|
||||||||
மூன்றாம் திருமுறை-87 |
||||||||
3.087.திருநள்ளாறு
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியர்.
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
இது சமணர் வாதின்பொருட்டுத் தீயிலிடுதற்கு போகமார்த்த பூண்முலையாளென்னும் பதிகம் உதயமாக இது தீயில் பழுது படாது என்னுந் துணிவுகொண்டு அருளிச்செய்த பதிகம்.
3734 தளிரிள வளரொளி தனதெழி
றருதிகழ் மலைமகள்
குளிரிள வளரொளி வனமுலை
யிணையவை குலவலின்
நளிரிள வளரொளி மருவுநள்
ளாறர்தந் நாமமே
மிளிரிள வளரெரி யிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே
3.087.1
இளந்தளிர் நாளுக்கு நாள் வளர்ந்து பசுமை அடைதல் போல், வளரும் அருளின் எழில் திகழும் உமாதேவியின், குளிர்ந்த, வளரும் இள ஒளிவீசம் அழகிய முலையை மகிழ்ந்து தழுவப் பெறுதலால். குளிர்ந்த வளரொளி போன்று நள்ளாறர்தம் புகழ்கூறும், ‘போகமார்த்த பூண் முலையாள்’ என்று தொடங்கும் (தி.1. ப.49. பா.1) திருப்பதிகம் எழுதப்பெற்ற ஓலையை, அவர் திருமேனி போல் பிரகாசிக்கின்ற நெருப்பிலிட்டால் அவை பழுது இல்லாதனவாம் என்பது சத்தியமே.
3735 போதமர் தருபுரி குழலெழின்
மலைமகள் பூணணி
சீதம தணிதரு முகிழிள
வனமுலை செறிதலின்
நாதம தெழிலுரு வனையநள்
ளாறர்தந் நாமமே
மீதம தெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே
3.087.2
மலர் கொண்டு புனைந்து அலங்கரிக்கப்பட்ட கூந்தலை உடைய அழகிய மலைமகளான உமாதேவியின் ஆபரணம் அணிந்து, குளிர்ச்சிதரும் சந்தனத்தை அணிந்த, அரும்பொத்த இளைய அழகிய முலைகளைத் தழுவுகின்றவரும், நாத தத்துவம் அழகிய உருவாகக் கொண்டவருமான திருநள்ளாறு இறைவரின் புகழ் கூறும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேலான அவருருவான நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே.
3736 இட்டுறு மணியணி யிணர்புணர்
வளரொளி யெழில்வடம்
கட்டுறு கதிரிள வனமுலை
யிணையொடு கலவலின்
நட்டுறு செறிவயன் மருவுநள்
ளாறர்தந் நாமமே
இட்டுறு மெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே
3.087.3
பூங்கொத்துக்களைப் போன்று, இரத்தினங்கள் வரிசையாகக் கோக்கப்பட்ட மாலையணிந்த உமாதேவியின், ஒளி வீசும் இளைய அழகிய முலைகளைத் தழுவும், கதிர்கள் நெருக்கமாக வளர்ந்துள்ள வயல்வளமிக்க திருநள்ளாறு இறைவனின் புகழ் உரைக்கும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை அனல் வாதத்திற்கென வளர்க்கப்பட்ட நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே.
3737 மைச்சணி வரியரி நயனிதொன்
மலைமகள் பயனுறு
கச்சணி கதிரிள வனமுலை
யவையொடு கலவலின்
நச்சணி மிடறுடை யடிகணள்
ளாறர்தந் நாமமே
மெச்சணி யெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே
3.087.4
மை பூசப்பெற்ற ஒழுங்கான செவ்வரி படர்ந்த அழகிய கண்களையுடைய தொன்மையாய் விளங்கும் உமா தேவியாரின் பரஞானம், அபரஞானம் ஆகிய பயன்தரும் கச்சணிந்த ஒளிரும் இளைய அழகிய முலையைத் தழுவும் நஞ்சணி கண்டத்தினனான திருநள்ளாற்று இறைவனைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை அழகிய நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே.
3738 பண்ணியன் மலைமகள் கதிர்விடு
பருமணி யணிநிறக்
கண்ணியல் கலசம தனமுலை
யிணையொடு கலவலின்
நண்ணிய குளிர்புனல் புகுதுநள்
ளாறர்தந் நாமமே
விண்ணிய லெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே
3.087.5
பண்பாடமைந்த மலைமகளின் ஒளிவீசுகின்ற இரத்தினங்கள் பதித்த ஆபரணத்தை அணிந்த, அழகான கலசம் போன்ற இருமுலைகளையும் கூடும், குளிர்ச்சி பொருந்திய நீர் பாயும் திருநள்ளாற்று இறைவனின் நாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை ஆகாயமளாவிய இந்நெருப்பில் இட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே.
3739 போதுறு புரிகுழன் மலைமக
ளிளவளர் பொன்னணி
சூதுறு தளிர்நிற வனமுலை
யவையொடு துதைதலின்
தாதுறு நிறமுடை யடிகணள்
ளாறர்தந் நாமமே
மீதுறு மெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே
3.087.6
மலர்களணிந்த பின்னிய கூந்தலையுடைய மலைமகளான உமாதேவியாரின் பொன்னாபரணம் அணிந்த, சூதாடும் வட்டை ஒத்த, தளிர்போன்ற நிறமுடைய அழகிய முலைகளோடு நெருங்கியிருத்தலால், பொன்போலும் நிறம் பெற்ற அடிகளாகிய நள்ளாற்று இறைவனின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேல்நோக்கி எரியும் இயல்புடைய இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது, சத்தியமே.
3740 கார்மலி நெறிபுரி சுரிகுழன்
மலைமகள் கவினுறு
சீர்மலி தருமணி யணிமுலை
திகழ்வொடு செறிதலின்
தார்மலி நகுதலை யுடையநள்
ளாறர்தந் நாமமே
ஏர்மலி யெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே
3.087.7
அடர்த்தியான, பின்னப்பட்ட, சுருண்ட கார் மேகம் போன்ற கருநிறமான கூந்தலையுடைய மலைமகளான உமாதேவியின் அழகிய, சிறந்த மணிகள் பதிக்கப்பட்ட ஆபரணம் அணிந்த முலைகளோடு நெருங்கியிருக்கும், மண்டையோட்டை மாலையாக அணிந்துள்ள திருநள்ளாற்று இறைவனின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை எழுச்சியுடன் எரியும் இந்நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே.
3741 மன்னிய வளரொளி மலைமகள்
தளிர்நிற மதமிகு
பொன்னியன் மணியணி கலசம
தனமுலை புணர்தலின்
தன்னியல் தசமுக னெரியநள்
ளாறர்தந் நாமமே
மின்னிய லெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே
3.087.8
நிலைபெற்று வளரும் ஞானவொளி பிரகாசிக்கும் மலைமகளான உமாதேவியின் தளிர்நிறத்தனவாய் மான்மதமாகிய கத்தூரியை அணியப்பெற்றனவாய், இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பொன்னாலான ஆபரணத்தை அணிந்துள்ளனவாய், கலசத்தை ஒத்தனவாய் விளங்கும் இருமுலைகளைப் புணர்கின்றவரும், ஆணவமே இயல்பாக உடைய இராவணனைக் கயிலையின் கீழ் நெரியும்படி செய்தவருமான திருநள்ளாற்று இறைவரின் திரு நாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை, மின்னலைப் போன்ற எரியும் இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே.
3742 கான்முக மயிலியன் மலைமகள்
கதிர்விடு கனமிகு
பான்முக மியல்பணை யிணைமுலை
துணையொடு பயிறலின்
நான்முக னரியறி வரியநள்
ளாறர்தந் நாமமே
மேன்முக வெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே
3.087.9
காட்டில் விளங்கும் மயில் போன்ற சாயலையுடைய உமாதேவியின், ஒளிவிடுகின்ற கனத்த பால்சுரக்கும் பருத்த இருமுலைகளைக் கூடுகின்றவரும், பிரமனும், திருமாலும் அறிவதற்கு அரியவராக விளங்குகின்றவருமான திருநள்ளாற்று இறைவரின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேல்நோக்கி எரியும் இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே.
3743 அத்திர நயனிதொன் மலைமகள்
பயனுறு மதிசயச்
சித்திர மணியணி திகழ்முலை
யிணையொடு செறிதலின்
புத்தரொ டமணர்பொய் பெயருநள்
ளாறர்தந் நாமமே
மெய்த்திர ளெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே
3.087.10
அம்பு போன்று கூர்மையான கண்களையுடைய தொன்மையான மலைமகளான உமாதேவியின் பயன்தரும் அதிசயம் விளைவிக்கும், பலவகையான இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் அணியப் பெற்றுள்ள இருமுலைகளோடு நெருங்கியிருப்பவரும், புத்தர்களாலும், சமணர்களாலும் உணரப்படாதவரும் பொய்யினின்று நீங்கியவருமான திருநள்ளாற்று இறைவரின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை, திரண்டு எரியும் இந்நெருப்பில் இட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே.
3744 சிற்றிடை யரிவைதன் வனமுலை
யிணையொடு செறிதரும்
நற்றிற முறுகழு மலநகர்
ஞானசம் பந்தன
கொற்றவ னெதிரிடை யெரியினி
லிடவிவை கூறிய
சொற்றெரி யொருபது மறிபவர்
துயரிலர் தூயரே
3.087.11
சிறிய இடையினையுடைய உமாதேவியின் அழகிய முலைகளோடு நெருங்கியிருக்கும் திருநள்ளாற்று இறைவனைப் போற்றும் திருப்பதிகம் எழுதிய ஏடுகளை, நன்மை தரும் கழுமலநகரில் அவதரித்த திருஞானசம்பந்தன், பாண்டிய மன்னனின் எதிரில், நெருப்பின் நடுவில் இடுகின்றபோது கூறிய, இத்திருப்பதிகத்தை ஓதும் அன்பர்கள் துயரற்றவர்கள் ஆவர். மும்மலங்களினின்றும் நீங்கித் தூயராய் விளங்குவர்.
திருச்சிற்றம்பலம்
3.087.திருநள்ளாறு |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|