|
||||||||
மூன்றாம் திருமுறை-86 |
||||||||
3.086.திருச்சேறை
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சென்னெறியப்பர்.
தேவியார் - ஞானவல்லியம்மை.
3723 முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள்
வெருவமுன்
வெறியுறு மதகரி யதள்பட வுரிசெய்த
விறலினர்
நறியுறு மிதழியின் மலரொடு நதிமதி
நகுதலை
செறியுறு சடைமுடி யடிகடம் வளநகர்
சேறையே
3.086.1
சிவபெருமான், தளிர் போன்ற நிறமும், அரும்பு போன்ற முலையுமுடைய உமாதேவி அஞ்சுமாறு, மதம் பிடித்த யானையின் தோலை உரித்த வலிமையுடையவர். நறுமணம் கமழும் இதழ்களை உடைய கொன்றைப் பூவோடு, கங்கை நதியையும், பிறைச்சந்திரனையும், மண்டையோட்டையும் நெருங்கிய சடை முடியில் அணிந்துள்ள அவ்வடிகள் வீற்றிருந் தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
3724 புனமுடை நறுமலர் பலகொடு தொழுவதொர்
புரிவினர்
மனமுடை யடியவர் படுதுயர் களைவதொர்
வாய்மையர்
இனமுடை மணியினொ டரசிலை யொளிபெற
மிளிர்வதோர்
சினமுதிர் விடையுடை யடிகடம் வளநகர்
சேறையே
3.086.2
வணங்களிலுள்ள பல நறுமலர்களைப் பறித்துத் தூவித் தொழுகின்ற அடியவர்கட்கும், மன உறுதிப்பாட்டுடன் அன்பால் உருகித் தியானம் செய்யும் அடியவர்கட்கும் துயர் களைந்து அருள்புரியும் நியமமுடைய சிவபெருமான் கழுத்தில் கட்டப்படும் மணியும், அரசிலை போன்ற அணியும் ஒளிர, மிக்க கோபமுடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவராய் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
3725 புரிதரு சடையினர் புலியத ளரையினர்
பொடிபுல்கும்
எரிதரு முருவின ரிடபம தேறவ
ரீடுலா
வரிதரு வளையின ரவரவர் மகிழ்தர
மனைதொறும்
திரிதரு சரிதைய ருறைதரு வளநகர்
சேறையே
3.086.3
சிவபெருமான் முறுக்குண்ட சடைமுடி உடையவர். புலியின் தோலை அரையில் கட்டியவர். நீறுபூத்த நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியில் வெண்ணிறத் திருநீற்றினைப் பூசி விளங்கும் உருவினர். இடப வாகனத்தில் ஏறுபவர். சரிந்த வரிகளையுடைய வளையல்களை அணிந்த, பெருமையுடைய மகளிர் மகிழும்படி வீடுகள்தோறும் திரிந்து பிச்சையேற்கும் இயல்புடையவர். அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
3726 துடிபடு மிடையுடை மடவர லுடனொரு
பாகமா
இடிபடு குரலுடை விடையினர் படமுடை
யரவினர்
பொடிபடு முருவினர் புலியுரி பொலிதரு
மரையினர்
செடிபடு சடைமுடி யடிகடம் வளநகர்
சேறையே
3.086.4
உடுக்கை போன்று குறுகிய இடையுடைய உமா தேவியைச், சிவபெருமான் தம் ஒரு பாகமாகக் கொண்டவர். இடிமுழக்கம் போன்ற குரலுடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவர். படமெடுத்தாடும் பாம்பை அணிந்தவர். திருவெண்ணீறு அணிந்த உருவினர். இடையில் புலித்தோலாடை அணிந்தவர். செடிபோன்று அடர்த்தியான சடைமுடி உடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
3727 அந்தர முழிதரு திரிபுர மொருநொடி
யளவினில்
மந்தர வரிசிலை யதனிடை யரவரி
வாளியால்
வெந்தழி தரவெய்த விடலையர் விடமணி
மிடறினர்
செந்தழ னிறமுடை யடிகடம் வளநகர்
சேறையே
3.086.5
சிவபெருமான் ஆகாயத்தில் சுற்றித் திரிந்த திரி புரங்களை ஒரு நொடிப்பொழுதில் மலையை வில்லாகவும், அதனிடை வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் பூட்டி, திருமால், வாயு, அக்கினி இவற்றை அம்பாகக் கொண்டு எய்து வெந் தழியுமாறு செய்த வீரமிக்க வாலிபர். தேக்கிய விடம் மணி போன்று விளங்கும் கண்டத்தர். செந்தழல் போன்ற மேனியுடைய அவர் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
3728 மத்தர முறுதிறன் மறவர்தம் வடிவுகொ
டுருவுடைப்
பத்தொரு பெயருடை விசயனை யசைவுசெய்
பரிசினால்
அத்திர மருளுந மடிகள தணிகிளர்
மணியணி
சித்திர வளநகர் செறிபொழி றழுவிய
சேறையே
3.086.6
மந்தர மலை போன்ற வலிமையுடைய வேட்டுவ வடிவம் தாங்கி வந்து, பத்துப் பெயர்களைச் சிறப்பாகக் கொண்ட விசயனைப் பொருது தளரச் செய்து, அவன் கௌரவர்களைத் தோல்வியடையச் செய்யும் வண்ணம் பாசுபதம் என்னும் அம்பைக் கொடுத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளுவது இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய வளநகராய், அடர்ந்த சோலைகள் சூழப்பெற்ற திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
3729 பாடின ரருமறை முறைமுறை பொருளென
வருநடம்
ஆடின ருலகிடை யலர்கொடு மடியவர்
துதிசெய
வாடினர் படுதலை யிடுபலி யதுகொடு
மகிழ்தரும்
சேடர்தம் வளநகர் செறிபொழி றழுவிய
சேறையே
3.086.7
இறைவன் முறைப்படி வரிசையாக அரிய வேதங்களைப் பாடியருளியவர். ஐந்தொழில்களை ஆற்றும் திரு நடனம் செய்பவர். உலகில் அடியவர்கள் மலரும், பூசைக்குரிய பிற பொருள்களும் கொண்டு போற்றித் துதிக்க அருள்செய்பவர். வாட்டமுற்ற பிரமனின் வறண்ட மண்டையோட்டில் பிச்சையேற்று மகிழ்பவர். அப்பெருமான் பெருமையுடன் வீற்றிருந்தருளும் வளநகர், அடர்ந்த சோலைகள் விளங்கும் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
3730 கட்டுர மதுகொடு கயிலைநன் மலைமலி
கரமுடை
நிட்டுர னுடலொடு நெடுமுடி யொருபது
நெரிசெய்தார்
மட்டுர மலரடி யடியவர் தொழுதெழ
வருள்செயும்
சிட்டர்தம் வளநகர் செறிபொழி றழுவிய
சேறையே
3.086.8
தனது உறுதியான உடல்வலிமை கொண்டு கயிலைமலையைத் தன் மிகுதியான கரங்களால் பெயர்த்தெடுக்க முயன்ற கொடியவனான இராவணனின் உடலும், பெரிய தலைகள் பத்தும் நெரித்தவர் சிவபெருமான். அவருடைய நறுமணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை அடியவர்கள் தொழுது போற்ற அருள் செய்யும் நல்லியல்புடையவர். அவர் வீற்றிருந்தருளும் வளநகர் அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
3731 பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு
படர்தர
அன்றிய வவரவ ரடியொடு முடியவை
யறிகிலார்
நின்றிரு புடைபட நெடுவெரி நடுவெயொர்
நிகழ்தரச்
சென்றுயர் வெளிபட வருளிய வவர்நகர்
சேறையே
3.086.9
திருமால் பன்றி உருவெடுத்தும், பிரமன் அன்னப்பறவை உருவெடுத்தும் இறைவனைக் காணமுயல, அவ்விருவரும் தன் அடியையும், முடியையும் அறியாவண்ணம் அவர்கள் நடுவே நெடிய நெருப்புப் பிழம்பாய்த் தோன்றுமாறு, ஓங்கி, தன் மேலாந்தன்மை வெளிப்பட அருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் நகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
3732 துகடுறு விரிதுகி லுடையவ ரமணெனும்
வடிவினர்
விகடம துறுசிறு மொழியவை நலமில
வினவிடல்
முகிடரு மிளமதி யரவொடு மழகுற
முதுநதி
திகடரு சடைமுடி யடிகடம் வளநகர்
சேறையே
3.086.10
அழுக்கு மிகுந்த ஆடையை உடுத்திக் கொள்ளும் புத்தர்களும், தோற்றத்தாலேயே இவர்கள் அமணர்கள் என்று கண்டு கொள்ளத்தக்க வடிவுடைய சமணர்களும், குறும்புத்தனமாகக் கூறும் அற்ப மொழிகள் நன்மை பயக்காதவை. எனவே அவற்றைக் கேளற்க. அரும்பையொத்த இளம்பிறைச் சந்திரனையும், பாம்பையும், கங்கையையும் அழகுற அணிந்த சடைமுடியுடைய அடிகளான சிவபெருமான் வீற்றிருந்தருளும் வள நகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
3733 கற்றநன் மறைபயி லடியவ ரடிதொழு
கவினுறு
சிற்றிடை யவளொடு மிடமென வுறைவதொர்
சேறைமேல்
குற்றமில் புகலியு ளிகலறு ஞானசம்
பந்தன
சொற்றக வுறமொழி பவரழி விலர்துயர்
தீருமே
3.086.11
நன்மை தரும் வேதங்களை ஐயந்திரிபறக் கற்று ஓதும் அடியவர்கள், தன்னுடைய திருவடிகளைத் தொழ, அழகிய குறுகிய இடையுடைய உமாதேவியோடு, சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருச்சேறை என்னும் திருத்தலத்தைப் போற்றிக், குற்றமற்ற புகலியில் அவதரித்த, எவரோடும் பகைமையில்லாத ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை முறையோடு ஓதுபவர்கள் அழிவற்றவர்கள். அவர்களின் துன்பங்கள் யாவும் தீரும்.
திருச்சிற்றம்பலம்
3.086.திருச்சேறை |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|