|
||||||||
மூன்றாம் திருமுறை-93 |
||||||||
3.093.திருஅம்பர்மாகாளம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காளகண்டேசுவரர்.
தேவியார் - பட்சநாயகியம்மை.
3799 பாடியுளார் விடையினர் பாய்புலித்
தோலினர் பாவநாசர்
பொடிகொண்மா மேனியர் பூதமார்
படையினர் பூணநூலர்
கடிகொண்மா மலரிடு மடியினர்
பிடிநடை மங்கையோடும்
அடிகளா ரருள்புரிந் திருப்பிட
மம்பர்மா காளந்தானே
3.093.1
சிவபெருமான் உலகில் பொருந்திய இடப வாகனம் உடையவர். பாய்கின்ற புலித்தோலை ஆடையாக அணிந்துள்ளவர். மன்னுயிர்களின் பாவத்தைப் போக்குபவர். திருவெண்ணீறணிந்த திருமேனியர். பூதங்களாகிய படைகளை உடையவர். முப்புரி நூலணிந்த மார்பினர். பூசிக்கும் அடியவர்களால் நறுமணம் கமழும் மலர்கள் இடப்படுகின்ற திருவடிகளையுடையவர். அத்தகைய பெருமான் பெண்யானை போன்ற நடையுடைய உமாதேவியோடும் அன்பர்களுக்கு அருள்புரிந்து வீற்றிருந்தருளும் இடமாவது திரு அம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.
3800 கையின்மா மழுவினர் கடுவிட
முண்டவெங் காளகண்டர்
செய்யமா மேனிய ரூனம
ருடைதலைப் பலிதிரிவார்
வையமார் பொதுவினின் மறையவர்
தொழுதெழ நடமதாடும்
ஐயன்மா தேவியோ டிருப்பிட
மம்பர்மா காளந்தானே
3.093.2
சிவபெருமான் கையில் பெருமையான மழுப்படையை உடையவர். கொடிய விடமுண்டதால் கரிய கண்டத்தை உடையவர். சிவந்த திருமேனியர். ஊன்பொருந்திய உடைந்த மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவர். உலகனைத்திற்கும் உரியதான சிற்சபையில் அந்தணர்கள் தொழுது போற்ற நடனமாடும் தலைவர். அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.
3801 பரவின வடியவர் படுதுயர்
கெடுப்பவர் பரிவிலார்பால்
கரவினர் கனலன வுருவினர்
படுதலைப் பலிகொடேகும்
இரவினர் பகலெரி கானிடை
யாடிய வேடர்பூணும்
அரவின ரரிவையோ டிருப்பிட
மம்பர்மா காளந்தானே
3.093.3
இறைவர் தம்மை வணங்கிப் போற்றும் அடியவர்கள் படும் துயரத்தைத் தீர்ப்பவர். தம்மிடத்து அன்பில்லாதவர்கள் பால் தோன்றாத நிலையில் மறைந்திருப்பவர். நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமுடையவர். பிரமகபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர். நண்பகல் போல் சுடுகின்ற முதுகாட்டில் இரவில் நெருப்பேந்தி ஆடும் வேடத்தை உடையவர். பாம்பை அணிந்துள்ளவர். அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத் தலமாகும்.
3802 நீற்றினர் நீண்டவார் சடையினர்
படையினர் நிமலர்வெள்ளை
ஏற்றின ரெரிபுரி கரத்தினர்
புரத்துளா ருயிரைவவ்வும்
கூற்றினர் கொடியிடை முனிவுற
நனிவருங் குலவுகங்கை
ஆற்றின ரரிவையோ டிருப்பிட
மம்பர்மா காளந்தானே
3.093.4
சிவபெருமான் திருவெண்ணீறணிந்த மேனியர். நீண்டு தொங்கும் சடையினர். கரங்களில் பலவகை ஆயுதங்கனை ஏந்தியுள்ளவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர். நெருப்பேந்திய கரத்தினர். திரிபுர அசுரர்களின் உயிரைக் கவரும் எமனாக விளங்கியவர். கொடிபோன்ற இடையுடைய உமாதேவி கோபம் கொள்ளும்படி கங்கையாகிய நங்கையை மகிழ்வுடன் சடையில் தாங்கியவர். அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும்.
3803 புறத்தின ரகத்துளர் போற்றிநின்
றழுதெழு மன்பர்சிந்தைத்
திறத்தின ரறிவிலாச் செதுமதித்
தக்கன்றன் வேள்விசெற்ற
மறத்தினர் மாதவர் நால்வருக்
காலின்கீ ழருள்புரிந்த
அறத்தின ரரிவையோ டிருப்பிட
மம்பர்மா காளந்தானே
3.093.5
இறைவர் உள்ளும், புறமும் நிறைந்தவர். உள்ளம் உருகிப் போற்றிக் கண்ணீர் மல்கும் அன்பர்களின் சிந்தையில் விளங்குபவர். அறிவில்லாத, அழிதற்கேதுவாகிய புத்தி படைத்த தக்கனின் வேள்வியை அழித்தவர். சனகர், சனந்தரர், சனாதரர், சனற்குமாரர் என்ற நான்கு முனிவர்கட்குக் கல்லாலின் கீழிருந்து அறமுரைத்து அருள்புரிந்தவர். அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.
3804 பழகமா மலர்பறித் திண்டைகொண்
டிறைஞ்சுவார் பாற்செறிந்த
குழகனார் குணம்புகழ்ந் தேத்துவா
ரவர்பலர் கூடநின்ற
கழகனார் கரியுரித் தாடுகங்
காளர்நங் காளியேத்தும்
அழகனா ரரிவையோ டிருப்பிட
மம்பர்மா காளந்தானே
3.093.6
இறைவர், தினம்தோறும் மலர் பறித்து மாலை கட்டி வழிபாடு செய்யும் அடியவர்களைவிட்டு நீங்காத இளையர். தம் குணங்களைப் புகழ்ந்து போற்றும் அன்பர்கள் கூட்டத்திலிருக்கும் அழகர். யானைத் தோலை உரித்துப் போர்த்தி ஆடுபவர். எலும்பு மாலை அணிந்துள்ளவர். காளியால் வணங்கப்பட்ட அழகர். அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும்.
3805 சங்கவார் குழையினர் தழலன
வுருவினர் தமதருளே
எங்குமா யிருந்தவ ரருந்தவ
முனிவருக் களித்துகந்தார்
பொங்குமா புனல்பரந் தரிசிலின்
வடகரை திருத்தம்பேணி
அங்கமா றோதுவா ரிருப்பிட
மம்பர்மா காளந்தானே
3.093.7
இறைவர் சங்கினாலாகிய குழையைக் காதிலணிந்துள்ளவர். நெருப்புப் போன்ற செந்நிற மேனியர். தமது அருளால் எங்கும் வியாபித்துள்ளவர். அரிய தவம் செய்யும் முனிவர்களுக்குத் தம்மையே அளித்து மகிழ்பவர். அவர் அங்கு, பொங்கும் நீர் பரந்த அரிசிலாற்றினைத் தீர்த்தமாகக் கொண்டு, வேதத்தின் ஆறு அங்கங்களை ஓதுபவராய் வீற்றிருந்தருளும் இடம் ஆற்றின் வடகரையில் உள்ள திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.
3806 பொருசிலை மதனனைப் பொடிபட
விழித்தவர் பொழிலிலங்கைக்
குரிசிலைக் குலவரைக் கீழுற
வடர்த்தவர் கோயில்கூறில்
பெருசிலை நலமணி பீலியோ
டேலமும் பெருகநுந்தும்
அரிசிலின் வடகரை யழகம
ரம்பர்மா காளந்தானே
3.093.8
சிவபெருமான், போர்புரியும் வில்லுடைய மன்மதனை எரித்துச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து விழித்தவர். சோலைகளையுடைய இலங்கை மன்னனைக் கயிலை மலையின்கீழ் அடர்த்த அப்பெருமான் வீற்றிருந்தருளும் கோயில், பெரிய மலையினின்றும் நவமணிகளையும், மயிற்பீலி ஏலம் முதலியவற்றையும் மிகுதியாக அடித்துக் கொண்டு வரும் அரிசிலாற்றின் வடகரையில் அமைந்துள்ள அழகிய திரு அம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.
3807 வரியரா வதன்மிசைத் துயின்றவன்
றானுமா மலருளானும்
எரியரா வணிகழ லேத்தவொண்
ணாவகை யுயர்ந்துபின்னும்
பிரியரா மடியவர்க் கணியராய்ப்
பணிவிலா தவருக்கென்றும்
அரியரா யரிவையோ டிருப்பிட
மம்பர்மா காளந்தானே
3.093.9
வரிகளையுடைய பாம்புப் படுக்கையில் பள்ளிகொள்ளும் திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் உணர்ந்து போற்ற முடியாவண்ணம் எரியுருவாய்ச் சிவபெருமான் உயர்ந்து நின்றவர். தம்மிடத்து அன்புசெலுத்தும் அடியவர்கட்கு அணியராகியும், பணிவில்லாதவர்கட்கு அரியராயும் விளங்குபவர். அவர் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திரு அம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.
3808 சாக்கியக் கயவர்வன் றலைபறிக்
கையரும் பொய்யினானூல்
ஆக்கிய மொழியவை பிழையவை
யாதலில் வழிபடுவீர்
வீக்கிய வரவுடைக் கச்சையா
னிச்சையா னவர்கட்கெல்லாம்
ஆக்கிய வரனுறை யம்பர்மா
காளமே யடை மினீரே
3.093.10
புத்தர்களாகிய கீழ்மக்களும், தலைமயிர் பறிக்கும் இயல்புடைய வஞ்சகர்களாகிய சமணர்களும், இறைவனை உணராது, பொய்யினால் சிருட்டித்த நூல்களிலுள்ள உபதேசங்கள் குற்றமுடையவை. அவற்றைக் கேட்கவேண்டா. பாம்பைக் கச்சாக அணிந்தவனும், தன்னிடத்துப் பக்தி செலுத்தும் அடியவர்கட்கு அருள் புரிபவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக!
3809 செம்பொன்மா மணிகொழித் தெழுதிரை
வருபுன லரிசில்சூழ்ந்த
அம்பர்மா காளமே கோயிலா
வணங்கினோ டிருந்தகோனைக்
கம்பினார் நெடுமதிற் காழியுண்
ஞானசம் பந்தன்சொன்ன
நம்பிநாண் மொழிபவர்க் கில்லையாம்
வினைநலம் பெறுவர்தாமே
3.093.11
செம்பொன்னையும், இரத்தினங்களையும் அடித்துக் கொண்டு அலை வரும் நீரையுடைய அரிசிலாறு சூழ்ந்த திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள, உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி, சங்கு, சுட்ட சுண்ணாம்பு இவற்றால் சுதை பூசப்பட்ட நெடிய மதில்களையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி, நாள்தோறும் பாடுபவர்களுக்கு வினை இல்லை. அவர்கள் எல்லா நலன்களும் பெறுவர். இது உறுதி.
திருச்சிற்றம்பலம்
3.093.திருஅம்பர்மாகாளம் |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|