோரொடுட
னாதலது மேவலௌதே
3.073.4
சிவபெருமானின் கண்களை உமாதேவி பொத்த, அதனால் அரும்பிய வியர்வையைக் கங்கையாகச் செஞ்சடையில் தாங்கியவன். அப்பெருமான் பண்ணிசைகளோடு பாடல்களைப் பாடவும், ஆடவும் வல்லவன். பால் போன்ற வெண்ணிறச் சந்திரனைச் சூடியவன். அப்பெருமான் மண்ணுலகில் ஒப்பற்ற பெருமையுடைய திருமழபாடி என்னும் தலத்தில் திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். அவனைப் போற்றி வணங்குபவர்களுக்கு விண்ணுலகிலுள்ள தேவர்களுடன் வாழ்வது எளிதாகும்.
3585 மருவமுழ வதிரமழ பாடிமலி
மத்தவிழ வார்க்கவரையார்
பருவமழை பண்கவர்செய் பட்டிசர
மேயபடர் புன்சடையினான்
வெருவமத யானையுரி போர்த்துமையை
யஞ்சவரு வெள்விடையினான்
உருவமெரி கழல்கடொழ வுள்ளமுடை
யாரையடை யாவினைகளே
3.073.5
முழவு முதலிய வாத்தியங்கள் அதிர்ந்து ஒலிக்க, திருமழபாடி என்னும் திருத்தலம் கோயில் உற்சவங்களாலும், விழாக்களியாட்டங்களாலும் ஓசை மிகுந்து விளங்குகின்றது. மலை உள்ளதால் பருவகாலத்தில் மழை பொழிய, வளம் மிகுந்து, கண்டவர் மனத்தைக் கவர்கின்ற திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் படர்ந்த செஞ்சடையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் அஞ்சத்தக்க மதயானையின் தோலை உமாதேவி அஞ்சுமாறு உரித்துப் போர்த்துக் கொண்டவன். வெண்ணிற இடபத்தை வாகனமாகக் கொண்டவன். நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியுடைய அச்சிவபெருமானின் திருவடிகளை உள்ளம் ஒன்றித் தொழுபவர்களை வினையால் வரும் துன்பம் சாராது.
3586 மறையினொலி கீதமொடு பாடுவன
பூதமடி மருவிவிரவார்
பறையினொலி பெருகநிகழ் நட்டமமர்
பட்டிசர மேயபனிகூர்
பிறையினொடு மருவியதொர் சடையினிடை
யேற்றபுன றோற்றநிலையாம்
இறைவனடி முறைமுறையி னேத்துமவர்
தீத்தொழில்க ளில்லர்மிகவே
3.073.6
வேதங்கள் ஓதும் ஒலியும், கீதங்கள் பாடும் ஒலியும், பூதகணங்கள் திருவடிக்கீழ் அமர்ந்து போற்றும் ஒலியும் கலந்து ஒலிக்க, பறை என்னும் வாத்திய ஓசையும் பெருகத் திருநடனம் புரியும் சிவபெருமான் திருப்பட்டீச்சரம் என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். குளிர்ச்சி பொருந்திய சந்திரனை அணிந்த சடையிலே கங்கையையும் தாங்கிய நிலையான தோற்றப் பொலிவு உடையவன். அத்தகைய இறைவனின் திருவடிகளை நாடொறும் முறைமையோடு போற்றி வணங்குபவர்கள் துன்புறும் வினைகளிலிருந்து முற்றிலும் நீங்கியவராவர்.
3587 பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை
யோருலகு பேணலுறுவார்
துறவியெனு முள்ளமுடை யார்கள்கொடி
வீதியழ காயதொகுசீர்
இறைவனுறை பட்டிசர மேத்தியெழு
வார்கள்வினை யேதுமிலவாய்
நறவவிரை யாலுமொழி யாலும்வழி
பாடுமற வாதவவரே
3.073.7
பிறவியாகிய நோயும், மூப்பும் நீங்கித் தேவலோகத்தில் உள்ளவர்களால் பாராட்டப்படுகின்றவர்களும், உலகப் பற்றைத் துறந்த உள்ளமுடைய ஞானிகளும் வாழ்கின்ற, கொடி அசைகின்ற வீதிகளையுடைய திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் அழகிய சிறப்புடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அக்கோயிலைப் போற்றி வணங்குபவர்கள் வினை சிறிதும் இல்லாதவராகி, தேன் ஒழுகுகின்ற நறுமணம் கமழும் மலர்களாலும், தோத்திரங்களாலும் சிவனை வழிபட மறவாதவர்களாவர். அவர்கள் சிவகணங்களோடு உறைவர் என்பது குறிப்பு.
3588 நேசமிகு தோள்வலவ னாகியிறை
வன்மலையை நீக்கியிடலும்
நீசன்விறல் வாட்டிவரை யுற்றதுண
ராதநிரம் பாமதியினான்
ஈசனுறை பட்டிசர மேத்தியெழு
வார்கள்வினை யேதுமிலவாய்
நாசமற வேண்டுதலி னண்ணலௌ
தாமமரர் விண்ணுலகமே
3.073.8
திக்குவிசயம் செய்வதில் விருப்பம் கொண்டு வரும் இராவணன் தன் புய வலிமையினால் சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க, இழிபண்புடைய இராவணனின் வலிமையை வாட்டியவராய், தன்னுடைய எல்லையும், தன்னுடைய நிலைமையும் பிறரால் அறியப்படாது, பிறைச்சந்திரனை அணிந்த அச்சிவபெருமான் வீற்றிருந்தருகின்ற திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலைத் தொழுது வணங்குவார்களின் வினை முழுவதும் நீங்க, இனிப் பிறந்திறத்தலும் நீங்க அவர்கள் சிவஞானம் பெறுதலால் விண்ணுலகத்தை எளிதில் அடைவர்.
3589 தூயமல ரானுநெடி யானுமறி
யாரவன தோற்றநிலையின்
ஏயவகை யானதனை யாரதறி
வாரணிகொண் மார்பினகலம்
பாயநல நீறதணி வானுமைத
னோடுமுறை பட்டிசரமே
மேயவன தீரடியு மேத்தவெளி
தாகுநல மேலுலகமே
3.073.9
தூய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் சிவபெருமானுடைய தோற்றத்தையும், பலவகையான நிலைகளையும் அறியாதவர்களாயின் வேறுயார்தான் அவற்றை அறிவர்? அழகிய அகன்ற மார்பு முழுவதும் திருநீற்றினை அணிந்து உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளுகின்ற திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலை அடைந்து அவன் இரு திருவடிகளைப் போற்றி வணங்கச் சிவஞானம் பெறுதலும், அதன் பயனால் முக்தியுலகை அடைதலும் எளிதாகும்.
3590 தடுக்கினை யிடுக்கிமட வார்களிடு
பிண்டமது வுண்டுழல்தரும்
கடுப்பொடி யுடற்கவசர் கத்துமொழி
காதல்செய்தி டாதுகமழ்சேர்
மடைக்கயல் வயற்கொண்மழ பாடிநகர்
நீடுபழை யாறையதனுள்
படைக்கொரு கரத்தன்மிகு பட்டிசர
மேத்தவிணை பற்றறுதலே
3.073.10
தடுக்கையேந்திப் பெண்கள் இடுகின்ற உணவை உண்டு, சுற்றித் திரிகின்றவர்களும், கடுக்காய்ப் பொடியைத் தின்பவர்களுமான சமணர்களும், உடம்பைப் போர்த்திக் கொள்கின்ற பௌத்தர்களும் கூறும் அன்பற்ற
3591 மந்தமலி சோலைமழ பாடிநகர்
நீடுபழை யாறையதனுள்
பந்தமுயர் வீடுநல பட்டிசர
மேயபடர் புன்சடையனை
அந்தண்மறை யோரினிது வாழ்புகலி
ஞானசம் பந்தனணியார்
செந்தமிழ்கள் கொண்டினிது செப்பவல
தொண்டர்வினை நிற்பதிலவே
3.073.11
தென்றல் உலாவும் சோலைகளையுடைய திருமழபாடி என்னும் நகர்ப் பகுதியைத் தன்னுள் கொண்ட நெடிய பழையாறை என்னும் திருத்தலத்தில், தன்னையடைந்தவர்கட்குப் பந்தமும், வீடும் அருளவல்ல நல்ல திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் படர்ந்த சிறுசடைகளையுடைய சிவபெருமான். அப்பெருமானைப் போற்றி எவ்வுயிர்களிடத்தும் இரக்கமுள்ள மறையோர்கள் இனிது வாழ்கின்ற திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அழகிய செந்தமிழில் அருளிய இப்பதிகத்தைக் கேட்டற்கும், உணர்தற்கும் இனிதாகச் சொல்லவல்ல தொண்டர்களின் வினைகள் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
3.073.திருப்பட்டீச்சரம் |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|