திண்டிவனம் அருகே உள்ள பரங்கனி கிராமத்தை சேர்ந்த தம்பதி கர்ணன் - ராஜேஸ்வரிக்கு, ராகுல் என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தையின் உடலில் திடீரென அவ்வப்போது தீபிடித்து, தீக் காயம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அக்குழந்தையையும் அவர்களது குடும்பத்தையும், கிராமத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்றது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி குழந்தைக்கு ஏற்பட்ட தீ காயங்களைப் பரிசோதித்து, மேல் சிகிச்சைக்காக, அந்த குழந்தை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மேலும் குழந்தையின் சிகிச்சை செலவுகளை அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தையை பரிசோதித்த, மருத்துவர்கள் குழந்தையின் உடலில் அடிக்கடி தீப்பற்றுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை இக்குழந்தைக்கு நான்கு முறை தானாக உடலில் தீப்பற்றி எரிந்துள்ளதாகவும், இந்த நோய்க்கு உரிய சிகிச்சை முறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனினும், தீப்பற்றாமல் இருப்பதற்காக தற்காலிகமாக குழந்தையின் உடல் மீது தீ தடுப்பு மருந்து தடவி பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மருத்துவத்துறையினரால் ஸ்பாண்டேனியஸ் ஹியூமன் கம்பஷன் (Spontaneous Human Combustion) என்று அழைக்கப்படும் இந்நோய், கடந்த 300 ஆண்டுகளில் மட்டும் உலகளவில் 200 பேருக்கு இந்நோய் இருப்பதாக கூறப்படுகிறது.
|