|
||||||||
மூன்றாம் திருமுறை-77 |
||||||||
3.077.திருமாணிகுழி
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கமேனியீசுவரர்.
தேவியார் - மாணிக்கவல்லியம்மை.
3624 பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு
பங்கர்புன றங்குசடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல்
வித்தகர் மகிழ்ந்துறைவிடம்
கன்னியிள வாளைகுதி கொள்ளவிள
வள்ளைபட ரள்ளல்வயல்வாய்
மன்னியிள மேதிகள் படிந்துமனை
சேருதவி மாணிகுழியே
3.077.1
சிவபெருமான் பொன்மயமான இமயமலை அரசனின் மகளான உமாதேவியைத் தன்திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். கங்கைநீர் தங்கிய சடையில் வன்னிப் பத்திரத்துடன் பொன்னூமத்தம் பூவை அணிந்த வலிய அறிவுருவான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, வரப்பின்மேல் இளவள்ளைக் கொடிகள் படர்ந்த சேற்றையுடைய வயலில், இள வாளை மீன்கள் துள்ளிப்பாய, இள எருமைகள் அதில் படிந்து வீடுசேரும், நீர்வளமும் நிலவளமுமிக்க திருமாணிகுழி ஆகும்.
3625 சோதிமிகு நீறதுமெய் பூசியொரு
தோலுடை புனைந்துதெருவே
மாதர்மனை தோறுமிசை பாடிவசி
பேசுமர னார்மகிழ்விடம்
தாதுமலி தாமரை மணங்கமழ
வண்டுமுர றண்பழனமிக்
கோதமலி வேலைபுடை சூழுலகி
னீடுதவி மாணிகுழியே
3.077.2
ஒளிமிகுந்த திருவெண்ணீற்றினைத் திரு மேனியில் உத்தூளணமாகப் பூசி, தோலை ஆடையாக அணிந்து, தெருக்களில் பெண்கள் உள்ள ஒவ்வொரு இல்லமும் சென்று இசைப்பாடல்களைப் பாடி வயப்படுத்தும் பேச்சுக்களைப் பேசும் சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் தலம் மகரந்தப்பொடிகள் மிக்க தாமரை மலர்கள் மணம் வீசுவதும், வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ச்சி பொருந்திய வயல்களையுடையதும், கடலலைகளின் ஓசை மிகுந்ததும் ஆகி விளங்குகின்ற திருமாணிகுழி என்பதாம்.
3626 அம்பனைய கண்ணுமை மடந்தையவ
ளஞ்சிவெரு வச்சினமுடைக்
கம்பமத யானையுரி செய்தவர
னார்கருதி மேயவிடமாம்
வம்புமலி சோலைபுடை சூழமணி
மாடமது நீடி யழகார்
உம்பரவர் கோனகர மென்னமிக
மன்னுதவி மாணிகுழியே
3.077.3
அம்பு போன்ற கூரிய கண்களையுடைய உமாதேவி அஞ்ச, கோபமுடைய, தூணிலே கட்டக்கூடிய மதயானையின் தோலை உரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், நறுமணமிக்க சோலைகளையுடையதும், இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாடமாளிகைகள் நிறைந்த அழகிய தேவலோகத்து நகரமாகிய அமராவதியைப் போன்று நிலைபெற்று விளங்குவதும் ஆகிய திருமாணிகுழியாகும்.
3627 நித்தநிய மத்தொழில னாகிநெடு
மால்குறள னாகிமிகவும்
சித்தம தொருக்கிவழி பாடுசெய
நின்றசிவ லோகனிடமாம்
கொத்தலரமலர்ப்பொழிலி னீடுகுல
மஞ்ஞைநட மாடலதுகண்
டொத்தவரி வண்டுக ளுலாவியிசை
பாடுதவி மாணிகுழியே
3.077.4
நாள்தோறும் அநுட்டானம் முதலிய நியமம் பூண்டவனாய்த் திருமால் வாமனவடிவங் கொண்டு மனத்தை ஒரு முகப்படுத்தி வழிபாடு செய்யச் சிவலோக நாயகனாகிய சிவ பெருமான் வீற்றிருந்தருளும் தலம், கொத்தாக மலர்ந்துள்ள பூக்களையுடைய சோலைகளில் சிறந்த மயில்கள் நடனமாட அதைப்பார்த்த வரிகளையுடைய வண்டுகள் நடனத்துக்கு ஒத்தவாறு இசைபாடுகின்ற திருமாணிகுழி ஆகும்.
3628 மாசின்மதி சூடுசடை மாமுடியர்
வல்லசுரர் தொன்னகரமுன்
நாசமது செய்துநல வானவர்க
ளுக்கருள்செய் நம்பனிடமாம்
வாசமலி மென்குழன் மடந்தையர்கண்
மாளிகையின் மன்னியழகார்
ஊசன்மிசை யேறியினி தாகவிசை
பாடுதவி மாணிகுழியே
3.077.5
சிவபெருமான் குற்றமில்லாத சந்திரனைச் சடையில் சூடியவர். வல்லசுரர்களின் பழமைவாய்ந்த திரிபுரங்களை அழித்து நற்குண நற்செய்கையுடைய தேவர்கட்கு அருள்புரிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம், நறுமணமிக்க மெல்லிய கூந்தலையுடைய பெண்கள், மாளிகைகளில் தங்கி அழகிய ஊஞ்சலில் ஏறியமர்ந்து இனிமையாக ஊசற்பாட்டுப்பாடி ஆடுகின்ற திருமாணிகுழி ஆகும்.
3629 மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு
மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை
செய்தமணி கண்டனிடமாம்
சந்தினொடு காரகில் சுமந்துதட
மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண
மாருதவி மாணிகுழியே
3.077.6
மலரும் நிலையிலுள்ள மலர்களைக் கொண்டு சிவவழிபாடு செய்த பிரமசாரியான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரும் மனத்தோடு வந்த காலனின் உயிர் நீங்குமாறு காலால் உதைத்த நீலகண்டனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், சந்தன மரங்கள், கரிய அகிற் கட்டைகள் இவற்றைச் சுமந்து மலையிலிருந்து விழுந்து, குளங்களில் பூத்துள்ள சிறந்த மலர்களையும் தள்ளிக் கொண்டு வரும் கெடிலநதியின் நீர் வயல்களில் பாய நறுமணம் கமழும் திருமாணிகுழி ஆகும்.
3630 எண் பெரிய வானவர்க ணின்றுதுதி
செய்யவிறை யேகருணையாய்
உண்பரிய நஞ்சுதனை யுண்டுலக
முய்யவரு ளுத்தமனிடம்
பண்பயிலும் வண்டுபல கெண்டிமது
வுண்டுநிறை பைம் பொழிலின்வாய்
ஒண்பலவி னின்கனி சொரிந்துமண
நாறுதவி மாணிகுழியே
3.077.7
எண்ணற்ற தேவர்கள் வணங்கிநின்று துதி செய்யப் பேரருளுடையவனாய் எவரும் உண்ணுதற்கரிய நஞ்சை உண்டு உலகம் உய்யும்படி அருள்செய்த உத்தமனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, பண்ணிசை பாடுகின்ற வண்டுகள், பல மலர்களையும் கிளறி, தேனருந்த, வளம்மிக்க பசுமை வாய்ந்த சோலைகளிடத்துச் சிறந்த பலாமரங்களின் இனிய கனிகளிலிருந்து தேனைச் சொரிந்து நறுமணம் கமழ்கின்ற திருமாணிகுழி என்பதாகும்.
3631 எண்ணமது வின்றியெழி லார்கைலை
மாமலை யெடுத்ததிறலார்
திண்ணிய வரக்கனை நெரித்தருள்
புரிந்தசிவ லோகனிடமாம்
பண்ணமரு மென்மொழியி னார்பணை
முலைப்பவள வாயழகதார்
ஒண்ணுதன் மடந்தையர் குடைந்துபுன
லாடுதவி மாணிகுழியே
3.077.8
கயிலைமலையின் பெருமையையும், சிவ பெருமானின் அளவற்ற ஆற்றலையும் சிந்தியாது, கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த வலிய அரக்கனான இராவணனை அம்மலையின்கீழ் நெரித்து, பின் அவன் சாமகானம் பாட அருள்புரிந்த சிவலோக நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, பண் போன்று மென்மொழி பேசபவர்களாய்ப் பருத்த கொங்கைகளையும், பவளம் போன்ற வாயையும், அழகிய ஒளிபொருந்திய நெற்றியையுமுடைய பெண்கள் கையாற் குடைந்து நீராடும் திருமாணிகுழி ஆகும்.
3632 நேடுமய னோடுதிரு மாலுமுண
ராவகை நிமிர்ந்துமுடிமேல்
ஏடுலவு திங்கண்மத மத்தமித
ழிச்சடையெம் மீசனிடமாம்
மாடுலவு மல்லிகை குருந்துகொடி
மாதவி செருந்திகுரவி
னூடுலவு புன்னைவிரை தாதுமலி
சேருதவி மாணிகுழியே
3.077.9
பிரமனும், திருமாலும் இறைவனின் அடிமுடி தேடியும், உணராவகை நெருப்புப்பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவ பெருமான். அவர்தம் சடைமுடியில் வெண்தாமரை இதழ் போன்ற பிறைச்சந்திரனையும், ஊமத்தை, கொன்றை ஆகியவற்றையும் அணிந்து விளங்குபவர். எம் இறைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, மகரந்தப்பொடி நிறைந்த மல்லிகை, குருந்து, மாதவி, செருந்தி, குரவம், புன்னை என்ற மணம் கமழும் மலர்கள் நிறைந்த திருமாணிகுழி என்பதாம்.
3633 மொட்டையம ணாதர்முது தேரர்மதி
யில்லிகண் முயன்றனபடும்
முட்டைகண் மொழிந்தமொழி கொண்டருள்செய்
யாதமுதல் வன்றனிடமாம்
மட்டைமலி தாழையிள நீர்முதிய
வாழையில் விழுந்தவதரில்
ஒட்டமலி பூகநிரை தாறுதிர
வேறுதவி மாணிகுழியே
3.077.10
மொட்டைத் தலையுடைய சமணர்களும், பேதைமை முதிர்ந்த புத்தர்களும் இறையுண்மையை உணராதவர்கள். முயன்று செய்த வினைகளே பயன்தரும். அதற்குக் கர்த்தாவேண்டா என்று சொல்பவர்கள் அவர்கள். உருட்டிய வழி உருளும். முட்டை போல் தமக்கென ஓர் உறுதி இல்லாத, அவர்கள் சொன்ன சொற்களால் அவர்கட்கு அருள்புரியாத சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, மட்டைகளையுடைய தென்னைகளின் இளநீர்கள் வாழையிலும், பாக்கு மரங்களிலும் விழுந்து குலைகள் சிதற விளங்கும் திருமாணிகுழி ஆகும்.
3634 உந்திவரு தண்கெடில மோடுபுனல்
சூழுதவி மாணிகுழிமேல்
அந்திமதி சூடியவெம் மானையடி
சேருமணி காழிநகரான்
சந்தநிறை தண்டமிழ் தெரிந்துணரும்
ஞானசம் பந்தனதுசொல்
முந்தியிசை செய்துமொழி வார்களுடை
யார்கணெடு வானநிலனே
3.077.11
பல பொருள்களை நீர்ப்பெருக்குடன் அடித்து வரும் கெடிலநதி சூழ்ந்த உதவிமாணிகுழியின் மீது, மாலைக்காலப் பிறைச்சந்திரனைச் சூடிய எம் தலைவனான சிவபெருமானின் திருவடிகளை இடைவிடாது தியானிக்கும் அழகிய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் சந்தம் நிறைந்த இன்தமிழில் அறிந்துணர்ந்து அருளிய இத்திருப்பதிகத்தை இசையுடன் பாட முற்படுபவர்கள் உயர்ந்த முத்திப் பேற்றைப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
3.077.திருமாணிகுழி |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|