|
||||||||
மூன்றாம் திருமுறை-96 |
||||||||
3.096.திருநெல்வெண்ணெய்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வெண்ணையப்பர்.
தேவியார் - நீலமலர்க்கண்ணம்மை.
3831 நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும்
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறும்
சொல்வண மிடுவது சொல்லே 3.096.1
நல்ல வெண்ணெய் விழுதாகப் பெய்து செய்யப்பட்ட திருமஞ்சனம் நாள்தோறும் கொண்டருளுவீர். திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானே! திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் உம்மைத் தினந்தோறும் துதித்துச் சொல்லப்படுகின்ற சொற்களே பயன்தரும் சொற்களாகும்.
3832 நிச்சலு மடியவர் தொழுதெழு நெல்வெணெய்க்
கச்சிள வரவசைத் தீர
கச்சிள வரவசைத் தீருமைக் காண்பவர்
அச்சமொ டருவினை யிலரே 3.096.2
நாள்தோறும் அடியவர்கள் தொழுது எழுகின்ற, நெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, இளமையான பாம்பைக் கச்சாக இடையில் அணிந்துள்ள சிவபெருமானே! அவ்வாறு கச்சாக இளம் பாம்பை அணிந்துள்ள உம்மைத் தரிசிப்பவரே துன்பங்களைக் கண்டு அச்சப்படாதவர், கொடிய வினைகளும் இல்லாதவர்.
3833 நிறைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
அரைவிரி கோவணத் தீரே
அரைவிரி கோவணத் தீருமை யலர்கொடு
உரைவிரிப் போருயர்ந் தோரே 3.096.3
வரிசையாக உலகெங்கும் பரந்த தொன்மையான புகழினையுடைய திருநெல்வெண்ணெயில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, இடையில் விரித்துக் கட்டிய கோவணத்தையுடைய சிவபெருமானே! அவ்வாறு கோவணத்தை விரித்துக் கட்டிய உம்மை மலர்களைக் கொண்டு பூசித்து, உமது புகழைப் போற்றிப் பாடுபவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர்.
3834 நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர்மல்கி யுறையவல் லீரே
ஊர்மல்கி யுறையவல் லீருமை யுள்குதல்
பார்மல்கு புகழவர் பண்பே 3.096.4
நீர்வளம்மிக்க தொன்மையான புகழ் பொருந்திய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தை விரும்பி அவ்வூரில் நிலையாக வீற்றிருந்தருளும் சிவபெருமானே! அவ்வாறு அவ்வூரில் நிலையாக வீற்றிருந்தருளுகின்ற உம்மை எப்போதும் இடையறாது தியானித்தலே உலகின் உயர்ந்த புகழையுடைய சிவஞானிகள் இயல்பாகும்.
3835 நீடிளம் பொழிலணி நெல்வெணெய் மேவிய
ஆடிளம் பாப்பசைத் தீர
ஆடிளம் பாப்பசைத் தீருமை யன்பொடு
பாடுள முடையவர் பண்பே 3.096.5
நீண்ட இளமரங்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, ஆடுகின்ற இளம்பாம்பினைக் கச்சாகக் கட்டியுள்ள சிவபெருமானே! அவ்வாறு ஆடுகின்ற இளம்பாம்பைக் கச்சாக அணிந்த உம்மை அன்போடு பாடுகின்ற உள்ளம் உடையவர்களின் பண்பே சிறந்ததாகும்.
3836 நெற்றியோர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய
பெற்றிகொள் பிறைநுத லீரே
பெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல்
கற்றறி வோர்கள்தங் கடனே 3.096.6
நெற்றிக்கண்ணை உடையவரும், திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவரும், அடியவர்கட்கருளும் பண்புடைய பிறை போன்ற நெற்றியையுடைய உமாதேவியை உடைய வருமாகிய சிவபெருமானே! அவ்வாறு பிறைபோன்ற நெற்றியுடைய உமா தேவியை உடைய உம்மை வழிபடுதலே ஞான நூல்களைக் கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும்.
3837 நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய
கறையணி மிடறுடை யீரே
கறையணி மிடறுடை யீருமைக் காண்பவர்
உறைவதும் உம்அடிக் கீழே 3.096.7
நிறையுடையவர்கள் தொழுது எழுகின்ற திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, விடமுண்ட கறுத்த கண்டத்தையுடைய சிவபெருமானே! அவ்வாறு விடமுண்ட கறுத்த கண்டத்தையுடைய உம்மைத் தரிசிப்பவர்கள் உம் திருவடிக்கீழ் என்றும் வீற்றிருப்பர்.
3838 நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்
றரக்கனை யசைவுசெய் தீர
அரக்கனை யசைவுசெய் தீருமை யன்புசெய்
திருக்கவல் லாரிட ரிலரே 3.096.8
நெருங்கிய சோலைகள் சூழ்ந்து அழகுடன் விளங்கும் திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுப வரும், அரக்கனான இராவணனை வலிகுன்றச் செய்தவருமான சிவபெருமானே! அவ்வாறு அரக்கனை வலிகுன்றச் செய்தவரான உம்மை அன்புடன் வணங்குபவர்கள் துன்பமே இல்லாதவர்கள் ஆவர்.
3839 நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன்
றிருவரை யிடர்கள் செய்தீரே
இருவரை யிடர்கள் செய்தீருமை யிசைவொடு
பரவவல் லார்பழி யிலரே 3.096.9
வரிசையாக விரிந்த சடைமுடியினை உடையவராய்,திரு நெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவராய், அன்று திருமாலும், பிரமனும் உம் அடிமுடி காணாமல் துன்பம் அடையச் செய்த சிவபெருமானே! அவ்வாறு திருமால், பிரமன் என்னும் இருவரைத் துன்பம் அடையச் செய்தவராகிய உம்மை உள்ளும், புறமும் ஒத்து வணங்கிப் போற்று பவர்கள் பழியில்லாதவர் ஆவர்.
3840 நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய
சாக்கியச் சமண் கெடுத் தீரே
சாக்கியச் சமண்கெடுத் தீருமைச் சார்வது
பாக்கிய முடையவர் பண்பே 3.096.10
வறுமை, பிணி முதலியவற்றை நீக்கியவரும், திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவரும், புத்தமும், சமணமும் கெடுத்தவருமாகிய சிவபெருமானே! அவ்வாறு புத்தமும், சமணமும் கெடுத்த உம்மைப் பற்றுக்கோடாகச் சார்வது புண்ணியம் செய்தவர்களின் பண்பாகும்.
3841 நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெ யீசனை
நலமல்கு ஞானசம் பந்தன்
நலமல்கு ஞானசம் பந்தன் செந்தமிழ்
சொலமல்கு வார்துய ரிலரே 3.096.11
நிலவுலகெங்கும் நிறைந்த தொன்மையான புகழையுடைய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி, நன்மைகளைத் தருகின்ற ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடுவதில் மகிழ்ச்சி மிக்கவர்கள் துன்பம் இல்லாதவர்கள் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
3.096.திருநெல்வெண்ணெய் |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|