LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- மகுடபதி

மோட்டார் விபத்து

                                மோட்டார் விபத்து

மகுடபதிக்கும் பங்கஜத்துக்கும் மேலே நடந்த சம்பாஷணையைச் சொல்வதற்கு முன்னால் காலப்போக்கில் கொஞ்சம் பின்னோக்கிச் சென்று மகுடபதியை லாக்-அப்பில் அடைத்ததிலிருந்து அவனுக்கு நேர்ந்தவைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

     போலீஸ் லாக்-அப்பிலிருந்து மகுடபதியை ஸப்-ஜெயிலுக்குக் கொண்டுபோய் ஒரு தனி அறையில் அடைத்தார்கள். ஏற்கெனவே இரண்டு முறை - ஒருவாரமும், பத்து நாளும் - அவன் ஸப்-ஜெயிலில் இருந்திருக்கிறான். ஆனால் இந்தத் தடவை அவன் ஸப்-ஜெயிலிலிருந்த மூன்று நாட்களும் அவனுக்கு மூன்று யுகங்களாகத் தோன்றின. அவன் உள்ளம் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிற்று. தேசத்தில் மகத்தான இயக்கம் ஆரம்பாகி நடந்து கொண்டிருந்தது; அந்த ஜில்லாவில் அவனுடைய முக்கியமான காங்கிரஸ் சகாக்களெல்லாம் சிறைக்குப் போய்விட்டனர்; அனேக தொண்டர்கள் அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடந்தார்கள். இப்படிப்பட்ட இயக்கத்தில், தான் பங்கு எடுத்துக் கொள்ளமுடியவில்லை. ஏதோ ஒரு பொய்க் கேஸில் அகப்பட்டு ஸப்-ஜெயிலில் கிடக்க வேண்டியதாயிருக்கிறது. தன் மேல் என்ன கேஸ் போடப் போகிறார்கள் என்ற விவரம் இன்னும் அவனுக்குத் தெரிந்தபாடில்லை. போலீஸ் அதிகாரிகள் - முக்கியமாக ஸப்-இன்ஸ்பெக்டர் சங்கடஹரிராவ் - என்ன சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறாரோ, தெரியாது. அவர் மட்டுந்தான் சூழ்ச்சி செய்கிறாரோ, அல்லது கார்க்கோடக் கவுண்டரும் சேர்ந்து இரண்டு பேருமாய்ச் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களோ? ஏதாவது கள்ளுக்கடையைக் கொளுத்தியதாக ஒரு பொய்க் கேஸைத் தன் பேரில் அவர்கள் போட்டு வைத்தால் என்ன செய்வது? அதற்கு வேண்டிய பொய்ச் சாட்சிகளைத் தயாரித்துத் தண்டனையடைந்தால், காங்கிரஸ் இயக்கத்துக்கே அதனால் மாசு ஏற்பட்டுவிடுமல்லவா? அத்தகைய கேஸ் நேர்ந்தால் எதிர் வழக்காடுவதா? அல்லது சும்மா இருந்து விடுவதா? யோசனை கேட்பதற்குக் கூட முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இல்லை; எல்லாரும் முன்னாலேயே சிறைக்குப் போய்விட்டார்கள்; இன்னும் வெளியில் இருக்கும் இரண்டொருவரைச் சந்தித்துப் பேசுவதற்கும் வசதி கிடையாது.

     "ஐயோ! அன்றைக்கு நாம் கோயமுத்தூருக்கு என்னத்திற்காக வந்தோம்? நம்மூரிலேயே ஏதாவது மறியல் நடத்திப் பேசாமல் சிறை புகுந்திருக்கக்கூடாதா?" என்று எண்ணி மகுடபதி பெருமூச்சு விட்டான். அன்று தான் கோயமுத்தூருக்கு வந்ததனால் என்னென்ன விபரீதங்கள் ஏற்பட்டு விட்டன? தனக்கு மட்டுமா கஷ்டம்? செந்திருவுக்கும் பெரியண்ணனுக்கும் அல்லவா தன்னால் பெரும் விபத்துக்கள் நேர்ந்து விட்டன?

     செந்திருவைப் பற்றி நினைக்கும் போதே அவனுடைய நெஞ்சு சொல்லமுடியாத வேதனை அடைந்தது. அவளுடைய கதி என்ன ஆயிற்றோ? எங்கே இருக்கிறாளோ? பலவந்தமாய்க் கார்க்கோடக் கவுண்டருக்குக் கல்யானம் செய்து வைத்திருப்பார்களோ? ஒருவேளை, அவள் உயிரை விட்டிருப்பாளோ? பாவிகள் ரொம்பவும் அவளை இம்சை செய்திருப்பார்களோ? "ஐயோ! நம்மை நம்பிய அந்த அபலைப் பெண்ணுக்கு நம்மால் அனுகூலமில்லாவிட்டாலும் ஆபத்தல்லவா அதிகமாகிவிட்டது?" என்று எண்ணிய போது, மகுடபதியின் இருதயம் துடித்தது. ஆம்; அன்றிரவு, தான் அந்த வீட்டில் ஒளிந்திருந்து திடீரென்று வெளியே வந்ததனால், செந்திருவின் மேல் அந்தக் கவுண்டர்களுக்கு இல்லாத பொல்லாத சந்தேகங்கள் உண்டாகியிருக்குமல்லவா?

     செந்திருவுக்கு மட்டும் ஏதாவது தீங்கு நேர்ந்திருந்தால், அதற்குக் காரணமாயிருந்தவர்கள் மேல் பழிக்குப் பழி வாங்கியே தீருவதென்று மகுடபதி சங்கல்பம் செய்து கொண்டான்.

     கார்க்கோடக் கவுண்டர் அவன் மனக்கண்ணின் முன்னால் தோன்றும் போதெல்லாம், அவனுடைய இரத்தம் கொதித்தது; நரம்புகள் எல்லாம் புடைத்து எழுந்தன. "அஹிம்சையாவது, ஒன்றாவது? வெறும் பைத்தியக்காரத்தனம்! இப்படிப்பட்ட பாதகர்களை எந்த விதத்திலாவது யமலோகத்துக்கு அனுப்பினால் அதுவே பெரிய புண்ணியச் செயலாகும்" என்று அடிக்கடி எண்ணமிட்டான்.

     பெரியண்ணன் மீது கார்க்கோடக் கவுண்டரின் கத்தி பாய்ந்த காட்சி அடிக்கடி அவன் மனக்கண்முன் வந்து கார்க்கோடக் கவுண்டரின் மேல் அவனுக்கிருந்த கோபத்தீயை இன்னும் தூண்டிவிட்டு ஜ்வலிக்கச் செய்தது. பெரியண்ணனுடைய கதி என்னவாயிருக்கும்? தானே எழுந்து போயிருப்பானோ? அல்லது கவுண்டர்கள் வந்து தான் அப்புறப்படுத்தியிருப்பார்களோ? இன்னமும் பிழைத்திருக்கிறானோ? அல்லது இந்தப் பாதக உலகை விட்டுப் போய்விட்டானோ?

     மூன்று தினங்கள் வரையில் இவ்விதம் அவன் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இன்னும் சில தினங்கள் இப்படியே தன்னைத் தனி அறையில் போட்டிருந்தால் ஒரு வேளை பைத்தியம் பிடித்துவிடுமோ என்று கூட அவனுக்குத் தோன்றத் தொடங்கியது. ஐயோ! அப்படி ஏதாவது நேர்ந்துவிட்டால் செந்திருவின் கதி என்ன? இந்த வண்ணம் தோன்றும்போது, விரிந்து மலர்ந்த கண்களில் நீர்த்துளிகளுடன் கூடிய செந்திருவின் சோகம் ததும்பும் முகம் அவன் மனக்கண்முன் வரும். அப்போது அவனுடைய நெஞ்சு வெந்து போவது போலிருக்கும். இந்தத் துயர நினைவை மறப்பதற்காக மகுடபதி காங்கிரஸ் இயக்கத்தையும், காந்தி மகானையும், தேசியப் போரின் மற்ற அம்சங்களையும் பற்றிச் சிந்திக்க முயன்றான்.

     மூன்றாம் நாள் பிற்பகலில் மகுடபதி இத்தகைய சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று சில போலீஸ் சேவகர்கள் வந்து அவனை அடைத்திருந்த கொட்டடிக்கு முன்னால் நின்றார்கள். கதவு திறக்கப்பட்டது. அவர்களுடைய உத்தரவுப்படி மகுடபதி வெளியேறினான். வாசலில் போலீஸ் வண்டி காத்துக் கொண்டிருந்தது. அதற்குள் ஏற்கனவே நாலைந்து தொண்டர்கள் இருந்தார்கள். மகுடபதியும் அதற்குள் ஏற்றப்பட்டான். போலீஸ் சேவகர்களும் ஏறி உட்கார்ந்ததும், வண்டி புறப்பட்டது.

     எல்லாரையும், கோர்ட்டுக்குத்தான் அழைத்துப் போகிறார்கள் என்று மகுடபதி நினைத்தான். வண்டியில் ஏற்கெனவே இருந்த தொண்டர்களில் ஒருவரையும் மகுடபதிக்குத் தெரியாது. அவர்கள் எல்லாம் "மகாத்மா காந்திக்கு ஜே!" "வந்தே மாதரம்!" என்று உரத்த குரலில் கோஷமிட்டார்கள். மகுடபதிக்கு இந்தக் கோஷத்தில் கலந்து கொள்வதற்கு வேண்டிய உற்சாகம் இல்லை. ஆகையால் மௌனமாயிருந்தான். தொண்டர்களின் கோஷத்தினால் கலவரப்பட்டு வீதியில் போய்க் கொண்டிருந்த ஜனங்கள் போலீஸ் வண்டியை நோக்கினார்கள். அவர்களில் யாராவது தனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா, இருந்தால் சமிக்ஞையினால் செய்தி தெரிவிக்கலாம் என்று மகுடபதி ஆவலுடன் வண்டிக் கம்பிகளின் வழியாகப் பார்த்துக் கொண்டே போனான். ஒருவரும் அவனுக்குத் தெரிந்தவர்களாக எதிர்ப்படவில்லை. எதிர்ப்பட்டிருந்தாலும், இரும்பு வலைக் கூண்டு போல் அமைந்திருந்த போலீஸ் வண்டிக்குள்ளிருந்து அவனால் ஒன்றும் பேசியிருக்க முடியாது. வண்டி வேறு மிகவும் வேகமாய்ப் போய்க் கொண்டிருந்தது.

     கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்தியதும், தன் பேரில் பொய்க் கேஸ் என்று கூச்சலிட்டு, அன்றிரவு நடந்த சம்பவங்களையும் சொல்லலாமா என்று மகுடபதி யோசித்தான். அவனால் தெளிவாகச் சிந்தனை செய்ய முடியாவிட்டாலும், அதனால் பயன் விளையாது என்று தோன்றியது. முதலில், மற்ற தொண்டர்கள் தன்னை ஜெயிலுக்குப் பயந்தவன் என்று நினைத்துக் கொள்வார்கள். மற்றபடி, மாஜிஸ்ரேட்டும்தான் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கமாட்டார். கேஸுக்குச் சம்பந்தமில்லாத விஷயம் என்று சொல்லி, தான் பேசுவதற்கே இடங்கொடுக்க மாட்டார். கார்க்கோடக் கவுண்டர் மாஜிஸ்ரேட்டையும் தன்னுடைய கைக்குள் போட்டுக் கொண்டிருக்கக் கூடுமல்லவா? ஏதாவது ஜாமீன் கேஸ் என்று தன்னை ஒரு வருஷம் சிறைக்குள் தள்ளிவிட்டால், செந்திருவின் நிலைமை என்ன? இப்படிக் கோர்ட்டில் என்ன சொல்வது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் மகுடபதி தவித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் போலீஸ் மோட்டார் கோயமுத்தூர் நகரின் எல்லையைத் தாண்டிக் கொண்டிருப்பதை மகுடபதி கவனித்தான்.

     "இதென்ன? நம்மைக் கோர்ட்டுக்குக் கொண்டு போகவில்லையா? எங்கே கொண்டு போகிறார்கள்?" என்று மகுடபதி மற்ற தொண்டர்களைப் பார்த்துக் கேட்டான். அவர்களில் ஒருவன், "இது தெரியாதா, உனக்கு? நம் பேரில் கேஸ் நடக்காதாம். இப்போது கோயமுத்தூருக்கு வெளியே எங்கேயாவது தூரத்தில் கொண்டு போய் விட்டுவிடும்படி ஜில்லா மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவாம்."

     இந்தச் செய்தியைக் கேட்டதும், மகுடபதிக்குப் புத்துயிர் வந்தது போலிருந்தது. இன்னும் சிறிது நேரத்துக்கெல்லாம் தனக்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற எண்ணம் அவனுக்குக் குதூகலமே உண்டாக்கிற்று. போலீஸ் வண்டி அதிக வேகமாகச் சென்றதுபோல், அவன் எண்ணங்களும் விரைந்து சென்றன. விடுதலை கிடைத்ததும் செந்திருவைத் தேடும் முயற்சியில் தான் ஈடுபட வேண்டும். அதை எப்படி ஆரம்பிப்பது? ஏன்? முதலில் மாஜி ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியார் வீட்டுக்குத் தான் போகவேண்டும். முதலியார் எப்படிப்பட்டவராயிருந்த போதிலும், அவருடைய பெண் செந்திருவின் தோழி - தனக்கு ஒத்தாசை செய்யலாமல்லவா?

     அதி வேகமாய்ப் போய்க் கொண்டிருந்த மோட்டார் வண்டி சட்டென்று சாலையில் நின்றது. மூன்று தொண்டர்கள் இறக்கிவிடப்பட்டார்கள். அவர்கள் "வந்தே மாதரம்" என்று கோஷித்தார்கள். வண்டியிலிருந்தவர்கள் எதிரொலி செய்தார்கள். மறுபடியும் வண்டி கிளம்பித் துரிதமாய்ச் சென்றது. கால் மணி நேரம் போன பிறகு, மீண்டும் நின்றது. இரண்டு தொண்டர்கள் இறக்கி விடப்பட்டார்கள். பிறகு வண்டியில் மகுடபதி ஒருவன் தான் இருந்தான்.

     மகுடபதி பொறுமையிழந்து வண்டியிலிருந்து குதித்து விடலாமா என்ற நிலைமைக்கு வந்தபோது, வண்டியின் வேகம் குறைந்தது. "இறங்கப்பா!" என்றான் ஒரு போலீஸ் சேவகன். வண்டி சரியாக நிற்பதற்குள்ளாகவே மகுடபதி இறங்கினான். இதனால் தள்ளாடிக் கீழே விழப் போனவன் மெதுவாகச் சமாளித்துக் கொண்டான்.

     அவன் இறங்கியதும் போலீஸ் வண்டி அந்தச் சாலையை ஒரு பிரதட்சணம் செய்து திரும்பி, வந்த வழியே விர்ரென்று புறப்பட்டு, அடுத்த நிமிஷம் அமோகமாய்க் கிளம்பிய சாலைப் புழுதியில் மறைந்துவிட்டது.

     அஸ்தமன சமயம். சூரியன் மேற்குத் திசையில் காணப்பட்ட மலைத் தொடர்களுக்குப் பின்னால் மறைந்துவிட்டது. சாலை நிர்மானுஷ்யமாயிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் ஊரோ, வீடோ காணப்படவில்லை.

     அந்த இடம் கோயமுத்தூரிலிருந்து சுமார் முப்பது மைல் இருக்கலாம். அவ்வளவு தூரம் எப்படி நடந்து போய்ச் சேர்வது? சாலையில் ஏதாவது பஸ் வந்தால் ஏறிக் கொள்ளலாம். இத்தனை நேரங் கழித்து பஸ் வருமா?

     இம்மாதிரி யோசனை செய்து கொண்டு மகுடபதி சாலையோடு வந்து கொண்டிருந்தான். ஓரிடத்தில் சாலையில் முச்சந்தியும் கைகாட்டி மரமும் காணப்பட்டன. கோயமுத்தூர் சாலையில் அவன் திரும்பியதும், எதிரே ஒரு மோட்டார் வண்டி வருவதைக் கண்டான். "எவ்வளவு வேகமாய் வருகிறது" என்று நினைத்துக் கொண்டே சாலையில் ஒதுக்குப்புறமாக நகர்ந்தான். வண்டி கொஞ்சம் மெதுவாவது போல் தோன்றியது. "இதென்ன? நாம் இவ்வளவு ஒதுங்கியும் வண்டியும் இப்படி விடுகிறானே?" என்று நினைத்துக் கொண்டே இன்னும் ஒதுங்கினான். ஆனால், வண்டியும் ஒதுங்கி அவன் பக்கமே வந்தது. அடுத்த வினாடி வண்டி அவன் மேல் மோதிற்று. மகுடபதி நினைவிழந்து கீழே விழுந்தான்.

by C.Malarvizhi   on 01 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.