இந்திய அரசியலை பொறுத்த வரை குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளே பதவிக்கு வருகின்றனர். இதனால் அரசியலில் நேர்மை குறைவதோடு மட்டுமல்லாமல், ஊழலும், வன்முறையும் தலைவிரித்து ஆடுகிறது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், ஊழல் அரசியல்வாதிகள் சட்டத்தில் உள்ள ஓட்டையை வைத்து தப்பித்து விடுகின்றனர்.இந்நிலையில் லில்லி தாமஸ் என்ற வழக்கறிஞரும், லோக் பிரஹரி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயலாளர் என்.சுக்லாவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகள் 8 (3), 8(4),ல் உள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டி, அவற்றை திருத்தம் அல்லது நீக்கம் செய்யும் படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் வாதிகளை பதவியில் நீடிக்க அனுமதித்தால், அரசியலில் குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவிடும். மேலும், தண்டனை விதிக்கப்பட்ட அரசியல்வாதிகளை பதவியில் நீடிக்க அனுமதிப்பது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. எனவே, நீதிமன்றங்களில் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் பதவியை உடனடியாக பறிக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கை, நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், எஸ்.ஜே. முகோபாத்யா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்து. அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ‘‘குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., எம்எல்ஏ.க்கள் பதவியில் நீடிக்க கூடாது. மேல் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்தாலும் பதவியில் நீடிக்க முடியாது. தண்டனை விதிக்கப்பட்ட தினத்தில் இருந்தே, அவர்கள் தகுதியிழப்பு பெற்று விடுவார்கள். இந்த தீர்ப்புக்கு முன்பாக தண்டனை பெற்று, மேல்முறையீடு செய்துள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது’ என்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அரசியல் கட்சிகளுக்கும், ஊழல் அரசியல் வாதிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
|