தமிழகத்தில் வாகன ஓட்டிகள் இனி ஒரிஜினல் சான்றுகள் கொண்டு போக வேண்டியதில்லை. மின்னணு சான்றுகள் இருந்தால் போதுமானது.
இந்தியாவில் இரு, நான்கு சக்கரம் என எந்த வகையிலான வாகனங்களை ஓட்டும்போதும் அசல் சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். அதில் நிர்வாக பிரச்னை இருப்பதால் அதை தடுக்கும் விதமாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ‘டிஜிலாக்கர்’ ஆப்-ஐயும் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ‘எம்-பரிவாஹன்’ என்ற மொபைல் ஆப்-ஐயும் அறிமுகம் செய்தது.
இந்த ஆப்களின் மூலமாக வாகன ஓட்டிகள் தங்களது சான்றிதழ்களை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள முடியும். இந்த ஆப்பில் ஆவணங்கள், அசல் ஆவணங்களுக்கு இணையானது என்ற அங்கீகாரமும் உள்ளது.
இதையடுத்து வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட முறையில், தங்களது ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்திருந்தனர். ஆனால் போலீசார், அவ்வாறு மின்னணுவியல் முறையில் வைத்திருக்கும் ஆவணங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த விவகாரம் டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு புகாராக சென்றது. இதையடுத்து அவர் ‘டிஜிலாக்கர்’ மற்றும் ‘எம்-பரிவாஹன்’ முறையில் ஆவணங்களை வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அறிவித்ததை போலீசார் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துக்கு புகார் சென்றது.அதை ஆய்வு செய்த அமைச்சகம், அனைத்து டிஜிபி, போக்குவரத்து துறை செயலாளர்கள், நெடுஞ்சாலைத்துறை கமிஷனர்களுக்கு கடந்த, 19ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது.
அதில், ‘வாகன ஓட்டிகள் தங்களது லைசென்ஸ், இன்சூரன்ஸ், தகுதிச்சான்று, பர்மிட் ஆகியவற்றை ‘டிஜிலாக்கர்’ அல்லது ‘எம்-பரிவாஹன்’ முறையில் வைத்திருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ எனக்கூறியிருந்தது.
இதையடுத்து மின்னணு முறையில் சான்றிதழ்களை வைத்திருப்போரை அனுமதிக்க வேண்டும் என தமிழகத்திலுள்ள அனைத்து போலீசாருக்கும், அத்துறையின் உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர்.
அதேபோல் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குழப்பம் தீர்ந்தது. தற்போது மின்னணுமுறையில் ஆவணங்களை வைத்திருப்போரை போலீசார் அனுமதித்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
|