கிரிமினல் எம்.பி.,க்களை காப்பாற்ற மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த அவசரச்சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மசோதாவையும் திரும்பப் பெற இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் தொலைபேசி வாயிலாக ஒப்புதல் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, நேற்று சந்தித்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், கிரிமினல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் அவசர சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. அமைச்சரவையின் இந்த முடிவு அதை உறுதிப்படுத்தி உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்கை, நேற்று காலை அவரது இல்லத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். முப்பது நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின் போது, அவசர சட்டத்தை திரும்பப் பெறுமாறு ராகுல் வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது. அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தியது வெறும் அரசியல் நாடகம் என பாரதிய ஜனதா விமர்சித்துள்ளது. எனினும், தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதகளைப் பாதுகாக்கும் அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவை இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
|